Powered By Blogger

Thursday, November 27, 2014

புருஸ் லீ

 தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த
சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும்  தொடர்ந்து   வம்புக்களில்  ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ
அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்" என்று கேட்க ,"கலை எல்லாருக்கும் பொதுவானது தானே " என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். "அப்படியில்லை ! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும் ? நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால்  நீ குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ; நீ வென்றால் நான் குங் பூ என்கிற பெயரைக்கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன் ! என்னோடு சண்டையிடு என்னோடு சண்டையிடு " என்றார் அவர்.

இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங்
பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார் .ஆனால்,அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்கசெயதது .
தானே இன்னும் பல மாற்றங்களை உருவாக்கினார்.அவர் படித்த தத்துவம் அவருக்கு அதீத அமைதியை தந்தது,எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். "நீர் போல அமைதியாக ஓடிக்கொண்டு ,சலனமற்று இருக்கிறேன் ,மூங்கிலை போல வளைந்து கொள்கிறேன்.ஆழ்ந்த அமைதி என்னை எப்பொழுதும் வழி நடத்துகிறது" என்ற அவர் டிவி ஷோக்களில் கலக்கிய பின் சீட்டின் முனைக்கே கொண்டுசெல்லும் சண்டைகாட்சிகள் மூலம் ஹாலிவுட்டில் கலக்கினார்.
புரூஸ் லீ ஒரு கவிஞர் என்பதை தாண்டி ஒரு தீர்க்கமான தத்துவ ஞானம் மிக்கவராக இருந்தார் என்பதே சரி. "எதிரி என்று ஒருவன் இல்லவே இல்லையே ; எல்லாமே பிம்பங்கள்,பிரதிபிம்பங்கள். அவற்றை நொறுக்கிவிட்டால் போதும். எதிரிகள் என்று யாருமில்லை என உணர்வீர்கள் !" என்றார் அவர்.  ஜென் அவரைத் தொடர்ந்து செலுத்தியது. பேரமைதி அவரிடம் குடிகொண்டு இருந்தது,ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் "ஏன் இப்படி ?" என்று கேட்ட பொழுது ,"நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !" என்று மட்டும் சொன்னார். வீரம்  என்பது
சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என
உணர்ந்து  நடப்பதிலும் இருக்கிறது.
நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து "வெறுமையாக இருக்கிற பொழுது தான்,அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !" என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் . மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ. அதுவே அவரின் அசரவைக்கும் சண்டைக்காட்சிகளுக்கு அடிப்படை.
நம்பினால் நம்புங்கள் புருஸ் லீக்கு உடலில் குறைபாடு ஒன்றிருந்தது. அவரின் வலது கால் இடது காலை விட நான்கு சென்டிமீட்டர் உயரம் குறைவு. ஆனால்,உங்கள் தலையில் ஒரு நாணயத்தை வைத்தால் அதை உங்கள் தலைமுடியைக்கூட அசைக்காமல் அவரால் எடுக்க முடியும். கேட்ட பொழுது ,"நாணயம் மட்டும் தான் என்னுடைய கண்களில் தெரியும். அதில் மூழ்கிப்போவது தானே குங்பூ !" என்றார்
அவரின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால் ஒரு காட்சிக்கு நொடிக்கு இருபத்தி நான்கு பிரேம்கள் அவரின் வேகத்தை பிடிக்க போதாமல் கூடுதலாக பத்து பிரேம்கள் தேவைப்பட்டன ! இருந்தாலும் அதை ஆழ்ந்த அமைதியோடு செய்கிற சமநிலை புரூஸ் லீக்கு இருந்தது. அவர் பட்டப்படிப்பு படித்தது
தத்துவத்தில் என்பது அவரின் ஆழ்ந்த தேடலை உணர்த்தும் . முப்பத்தி மூன்று வயதில் இறந்து போனாலும் இன்னமும் ஆக்ஷனில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அத்துணை பாடங்கள்.
அவரின் ஒரு கவிதை தான் அவரின் வாழ்வானது :
புரூஸ்லீயை கொன்றது யார்? 

Monday, November 24, 2014

உலகின் விசித்திரங்கள் நிறைந்த சாலைகள்

சமதள சாலைகள், மலைப்பாங்கான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள் போன்றவை நமக்கு பரிட்சயம். ஆனால், உலகின் சில சாலைகள் வித்தியாசமும், விசித்திரமும் நிறைந்ததாக இருக்கின்றன. வண்டியை எடுத்தோமா, போக வேண்டிய இடத்துக்கு நேரத்துக்கு போய் சேர்ந்தோமா என்றிருக்கும் நமக்கு இந்த சாலைகள் நிச்சயம் புதுமையாகவே தோன்றும்.

அதிலும், படத்தில் காணும் சில சாலைகள் புதுமையான அனுபவத்தையும், சில சாலைகள் த்ரில்லை தரும் விதத்திலும் இருக்கின்றன. அதுபோன்று, ஆயுளில் ஒருமுறையாவது இந்த சாலையில் செல்ல வேண்டும் என்று தோன்ற வைக்கும் சில சாலைகளின் படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.



