ஈஸ்டர் தீவு
தென்னமெரிக்காவைச் சேர்ந்த பெரு (Peru)
நாட்டில் கீழே இருக்கும்
நாடுதான் 'சிலி' (Chile). 'சிலி' நாடு, நீண்டதொரு நேர் கோடு போல,
மேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடு. இந்த நாட்டுக்குச்
சொந்தமாக, மேற்குப் பகுதிக் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவின் பெயர்
'ஈஸ்டர் தீவு' (Easter Island) என்பதாகும்.
ஈஸ்டர் தீவு, சிலி
நாட்டுக்குச் சொந்தமான தீவுதான் என்றாலும், கடல் நடுவே சிலியிலிருந்து வெகு
தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறது. முக்கோண வடிவத்தில் இருக்கும்அந்தத்
தீவில், உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்றுஇருக்கிறது.
அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.
மனிதர்களே வாழமுடியாத அளவு தூரத்தில், கடலின் நடுவே இருக்கும் இந்தத்தீவைக்
கண்டவர்கள் பிரமித்துப் போனார்கள். அத்தீவைச் சுற்றி, வரிசையாக மிகப்
பெரிய மனிதர்கள் கடலைப் பார்த்தபடி நின்றதுதான் பிரமிப்பிற்குக் காரணம்.
ஒவ்வொரு மனிதரும் இராட்சதர்கள் போல, இரண்டு மீற்றர்கள் உயரத்தில் இருந்து,
பத்து மீற்றர்கள் உயரம் வரை இருந்தார்கள். என்ன பயந்துவிட்டீர்களா….?
உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்த மனிதச் சிலைகள். அந்தத்
தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் பல தொன்கள்
எடையுள்ளவையாக இருந்தன. சில சிலைகள் 80தொன்கள் வரை எடையுள்ளதாகவும்
இருக்கின்றன. யார் செய்தார்கள் இந்தச் சிலைகளை? ஏன் செய்தார்கள்?
யாருக்கும் தெரியவில்லை.
இந்தச் சிலைகள் 'மோவாய்' (Moai) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன.
கி.பி.300 ஆண்டுகளில் இவை செய்யப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியில்
கணித்திருந்தாலும், சரியான கணக்குத் தெரியவில்லை.
இந்தச் சிலைகளை ஏன்
அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் உருவாக்கினார்கள்? எதற்காகத் தீவைச் சுற்றி
அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள்? என்ற கேள்விகளுக்கு இன்றுவரை
எவரிடமும் பதில் இல்லை. இதற்கும் வேற்றுக்கிரகவாசிகளான ஏலியன்களுக்கும்
சம்பந்தம் உண்டா என்றும் தெரியவில்லை.
இந்தச் சிலைகளை எப்படிச் செதுக்கினார்கள்? செதுக்கிய இந்தச்
சிலைகளைஎப்படித் தீவின் மையப் பகுதியில் இருந்து, பதினாறு கி.மீ. தூரத்தில்
இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள்? அப்படி நகர்த்தி வந்ததை எப்படி
நிமிர்த்தினார்கள்? என்பவை எல்லாமே ஆச்சரியங்களாகவும், கேள்விகளாகவும்
எம்முன்னே நிற்கின்றன. அந்தத் தீவிலுள்ள மரங்களை வெட்டியே இவற்றை க்
கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள்
கருதுகிறார்கள். ஆனாலும் எந்தக் கருவிகளும் இல்லாமல்இப்படி நகர்த்தி
நிமிர்த்தியதும், அவற்றைச் செய்ததும் மனிதனால் முடியாத ஒரு அசாத்தியச்
செயல் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
அந்தத் தீவில், வெட்டப்பட்டுப் பாதியில் விடப்பட்ட சிலை ஒன்றைக்கண்டால்
அசந்து விடுவீர்கள். 200 தொன் நிறைக்கு அதிகமாகவும், மிக நீளமாகவும்
இருக்கிறது அந்தச் சிலை. ஒரு வேளை அந்தச் சிலை செய்யப்பட்டிருந்தால், அதை
எப்படி உயரத் தூக்கியிருப்பார்கள்? எப்படி நகர்த்தியிருப்பார்கள்? எதற்கும்
விடையில்லை. எல்லாமே……! எல்லாமே….!ஆச்சரியங்களும் மர்மங்களுமாய் அமைந்து
இருக்கின்றன.
