Powered By Blogger

Thursday, August 27, 2015

விறுவிறு க்ரைம் ஸ்டோரி!


2007  நவம்பர் 17 சனிக்கிழமை காலை 11 மணி… மளிகை கடை, ஹோட்டல், சிறுவியாபாரம் என வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது செங்கல்பட்டு நகரம். திடீரென, ‘கொரங்கு குமாரை போட்டுட்டாங்க…’ என்ற ஒற்றைவரி செய்தி மளமளவென காட்டுத்தீயாக பரவத் தொடங்கியது. ‘குமாரை வெட்டிட்டாங்களா!?’ ‘எந்த ஏரியாவுல வெட்டினாங்க?’ ‘ஆளு பொழச்சுட்டாரா?’ பொதுமக்களின் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முழுமையாக விடை தெரியவே ஓரிரு மணி நேரமானது. 

ஆனால் அதற்குள் ஒரு த்ரில்லர் சினிமாவின் காட்சிகள் போல அனைத்து கடைகளிலும் மளமளவென ஷட்டர்கள் இழுத்து சாத்தப்பட்டன. ஹோட்டல்களில் கொதித்துக் கொண்டிருந்த அரிசியை வடிக்கக்கூட முடியாமல், அடுப்புகள் அணைக்கப்பட்டன.

நகரெங்கும் ஆங்காங்கே குழுமியிருந்த கூட்டம் முணுமுணுத்தபடி மெல்ல கரையத் தொடங்குகின்றது. மதியத்துக்கு மேல் செங்கல்பட்டு நகரத்திற்குள் பேருந்து வரவு படிப்படியாக குறைந்தது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் தென்படவில்லை. பள்ளிக்கு அனுப்பிய குழந்தைகளை வீட்டுக்குப் பத்திரமாக அழைத்து வர பெற்றோர்கள் அங்கும் இங்குமாக பதற்றத்துடன் அலைந்து கொண்டிருந்தனர். கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிகள், வஜ்ரா வாகனம் என மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவலர்களை செங்கல்பட்டில் குவித்தார் எஸ்.பி. பெரியய்யா. 

ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்ததுபோல் இருந்தது செங்கல்பட்டு. அந்தச் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று யாராவது ஒரு ரௌடி கொல்லப்பட்டால்கூட ‘குமார் இருந்தா இப்படி நடக்குமா?’ என்று சொல்வார்கள். 
யார் இந்த குமார்?

செங்கல்பட்டின் ரியல் டான் குமார். ‘குரங்கு’ என்ற அடைமொழியோடு சேர்த்து ‘குரங்கு’ குமார் என்றுதான் சொல்வார்கள். ‘குரங்கு’ குமாரை தமிழகத்தில் தெரியாத விஐபிக்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழக அளவில் குமாருக்கு செல்வாக்கு உண்டு. ‘குமார் அண்ணன் சொன்னார்’ என்று சொன்னால் போதும்... செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு அலுவலகம், கல்லூரி, தாலுகா அலுவலகம், நகராட்சி என எந்த வேலையானாலும் உடனடியாக முடிந்துவிடும். குமார் கை நீட்டி சொல்பவர்கள்தான் செங்கல்பட்டு நகரமன்றத் தலைவர். நல்லது கெட்டது எதுவானாலும் குமார் பெயர் அடிபடாமல் நிகழ்ந்ததில்லை. ஒரு டானுக்கே உண்டான கெத்து குமாருக்கு உண்டு.

செங்கல்பட்டு நகரின் முக்கிய திருவிழா தசரா. மைசூர் தசராவுக்கு அடுத்து பழமை வாய்ந்த தசரா செங்கல்பட்டு தசரா. தசரா நடக்கும் பதினைந்து நாட்களிலும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பெருவாரியான மக்கள் கலந்துகொள்வார்கள். இளைஞர்களின் வீரத்தையும், பலத்தையும் நிரூபிக்கும் விதமாக தசராவின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் சிலம்பாட்டம், மோடி வித்தை போன்ற போட்டிகள் நடைபெறும்.
முப்பது வருடங்களுக்கு முன்பு குமாரின் பெரிய அண்ணன் தாஸ் என்பவர் கோலோச்சி வந்தார். அவருக்குப் பின் குமாரின் சின்ன அண்ணன் ‘பொட்டிக்கடை’ சேகர் அந்த இடத்தைக் கைப்பற்றினார். அண்ணன் கெத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஏரியாவில் கெத்தாக வலம் வரத்தொடங்கினான் குமார்.

ராமபாளையம், குண்டூர், மார்க்கெட் இந்த மூன்று பகுதிகள்தான் தசராவில் நடக்கும் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும். அனல் பறக்கும் இந்த போட்டிகளில் மார்க்கெட் பகுதி சார்பாக சண்டைகளில் கலந்துகொண்டு அண்ணன் இடத்தைக் கைப்பற்றினார் குமார். அப்போது இருந்துதான் குமார் ஏரியாவுக்குத் தெரிய ஆரம்பித்தான். மார்க்கெட் மட்டுமல்லாது நகரம் முழுக்கவே குமாருக்கு நட்பு வட்டாரம் விரிவடையத் தொடங்கியது.
ஏரியா பிரச்னைகளில் ‘கொரங்கு’ குமார் குரூப் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்த நிலையில் மக்கான் சந்துப்பகுதியில் ரவி என்பவர் கொலைசெய்யப்பட்டபோது முதன்முறையாக குமார் பெயரும் அதில் அடிப்பட்டது. சண்டையின்போது குரங்குபோல் எதிரிகளை அடித்து புரண்டி எடுத்துவிடுவான் குமார். போலீஸ் பிடிக்க வந்தால்கூட குரங்கு மாதிரி காட்டுக்குள் ஓடிவிடுவான் குமார். ரேடியோ மலைப்பகுதியில் குட்டி குரங்குகளை பிடித்து விளையாடிக் கொண்டிருப்பான் குமார். ‘யார்ரா குமார்?’ என்று கேட்பவர்களுக்கு, ‘குரங்கு வெச்சிகிட்டு விளையாடுவானே சேகர் தம்பி, அவன்தான் கொரங்கு குமார்’ என்று சொல்வார்கள்.

எந்த சண்டையில் யார் மண்டை உடைந்தாலும் குமார் பெயர்தான் ஒலிக்கும். வீட்டை காலி பண்ணணும், கட்டப்பஞ்சாயத்து என எதுவானாலும் குமாரை அழைக்கத் தொடங்கினார்கள். பிறகு அண்ணனின் சாராயத் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பித்தான் குமார். சந்தனக்கட்டை வியாபாரம், போதைப் பொருள் கடத்தல், மணல் கடத்துதல் என தொழிலை விரிவுப்படுத்திக்கொண்டே சென்றான் குமார்.

இதனால் ஆந்திரா, கர்நாடகா என சுற்றுவட்டார மாநில அளவில் உள்ளவர்களோடு அவனது நட்பு விரி வடையத் தொடங்கியது. தொழிலதிபர்களும், அரசியல் பிரமுகர்களும் குமாரோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கத் தொடங்கினான் குமார். பினாமிக்கள் பெயரில் சொத்துக்கள் வாங்க ஆரம்பித்தான். தனது வீட்டின் அருகே வசிக்கும் அரிசி வியாபாரியின் பெண் லதா என்பவரை கடத்தி திருமணம் செய்து கொண்டான் குமார். ஒரு மகள், மூன்று மகன் என தனக்கு பிறந்த குழந்தைகள் தனது ரௌடித்தனத்தை பார்க்கக் கூடாது என வெளியூர்களில் தங்கவைத்து படிக்க வைத்தான் குமார்.
எல்லாவற்றையும் நிறுத்தணும்!

அதிமுக கட்சி தொடங்கி காலத்திலிருந்தே செங்கல்பட்டு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் ஆதிகேசவன். அவர் கொலையில் முதல் குற்றவாளி குமார். குமார் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கத் தொடங்கியது செங்கல்பட்டு. அப்போதைய எஸ்பி சைலேந்திர பாபுவுக்கு குமாரை என்கவுன்ட்டர் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் ‘நான் ரௌடி தொழிலை விட்டு விடுகிறேன். என்னால் இனி யாருக்கும் பிரச்னை இருக்காது.’ என எழுதிக் கொடுத்துவிட்டு வந்தான் குமார். ரௌடித்தொழிலுக்கு லீவு கொடுத்துவிட்ட அவனால் சும்மா இருக்க முடியவில்லை. கெத்தாக வலம் வர முடியாமல் தவித்த அவனுக்கு அரசியல் அதிகாரங்களை பார்த்து அரசியல் ஆசை மெல்ல துளிர்விட ஆரம்பித்தது.

அதிகாரத்திலிருந்த தன் பழைய சகாக்கள் மூலம் மக்கான் சந்துப்பகுதியில் கவுன்சிலரானார் குமார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு நகராட்சி துணைத்தலைவர் பதவி கைக்கூடியது. செங்கல்பட்டு அதிமுக நகரச் செயலாளரான குமாருக்கு கட்சி வட்டாரத்தில் செல்வாக்கு கூடத் தொடங்கியது. அமைச்சர்கள் நண்பர்கள் ஆனார்கள். கீழ்மட்ட தொழில்களை விட்டுவிட்டு ஒயிட் காலர் வேலைகளை மட்டுமே செய்துவந்தார் குமாருக்கு. எப்படியாவது ஒரு எம்எல்ஏ-வாக ஆகி விட வேண்டும் என்பது கனவாக இருந்தது. மனதில் அந்த ஆசையை வரித்துக்கொண்டு அதற்காக 'வேலை' செய்யத்துவங்கியிருந்தார் அவர்.

மக்கள் விரும்பிய மறுபக்கம்!


குமார் மற்றொரு முகம் மிகவும் சுவாரஸ்யமானது. யாருக்கு படிக்க பணம் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பணம் கொடுக்கும் வள்ளல் குமார். சுற்றுவட்டாரத்தில் படிக்க காசில்லை என்றால் குமார் வீட்டு கதவைத்தான் தட்டுவார்கள். படிக்கும் வயதில் யாரும் ஊரில் சுற்றி திரிய முடியாது. உடனே அழைத்து விசாரித்து படிக்க தேவையானவற்றை செய்து கொடுப்பார். கல்லூரிகளில் சீட் கிடைக்கவில்லை என்று குமாரிடம் சொன்னால் போதும் அவர்களுக்கு சீட் நிச்சயம். படித்த தகுதிக்கேற்ப வேலை வாங்கி கொடுப்பார். வறுமையால் கிழிந்த சட்டை அணிந்து தெருவில் நடந்தால் குமாருக்குப் பிடிக்காது. அடுத்த சில நிமிடங்களில் புது சட்டையோடுதான் செல்வார்கள்.
யாராவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பொறுப்புள்ள பொது ஜனங்கள்கூட கண்டு கொள்ளாமல் போய்விடுகிற காலம் இது. தனது ஏரியாவில் ரோட்டில் அடிபட்டு கிடந்ததைப் பார்த்தால் முதலில் மருத்துவமனைக்கு சென்று சேர்க்க சொல்வார் குமார். ரவுடிகள் என்று யாரும் மாமூல் வசூலிக்க முடியாது. இதனால் சிறுசிறு ரவுடிகள் அடங்கி ஒடுங்கி நடக்க ஆரம்பித்தார்கள். யாருக்கு எந்த பிரச்னையானாலும் குமார் வீட்டு கதவை தட்டினால் தீர்ந்துவிடும்.