சாலையின் குறுக்கே விமான ஓடுதளம்

ரயில் வரும்போது கேட் போடுவது போல ஸ்பெயினில் இருக்கும் இந்த சாலையின் குறுக்கே விமான ஓடுதளம் இருக்கிறது. எனவே, விமானங்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் 10 நிமிடங்கள் கேட் போட்டு விடுகின்றனர். விமானம் ஒன்று கடக்கும்போது சிக்னலில் காத்து கிடக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

ஆளை விழுங்கும் சாலை

மழை நேரத்தில் சாலை ஓரத்தில் சேறு இருந்தாலே நாம் வண்டியை முன்கூட்டியே நிறுத்தி கடப்பது வழக்கம். ஆனால், ரஷ்யாவில் ஓடும் லேனா ஆற்றின் கிழக்கு கரை ஓரத்தை ஒட்டி செல்லும் இந்த நெடுஞ்சாலையில் மழை பெய்து விட்டால் அவ்வளவுதான். அந்த சாலையில் ஆளை விழுங்கும் அளவுக்கு சேறாக மாறிவிடும். . 800 மைல் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையில் ஒரு முறை சென்று வருவதே நரகத்துக்கு சென்று திரும்புவது போலத்தான். ஆனால், குளிர்காலத்தில் வெப்பநிலை -40 டிகிரியாக இருக்கும்போது இந்த சாலையில் மண் கெட்டியாகி பயன்பாட்டுக்கு சிறந்ததாக மாறிவிடும். மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணம் செய்யலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். திடீரென வந்த மழையால் சேறாகி கிடக்கும் சாலையில் தத்தளிக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

பாகிஸ்தான்-சீனாவின் உறவுப் பாலம்

தரைவழியாக இரு நாடுகளையும் இணைக்க ஒரு வழியை தேடின பாகிஸ்தானும், சீனாவும். அப்போது அவர்களுக்கு கிடைத்த வழிதான் காரகோரம் தொடர்ச்சி மலைகள். உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த சர்வதேச சாலை இதுதான். 15,500 அடி உயரத்தில் அமைத்துள்ள இந்த சாலையில் ஆக்சிஜன் அளவு மிக குறைவு என்பதுடன்,  பனி சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகம்.

குகைச் சாலை

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கிய குகை வழிச்சாலையைத்தான் படத்தில் காண்கிறீர்கள். 1977ம் ஆண்டு மலையை குடைந்து அருகிலுள்ள முக்கிய நகரத்துடன் தங்கள் கிராமத்தை இணைக்கும் வகையில் இந்த குகை வழிச்சாலையை அமைத்தனர். இந்த சாலையை அமைக்கும்போது ஏராளமான கிராமவாசிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உலகின் ஆபத்தான சாலைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

கட்டிடத்திற்குள் செல்லும் சாலை

ஜப்பானிலுள்ள ஒசாகா நகரத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் சாலையைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். ஒசாகா நகர் வளர்ச்சி குழுமம் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிட்டபோது வழியில் இந்த பிரம்மாண்ட கட்டிடம் இருந்தது. கேட் டவர் இந்த கட்டிடத்தை இடிக்க அதன் உரிமையாளர் மறுத்துவிட்டார். எனவே, கட்டிடத்தின் உள் பகுதி வழியாக சாலையை அமைத்துவிட்டனர்.

கடலுக்குள் புகுந்த பாலம்

தரையில் அமைக்கப்பட்ட சாலைகளை இதுவரை பார்த்தீர்கள். இப்போது அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் இருக்கும் கடல்வழிப் பாலத்தைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா. 12 மைல் நீளத்திற்கு கடலில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தின் இடையில் 2 மைல் நீளம் கடலுக்குள் சுரங்கம் அமைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. ஏன் தெரியுமா?. கடலில் பாலம் கட்டுவதற்கு அமெரிக்க கடற்படை எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பாலத்தை அமைத்தால் தங்களது கடற்படை கப்பல்கள் செல்ல இயலாது என முட்டுக்கட்டை போட்டனர். இதையடுத்து, 2 மைல் நீளத்திற்கு கடலுக்குள் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட்டது.

பாம்பன் பாலம்

சரி, வரிசையாக சொன்ன எல்லா சாலைகளும் அயல்நாடுகளில் இருப்பதால் செல்வது பெரும்பாலானோருக்கு சாத்தியம் இல்லைதான். நம்மூரில் இதுபோன்றே வித்தியாசமான பாலங்கள் மற்றும் த்ரில் நிறைந்த சாலைகள் இல்லையா என்று கேட்பது புரிகிறது. ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் ரயில் பாலமும், அதையொட்டி வாகனங்கள் செல்வதற்கான பிரம்மாண்ட பாலமும் நம்மூரின் ஒண்டர்தான். ஆம், பாக் நீரிணையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம் 2.3 கிமீ நீளம் கொண்டது. மொத்தம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ரயில் பாலம் 1914ல் திறக்கப்பட்டது. உலகிலேயே அதிக துரு பிடிக்கும் இரண்டாமிடமான ராமேஸ்வரத்த்தில் 100 ஆண்டுகளை நெருங்கியும் இந்தரயில் பாலம் காலத்தை வென்று நிற்கிறது. இதற்கு அருகே அமைந்திருக்கும் தரைவழி இணைப்புப் பாலம் 1988ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கப்பட்டது.