'மோவாய்' (Moai) என்று சொல்லப்படும் இந்தச் சிலைகள், தீவைச் சுற்றி
நிறுத்தப் பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவு முழுக்க நூற்றுக்கணக்கில்
பாகங்களாய் சிதறியது போலப் போடப் பட்டிருக்கின்றன. தலைகள்,உடல்கள் என
எங்கும் மோவாய்கள்தான். அதிகம் ஏன், கடலுக்குள்ளும் மோவாய்கள் கிடக்கின்றன.
இந்தச் சிலைகள் யாருக்கு, என்ன செய்திகளைச் சொல்கின்றன? இதை மனிதர்கள்
செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைச்
செய்ய வேண்டிய காரணம் என்ன? அவசியம் என்ன? போதும் என்னும் அளவிற்கு இந்தத் தீவின் மர்மங்கள்
இருக்கின்றன......
தென்னமெரிக்க நாடான
பெருவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரம் தான் மச்சு பிச்சு!!
செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர்
உயரத்தில் கொண்ட "இன்கா பேரரசால்" கட்டப்பட்டது. ( நம் ஊட்டி,
கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான்!!)
பச்சாகுட்டி (Pachakuti)
என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது.
பழங்காலத்தில், மலைகளின் நடுவே மக்கள் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் "மச்சு
பிச்சு" நகரத்திற்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு?
செங்குத்தான மலைத்தொடரின்
உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்குமளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும்
இல்லாத பொழுது எப்படி நிர்மானித்தார்கள்? மக்களின் உழைப்பை மட்டுமே
அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் ஒரு நகரம் அமைப்பதென்பது அதிசயமானதே!!
சீனப் பெருஞ்சுவரும் மலை
உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத்
தடுப்பதற்காகவே பயன்பட்டது. ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த
காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில்!! இந்நகரத்தில்
அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை
வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.
தேயிலைத் தோட்டங்களில்
படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல
மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின்
கலாச்சாரத்தைப் போற்றுகிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள்
அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத்
தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.
இவ்வளவு சிறப்பாக ஒரு நகரை உருவாக்கிய இன்கா பேரரசு என்ன ஆனது?
பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி
ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள்,
பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின்
ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை
நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள்
தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா
என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள்
தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர்
என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
ஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார்
முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள்
கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இன்கா
மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள்.
போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர்.
ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின்
கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். மன்னனைச்
சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி
ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.
ஸ்பானியர்களின் படையெடுப்பின்
காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர்.
இப்படி ஐரோப்பியர்களின் படையெடுப்பின் காரணமாக உலகெங்கும் அழிந்த
கலாச்சாரங்கள் எத்தனையோ?
இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம்
இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது "மச்சு
பிச்சு". பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல்
அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார்.
அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக
மாற்றப்பட்டது. 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க
இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
மச்சு பிச்சு நகரிற்குச் செல்ல
குஸ்கோ என்னும் நகரில் இருந்து ஒல்லாண்டயடம்போ என்னும் இடத்திற்கு
ரயிலிலும், பிறகு மலைகளின் சரிவில் உள்ள பேருந்து பயணம் மூலம் இடத்தைச்
சென்றடைய முடியும்!! 2007ல், புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலை சுவிஸ்
நாட்டைச் சேர்ந்த அமைப்பு தேர்ந்தெடுத்த பொழுது இந்த வரலாற்றுச் சின்னம்
நமக்கு அறிமுகமானது.
பல கஷ்டங்களுக்கிடையில், எங்கெங்கோ, யார் யாரையோ பிடித்து “எந்திரன்”
படத்திற்காக ஒரு டூயட் பாடலை டைரக்டர் ஷங்கர் அவர்கள் படமாக்கி உள்ளார்...
இந்த இடம் தடைசெய்யப்பட பகுதி என்பதால், படப்பிடிப்புக்கு அவ்வளவு கெடுபிடி...
நாஸ்கா கோடுகள்..
தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு (Peru) நாட்டில் உள்ள நாஸ்கா
(Nazca)என்னுமிடத்தில் அமைந்த, பெருவெளிகளில் வரையப்பட்டிருக்கும்
சித்திரங்களும்,கோடுகளும்தான் நாஸ்கா கோடுகள் என்று சொல்லப்படுகின்றன.