அடுத்தவர்களின் பிரச்னைகளை தீர்த்துவைக்கும் மக்கள் நாயகனாக வலம் வரம்வரத் தொடங்கினார் குமார். வேட்டையாடுவது என்றால் குமாருக்கு ரொம்ப பிடிக்கும். நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் மான், முயல், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி கொடுப்பார் குமார்.

திருவிழாவை மிஞ்சிய திருமணம்

குமாரின் மகள் திருமணம் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்றது. கல்யாணத்துக்கு ஒரு மண்டபம் என்றால், விருந்து உபசரிப்புக்கு கூடுதலாக இரண்டு மண்டபம். யானைப்படை மற்றும் குதிரைப்படையின் அணிவகுக்க, அதைத் தொடர்ந்து மணமக்கள் தேரில் பவனி வர, சாலையெங்கும் விழாக் கோலம். மக்கள் வெள்ளத்தால் சாலைகள் திணறியது. பேருந்துகள் நகருக்குள் நுழையாமல் திருப்பி விடப்பட்டன. அமைச்சர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என விஐபி பட்டாளம் செங்கல்பட்டில் குவிந்ததால் குமாரின் செல்வாக்கு நகரையே புருவம் உயர்த்த செய்தது. 
இதுதான்டா வாழ்க்கை!

கத்தியை கீழே போட்டுவிட்டு கதர் சட்டை அணிந்துகொண்டு அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் குமாருக்கு குடைச்சல்கள் இல்லாமல் இல்லை. பழைய விவகாரங்கள் பலமுறை கொலையாவதில் இருந்து தப்பியிருக்கிறார். குமாரால் பாதிக்கப்பட்டவர்கள், செல்வாக்கை இழந்தவர்கள், ஏரியாக்களில் கோலோச்ச முடியாதவர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் வரத் தொடங்கியது. ரவிப்பிரகாஷ் என்பவனிடம் இருந்து நேரடியாகவே கொலை மிரட்டல்களும் வரத்தொடங்கியது. ‘உன் பசங்களை தூக்கிடுவேன்’ என்ற வார்த்தைகள் குமாரை நொறுக்கிவிட்டது. இதனால் நிம்மதியை இழக்கத் தொடங்கினார் குமார்.

ஒருநாள் காலையில் தனது ஏரியாவில் அமர்ந்திருந்தார் குமார். வழக்கம் போல ரயிலைப் பிடிக்க, வேகமாக ஓடிக்கொண்டிருந்தது இளைஞர் பட்டாளம். பக்கத்தில் உள்ள தனது நண்பர்களைப் பார்த்து, “ஏவ்வளவு ஜாலியா போறாங்க பாருடா! இதுதாண்டா வாழ்க்கை! சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு தனியாக போகிறான். யாருக்கும் அஞ்சி வாழணும்னு அவனுக்கு அவசியம் இல்லை. வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் நிம்மதியா ராத்திரி தூங்குறான். பணம் காசு மட்டுமே வாழ்க்கை இல்லடா. நிம்மதி வேணும்'' என்கிறார். அந்த அளவுக்கு அவரை நிம்மதி இழக்க செய்திருந்தன அவரைச் சுற்றி நடந்த சம்பவங்கள்.

சரிந்தது குமார் ராஜ்ஜியம்

தனது கார் டிரைவர் இன்பராஜ் என்பவனின் வழக்கு ஒன்றுக்காக சாட்சியிடம் சமாதானம் பேசுவதற்காகக் கிளம்பி சென்று கொண்டிருந்தார் குமார். அப்போது வண்டி ஒரு முட்டுச்சந்தை அடைந்ததும் திடீரென குமாரின் காரை சூழ்ந்தது சுமார் 50 பேர் கொண்ட ரவுடி பட்டாளம். கார் டிரைவர் காரை நிறுத்திவிட்டு சாவியை எடுத்துக்கொண்டுச் செல்ல, அந்த இடத்திலேயே வெட்டி சாய்க்கப்பட்டார் குமார். கூலிப்படைக் கூட்டம் குமாரின் தலையைச் சிதைத்தது. சனிப் பிணம் தனியா போகாது என்பதுபோல நண்பன் ஆறுமுகமும் குமாருடன் சிதைக்கப்பட்டான்.
தலையைச் சிதைக்கும் கலாசாரம் செங்கல்பட்டுக்கு அன்றுதான் அறிமுகமானது. குமார் கொலையான சம்பவத்தைக் கேட்டு செங்கல்பட்டு நகரமே திரண்டது. ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கட்சி சார்பாக மரியாதை செலுத்திவிட்டு போனார்கள். குமாரின் நட்பு வட்டாரம் முழுக்க செங்கல் பட்டில் குவிந்ததால், இரண்டு நாட்கள் பதற்றமாகவே இருந்தது செங்கல்பட்டு. ஊரே வியக்க நடத்திய திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில் குமாரின் மருமகன் ஹார்ட் அட்டாக்கில் இறக்க அந்த அதிர்ச்சியில் குமாரின் மகளும் துக்கம் தாளமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இருக்கும் இடம் தெரியாமல் குலைந்து போனது குமாரின் குடும்பம்.

கூட்டாளிகள் பெயரில் பினாமியாக வாங்கிய சொத்துக்களையும் அவரவர்களே எடுத்துக்கொண்டார்கள். குமார் கொலையான சில தினங்களில் அந்த கொலையை செய்ததாக ரவிப்பிரகாஷ் என்பவன் கைது செய்யப்பட்டான். குமார் வகிக்கும் நகரமன்றத் துணைத்தலைவர் பதவியை வகிக்க வேண்டும். செங்கல்பட்டில் கொடிகட்டி பறக்க வேண்டும் என்ற ரவிப்பிரகாஷின் ஆசைதான் இந்தக் கொலைக்கு முக்கிய காரணம் என்றது போலீஸ்.
குமார் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ரவிப்பிரகாஷின் ஆசை நிறைவேறியதா?



2012 ஜனவரி 7-ம் தேதி... ஸ்டாலின்  கலந்துகொள்ள இருந்த அண்ணாவின் 103-வது ஆண்டு பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள், செங்கல்பட்டில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான த.மோ.அன்பரசன் விழா ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக செங்கல்பட்டு வந்திருந்தார். விழா ஏற்பாடுகளை கவனிக்கும் முழுப்பொறுப்பும் ரவிப்பிரகாஷ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஆம்! ‘குரங்கு’ குமார் கொலைவழக்கில் கைதான அதே ரவிப் பிரகாஷ்தான் அவர். அன்றைய தினத்தில் அவர் செங்கல்பட்டு நகரமன்றத்தின் துணைத்தலைவர். பெரிய தலையை வீழ்த்தினால் சினிமாவில் என்ன நடக்கும்? அதுபோல்தான் ரவிப்பிரகாஷ் பொதுவாழ்க்கையும் தொடங்கியிருந்தது.

விழாவின் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்து, தளபதியிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்ற துடிப்புடன் ஓடியாடிக்கொண்டிருந்தார் ரவிப்பிரகாஷ் பரபரப்புடன்.

விழாவில் ரவிப்பிரகாஷைப்பற்றி ஸ்டாலின்என்ன பேசினார்? 

அதற்குமுன் ரவிப்பிரகாஷ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

திருக்கச்சூரைச் சேர்ந்த பூபதி என்ற ரயில்வே ஊழியரின் மகனான ரவிப்பிரகாஷ், செங்கல்பட்டு பள்ளியில் படித்துவந்தான். செங்கல்பட்டு தாதாவான குரங்கு குமாரின் சித்தப்பா மகன் பார்த்திபனுக்கும் ரவிப்பிரகாஷுக்கும் ஏழாம் பொருத்தம். ரவிப்பிரகாஷ் சிக்கினால் போதும், தலையில் அடிப்பது, கொட்டுவது என துவைத்து எடுத்துவிடுவான் பார்த்திபன்.

பள்ளிப்படிப்பு முடிந்தும் இது தொடர்ந்தது. ஒருகட்டத்தில் ரவிப்பிரகாஷால் இதை பொறுக்க முடியவில்லை. கோபத்தின் உச்சகட்டத்தில் ஒருநாள் பார்த்திபனை தீர்த்துக் கட்டினான் ரவிப்பிரகாஷ். ஆத்திரத்தில் 'செய்து'விட்டாலும் குமாரின் ஆட்கள் தன்னை கொலை செய்யக் கூடும் என்று அஞ்சினான். இதனால் செங்கல்பட்டு வருவதை பெரும்பாலும் தவிர்த்தான். அதைத் தொடர்ந்து ஊருக்கு வெளியில் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் என வாழ்க்கை திசைமாறி ஓடிக்கொண்டிருந்தது. ஒருபக்கம் ரவிப்பிரகாஷ் மீது புகார்களும் காவல்துறையில் குவிந்துகொண்டிருந்து.

குமார் இருக்கும் வரை தன்னால் செங்கல்பட்டு நகரத்துக்கு வரமுடியாது என்று உணர்ந்தான். இது அவனுக்கு  கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது. குமார் போன்று அதிகார பலம் பெற்றால் தனக்கு பாதுகாப்பு என்ற எண்ணம் அவனுக்குள் விழுந்தது. தானும் நகரமன்ற துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்று துடித்தான். செங்கல்பட்டு நகருக்கு உள்ளே வர நினைத்தபோதெல்லாம் குரங்கு குமார் தடையாகவே இருந்தார்.
டானை சாய்ப்பவனும் டான்தான்!

வேறு வழியின்றி குமாரைத் தீர்த்துகட்ட முடிவெடுத்த ரவிப்பிரகாஷ், போனில் மிரட்டல் விடுக்கத் தொடங்கினான். 2007-ம் ஆண்டு செங்கல்பட்டு அதிமுக நகரமன்றத் துணைத்தலைவர் குரங்கு குமாரை வெட்டிச்சாய்த்தான் ரவிப்பிரகாஷ். குரங்கு குமார் கொலை செய்யப்படுவதற்கு முன்புவரை, ரவிப்பிரகாஷ் என்னும் நபர் செங்கல்பட்டு நகரத்துக்கு பெரிய அறிமுகம் கிடையாது.