மணாலி டூ லே

உலகின் மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றுதான் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை. சவால் நிறைந்த பயண விரும்பிகளுக்கு ஏற்ற இந்த சாலை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மத்தியில் இருந்து அக்டோபர் மாதம் வரை குறிப்பிட்ட காலம் மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது இந்த சாலை.

கிரேட் ரான் கட்ச்

முடிவில்லா தொலைவுடன் வெள்ளை மணலில் பரந்து விரிந்து கிடக்கும் கிரேட் ரான் கட்ச் பாலைவனத்தில் பைக் ரைடிங் செல்லும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தோலாவிராவிற்கு செல்லும்சாலையை பிடித்தால் புதுமையான அதேசமயம் திரில்லான அனுபவத்துக்கு கியாரண்டி. குறிப்பிட்ட தூரம் சென்று 360 கோணத்தில் பார்த்தால் வெறும் வெள்ளை மணலே தெரியும். திக்கு தெரியா தேசத்தில் ஓர் பயணம் என்ற தலைப்பில் ஒரு அனுபவத் தொடரை எழுதலாம். டிசம்பர்-ஜனவரியில் செல்வது சிறந்தது.

செலா கணவாய்

அருணாச்சல பிரதேச மாநிலம், செலா கணவாய் சாலை உலகின் இரண்டாவது மிகப்பெரிய உயரமான சாலை. கடல் மட்டத்திலிருந்து 13,800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சாலை தவாங் பகுதியை நாட்டின் பிற பகுதியுடன் இணைக்கிறது.

வயநாடு-ஊட்டி

பச்சை கம்பளம் விரிக்கப்பட்ட பச்சை பசேலன இருக்கும் மலைகளுக்கு இடையில் பதுங்கி செல்லும்  வயநாடு-ஊட்டி சாலையில் டிரைவிங் செய்வது ஒரு த்ரில்லான அனுபவமாக இருக்கும். அக்டோபர் முதல் மே வரையிலான காலத்தில் செல்வது சிறந்தது.

பறக்கும் தட்டு இரகசியங்கள்

பறக்கும் தட்டுக்கள் வானில் தென்படுவது தொடர்பிலும், அவற்றினைப் பயன்படுத்தி வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றார்கள் எனவும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலதரப்பட்ட கதைகள் பரவி வந்துள்ளதுடன், இது தொடர்பில் பல புகைப்படங்களும் வெளிவந்திருந்தன. இவை தொடர்பிலான ஆதாரங்கள் எதுவும் இன்று வரையிலும் சரிவர நிரூபிக்கப்படாத காரணத்தினால், பறக்கும் தட்டுக்கள் தொடர்பிலான மர்மங்கள் முடிச்சவிழ்க்கப்பட முடியாமல் இன்று வரையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஆர்வம் உடையவர்கள் எவரும் நிச்சயமாக Area 51 பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு, பறக்கும் தட்டுக்களுடனும் வேற்றுக்கிரகவாசிகளுடனும் நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக Area 51 காணப்படுகின்றது.

Area 51 மேற்கு அமெரிக்காவின் Nevada பிராந்தியத்திலுள்ள மலைசார்ந்த வறண்ட நிலப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. Area 51 என்பது அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஒரு பயிற்சி பட்டறையும் பரிசோதனை கூடமும் ஆகும். மிக நீண்டகாலமாகவே குறித்த பகுதிக்கு சாதாரண மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தின் மீதான பொதுவான விமானப்பறப்புக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. குறித்த பிரதேசம் தொடர்பிலான தகவல்கள் ஆரம்பத்தில் பலருக்கும் தெரியாமல் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்த போதிலும், நாளடைவில் Area 51 தொடர்பிலான விடயங்கள் வெளியுலகத்திற்குக் கசியத் தொடங்கியதையடுத்து அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலகத்தில் உள்ள அனைத்து மக்களினதும் கவனமானது Area 51 இன் மீதும், அங்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலும் திரும்பத்தொடங்கியது.




1955 களில் நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்படத் தொடங்கிய குறித்தகட்டமைப்பானது மிகவும் இரகசியமான இராணுவ பரிசோதனைநவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்று ஆரம்பத்தில் கருதப்பட்டபோதிலும், குறித்த பகுதியில் காணப்படுகின்ற Groom Lake எனப்படுகின்றபனிக்கட்டிகள் போன்ற தரைத்தோற்றத்தினைக் (Salt Lake) கொண்ட பாரியநிலப்பரப்பு மற்றும் அதனைச்சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த விமான ஓடுபாதைமேலும் குறித்த பகுதியில் வழமைக்கு மாறான விதத்தில்வடிவமைக்கப்பட்டிருந்த கட்டட அமைப்புகள், சந்தேகத்தினை ஏற்படுத்தும்வகையில் இடம்பெறத் தொடங்கிய பல இராணுவ பரிசோதனைகள் என்பன Area 51மீதான கவனத்தினை வேறு விதமாக திசை மாற்றியிருந்தது.

அத்துடன் Groom Lake என அழைக்கப்பட்ட பகுதியில் நிலத்தின் அடியில் பாரிய புகையிரதப்பாதை ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது என்கின்ற தகவல்களும் வெளிவந்திருந்தன.