கோடுகள்,சித்திரங்கள் என்றதும் ஏதோ சுவரில் எழுதப்பட்ட சித்திரம் என்று
நினைத்துவிடவேண்டாம். இவை எல்லாம் மிகவும் ஆச்சரியமான சித்திரங்கள். எல்லா
மேமனிதர்கள் வாழாத இடமான, மிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்ட
சித்திரங்கள். 500சதுர கி.மீ. பரப்பளவில் (நன்றாகக் கவனியுங்கள் சதுர
மீட்டர்கள் அல்ல, சதுர கிலோ மீட்டர்) இந்தச் சித்திரங்களும் கோடுகளும்
அமைந்திருக்கின்றன என்றால் நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள்.
இந்தப் படத்தில் பார்க்கும் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து
எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. அத்துடன்
கீறப்பட்ட நேர்க்கோடுகள், நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நேராக,
நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. நேராக கோடு வரைவது என்பது ஆச்சரியமே
கிடையாது.அவற்றின் பிரமாண்டமே எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இங்கு கோடுகள்
மட்டும் கீறப்பட்டிருக்கவில்லை. பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும்
வரையப்பட்டிருக்கின்றன.
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம். 1.நேர்
கோடுகள், 2.கேத்திர கணித (Goematery) முறையிலான வடிவங்கள்,
3.மிருகங்கள்,பறவைகள் போன்ற உருவங்கள்.
இதில் 800 க்கும் அதிகமான கோடுகள், கேத்திர கணித வரைவுகளும், நூற்றுக்கும்
மேற்பட்ட மிருகங்கள், பறவைகளின் உருவங்களும் அடங்கும். இவற்றில்
ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிக மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய
உருவங்கள் 285 மீற்றர் நீளத்துக்கும் வரையப் பட்டிருக்கிறது. அதாவது கால்
கிலோ மீற்றர் நீளம்.அத்துடன், நேர்கோடுகள் பல கி.மீ. நீளத்துக்கு
வரையப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தால் ஆச்சரியத்தில் திகைத்து விடுவீர்கள்.
இவற்றையெல்லாம் எழுத்துக்களால் எழுதி விவரிப்பதை விடப் படங்கள் மூலமாக
விவரிப்பதே இலகுவாக இருக்கும்.
எல்லாமே ஆச்சரியங்கள்! "எப்படி இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்வி எமக்கு
எழுந்தாலும், "ஏன் இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்விதான் இங்கு எல்லோருமே
வியக்கும் விசயமாகிறது. நிலத்தில் இருந்து பார்க்கும் போது, இந்தச்
சித்திரங்களின்முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும்
என்றால் வானத்தில்உயரப் பறந்தால் மட்டுமே முடியும். அப்படி என்றால் இதை
வரைந்த நாஸ்காவினர்,யார் பார்க்க வேண்டும் என்று இப்படி வரைந்தார்கள்?
2500 ஆண்டுகளுக்கு முன்னர் இவை வரையப் பட்டிருகின்றன என்பது இன்னும்
யோசிக்க வைக்கிறது.
இந்த நாஸ்கா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன்,
ஹம்மிங் பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத
உருவங்களும் பலஇருக்கின்றன. இவற்றை வரைந்ததற்கு நிச்சயம் ஒரு அர்த்தம்
இருந்தே தீரவேண்டும். அவை என்ன?
இந்த ஹம்மிங் பறவை (Humming bird) இரண்டு புட்பால் மைதானங்களின்அளவுடையது. அதாவது 285 மீற்றர்கள்.
கணினியில் அச்சுப் பதித்துத் தரும் 'ப்ளொட்டர்' (Plotter) என்னும்
இயந்திரம் போல,தொடங்கிய புள்ளியும், முடிந்த புள்ளியும் எதுவெனத்
தெரியாமல், ஒரே தொடர்ச்சியாய் அந்தச் சித்திரங்கள் ஒரே கோட்டில்
கீறப்பட்டுள்ளன. ஆச்சரியகரமாக அந்தப் படங்களின் ஏதோ ஒரு இடம் நீட்டப்பட்டு
முடிவடைந்திருக்கும். குறிப்பாக, அந்தக் குரங்கின் வாலைக்
கவனித்தீர்களானால், அதனுடன் இன்னுமொரு தொடர்ச்சி இருக்கும். அவையெல்லாம்
என்ன காரணங்களினால் அப்படி வரையப்பட்டிருக்கின்றன என்றே புரியவில்லை.