ஒரே கொலை… உச்சத்துக்கு வந்துவிட்டான் ரவிப்பிரகாஷ். செங்கல்பட்டின் அன்டர்கிரவுண்ட் பிசினஸ் எல்லாம் சைலன்டாக ரவிப்பிரகாஷ் பிடியில் வந்தது. குமார் கொலை செய்யப்பட்டதில் திமுக தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சி எனலாம். 2006-ம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது திமுக கூட்டணி. ஆனாலும் நகரமன்றத் துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்ற முடியவில்லை. அதிமுகவின் குமார் நகரமன்றத் துணைத்தலைவரானார்.
இதனால் அப்போதைய அமைச்சர் அன்பரசன் மீது திமுக மேலிடம் அதிருப்தியாக இருந்தது. ஆட்சி அதிகாரம் கையில் இருந்தபோதும் குமாரை ஒன்றும் செய்ய முடியாமல் கையை பிசைந்த திமுகவுக்கு ரவிப்பிரகாஷ் துருப்புச் சீட்டு. நகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பது திமுகவின் ஆசை. அதே ஆசை ரவிப்பிரகாஷ்க்கும் இருந்தது. குமார் கொலையில் ஜாமீனில் வெளியே வந்த ரவிப்பிரகாஷைக் கண்டு செங்கல்பட்டு மிரள ஆரம்பித்தது. அவன் மீது புகார் கொடுத்தவர்கள் வாபஸ் பெற ஆரம்பித்தார்கள்.

அரசியல் அடைக்கலம்!


அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான அன்பரசனுடன் நெருக்கமானான் ரவிப்பிரகாஷ். அன்பரசு கலந்துகொண்ட விழாக்களில் கூட்டத்தில் ஒருவனாக கலந்துகொள்ள ஆரம்பித்தான். பின்பு திமுகவில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு கொடியேற்றுவது, அன்னதானம் வழங்குவது, பேனர் வைப்பது போன்ற கட்சி நிகழ்சிகளை  நடத்திவந்தான்.  நகரமன்ற துணைத் தலைவராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்  கைதுசெய்யப்பட்ட ரவிப்பிரகாஷ், அரசியல் பலத்தால் ஜாமீனில் வெளியே வந்து கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தான். வெற்றியும் கண்டார். திமுகவின் சீனியர் புள்ளிகளை ஓரம்கட்டிவிட்டு, தான் நினைத்தது போலவே நகரமன்ற துணைத் தலைவரானார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் நகர துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்து வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார். தீபாவளியின்போது பதவி ஏற்றவர், ‘நரகாசூரனைக் கொன்ற நாளில் பதவிக்கு வந்திருக்கிறேன்’ என  நண்பர்களிடம் சொன்னார்.

உருகிய ஸ்டாலின்!

மீண்டும் ஸ்டாலின் கூட்டத்திற்கு வருவோம்...

2012-ம் வருடம் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களில் அண்ணாவின் 103-வது பிறந்த நாள், செங்கல்பட்டு நகரத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் கொண்டாட ஏற்பாடு செய்யும் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால், மாவட்டச் செயலாளர் அன்பரசன் விழா நடக்கும் இடத்திற்கு அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கி தீவிரமாக ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். விழா ஏற்பாடுகள் முழுக்க ரவிப்பிரகாஷ் முன்னிலையில் நடந்து கொண்டிருந்தது.
வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே தா.மோ.அன்பரசன் உடன் ரவிப்பிரகாஷ், விழா நடக்கும் இடத்தில் இருந்தார். மதியம் இரண்டு மணிக்கு மேல், 'சாப்பிட போகலாமா?' என் அன்பரசன் கேட்க  ‘நண்பன் வரதன் கொக்குக்கறி செய்திருக்கிறான். அவனோடு சாப்பிட்டுவிட்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு பைக்கில் சென்றார் ரவிப்பிரகாஷ். நத்தம் பகுதியில் கட்டிவரும் தனது புதிய வீட்டை பார்த்துவிட்டு, நண்பன் வரதனின் வீட்டு வாயிலில் காத்திருந்தார். திடீரென பொலீரோ காரில் வந்திறங்கியது ஒரு கும்பல். தலைதெறித்து ஓடிய ரவிப்பரகாஷ் தலை சிதைக்கப்பட்டது. அச்சு அசலாக குரங்கு குமார் போடப்பட்ட அதே பாணியில்.

தொடங்கியது கொலையுதிர்காலம்
!


சனிக்கிழமை தொடங்கிய அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டார் ஸ்டாலின். மாணவர்களின் பேச்சுப் போட்டி முடிந்ததும், ''நீங்கள் பேசுவதை நான் கேட்பேன் என்பதற்காகவே கடினமாக உழைத்து பேச்சுப்போட்டிக்கு தயாராகி இருந்தீர்கள். ஆனால் நமது நகரமன்றத் துணைத்தலைவர் ரவிப்பிரகாஷ் கொலை செய்யப்பட்டதால், விழாவின் நடுவில் அவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றுவிட்டேன். கழக வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த நகரமன்றத் தலைவர் ரவிப்பிரகாஷ் இன்று நம்மோடு இல்லை'' என தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
கொல்லப்பட்ட ரவிப்பிரகாஷ் மீது 4 கொலைவழக்கு, 5 கொலைமுயற்சி, துப்பாக்கி வைத்திருந்ததாக இரண்டு வழக்குகள் உள்பட மொத்தம் 12 வழக்குகள் இருந்தது. 'ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில்தான் ரவிப்பிரகாஷ் கொல்லப்பட்டார்’ என்று வழக்கம்போல காவல்துறை சொன்னது.

அதைத்தொடர்ந்து குறுகிய காலத்தில் மளமளவென சரிந்தன தலைகள். செங்கல்பட்டுக்கு கொலையுதிர் காலம் தொடங்கியது.


2007-ல் ‘குரங்கு’ குமார் கொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதமாக 2012 ஜனவரி 7- ம் தேதி ரவிப்பிரகாஷ் கொலை செய்யப்பட்டான். சில தினங்களில் ‘பட்டரைவாக்கம்’ சிவா உள்ளிட்ட 12 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்தது காவல்துறை. இனிதான் ஆரம்பம் என்றது அடுத்தடுத்து நிகழ்ந்த கொலைகள். 2012ம் வருடம் முழுக்கவே நடந்த தொடர்கொலைகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு கருப்பு ஆண்டாகவே அமைந்துவிட்டது. 2012ல் அதிர்வலையை ஏற்படுத்திய கொலைகள் இவை…

கொலையில் முடிந்த கூடா நட்பு!
ரவிப்பிரகாஷின் நண்பன் சுரேஷ். செங்கல்பட்டு தேமுதிக நகர செயலாளர், 1வது வார்டு கவுன்சிலர். ரவிப்பிரகாஷ் கொலைக்குப்பிறகு தனக்கும் ஆபத்து என்று உணர்ந்தான் சுரேஷ். ரவிப்பிரகாஷ் கொலைக்கு பின்பு தனியாக எங்கும் செல்ல வேண்டாம். 'கட்சி அலுவலகத்தில் முடிந்தவரை தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும்' என நட்பு வட்டாரங்கள் சுரேஷை எச்சரித்தன. ரவிப்பிரகாஷ் இறந்த சோகத்தை மறக்க, வெளியூரில் சிலநாள் பொழுதை கழிக்க திட்டமிட்டான் ரவிப்பிரகாஷ்.

பொங்கல் முடிந்த கையோடு ஜனவரி 17ம் தேதி காணும் பொங்கல் அன்று இரவு, ஊட்டிக்கு செல்வதற்காக நண்பர்களுடன் தனது அலுவலகத்தில் காத்திருந்தான். எதிர்பாராதவிதமாக தேமுதிக பிரமுகர் ஒருவர் இறந்ததால் டூர் கேன்சல் ஆனது. தன்னுடன் இருந்த நண்பர்களை அனுப்பிவிட்டு தனது அலுவலகத்தில் தனியாக அமர்ந்திருந்தான் சுரேஷ். திடீரென சுரேஷ் அலுவலகம் உள்ளே நுழைந்தது ஒரு கும்பல். அந்த கும்பல் வெளியேறியதும் தலை சிதைந்த நிலையில் கிடந்தான் சுரேஷ்.
தகவல் அறிந்து ஓடிவந்தார் செங்கல்பட்டு தேமுதிக எம்எல்ஏ அனகை முருகேசன். தொடர் கொலைகளால் இரவு முழுக்கவே செங்கல்பட்டில் பதட்டம் தொற்றிக் கொண்டது. கொலை செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்படும் வரை சுரேஷின் உடலை வாங்க மாட்டோம் என செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தார் அனகை முருகேசன். பின்பு வழக்கம் போல சிலமணிநேரம் கடையடைப்பு, சிலநாள் பரபரப்பு என முடிந்தது.

படிக்கும் போதிலிருந்தே சுரேஷும் ரவிப்பிரகாஷும் நெருங்கிய நண்பர்கள். வீட்டின் அருகே தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தை நடத்திக் கொண்டிருந்தான் சுரேஷ். கட்டுமான பொருட்களான மணல், மண் உள்ளிட்டவற்றை டீலிங் செய்து கம்பெனிகளுக்கு சப்ளை செய்துவந்தான்.  அன்டர்கிரௌண்ட் டீலிங் என்பதால் நண்பன் ரவிப்பிரகாஷ் துணை தேவைப்பட்டது.

குரங்கு குமாரை கொலைசெய்தபின் செங்கல்பட்டில் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தபோது, சுரேஷ் மூலமாக வேரூன்றிக் கொண்டான் ரவிப்பிரகாஷ். ரவிப்பிரகாஷ் வளர்ச்சிக்கு சுரேஷ்தான் முக்கிய காரணம் என்பதால், குமார் ஆதரவாளர்கள் சுரேஷ் மீது குறிவைக்க காரணமாகிவிட்டது.

கட்டப்பஞ்சாயத்தில் கிடைத்த வருமானத்தில் சிங்கப்பூர், மலேசியா என நண்பன் ரவிப்பிரகாஷுடன் சுற்ற ஆரம்பித்தான் சுரேஷ். 'ரவிப்பிரகாஷுடன் பழக வேண்டாம். இந்த நட்பு விபரீதமாக முடிந்துவிடும். கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடும்' என்று எச்சரித்துக் கொண்டே இருந்தார் எம்எல்ஏ. அனகை முருகேசன். எம்எல்ஏ எச்சரித்தது போலவே, ஒரு நாள் நடந்தே முடிந்தது.
பிறந்த நாளே இறந்த நாள்!