இதற்கேற்றாற்போல், 1947 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் திகதியளவில்மெக்சிக்கோவின் Roswell எனும் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்த பறக்கும்தட்டு ஒன்றும்,

அதிலிருந்து மீட்கப்பட்ட உயிரிழந்த வேற்றுக்கிரகவாசிகளின்உடலும் Area 51 பகுதியில் வைத்து ஆய்வுக்குட்படுத்தப்படுவதாகத் தகவல்கள்வெளியாகியிருந்தன.

அத்துடன் குறித்த பறக்கும் தட்டானது Area 51  பகுதியில்வைத்து மீள்கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், அதன் தொழிநுட்பத்தினை அறிந்துகொள்ளும் பொருட்டும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலதிகதகவல்கள் வெளிவந்திருந்தன.


குறித்த பறக்கும் தட்டின் சிதைவுகள் Area 51 பகுதியில் அமைந்துள்ள Hangar 18என்று அழைக்கப்படும் கட்டடப்பகுதியில் வைத்தே மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,  MJ-12  மற்றும் SECTOR 7என்றுஅழைக்கப்படுகின்ற உயர்மட்ட அதிகாரிகள், மற்றும் இராணுவ அதிகாரிகள்உள்ளடங்கிய குழுவொன்று இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகநியமிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து Area 51 என்பது வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுக்கள்தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கென அமெரிக்க அரசினால்அமைக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பும், இரகசியமும் மிகுந்த பிரதேசம் என பலதரப்பினரும் கருதத்தொடங்கியிருந்தனர். இவையெல்லாவற்றிற்கும் அப்பால்,வானிலைக் கட்டுப்பாடு, இரகசிய ஆயுதங்களின் உற்பத்தி, மற்றும் முன்னையகாலத்தினை நோக்கிப் பயணிப்பதற்கான தொழிநுட்பம் (Time Travel Technology)என்பவை தொடர்பிலான ஆய்வுகளும் Area 51 பகுதியில்மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பல்வேறு சர்ச்சைகள்தோற்றுவிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், Area 51 இனைச் சார்ந்த ஏனைய நிலப்பகுதிகளானது பாரிய அணுவாயுதச் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுமிருந்தன. இதன் காரணமாக Area 51 பகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் பலர் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்ததுடன், குறித்த பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு நாளடைவில் புற்றுநோய்த் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் பலத்த விமர்சனங்களும் கிளம்பியிருந்தன.

மேலும், Area 51 மற்றும் அதன் இரகசியங்கள் குறித்து The Independence Day போன்ற திரைப்படங்களும் வெளிவந்திருந்தன. அத்துடன், Indiana Jones திரைப்படமொன்றில் அமெரிக்க அரசினால் கைப்பற்றப்பட்டிருந்த விநோதமான பொருட்களைச் சேமித்து வைக்கும் களஞ்சியம் ஒன்று தொடர்பான காட்சி அமைக்கப்பட்டிருந்ததுடன், குறித்த களஞ்சியசாலைக்கு Hangar 51 எனப் பெயரிடப்பட்டுமிருக்கும்.

இவ்வாறான பல சர்ச்சைகளின் முடிச்சுக்களைத் தன்னகத்தே வைத்திருந்த Area 51தொடர்பிலும், அதன் இரகசியத் தன்மை தொடர்பிலும் தற்போது முதல்முறையாக CIA யினர் உத்தியோகபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பிலான தகவல்கள் வொஷிங்டனின் George Washingtonபல்கலைக்கழகத்திலுள்ள தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகத்திலிருந்து தற்போதுவெளியிடப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டளவில் குறித்த விடயம் தொடர்பில் சிலஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றில் பல முக்கியமானவிடயங்கள் மறைக்கப்பட்டே குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன.இந்நிலையில் தற்போது Area 51 குறித்த முழுமையான ஆவணம்வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இரகசிய உளவு விமானமொன்றின் தயாரிப்பு தொடர்பிலும் அதன் பரிசோதனை தொடர்பிலுமே குறித்த Area 51 பகுதியானது அமெரிக்க அரசினால் 1955 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டிருந்தது. இதன்பின் CIA, விமானப்படை அதிஉயர் தொழில்நுட்பம் கொண்ட வேவுபார்க்கும் விமானம் ஒன்றை உருவாக்க Lockheed என்கின்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து Area 51 பகுதியில் விமான கட்டுமான பணிகளை ஆரம்பித்தது.

U – 2 
U-2 programme என இத்திட்டம் அழைக்கப்பட்டிருந்ததுடன் தனித்துவமிக்க வகையில்உளவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய U-2 என்கின்ற உளவு விமானத்தினைத்தயாரித்து பரிசோதிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்தவிமானமானது பனிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சோவியத் யூனியன்மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படத்து.