தற்கால ஆராய்ச்சியாளர்கள் சிலர்,அவை போன்ற சித்திரங்கள் சிலதைப் பிரதி
செய்து வரைந்து காட்டினாலும், அந்தக்காலத்தில் அது எப்படிச் சாத்தியமாக
இருந்தது என்னும் கேள்விதான் இங்கு பிரமிக்கவைக்கிறது.
இவற்றுடன் இந்த வரைவுகள் முடிந்திருந்தால் பெரிதாக அலட்டியிருக்கத்
தேவையில்லை. ஆனால் அவற்றில் இருந்த இரண்டு விசயங்கள் நிறையயோசிக்க வைத்தன.
பலரின் கவனத்தைக் கவர்ந்து இழுத்ததும் அந்த இரண்டுசித்திரங்களும்தான். பல
மீற்றர்கள் நீளமான விமானம் இறங்கும் 'ஓடு பாதை' போலஅமைந்த ஒரு அமைப்பு
அங்கே காணப்பட்டது. இந்த அமைப்பு எதற்காக ஏற்பட்டது அல்லது இது
விண்வெளியில் இருந்து வந்து இறங்கும் விமானத்தின் ஓடுபாதையேதானா?
இரண்டாவது, மலை ஒன்றில் வான் நோக்கிப் பார்த்துக் கொண்டு, ஒரு கையால்
வானைச் சுட்டிக் காட்டியபடி இருக்கும் ஒரு மிகப் பெரிய மனிதனி ன்சித்திரம்.
யாரையோ வரவேற்பது போலவோ அல்லது யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது
போலவோ. அந்தச் சித்திரம் கீறப்பட்டிருக்கிறது அல்லது அவர்கள் மேலே
இருக்கிறார்கள் என்று காட்டுவதாகவும் இருக்கலாம்.
இந்தச் சித்திரத்துக்கு
'தஅஸ்ட்ரோநாட்' (The Astronaut) என்று பெயர் கூட வைத்திருக்கிறார்கள்.
இந்த மனிதன் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் அல்லது இந்த மனிதனே ஒரு ஏலியன்தானோ?
நாஸ்காவின் சித்திரங்களில் சில இந்த அமைப்பில்தான் வரையப்பட்டிருக்கின்றன.
இந்தச் சித்திரங்களில் சில வினோதங்களும் உண்டு. குரங்கு போன்ற
சித்திரத்திலும்,வேறு சில சித்திரங்களிலும், ஒரு கையில் நான்கு விரல்களும்,
அடுத்த கையில் ஐந்து விரல்களும் காணப்படுகின்றன.
ஏன் இப்படி வரைந்திருக்கிறார்கள்? இவ்வளவு நேர்த்தியாக வரைந்தவர்கள் அப்படி
ஒருபிழையை விடுவார்களா? இவற்றிற்கெல்லாம் காரணங்களே தெரியவில்லை அல்லது
இவையெல்லாம் நமக்கு ஏதாவது செய்திகளைச் சொல்கின்றனவா?
இந்தச் சித்திரங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்! இந்தச்
சித்திரங்கள் மூலமாக, நாஸ்கா மக்கள் வானத்தில் பறந்து வந்த யாருக்கோ எதையோ
அறிவித்திருக்கிறார்கள் அல்லது நாஸ்கா மக்களுக்கு, விண்ணில் இருந்து
வந்தவர்கள் யாரோ இப்படி வரையும் தகவல்களைச் சொல்லிச் சென்றுள்ளார்கள்
என்பதுதான் அது.நாஸ்கா அமைந்திருக்கும் 'பெரு' (Peru) நாடும் மாயா
இனத்தவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு அண்மையிலேயே இருக்கின்றது என்பது
மேலும் ஒரு விசேசமாகின்றது.
உலகில் அவிழ்க்கப்படாத மூன்று மிஸ்டரிகள் (Mystery) இருந்தாலும், அறிவியல்
வியக்கும் முன்று முக்கிய மிஸ்டரிகள் உண்டு. அவை 1. கிறிஸ்டல்
மண்டையோடுகள் (Crystal sculls), 2. நாஸ்கா கோடுகள் (Nazca lines), 3. சோளச்
சித்திரங்கள் (Crop circles) என்பன. இந்த மூன்றும் வேற்றுக் கிரக
மனிதர்கள் சம்பந்தமானவை என்று கருதப்படுகின்றன.