‘சிங்கபெருமாள் கோவில் திமுக பிரமுகர் முனிராசு என்பவரை போட்டுத்தள்ளிய இரண்டெழுத்து தாதா,  முனிராசுவின் வாரிசையும் கணக்கு தீர்க்க தயாராகி வருகிறாராம். பதிலுக்கு வாரிசும் அரிவாளைத் தூக்க, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என பதறிக்கிடக்கின்றது செங்கல்பட்டு’ என 08.12.2010 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் பெட்டி செய்தியாக வெளியிட்டிருந்தோம். நாம் சொன்னது போலவே 2012 நவம்பர் 4ம் தேதி அந்த கொலை நடந்தேவிட்டது. அந்த இரண்டெழுத்து தாதா, அதிமுகவின் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் வேலு.

சின்ன வயசில் ஒரு ஸ்வீட் கடையில் ஆரம்பித்தது குமரவேலு என்கிற வேலுவின் வாழ்க்கை. காட்டாங் கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவராக இருந்த முனிராசு என்பவரின் தம்பி ராமு உடன் வேலுவிற்கு  நட்பு ஏற்பட்டது. இதனால் ராமுவின் சாராயக் கடையில் வேலைக்கு சேர்ந்தான் வேலு.  வேலுவின் நண்பரை ராமுவின் ஆட்கள் கொலை செய்ததால் நட்பில் விரிசல் ஏற்பட்டது.
இதனால் தன்னை வளர்த்து விட்ட ராமுவையே 2006ல் தீர்த்துக் கட்டினான் வேலு. ராமுவின் அண்ணன் முனிராசு தன்னை பழிதீர்க்கக் கூடும் என்பதால், 2007ல் முனிராசுவையும் வெட்டிச்சாய்த்தான் வேலு. அதைத் தொடர்ந்து 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக ஆனான்.
ரவுடி வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்பதற்காக அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டான். முனிராசுவின் மகன் கதிரவன், தந்தையை கொன்ற வேலுவின் கதையை முடிக்க காத்திருந்தான். 2012 செப்டம்பர் 4ம் தேதி தனது பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாட 50 கிலோ கேக் ஆர்டர் செய்திருந்தான் வேலு. காலையில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றவனை, கொன்றது கூலிப்படை. வழக்கமான அதே தலைச்சிதைவு. காலையில் நடந்த சம்பவத்திற்கு மதியமே தனது கூட்டாளிகளுடன் கடலூரில் ஆஜராகிவிட்டான் கதிரவன்.

கொலை செய்யப்பட்ட வேலுவின் மீது 3 கொலை வழக்கு, 10 கொலை முயற்சி வழக்கு, 7 அடிதடி வழக்கு என மொத்தம் 22 வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கின்றது.

மண்ணுக்குள் தள்ளிய மண் ஆசை!

செப்டம்பர் 4ம் தேதி நடைபெற்ற வேலுவின் கொலை பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே, அதேமாதம் 25 ஆம் தேதி தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் புருஷோத்தமன் கொலை செய்யப்பட்டது உள்ளாட்சி பிரமுகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து உள்ளாட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது காவல்துறை.
வழக்கம் போல ஓட்டேரி காவல்நிலையம் அருகில் உள்ள டீக்கடைக்கு  சென்ற புருஷோத்தமனை திட்டமிட்டு, வட்டம் போட்டது  கூலிப்படை. கதறிக் கோண்டே காவல்நிலையம் நோக்கி ஓடியவரை கைமா செய்து கலைந்தது அந்த கும்பல். தகவலை கேட்டு எஸ்.பி. மனோகரன் ஓடிவர, ‘கூலிப்படைகள் மீது போலீசார் கரிசனம் காட்டுகின்றார்கள்!’ என கொந்தளித்த ஏரியாவாசிகள்,  எஸ்.பியை வளைத்து நின்றார்கள். அவர்களுடன் மல்லுக்கட்டிய பிறகுதான் பிரேதத்தை ஏரியாவில் இருந்து எடுக்க வேண்டியதாயிற்று.

மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன், ஆரம்பத்தில் அம்பேத்கர் இயக்கங்களில் இருந்து பின்பு அதிமுகவில் சேர்ந்தவர். 2007- லிருந்து பல கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்து வந்தார். 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவரானார். இதனால் திமுக பிரமுகர் போகி கிருஷ்ணன் என்பவருக்கும் இவருக்கும் இருந்த முன்விரோதம், முட்டிக்கொண்டது. இந்த முன்விரோதம்தான் கொலையில் முடிந்தது.

கொலை நடந்த அன்றே போகி கிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். “கொலை செய்யப்பட்ட புருஷோத்தமன் மீது 3 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது. போகி கிருஷ்ணன் மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட 11 வழக்குகள் உள்ளன. புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறுதான் கொலைக்கு காரணம்” என்றார் காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரன்.

ஒரு உயிருக்கு மூன்று கொலை!

கொலைவெறி அடங்காத பழிக்குப்பழி கொலைக்கு அடையாளம், செங்கல்பட்டு அருகே உள்ள பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரின் கொலை.
நண்பர்களுடன் செங்கல்பட்டு வந்திருந்தார் பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார். மாலை ஆறுமணிக்கு நகரின் மையப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நண்பர்களுடன் இருந்தவர், பக்கத்தில் உள்ள ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்றார். பணத்தை எடுத்து வெளியே வந்தவரை கூறு போட்டுவிட்டு கிளம்பியது கூலிப்படை.

இந்த சம்பவம் சுமார் 30 நொடிகளிலேயே முடிந்துவிட்டது. பாமகவை சேர்ந்த திருக்கச்சூர் ஆறுமுகம், திமுகவை சேர்ந்த த.மோ. அன்பரசன் ஆகியோர் விஜயகுமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்கள்.

அதுவரை நடந்த எல்லா கொலைகளுக்கும்,  சம்பவ தினமே ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் எதிர்தரப்பில் ஆஜராகிவிடுவார்கள். ஆனால் இதில் குற்றவாளிகள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகததால் கண்டுபிடிக்க முடியாமல் திணறியது காவல்துறை.

2009ல் பாமக தரப்பில் பி.வி. களத்தூர் ஊராட்சி மன்ற தலைவரானான் விஜயகுமார். பாமகவில் இருந்து திமுகவிற்கு தாவிய விஜயகுமார், 2011ல் மீண்டும் ஊராட்சி மன்ற தலைவரானான். அரசியல் தரப்பில் வெளிப்படையான எதிரிகளும் விஜயகுமாருக்கு இல்லை.

இதனால்தான் கெலையாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.  ஒருவழியாக சிலமாதங்கள் கழித்து அதே பகுதியை சேர்ந்த  எம்ஜிஆர் மன்ற செயலாளர் குப்பன் தரப்பினர்தான் கொலைக்கு காரணம் என தெரியவந்தது. இதனால் 2013-ல் மறைமலைநகரில் குப்பன், விஜயகுமார் தரப்பினரால் கொலை செய்யப்பட்டார்.

அதிமுக ஒன்றிய இளைஞர் அணி செயலாளரான குப்பனின் மகன் நித்யானந்தமும் 2014-ல்  அமைந்தகரையில் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து விஜயகுமாரின் கொலைவழக்கில் முதல் குற்றவாளியான துரைதாஸ் என்பவனும் 2014-ல் கொலை செய்யப்பட்டான்.

ஒரு கொலைக்கு பழி தீர்ப்பதற்காக மூன்று கொலைகள் அரங்கேறியும் கொலை வெறியை தீர்த்துக் கொள்ள முடியாத பூமியாக இருக்கின்றது பொன்விளைந்த களத்தூர். வீச்சரிவாள்களுடன் வெடிகுண்டுகள் கைகோர்த்தன.



வெடிகுண்டு பிரதேசம் ஸ்ரீபெரும்புதூர்.....

1991 மே 21ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய பிரதமர் ஒருவர், ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டால் சிதைக்கப்பட்ட அந்த சம்பவம் நடந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. உலகையே உலுக்கியெடுத்த அந்த சம்பவத்தில் 14 உயிர்கள் பலியாகின. தேசியத் தலைவருக்கு ஆர்டிஎக்ஸ் என்றால், பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாஸ்பரஸ் குண்டு போதாதா?

ராஜீவ் மரணத்திற்குப்பின் ஸ்ரீபெரும்புதூரில் அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் தொழில் நகரமாக உருவெடுத்தபிறகு நோக்கியா, ஹுண்டாய், ஃபாக்ஸ்கார்ன், செயின்ட்கோபெயின், நிசான் என பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு அதிகரித்தது. அதே வேகத்தில் அங்கு ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. தொழில் போட்டி அதிகரிக்க, வன்மமும் அதிகரிக்க தொடங்கியது.

இதை அடிப்படையாக வைத்துதான் இந்தப்பகுதியில் குற்றங்கள் நடக்கும். 2012-ல் நடந்த கொலைகளுக்கு காரணம் தொழில் போட்டிதான். தொடர் வெடிகுண்டு சம்பவங்களால் நிலை குலைந்தது ஸ்ரீபெரும்புதூர்.

குறிவைக்கப்பட்ட குமரன்


ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் பிபிஜி குமரன் என்ற நபரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கத்தைச் சேர்ந்தவன் குமரன். சிறுவயதிலிருந்தே சாரயம்தான் தொழில். குடும்பத் தொழிலும் அதுதான். புரட்சி பாரதம், விடுதலை சிறுத்தைகள் என கட்சிமாறினாலும் கட்டப்பஞ்சாயத்து முதன்மை தொழில். நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருக்கும் கம்பெனிகளில் ஸ்கிராப் தொழில் செய்ய ஆரம்பித்தான். பசை பலம் மிக்க இந்த தொழிலோடு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான மண், மணல் உள்ளிட்டவைகளை சட்டவிரோதமாக சப்ளை செய்துவந்தான்.

கோடிக்கணக்கில் பணம் புரள ஆரம்பித்தது. சாராயம் காய்ச்சி விற்றவன், பல நூறு கோடிக்கு சொத்துக்களுக்கு  அதிபதி ஆனான். சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் அரசியல் ஆதரவு இருந்தால் மட்டுமே முடியும் என நம்பினான். ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவான மொளச்சூர் பெருமாள் மூலம் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் குமரன். குமரன் மீது போயஸ் கார்டனில் புகார்கள் குவிய, கட்சியை விட்டே கட்டம் கட்டினார்கள் ஒரு கட்டத்தில்.