U-2 உளவு விமானத்தினைப் பொறுத்த வரையில் குறித்த விமானமானது அதிக உயரத்தில் பறக்கக் கூடியதாக இருப்பதுவே அதன் தனித்துவமிக்க சிறப்பம்சமாகும். குறித்த விமானமானது கிட்டத்தட்ட 60,000 அடிகளுக்கும் மேல் பறக்கக் கூடியது என்பதுடன் இவ்விமானத்தின் பறப்புக்களே பறக்கும் தட்டு குறித்த சந்தேகங்களைத் தோற்றுவித்தன என தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, 1957 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த விமானம் பரிசோதிக்கப்பட்டபோது U-2 விமானத்தின் தொழிநுட்பமானது அக்காலகட்டத்தில் கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பாரிய தொழிநுட்பமாகக் காணப்பட்டது. இதனால் இவ்வாறான தொழிநுட்பத்தினைக் கொண்டமைந்த விடயங்கள் அக்காலகட்டத்தில் உலகத்தில் இருந்திருக்கவே முடியாது என்கின்ற எண்ணம் மக்கள் மத்தியில் காணப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த விமானமானது மிகவும் உயரத்தில் பறக்கும் போது அதுசாதாரண கண்களுக்குப் பெரும்பாலும் புலப்படமாட்டாது ஆயினும், குறிப்பிட்டஒரு உயரத்தில் பொதுமக்கள் U-2 வினைக் காணும் போது அது இனங்காணப்படமுடியாத ஒரு பொருள் (Unidentified Flying Object – UFO) பறப்பது போன்றதோற்றத்தினை அக்காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. மேலும், குறித்த விமானத்தின்பரிசோதனையானது பெரும்பாலும் மாலை நேரத்திலேயேமேற்கொள்ளப்படுவதனால், குறித்த நேரத்தில் விமானத்தின் மீது சூரியனின் ஒளிபட்டுத் தெறிக்கின்ற பிரகாசத்தினை அப்போதைய மக்கள் பறக்கும் தட்டு எனநம்பியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு பிற்பட்டகாலப்பகுதிகளில் OXCART, D-21 & F-117 எனும் உளவு விமானங்களும் Area 51 பகுதியில் பரிசோதிக்கப்பட்டமை பறக்கும் தட்டு தொடர்பான சந்தேகங்களுக்குதீனி போடுவதாக அமைந்தது.
OXCART





D 21




F – 117

இவ்வாறு வெளிவந்த வதந்திகளை அமெரிக்க அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது காரணம் இவ் அதி நவீன உளவு விமானங்கள் சோவியத் உடனான பனிப் போரில் அமெரிக்காவிற்கு தலை சிறந்த ஆயுதமாக விளங்கியது.இப்படி ஓரு ஆயுதம் இருப்பதையே வெளி உலகிற்கு குறிப்பாக சோவியத்திஇற்குகாட்டி கொள்ள விரும்பவில்லை. அகவே பறக்கும் தட்டுக்கள் சம்பந்தமானவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதை ஒரு திசை திருப்பும் கருவியாகபாவித்து Area 51 பகுதியில் உண்மையான இரகசிய நடவடிக்கைகளை தொடர்ந்துமுன்னெடுத்தது CIA. மேலும் பறக்கும் தட்டுக்கள் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள்தொடர்பிலான சில பொய்யான தகவல்களை அவ்வப்போது திட்டமிட்டுவெளியிட்டு பொதுமக்களை ஒரு குழப்பமான நிலையில்  வைத்திருப்பதற்கானமுயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில், இவ்வளவு காலத்தின் பின்னர் இவ்வாறான ஒரு ஆவணத்தினை வெளியிட்டு இதுதான் Area 51இல் நடந்தது என்று சொல்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் எதனை உலகத்திற்கு வெளிப்படுத்த விரும்புகின்றது என்று தெரியவில்லை. அத்துடன் அண்மையில் பறக்கும் தட்டு தொடர்பில் விசாரணை செய்யும் பிரித்தானிய பிரிவு மூடபட்டது CIA இன் பிந்திய அறிகைய உறுதி செய்வதாகவே உள்ளது. ஆக மொத்தத்தில் பறக்கும் தட்டு என்று வதந்தியை உருவாக்கி முழு உலகையும் முட்டாளாக்கி உள்ளது CIA.

Area 51 இன் பல ஆராய்ச்சி நடவடிக்கைகள் பெரும்பாலும் நிலத்திற்கு அடியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதனால், உண்மையில் அங்கு என்ன நடந்தது?, மற்றும் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியுலகத்தினருக்குத் தெரியவாய்ப்பில்லை. அத்துடன், உலகின் ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில்  1950 காலப்பகுதிகளில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத பரிசோதனைகளை வெற்றிகரமாக அமெரிக்கா முன்னெடுத்திருக்கின்றது என்பது தற்போது உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதால், தற்போதைய காலகட்டத்தில் எம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட எவ்வளவோ விடயங்கள் அமெரிக்காவினால் வெற்றிகரமாகப் கண்டு பிடிக்கப்பட்டு பின் மறைக்கப்பட்டு இருக்கும் என்பதும் மறுக்க முடியாத ஒரு விடயமாகும், காலதத்தின் கைகளிலேயே இதற்கான விடை மறைந்துள்ளது.

Saturday, November 22, 2014

ஈஸ்டர் தீவு and மச்சு பிச்சு


  ஈஸ்டர் தீவு


தென்னமெரிக்காவைச் சேர்ந்த பெரு (Peru) நாட்டில்  கீழே இருக்கும் நாடுதான் 'சிலி' (Chile). 'சிலி' நாடு, நீண்டதொரு நேர் கோடு போல, மேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடு. இந்த நாட்டுக்குச் சொந்தமாக, மேற்குப் பகுதிக் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவின் பெயர் 'ஈஸ்டர் தீவு' (Easter Island) என்பதாகும்.
 