2011 உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட குமரனால் ஒன்றிய பதவியை கைப்பற்ற முடியவில்லை. அதிமுகவை சேர்ந்த வெங்கடேசன் வெற்றி பெற்றார். தேர்தலில் குமரனை வீழ்த்திய வேகத்தோடு பன்னாட்டு நிறுவனங்களுக்கு படையெடுத்தார் வெங்கடேசன். கதவை தட்டிய இடமெல்லாம் கைவிரித்தார்கள். தேர்தலில் வெற்றிபெற்றும் பலனில்லை. குமரனை கூறுபோட நினைத்தான் வெங்கடேசன்.

குமரனுக்கு குறி வைப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. குமரனின் அப்போதைய பிரம்மாண்டம் அப்படி. குறி தவறினால் எய்தவனிடமே அம்பு திரும்பிவிடும் அபாயம். குமரன் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியை எப்போதும் வைத்திருப்பான். போதாக்குறைக்கு எப்போதும் அவனுடன் அடியாட்கள் இருப்பார்கள். ஒரே மாதிரியான இரண்டு டொயாட்டோ கார் வைத்திருந்தான். கிட்டத்தட்ட ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணும் ஒரே மாதிரிதான் இருக்கும். எந்த காரில் குமரன் இருக்கின்றான் என்று கண்டுபிடிப்பது சிரமம்.

தீவிர யோசனைக்குப்பின் திட்டம் வகுக்கப்பட்டது. ஒரே அட்டாக்கில் குமரனை வீழ்த்த வேண்டும் என்பது கூலிப்படைக்கு கொடுத்த அசைன்மென்ட். அதற்கு கூலிப்படை எடுத்துக் கொண்ட ஆயுதம் நாட்டு வெடிகுண்டு. இதற்காக தென்மாவட்டங்களில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் கும்பலும் கூலிப்படையுடன் இணைந்தன.
அக்டோபர் 1ம் தேதி குமரனுக்கு தேதி குறிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் பி.டி.ஓ அலுவலகம் அருகே குமரன் சென்ற டொயாடோ கார்மீது தொடர்ந்து வெடிகுண்டு வீசி நிலைகுலையச்செய்தது கூலிப்படை. இதனால் கார், சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. வழக்கம் போல கூலிப்படையின் வீச்சரிவாள் விளையாடியது. சில நிமிடங்களில் குமரன் சகாப்தம் முடிவுக்கு வந்தது. அன்று மாலையே எழும்பூர் நீதிமன்றத்தில் மூவர் சரணடைந்தனர். அந்த கொலையில் தொடர்புடைய மதுரை, ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களில் உள்ள கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டனர்.

‘கொலை செய்யப்பட்ட குமரன் மீது 2  கொலை வழக்கு, 3 கொலை முயற்சி, மற்றும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என வழக்குகள் ஏராளம்.’ என அறிக்கை வாசித்தார் எஸ்.பி. மனோகரன்.

ஏன் வெடிகுண்டு?

குமரன் கொலைக்குப்பின் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வெடிகுண்டு கலாச்சாரம் தொடர்ந்தது. மதுரை, சிவகாசி போன்ற பகுதிகளில் இருந்து இங்கே வரும் கூலிப்படையினருக்கு வெடிகுண்டு செய்வதெல்லாம் சாதாரணம். பூண்டு பட்டாசை டெவலப் செய்து, அதில் அதிக அளவு பாஸ்பரஸ், இரும்பு துகள்களை கலந்து விடுவார்கள். குண்டுகள் வெடிப்பதால் அதில் உள்ள இரும்பு துகள்கள் எதிரியை துளைத்து நிலைகுலையச் செய்துவிடும். ஆனால் உயிருக்கு ஆபத்து இருக்காது. அந்த அதிர்ச்சியில் இருந்து எதிரி மீள்வதற்குள் அதிரடியாக தாக்கிவிடலாம்.
மீண்டும் ஒரு வெடிகுண்டு!

குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர். திமுக கிளைக்கழக செயலாளரான இவர், அப்பகுதியில் கல்குவாரி தொழில் நடத்தி வந்தார். கல்குவாரி நடத்தும் பொறுப்பை தம்பி வாசுவிடம் விட்டுவிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அவரது உறவினரான ஆனந்தன் தோல்வியை தழுவ, இருவருக்கும் பகை முற்றியது. வெளியூரில் இருந்து கொண்டே குடைச்சல் கொடுத்தான் ஆனந்தன். அதிகார பலத்தை பயன்படுத்தி ஆனந்தனின் சொத்துக்களை சங்கர் அபகரித்தான். இதை விட ஒரு கொலைக்கு காரணம் வேண்டுமா என்ன?

இந்த நிலையில் நவம்பர் 29ம் தேதி சங்கரின் தம்பி வாசு, அண்ணனுக்கு சொந்தமான காரில் மாவட்ட ஆட்சியரின் பங்களாவிற்கு சென்று கனிமவளத்துறை அதிகாரிகளை சந்தித்தான். இரவு எட்டு மணிக்கு மாவட்ட ஆட்சியர் பங்களாவில் இருந்து கிளம்பிய காரில், கனிமவளத்துறை அதிகாரிகளும் வாசுவுடன் வந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே கரசங்கால் சாலையில் காரை மறித்து, முன்னும் பின்னும் தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியது மர்ம கும்பல். காருக்குள் சங்கரை தேட சங்கர் இல்லை என்பதாலும், வாகனங்கள் தொடர்ந்து வந்ததாலும் கூலிப்படையினர் ஏமாற்றத்தோடு ஓடினார்கள். ஆனாலும் டிரைவர் கார்த்திகேயன் அந்த சம்பவத்தில் பலியானார்.
சங்கருக்கு வைத்த குறி தவறியது. சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர், சிலமணிநேரத்தில் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அதிகாரிகள் அந்த காரில் இருந்ததும், அந்த காரில் இருந்த கோப்புகள் யார் கையிலும் சிக்கக்கூடாது என்பதற்காகவும் மாவட்ட ஆட்சியர் அந்த இடத்திற்கு விரைந்ததும் அப்போது சர்ச்சையை கிளப்பியது.

வெடிகுண்டுக்கு இரையான சங்கர்!


அந்த சம்பவங்களுக்கு பிறகு, "வெளியில் எங்கும் செல்ல வேண்டாம்… பாதுகாப்பாக இருங்கள்…!" என காவல்துறையினர் சங்கரை எச்சரித்தனர். இதனால் வாடகை காரில் மட்டுமே சங்கர் பயணம் செய்தான். லைசன்ஸ் துப்பாக்கியையும் உடன் வைத்துக் கொண்டான் சங்கர். துப்பாக்கி இருப்பதால் காவல்துறையினர் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி அடிக்கடி பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தான். ஏற்கனவே நடந்த கொலை முயற்சி சம்பவம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் 2013 ஜனவரியில் முடிச்சூர்-மணிமங்கலம் சாலையில் வாசுவுடன் காரில் சென்று கொண்டிருந்தான் சங்கர்.
அந்த காரை மறித்த கூலிப்படையினர், வெடிகுண்டுகளை வீச நிலைகுலைந்தது நின்றது கார். இந்த முறை சங்கர் தப்பிவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தது கூலிப்படை. தம்பி எதிரிலேயே, காரில் இருந்த சங்கரை வெளியே இழுத்து தள்ளி, வெட்டிச்சாய்தார்கள்.

அதே நேரத்தில் செங்கல்பட்டு தேமுதிக மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், திருக்கழுக்குன்றம் அதிமுக பிரமுகர் குள்ள கோபால் என அரசியல் தலைகள் மளமளவென சரிந்தன. 2012-ம் ஆண்டில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட கொலைகள் காஞ்சிபுரம் வட்டாரத்தில் நடந்தன. இதில் நான்கில் ஒருபங்கு அரசியல் சார்ந்தவை. அரசியல் அதிர்வலையை உண்டாக்கிய சில கொலைகளை மட்டுமே பார்த்தோம்.

மரணத்தை விட அதிபயங்கரமானது மரண பயம்!  2013ம் வருடம் தொடங்கியது அப்படித்தான்! 

2012ம் ஆண்டில் செங்கல்பட்டு நகராட்சி துணைத்தலைவர் ரவிப்பிரகாஷ் (திமுக), செங்கல்பட்டு  கவுன்சிலர் சுரேஷ் (தேமுதிக), தேமுதிக மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் புருஷோத்தமன் (அதிமுக), மறைமலைநகர் ஒன்றிய கவுன்சிலர் வேலு (அதிமுக), பி.வி. களத்தூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் (திமுக), ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் பிபிஜி குமரன் (அதிமுக), சேத்துப்பட்டு ஊராட்சி தலைவர் சங்கர்(திமுக), பிவி களத்தூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குப்பன்(அதிமுக), பிவி களத்தூர் ஒன்றிய இளம் பாசறை தலைவர் நித்யானந்தம் (அதிமுக), கூலிப்படைகளால் ரத்தமும் சதையுமாக சிதைக்கப்பட்டனர்.

அரசியல் போட்டியின் காரணமாகத்தான் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அடுத்து இவர்களை கொன்றவர்களுக்கு நிம்மதி இருக்குமா? இவர்களை கொன்றவர்களில் யார் வேண்டுமானாலும், எப்போதும் வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்பதுதான் 2013ம் ஆண்டின் 'பய' நிலவரம்.

உள்ளாட்சி பிரமுகர்களின் தலைக்கு கியாரண்டி கிடையாது. அரசியல் கொலைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், ஒருகட்டத்தில் 'சர்ச்சைக்குரிய உள்ளூர் அரசியல் பிரமுகர்களை தேவையில்லாமல் அதிகமாக வெளியில் வரவேண்டாம்' என எச்சரித்தது காவல்துறை. இவர்களில் சிலர் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. மனோகரனிடம் மனு கொடுத்தனர். கொலைகளை விட வதந்திகள் அதிகம் பரவத் தொடங்கியது.

காவல்தெய்வமான காவல்துறை!

இதனால் அ.தி.மு.க.வை சேர்ந்த மறைமலைநகர் நகராட்சி தலைவர் கோபிகண்ணனுக்கும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத்தலைவரும், மதுராந்தகம் எம்.எல்.ஏ கனிதாவின் கணவருமான சம்பத்குமாருக்கும்  துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதுபோல் பா.ம.க.வை சேர்ந்த இளந்தோப்பு வாசுவுக்கும் , தேமுதிக மாவட்ட பிரதிநிதி வல்லம் கண்ணதாசன் என்பவருக்கும் காவல்துறையினரால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர்களின் வீடுகளுக்கு சென்று இரவுபகலாக கையெழுத்துப் போட்டு வந்தனர் காவல்துறையினர்.