ஈஸ்டர் தீவு, சிலி நாட்டுக்குச் சொந்தமான தீவுதான் என்றாலும், கடல் நடுவே சிலியிலிருந்து வெகு தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறது. முக்கோண வடிவத்தில் இருக்கும்அந்தத் தீவில், உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்றுஇருக்கிறது. அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.
மனிதர்களே வாழமுடியாத அளவு தூரத்தில், கடலின் நடுவே இருக்கும் இந்தத்தீவைக் கண்டவர்கள் பிரமித்துப் போனார்கள். அத்தீவைச் சுற்றி, வரிசையாக மிகப் பெரிய மனிதர்கள் கடலைப் பார்த்தபடி நின்றதுதான் பிரமிப்பிற்குக் காரணம். ஒவ்வொரு மனிதரும் இராட்சதர்கள் போல, இரண்டு மீற்றர்கள் உயரத்தில் இருந்து, பத்து மீற்றர்கள் உயரம் வரை இருந்தார்கள். என்ன பயந்துவிட்டீர்களா….? உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்த மனிதச் சிலைகள். அந்தத் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் பல தொன்கள் எடையுள்ளவையாக இருந்தன. சில சிலைகள் 80தொன்கள் வரை எடையுள்ளதாகவும் இருக்கின்றன. யார் செய்தார்கள் இந்தச் சிலைகளை? ஏன் செய்தார்கள்? யாருக்கும் தெரியவில்லை.











இந்தச் சிலைகள் 'மோவாய்' (Moai) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. கி.பி.300 ஆண்டுகளில் இவை செய்யப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியில் கணித்திருந்தாலும், சரியான கணக்குத் தெரியவில்லை.

 இந்தச் சிலைகளை ஏன் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் உருவாக்கினார்கள்? எதற்காகத் தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள்? என்ற கேள்விகளுக்கு இன்றுவரை எவரிடமும் பதில் இல்லை. இதற்கும் வேற்றுக்கிரகவாசிகளான ஏலியன்களுக்கும் சம்பந்தம் உண்டா என்றும் தெரியவில்லை.



இந்தச் சிலைகளை எப்படிச் செதுக்கினார்கள்? செதுக்கிய இந்தச் சிலைகளைஎப்படித் தீவின் மையப் பகுதியில் இருந்து, பதினாறு கி.மீ. தூரத்தில் இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள்? அப்படி நகர்த்தி வந்ததை எப்படி நிமிர்த்தினார்கள்? என்பவை எல்லாமே ஆச்சரியங்களாகவும், கேள்விகளாகவும் எம்முன்னே நிற்கின்றன. அந்தத் தீவிலுள்ள மரங்களை வெட்டியே இவற்றை க் கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் எந்தக் கருவிகளும் இல்லாமல்இப்படி நகர்த்தி நிமிர்த்தியதும், அவற்றைச் செய்ததும் மனிதனால் முடியாத ஒரு அசாத்தியச் செயல் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

அந்தத் தீவில், வெட்டப்பட்டுப் பாதியில் விடப்பட்ட சிலை ஒன்றைக்கண்டால் அசந்து விடுவீர்கள். 200 தொன் நிறைக்கு அதிகமாகவும், மிக நீளமாகவும் இருக்கிறது அந்தச் சிலை. ஒரு வேளை அந்தச் சிலை செய்யப்பட்டிருந்தால், அதை எப்படி உயரத் தூக்கியிருப்பார்கள்? எப்படி நகர்த்தியிருப்பார்கள்? எதற்கும் விடையில்லை. எல்லாமே……! எல்லாமே….!ஆச்சரியங்களும் மர்மங்களுமாய் அமைந்து இருக்கின்றன.
'மோவாய்' (Moai)  என்று சொல்லப்படும் இந்தச் சிலைகள், தீவைச் சுற்றி நிறுத்தப் பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவு முழுக்க நூற்றுக்கணக்கில் பாகங்களாய் சிதறியது போலப் போடப் பட்டிருக்கின்றன. தலைகள்,உடல்கள் என எங்கும் மோவாய்கள்தான். அதிகம் ஏன், கடலுக்குள்ளும் மோவாய்கள் கிடக்கின்றன.
இந்தச் சிலைகள் யாருக்கு, என்ன செய்திகளைச் சொல்கின்றன? இதை மனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? அவசியம் என்ன?  போதும் என்னும் அளவிற்கு இந்தத் தீவின் மர்மங்கள் இருக்கின்றன......



மச்சு பிச்சு!!

தென்னமெரிக்க நாடான பெருவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரம் தான் மச்சு பிச்சு!! செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கொண்ட   "இன்கா பேரரசால்" கட்டப்பட்டது. ( நம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான்!!) 


பச்சாகுட்டி (Pachakuti) என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில், மலைகளின் நடுவே மக்கள் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் "மச்சு பிச்சு" நகரத்திற்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு?
செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்குமளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத பொழுது எப்படி நிர்மானித்தார்கள்? மக்களின் உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் ஒரு நகரம் அமைப்பதென்பது அதிசயமானதே!!

சீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது. ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில்!! இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். 
தேயிலைத் தோட்டங்களில் படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின் கலாச்சாரத்தைப் போற்றுகிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள் அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.
இவ்வளவு சிறப்பாக ஒரு நகரை உருவாக்கிய இன்கா பேரரசு என்ன ஆனது?

பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
ஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர். ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.
ஸ்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர். இப்படி ஐரோப்பியர்களின் படையெடுப்பின் காரணமாக உலகெங்கும் அழிந்த கலாச்சாரங்கள் எத்தனையோ?
இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது "மச்சு பிச்சு".  பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
மச்சு பிச்சு நகரிற்குச் செல்ல குஸ்கோ என்னும் நகரில் இருந்து ஒல்லாண்டயடம்போ என்னும் இடத்திற்கு ரயிலிலும், பிறகு மலைகளின் சரிவில் உள்ள பேருந்து பயணம் மூலம் இடத்தைச் சென்றடைய முடியும்!! 2007ல், புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தேர்ந்தெடுத்த பொழுது இந்த வரலாற்றுச் சின்னம் நமக்கு அறிமுகமானது. 
பல கஷ்டங்களுக்கிடையில், எங்கெங்கோ, யார் யாரையோ பிடித்து “எந்திரன்” படத்திற்காக ஒரு டூயட் பாடலை டைரக்டர் ஷங்கர் அவர்கள் படமாக்கி உள்ளார்...

இந்த இடம் தடைசெய்யப்பட பகுதி என்பதால், படப்பிடிப்புக்கு அவ்வளவு கெடுபிடி...

நாஸ்கா கோடுகள்..


 
தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு (Peru) நாட்டில் உள்ள நாஸ்கா (Nazca)என்னுமிடத்தில் அமைந்த, பெருவெளிகளில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும்,கோடுகளும்தான் நாஸ்கா கோடுகள் என்று சொல்லப்படுகின்றன.


கோடுகள்,சித்திரங்கள் என்றதும் ஏதோ சுவரில் எழுதப்பட்ட சித்திரம் என்று  நினைத்துவிடவேண்டாம். இவை எல்லாம் மிகவும் ஆச்சரியமான சித்திரங்கள். எல்லா மேமனிதர்கள் வாழாத இடமான, மிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்ட சித்திரங்கள். 500சதுர கி.மீ. பரப்பளவில் (நன்றாகக் கவனியுங்கள் சதுர மீட்டர்கள் அல்ல, சதுர கிலோ மீட்டர்) இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன என்றால் நீங்களே  கற்பனை பண்ணிப் பாருங்கள்.

இந்தப் படத்தில் பார்க்கும் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. அத்துடன் கீறப்பட்ட நேர்க்கோடுகள், நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. நேராக கோடு வரைவது என்பது ஆச்சரியமே கிடையாது.அவற்றின் பிரமாண்டமே எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இங்கு கோடுகள் மட்டும் கீறப்பட்டிருக்கவில்லை. பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன.


 இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம். 1.நேர் கோடுகள், 2.கேத்திர கணித (Goematery) முறையிலான வடிவங்கள், 3.மிருகங்கள்,பறவைகள் போன்ற உருவங்கள்.

 இதில் 800 க்கும் அதிகமான கோடுகள், கேத்திர கணித வரைவுகளும்,  நூற்றுக்கும் மேற்பட்ட மிருகங்கள், பறவைகளின் உருவங்களும் அடங்கும். இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிக மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள்  285 மீற்றர் நீளத்துக்கும் வரையப் பட்டிருக்கிறது.  அதாவது கால் கிலோ மீற்றர் நீளம்.அத்துடன், நேர்கோடுகள் பல கி.மீ. நீளத்துக்கு வரையப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தால் ஆச்சரியத்தில் திகைத்து விடுவீர்கள். இவற்றையெல்லாம் எழுத்துக்களால் எழுதி விவரிப்பதை விடப் படங்கள் மூலமாக விவரிப்பதே இலகுவாக இருக்கும்.





எல்லாமே ஆச்சரியங்கள்! "எப்படி இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்வி எமக்கு எழுந்தாலும், "ஏன் இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்விதான் இங்கு எல்லோருமே வியக்கும் விசயமாகிறது. நிலத்தில் இருந்து பார்க்கும் போது, இந்தச் சித்திரங்களின்முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில்உயரப் பறந்தால் மட்டுமே முடியும். அப்படி என்றால் இதை வரைந்த நாஸ்காவினர்,யார் பார்க்க வேண்டும் என்று இப்படி வரைந்தார்கள்?  2500 ஆண்டுகளுக்கு முன்னர் இவை வரையப் பட்டிருகின்றன என்பது இன்னும் யோசிக்க வைக்கிறது.

இந்த நாஸ்கா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், ஹம்மிங் பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பலஇருக்கின்றன. இவற்றை வரைந்ததற்கு நிச்சயம் ஒரு அர்த்தம் இருந்தே தீரவேண்டும். அவை என்ன?




இந்த ஹம்மிங் பறவை (Humming bird) இரண்டு புட்பால் மைதானங்களின்அளவுடையது. அதாவது 285 மீற்றர்கள்.