ஆனாலும் காவல்துறையினரின் வேலியைத்தாண்டி வேட்டையாடப்பட்டார் கண்ணதாசன். கண்ணதாசன் இறப்பதற்கு இரண்டுநாட்களுக்கு முன்புதான், செங்கல்பட்டு தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசனுடன் சென்று காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரனை சந்தித்தார். தனக்கு கொலைமிரட்டல் வருகின்றது எனக் கூறி, பாதுகாப்பு அளிக்கும்படி மனு கொடுத்தார். எஸ்.பி.யும் அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார்.

கண்ணதாசன் கொலை செய்யப்பட்டபோது, எஸ்.பி மனோகரன் 100 அடி தொலைவில் ரோந்து பணியில் இருந்தார். கண்ணதாசன் கொலைக்கு பின்பு, எஸ்.பி. மனோகரன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று எம்எல்ஏ முருகேசன் கொதித்தார்.
சுயபாதுகாப்பு வேலி…

ஒருசில தலைவர்கள் காவல்துறையினரை நம்பாமல் தங்களுக்குத்தானே பாதுகாப்பு வேலி போட்டுக் கொண்டனர். ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர் சல்குரு தனது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு கண்காணிப்பு கேமராக்களை நிறுவிக்கொண்டார். பொது நிகழ்வுகளில் தலைகாட்டுவது அரிதாகிவிட்டது. அதுபோல மதுராந்தகம் எம்எல்ஏ கனிதாவின் கணவர் சம்பத்குமாருக்கு இன்றளவும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுநிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, அவர் வருவதற்கு முன்பே தனது ஆட்களை பாதுகாப்பிற்கு நிறுத்திவிடுகின்றார். இன்றளவிலும் அவர் வரும் போது இந்த பாதுகாப்பு படை காவல் நிற்கும். வீட்டில் சந்திக்க வருபவர்கள்கூட முழு பரிசோதனைக்குப்பின்புதான் அனுமதிக்கப்படுகின்றார்கள். எம்எல்ஏ கனிதாவை சந்திக்க வரும் அரசு அலுவலர்களைக்கூட சந்தேகக் கண்ணோடுதான் பாதுகாப்பு படை அனுமதிக்கின்றது. இதனால் கனிதாவின் வீட்டிற்கு செல்லும் அரசு அலுவலர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றார்கள்.
எடுபடாத எம்எல்ஏ கோரிக்கை!

2013ல் நடந்த மானியக் கோரிக்கையின்போது பேசிய செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ அனகை. முருகேசன், " செங்கல்பட்டு நகரம் கொலைநகரமாக இருக்கின்றது. மக்கள் வெளிவரவே அச்சப்படுகின்றார் கள். அரசியல் கொலைகள் அதிகமாக இந்தப் பகுதியில்தான் நடக்கின்றது. காவல்துறையினர் சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. போலி குற்றவாளிகள் நீதிமன்றங்களில் சரண் அடைகின்றார்களே தவிர, காவல்துறையினர் இதுவரை நேரடியாக குற்றவாளிகளை பிடித்ததில்லை.

காஞ்சிபுரத்தில் மாவட்ட காவல்துறை தலைமையகம் செயல்படுவதை போன்று, செங்கல்பட்டிலும் காவல்துறை அதிகாரியை கொண்டு ஒரு அலுவலகம் செயல்பட வேண்டும். அதுபோல் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் உள்ளாட்சி பிரமுகர்களாக இருக்கின்றனர். ரியல் எஸ்டேட் தகறாறு, மணல் எடுப்பது, கட்டுமானப்பணி இப்படி ஏதாவது ஒன்றுதான் கொலைகளுக்கான பின்னணியாக இருக்ககின்றது.

குற்றப் பின்னணி கொண்டவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க வேண்டும். காவல்துறையின் மெத்தனத்தால் கொலைகள் அதிகரிக்கின்றதே தவிர குறைவதில்லை ” என்று கூறினார். ஆனாலும் பதட்டம் நீடித்தது.

டாப் ஒன் க்ரைம் ரேட்

2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி குற்ற எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் இருந்தது காஞ்சிபுரம் மாவட்டம். 2007-ம் ஆண்டு அனைத்து மாவட்டங்களையும் பின்னுக்கு தள்ளி 531.92 புள்ளிகளோடு முதல் இடத்தை பிடித்தது. (புள்ளிகள் என்பது ஒருலட்சம் மக்கள் தொகைக்கு நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகின்றது.) 2008ம் ஆண்டு 504.94 புள்ளிகளோடு முதல் இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

அதைத் தொடர்ந்து. 2012ம் ஆண்டுகளிலும் நடந்த அரசியல் கொலைகளால் தமிழகத்தை திரும்பி பார்க்கச் செய்தது காஞ்சிபுரம் மாவட்டம். அதுமுதல் குற்ற எண்ணிக்கையை விட அரசியல் கொலைகள்தான் பரபரப்பாக பேசப்பட்டன.

தோல்வியில் முடிந்த என்கவுண்ட்டர்
குற்றங்களை குறைக்க என்கவுண்ட்டர்தான் சரியான தீர்வு என்று காவல்துறை வட்டாரம் தீர்மானித்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு தேமுதிக பிரமுகர் கண்ணதாசன் கொலைவழக்கில், சார்லஸ் மற்றும் சந்தோஷ் என்ற இருவரை செங்கல்பட்டு நகர காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பழவேலி சுடுகாட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அவர்களை என்கவுண்ட்டர் செய்வதுதான் பாஸ்கரனின் திட்டம். சார்லஸ் துப்பாக்கியால் சுடப்பட்டான். தொடையில் காயங்களுடன் சார்லசும், தனது கையை கீறிக்கொண்ட பாஸ்கரனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

என்ன செய்தார் எஸ்.பி. மனோகரன்?


காவல்துறையினர் மீது நம்பிக்கை வரவேண்டும் என்று எஸ்.பி. மனோகரன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். செங்கல்பட்டு நகரம் முழுக்க வாரம் ஒரு முறை காவல்துறையினரின் அணிவகுப்பு நடந்தது. வரிசைவரிசையாக சைரன் சத்தத்தை எழுப்பிக்கொண்டு காவல்துறையினரின் வாகனங்கள் தெருக்களில் அணிவகுக்க தொடங்கின. செங்கல்பட்டு நகரத்திற்கு வரும் நுழைவுகளில் எல்லாம் காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளையும், சோதனைச்சாவடிகளையும் அமைத்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கார்கள் பரிசோதனை செய்யப்பட்டன.
அதுபோல் அரசியல் புள்ளிகள் மீது வரும் சின்ன சின்ன விரோதங்களை வளரவிடாமல், இருதரப்பினரை யும் காவல்நிலையத்திற்கு அழைந்து  சமரசம் செய்து வைத்தார் எஸ்.பி. மனோகரன்.

ஆனாலும் சிலர் பஞ்சாயத்தில் தலையை ஆட்டிவிட்டு, வெளியில் காய்நகர்த்த ஆரம்பித்தனர். மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர்.  செங்கல்பட்டு பகுதியில் மட்டும் ஏழு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஒரு வழியாக குற்றங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் இன்றளவும் பதட்டம் தணியவில்லை.

கொலை என்பது ஒரு தனிநபரையோ அல்லது அவர்களை சார்ந்தவர்களையோதான் நிம்மதி இழக்க செய்யும். ஆனால் இன்றளவும் ஒரு ஊரில் நடந்த கொலைகளும், வன்முறையும் அந்த ஊரையே நிம்மதி இழக்க செய்துள்ளது.

கொலையும் வன்முறையும் பின்னிப் பிணைந்த அந்த ஊர் ஜாதகத்தோடு அடுத்து சந்திப்போம்.


சூணாம்பேடு ஊர் ஜாதகம்

காஞ்சிபுரம் மாவட்ட தென்கோடியில் உள்ள ஊர் சூணாம்பேடு! கலவரம், கல் உடைப்பு, கடை அடைப்பு, பேருந்து எரிப்பு என ரத்தம் தெறிக்கும் யுத்த பூமி! ஏதாவது ஒரு ரூபத்தில் எப்போதும் பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே இருக்கும்! சுருக்கமாக சொன்னால் சூணாம்பேடு ஒரு குட்டி காஷ்மீர்!

சூணாம்பேடு பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். அடுத்ததாக வன்னியர் இன மக்களும் அதிகம் வசிக்கும் பகுதி. சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் விவசாயம்தான் பிரதான தொழில். பெரிய அளவில்  வேலைவாய்ப்பு இல்லாத பகுதி. பிழைப்புக்காக சாராயம் காய்ச்ச தொடங்கியவர்களுக்கு, அதுவே குலத்தொழிலாகவே அமைந்துவிட்டது.

இன்றளவும் இப்பகுதிகளில் நடக்கும் வன்முறைகளுக்கு, சாராயத்தின் பின்னணி வலுவானதாக இருக்கும். சாராயம் காய்ச்சினால் காவல்துறையினர் அழைத்துச் செல்வார்கள். காவல்துறையினருக்கு பணம் கைக்கு வந்தால் அடுத்த அரைமணி நேரத்தில், பிடிபட்டவர்கள் வீட்டிற்கு வந்துவிடலாம். அதை மிஞ்சினால் கணக்கு காட்டுவதற்காக ஒரு சிலரை கைது செய்வார்கள். கொஞ்சம் அபராதம்… சிலகாலம் சிறை! மீண்டும் வெளியே வந்தால், அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு வேறு தொழில் ஏதும் கைவசம் இருக்காது. அவர்களுக்கு இயல்பாகவே சாராய தொழிலை நோக்கி கால்கள் பயணிக்க தொடங்கிவிடும். மீண்டும் அடுப்பை பற்ற வைத்துவிடுவார்கள்.

குடும்பத்தலைவர் இல்லாத நேரங்களில், வாரிசுகள் தொழிலை கவனித்துக் கொள்வார்கள். படிப்பறிவு இல்லாததால் வாரிசுகளும் அதையே தொடர்வார்கள். கையெழுத்து போட காவல்நிலையம் வருபவர்களில் சிலர் வெளியே அரிவாளை போட்டுவிட்டு உள்ளே சென்று கையெழுத்து போட்டுவிட்டு வருவதும் உண்டு. மாமூல் வந்தால் போதும் என்று காவல்துறையும் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொள்ளவில்லை. காவல் நிலையத்தில என்ன நடக்கின்றது என உளவு பார்ப்பதற்கென்றே சிறுவர்கள் இருப்பார்கள்.

பகையை வளர்த்த பதவி சுகம்!