கணினியில் அச்சுப் பதித்துத் தரும் 'ப்ளொட்டர்' (Plotter) என்னும் இயந்திரம் போல,தொடங்கிய புள்ளியும், முடிந்த புள்ளியும் எதுவெனத் தெரியாமல், ஒரே தொடர்ச்சியாய் அந்தச் சித்திரங்கள் ஒரே கோட்டில் கீறப்பட்டுள்ளன. ஆச்சரியகரமாக அந்தப் படங்களின் ஏதோ ஒரு இடம் நீட்டப்பட்டு முடிவடைந்திருக்கும். குறிப்பாக, அந்தக் குரங்கின் வாலைக் கவனித்தீர்களானால்,  அதனுடன் இன்னுமொரு தொடர்ச்சி இருக்கும். அவையெல்லாம் என்ன காரணங்களினால் அப்படி வரையப்பட்டிருக்கின்றன என்றே புரியவில்லை. தற்கால ஆராய்ச்சியாளர்கள் சிலர்,அவை போன்ற சித்திரங்கள் சிலதைப் பிரதி செய்து வரைந்து காட்டினாலும், அந்தக்காலத்தில் அது எப்படிச் சாத்தியமாக இருந்தது என்னும் கேள்விதான் இங்கு பிரமிக்கவைக்கிறது.

இவற்றுடன் இந்த வரைவுகள் முடிந்திருந்தால் பெரிதாக அலட்டியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவற்றில் இருந்த இரண்டு விசயங்கள் நிறையயோசிக்க வைத்தன. பலரின் கவனத்தைக் கவர்ந்து இழுத்ததும் அந்த இரண்டுசித்திரங்களும்தான். பல மீற்றர்கள் நீளமான விமானம் இறங்கும் 'ஓடு பாதை' போலஅமைந்த ஒரு அமைப்பு அங்கே காணப்பட்டது. இந்த அமைப்பு எதற்காக ஏற்பட்டது அல்லது இது விண்வெளியில் இருந்து வந்து இறங்கும் விமானத்தின் ஓடுபாதையேதானா?



இரண்டாவது, மலை ஒன்றில் வான் நோக்கிப் பார்த்துக் கொண்டு, ஒரு கையால் வானைச் சுட்டிக் காட்டியபடி இருக்கும் ஒரு மிகப் பெரிய மனிதனி ன்சித்திரம். யாரையோ வரவேற்பது போலவோ அல்லது யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவோ. அந்தச் சித்திரம் கீறப்பட்டிருக்கிறது அல்லது அவர்கள் மேலே இருக்கிறார்கள் என்று காட்டுவதாகவும் இருக்கலாம்.

 இந்தச் சித்திரத்துக்கு  'தஅஸ்ட்ரோநாட்' (The Astronaut) என்று பெயர் கூட வைத்திருக்கிறார்கள்.





இந்த மனிதன் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் அல்லது இந்த மனிதனே ஒரு ஏலியன்தானோ?



நாஸ்காவின் சித்திரங்களில் சில இந்த அமைப்பில்தான் வரையப்பட்டிருக்கின்றன.

இந்தச் சித்திரங்களில் சில வினோதங்களும் உண்டு. குரங்கு போன்ற சித்திரத்திலும்,வேறு சில சித்திரங்களிலும், ஒரு கையில் நான்கு விரல்களும், அடுத்த கையில் ஐந்து விரல்களும் காணப்படுகின்றன.

ஏன் இப்படி வரைந்திருக்கிறார்கள்? இவ்வளவு நேர்த்தியாக வரைந்தவர்கள் அப்படி ஒருபிழையை விடுவார்களா? இவற்றிற்கெல்லாம் காரணங்களே தெரியவில்லை அல்லது இவையெல்லாம் நமக்கு ஏதாவது செய்திகளைச் சொல்கின்றனவா?

இந்தச் சித்திரங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்! இந்தச் சித்திரங்கள் மூலமாக, நாஸ்கா மக்கள் வானத்தில் பறந்து வந்த யாருக்கோ எதையோ அறிவித்திருக்கிறார்கள் அல்லது நாஸ்கா மக்களுக்கு, விண்ணில் இருந்து வந்தவர்கள் யாரோ இப்படி வரையும் தகவல்களைச் சொல்லிச் சென்றுள்ளார்கள் என்பதுதான் அது.நாஸ்கா அமைந்திருக்கும் 'பெரு' (Peru) நாடும் மாயா இனத்தவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு அண்மையிலேயே இருக்கின்றது என்பது மேலும் ஒரு விசேசமாகின்றது.

உலகில் அவிழ்க்கப்படாத மூன்று மிஸ்டரிகள் (Mystery) இருந்தாலும், அறிவியல் வியக்கும் முன்று முக்கிய மிஸ்டரிகள் உண்டு.  அவை 1. கிறிஸ்டல் மண்டையோடுகள் (Crystal sculls), 2. நாஸ்கா கோடுகள் (Nazca lines), 3. சோளச் சித்திரங்கள் (Crop circles) என்பன. இந்த மூன்றும் வேற்றுக் கிரக மனிதர்கள் சம்பந்தமானவை என்று கருதப்படுகின்றன.