சூணாம்பேடு கலவர வரலாறு பற்றி இன்னும் தெரிந்து கொள்ள சுமார் 20 வருடங்கள் நாம் பின்னோக்கி செல்ல வேண்டும். திருநாவுக்கரசு என்பவரின் மகன் செந்தில். திருநாவுக்கரசின் தங்கை மகன் ஆனந்தன். செந்தில் சென்னையில் உள்ள நந்தனம் கலைக்கல்லூரில் படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வருகின்றான். விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசம் இல்லாத அந்த ஊரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளையை தொடங்குகின்றான்.

கட்சியை படிப்படியாக வளர்த்து மாவட்ட செயலாளர் பதவியை அடைகின்றான். சிறுசிறு பஞ்சாயத்தில் தொடங்கி பெரிய கட்டபஞ்சாயத்து வரை அவன் அதிகாரம் நீள்கிறது. இதனால் கைகளில் காசு புரள ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போனது கட்டப்பஞ்சாயத்து தொழில்.
 
அப்போது அப்பகுதி திமுக பிரமுகர் தாமோதரன் என்பவரது ஆட்களுக்கும் செந்திலுக்கும் மோதல் ஏற்படுகின்றது. மோதலின் உச்சகட்டத்தில் ஒருநாள் தாமோதரனின் லாரியை செந்திலின் ஆட்கள் எரித்தனர். லாரி எரிப்பு வழக்கில் கைதாகி உள்ளே செல்கிறான் செந்தில். அந்த நேரத்தில் செந்தில் பொறுப்பை கவனித்துக் கொள்ளும் வாய்ப்பு அத்தை மகனான ஆனந்தனுக்கு கிடைக்கின்றது.

மாவட்ட செயலாளராக வலம் வந்த இடங்களில் எல்லாம் வளம் வந்து  சேர்ந்தது. பதவி சுகம், பணம், பந்தா என்று கிடைத்த அத்தனை சந்தோஷங்களும் ஆனந்தனை திக்குமுக்காடச்செய்கிறது. அந்த பதவியை செந்திலுக்கு கொடுக்காமல் தாமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்த நிலையில் செந்தில் ஜாமீனில் வெளிவந்தான். மாவட்ட செயலாளர் பதவியை  செந்திலுக்கு விட்டத்தர மறுக்கிறான் ஆனந்தன்.

இதனால் இருவருக்கும் இடையே  மோதல் வெடித்தது. செந்திலை ஊருக்குள் நுழையவிடாமல் ஆனந்தனின் ஆட்கள் மிரட்டத் தொடங்கினார்கள். இதனால் செந்தில் வெளியூரில் தங்கி கொண்டான். ஆனாலும் அவ்வப்போது ஊருக்குள் வருவதை வழக்கமாக்கிக் கொண்டான். இருவருக்கும் எற்பட்ட  மோதல் படிப்படியாக வலுப்பெற்றுக்கொண்டிருந்தது.  இந்த இருவருக்குள் ஏற்பட்ட பகையால் இருதரப்பிலும் பொருட்சேதமும், உயிர் சேதமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அறிவாள் வீசிய அத்தை மகன்

சிலவருடங்களில் செந்தில் ஆட்கள் ஊரை காலை செய்துவிட்டு சென்னையில் தஞ்சம் அடைகின்றார்கள். செந்திலின் ஆட்கள் சூணாம்பேட்டில் நுழைய முற்பட்டால் ஆனந்தனின் ஆட்கள்  விரட்ட ஆரம்பித்து விடுவார்கள். இதனால் செந்தில் ஓடிவிடுவான். லோக்களில் செந்திலுடைய ஆட்கள் என்று அடையாளம் தெரிந்தால் அவர்களை அடித்து துரத்திவிடுவார்கள். செந்தில் ஆட்கள் ஊரில் இல்லாததால், செந்தில் தரப்பினரின் வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன.

2007-ல் கொலை உள்ளிட்ட  பல்வேறு வழக்குகள் தொடர்பாக செந்தில் மதுராந்தகம் கோர்ட்டுக்கு ஆஜராக வந்தான். அப்போது ஆனந்தனுடைய ஆட்கள் அவனை கோர்ட்டில் வைத்தே வெட்டுகின்றனர். அதில் காயங்களுடன் செந்தில் உயிர்பிழைத்தான். அந்த சம்பவத்திற்கு பின் ஆனந்தனை பழிதீர்க்க நினைத்தான் செந்தில்.

2008ல் சூணாம்பேட்டில் உள்ள வீட்டில் வைத்தே ஆனந்தன் மீது தாக்குதல் நடத்தினர் செந்திலின் ஆட்கள். அதில் ஆனந்தன் பிழைத்துக் கொள்கின்றான். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தனின் ஆட்கள் 2009 ஏப்ரல் 26-ம் தேதி மகாபலிபுரத்தில் செந்திலை துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்றனர்

காவல்துறையை கலங்க வைத்த கலவர பூமி


அதைத் தொடர்ந்து 2009 மே 30-ல் ஆனந்தனுடைய அப்பா கஜேந்திரனும், கஜேந்திரனின் நண்பரான அருள் என்பவரும் செந்தில் தரப்பினரால் ஒரே நாளில் கூறு போடப்பட்டனர். அதைத்தொடர்ந்து 2009 நவம்பர் 30ல் ஆனந்தனின் தம்பி அருள் தன் காதலியுடன் இருந்த அந்தரங்கமான நேரத்தில் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்படுகின்றார்.

2010 ஜனவரி 13-ல் செந்திலின் சித்தப்பா மகன் வசந்தராஜா ஆனந்தனுடைய ஆட்களால் வெட்டிக் கொல்லப்படுகின்றார். இதனால் சட்டம் ஒழுங்கு நெருக்கடிக்கு தள்ளப்பட்டது காவல்துறை. 2010 ஜனவரி 18-ல் விழுப்புரம் மாவட்டம் மைலத்தில் ஆனந்தனின் தம்பி அசோக் என்பவனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்கின்றனர்.
இருதரப்பு முக்கிய ஆட்களும் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டாஸ் காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் ஊருக்குள் பதட்டத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள். செந்தில் ஆதரவு குடும்பத்தினர் 15 வருடங்களாகவே ஊரில் நுழைய முடியவில்லை. சொந்த ஊரில் வாழ முடியாமல் வெளியில் தங்கியே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனந்தன் தரப்பு ஆட்கள் சிலருக்கும் இதே நிலைதான். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரை காலிசெய்து விட்டு சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் தங்கி இருக்கின்றார்கள். இன்றளவிலும் சொந்த ஊருக்கும் நுழைய முடியாமல் பல குடும்பங்கள் பாண்டிச்சேரியிலும், சென்னையிலும் தங்கி இருக்கின்றன.

வேண்டும் வேலைவாய்ப்பு


“சுமார் 3500 பேர் சூணாம்பேடு காலணியில் வாழ்கின்றனர். அதில் 200க்கும் மேற்பட்ட இளம் விதவைகள் பென்ஷன் வாங்குகின்ற னர். இதில் பெரும்பாலானவர்கள் விதவைகள் ஆனதற்கு சாராயமே காரணம். பொதுமக்கள் நடுநிலைமையோடு இருக்க முடிவதில்லை. நீ எந்த குரூப் என்று கேட்டு தொந்தரவு செய் வாங்க. இந்த பிரச்சனை காரணமாகவே நிறைய பேர் ஊரை காலி செய்துவிட்டு போயிட்டாங்க. விவசாயமும் இப்ப குறைஞ்சு போயிடுச்சு. இதனால வேலையில்லாமல் நிறைய பேர் இருக்கின்றார்கள்.

சாராயம் காய்ச்சுவோர் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர் கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் சூணாம்பேடு பகுதியில் எந்த தொழி லும் நடத்த முடியாது. இங்கு தொழில் செய்யவே நிறைய பேர் பயப்படுறாங்க. இதனால் இன்றளவிலும் இந்தப்பகுதி வளர்ச்சி அடையாமலேயே இருக்கின்றது.” என்கின்றனர் சூணாம்பேடு பகுதியை சேர்ந்தவர்கள்.

சிறையில் இருந்து ஜாமீனில் வந்த ஆனந்தனுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. இதனால் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார் ஆனந்தன். கட்சியில் மீண்டும் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். ஒரு பதவிக்காக ஏற்பட்ட பகை ஒரு ஊரையே சிதைத்துவிட்டது! 


Monday, August 3, 2015

வரலாற்றில் கேமரா

ன்றைய நவீன உலகத்தில் கேமரா என்பது தவிர்க்கவே முடியாத ஒரு கருவியாக மாறியிருக்கிறது. உலகத்தில் ஏதாவது ஒரு வடிவத்தில் கேமராவுடன் உறவு கொண்டாடாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். கேமராவுக்கு முன்னோ அல்லது கேமராவுக்குப் பின்னோ நின்று ஆவணப்படுத்திக் கொண்டேயிருக்கிறான்.

நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியத் தேவையாகிவிட்ட இந்த கேமராவின் பிறப்பு, அதன் பரிணாம வளர்ச்சிகள், கடந்து வந்த பாதைகள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவை. ஓவியம், இசை, இலக்கியம் உள்ளிட்ட எந்தக் கலைகளுக்கும் இல்லாத சிறப்பு இந்த கேமராவுக்கும், அது உருவாக்கிய புகைப்படத்துக்கும் மட்டுமே இருக்கிறது. எந்தக் கலைகளுக்கும் இதுதான் ஆரம்பம் என்று துல்லியமான ஆதாரங்களோடு நம்மால் கூற முடியாது. ஏதோ ஒரு வகையில் ஆவணப்படுத்தப்பட்டதில் இருந்துதான் அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நவீன உலகத்தின் விஞ்ஞான கண்டுபிடிப்பான கேமரா அப்படி அல்ல. இதுதான் உலகத்தில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என்று ஆணித்தரமாக நம்மால் சொல்லிவிட முடியும்.

கடந்த காலத்தின் அரசியல், வரலாறு, போர் மற்றும் புரட்சி, அவை ஏற்படுத்திய அழிவுகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை உண்மையின் சான்றாக படம் பிடித்து நம் கண் முன்னே நிறுத்துகிறது. புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு 175 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தக் குறுகிய காலத்திலேயே, அனைத்து மக்களையும் அது கவர்ந்து வைத்திருப்பதற்குக் காரணம்... படிப்பறிவில்லாத பாமரனும் அதை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி இருப்பதுதான். மேலும், உலக நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதிலும் அதன் உண்மை நிலையை உலகுக்கு உடனுக்குடன் புரிய வைப்பதிலும் புகைப்படத்துக்கு நிகர் வேறில்லை.

'கிளிக்’ என்ற மெல்லிய சத்தத்துடன் ஒவ்வொரு முறையும் இதன் ஷட்டர்கள் திறந்து மூடும்போதும், அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றை விழுங்கி தன்னுள் ஆவணமாக பதிவு செய்துகொள்கிறது. நூற்று எழுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றின் நேரடி சாட்சியாக இருந்து கொண்டிருக்கும் இந்த கேமரா உருவாக்கிய படங்கள் மூலம் உலகத்தின் கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்கவே இந்தப் பயணம்.

1. நாப்பாம் சிறுமி 

உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது  இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் நிர்வாணமாக ஒரு சிறுமி ஓடிவரும் இந்தப் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் கதிகலங்கச் செய்துவிடும். தெற்கு வியட்நாம் போட்ட நாப்பாம் குண்டினால் தாக்குதலுக்குள்ளான இந்தச் சிறுமி ஓடி வரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்துப் பார்த்தது. சுமார் 19 வருடங்களாக நடந்து கொண்டிருந்த வியட்நாம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர இந்தப் படம் மிகப் பெரிய காரணமாக அமைந்தது.
1954-ல் வடக்கு வியட்நாம் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கொண்டது. அதன் பிறகு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்திருந்த வியட்நாமை, சோவியத் யூனியன் மற்றும் சீனாவைப்போல ஒரே நாடாக ஆதிக்கம் செலுத்த விரும்பியது வடக்கு வியட்நாம். அதேசமயம் தெற்கு வியட்நாமும் தன்னுடைய சுயாட்சியை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்காக வட அமெரிக்காவுடன் சேர்ந்து வடக்கை எதிர்க்க விரும்பியது. இந்தப் போரில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக நேரடியாகப் பங்கேற்றனர். சீனா மற்றும் ரஷ்யாவும் வடக்கு வியட்நாமுக்கு அதிகளவில் ஆயுதங்களையும், போர் உத்திகளையும் நேரடியாக கொடுத்து வந்தது. இந்தப் போரின் உச்சத்தில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும், 11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டுபோயினர்.

போர் உச்சத்தில் இருந்த காலகட்டமான 1972 ஜூன் 9-ம் நாள் தெற்கு வியட்நாம் பெட்ரோலிய ரசாயனம் கொண்ட நாப்பாம் குண்டினை தெற்கு வியட்நாமில் இருக்கும் (அப்போது வடக்கு வியட்நாமின் கட்டுப்பாட்டில் இருந்த) 'தராங்பாங்க்’ என்ற கிராமத்தில் வீசியது. இந்த நிலையில்தான் அந்தக் கிராமத்தில் இருந்த எட்டு வயதான சிறுமி பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள். அப்போது சிறுமி கிம் ஃப்யூக்கின் உடைகள் முழுவதும் எரிந்து உடலிலும் தீக்காயம் பரவிட்ட நிலையில் ''சுடுது சுடுது'' என்று கதறியபடியே ராணுவம் இருந்த பகுதியை நோக்கி ஓடி வருகிறாள்.

அப்போது அவளுக்கு சற்று தொலைவில் இறந்துபோன ஒரு குழந்தையுடன் அலறிக்கொண்டு வந்த ஒரு மூதாட்டியை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் புகைப்படம்  எடுத்துக் கொண்டிருந்த அசோசியேட்டட் பிரஸ்சின் புகைப்பட பத்திரிகையாளர் நிக் வுட் (Nick Ut) தனது வியு ஃபைண்டர் ஓரத்தில் நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியை பார்த்தார். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, தன் கேமராவை அவளை நோக்கி திருப்பினார். மற்ற புகைப்படக்காரர்கள் அனைவரும் அந்த மூதாட்டியையும் இறந்துபோன குழந்தையையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, நிக் வுட் மட்டும் நிர்வாணமாக ஓடிவந்த சிறுமி கிம் ஃப்யூக்கை படம் எடுக்கத் தொடங்கினார்.

அந்தச் சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு நின்றுவிடாமல், அவளுக்கு முதலுதவி செய்து தன் காரிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிர் பிழைக்கவும் வைத்த நிக்குக்கு அப்போது வயது 19 மட்டுமே. பிறகு, தன் அலுவலகத்துக்குச் சென்ற நிக், அந்தப் புகைப்படங்களை பிரிண்ட் போட்டு ஆசிரியர் குழுவினரிடம் காட்டியபோது, சிறுமி நிர்வாணமாக இருப்பதைக் காரணமாக காட்டி முதலில் அவர்கள் அதை பிரசுரிக்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்தப் படத்தை பிரசுரித்தது.

இதன் தொடர்ச்சியாக இந்தப் படம் உலகில் இருந்த அத்தனைப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் போருக்கு எதிரான படமாக அடையாளப்படுத்தப்பட்டது. உலக நாடுகளின் கடுமையான கண்டனத்தினாலும், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பினாலும் 1973-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அமெரிக்க ராணுவம் வியட்நாமை விட்டு வெளியேறியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல், வடக்கு வியட்நாமிடம் தெற்கு வியட்நாம் சரணடைந்தது. 1976-ல் ஜூலை 2-ல் 'வியட்நாம் சோசலிசக் குடியரசு’ (The Socialist Republic of Vietnam) உருவானது. இந்தப் படத்துக்காக நிக்குக்கு 1973-ல் நோபல் பரிசுக்கு இணையான பத்திரிகை துறையில் உயரிய விருதான ’புலிட்சர் விருது’ வழங்கப்பட்டது.

இந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுமிக்கு இப்போது வயது 52. தற்போது கனடாவில் வசித்து வரும் இவரை 1994-ம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக (UNESCO Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார். 1997-ல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம் ஃப்யூக். தற்போது இதனுடன் பல கிளை நிறுவனங்கள் இணைந்து 'Kim Phuc Foundation International' என்ற பெயரில் இயங்கி வருகிறது.

கால்கள் பிணைக்கப்பட்டு, இரண்டு கைகளும் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் தலைப்பாகையுடன் இருவர் கயிற்றில் தொங்கவிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பின் இருக்கும் வரலாறு, முழுக்க முழுக்க சோகத்தால் நிரம்பியது. இவர்களைச் சுற்றி இருக்கும் பத்து வீரர்களும் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனி ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்களே. 1858-ல் சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்த பிறகு பிரிட்டிஷுக்கு எதிராகப் போராடிய இந்திய வீரர்களைத் தூக்கில் போடும்போது போட்டோகிராபர் பெலிஸ் பியட்டோவால் (Felice Beato) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படமே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரியத்தை உலகறியச் செய்தது.

1857 மே மாதம் 10-ம் தேதி டெல்லிக்கு அருகே, மீரட்டில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் உருவான இந்தக் கலகம் கங்கை சமவெளி, மத்திய இந்தியா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்குக் காட்டுத்தீயாகப் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய பிறகு, 1958 ஜூன் 20-ம் தேதிதான் முடிவுக்கு வந்தது. கலகமாகத் தொடங்கி புரட்சியாக உருவெடுத்த இந்தப் போராட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது மட்டுமல்லாமல், கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி பார்வையில் இந்தியா வரக் காரணமாக அமைந்தது.

1820-ல் இந்தியாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலை கலாசாரத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிரிட்டிஷ், பிரிந்திருந்த பல்வேறு சமஸ்தான நிலப்பரப்புக்களையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டது. மேலும், ‘லார்டு டெலோசி’யின் மறுப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் வாரிசு இல்லாத இந்திய அரசர்களின் நிலப்பரப்புக்களை, தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆரம்பித்தது. இதனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறுநில மன்னர்களின் அதிருப்தி வலுக்கத் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் பிராமணர்களுக்கு சமஸ்தானத்தில் கிடைத்துக்கொண்டிருந்த அந்தஸ்துகளும் வருவாயும் இச்செயல்களால் அதிகமாக பாதிக்கப்பட்டது.
பெண் விடுதலை, பெண்களுக்கு மறுமணம் போன்றவற்றை ஆங்கிலேயர்கள் சட்டரீதியாக அங்கீகரித்து இந்துக்களின் நம்பிக்கைகளை உடைத்தெறிய முயற்சி செய்தனர். சாதி கட்டமைப்புகளை ஒதுக்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பியதோடு, பாரம்பரிய இந்து, இஸ்லாமிய கல்வி முறைகளை மேற்கத்திய மயமாக்கியது, பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில், வங்காள ராணுவத்தில் ’என்ஃபீல்ட் ரைஃபில்’ (Enfield Rifle) என்ற துப்பாக்கியை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ். நீண்ட நாட்களாக குமுறிக் கொண்டிருந்த மக்கள் துள்ளியெழ உடனடிக் காரணமாக இது அமைந்தது. ஏனெனில், இந்தத் துப்பாக்கியின் தோட்டா முனையில் மாடு மற்றும் பன்றிகளின் இறைச்சியால் ஆன குப்பிகளை கடித்துத் துப்ப வேண்டியிருந்தது. அதனால், இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் கடுமையான கோபம் அடைந்தனர். இவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகத்தான் 1857-ல் மங்கள் பாண்டே என்கிற 29 வயது சிப்பாய், மேற்குவங்கப் பகுதியின் ராணுவத் தளத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டார். இதனைத் தொடர்ந்து மங்கள் பாண்டே உடனே கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். சிப்பாய்க் கலகம் உருவாக இந்தச் சம்பவமே தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இந்தப் புகைப்படத்தை எடுத்த பெலிஸ் பியட்டோ, பிரிட்டிஷ் இத்தாலியனைச் சேர்ந்தவர். இவர் 1857-ல் இந்தியாவில் நடந்த கலவரத்தைப் படம் பிடிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தால் லண்டனில் இருந்து அனுப்பப்பட்டவர். இந்தக் காலகட்டத்தில் இவர் எடுத்த அறுபது புகைப்படங்கள்தான் இன்றளவும் சிப்பாய் கலவரத்தின் நேரடி சாட்சியாக இருக்கிறது. இந்தப் புகைப்படம் எடுப்பதற்கு நீண்ட நேரம் ஒளி ஊடுறுவும் முறையை (Long Exposure time) பயன்படுத்தினார் பியட்டோ. கல்கத்தா வந்து இறங்கியவர் பல இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி இழுவண்டியின் மூலம் வட இந்தியாவை நோக்கி பயணித்தார். செல்லும் வழி நெடுகிலும் சிப்பாய் கலகத்தால் ஏற்பட்ட சிதைவுகளையும் அழிவுகளையும் பதிவு செய்துகொண்டே சென்றார்.

சிப்பாய் கலகத்துக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷாரை கூறுபோட்டவர்கள் தமிழர்கள். இருந்தபோதிலும், 1857-ல் நடந்த சிப்பாய் புரட்சியே முதல் சுதந்திரப் போராக இன்றளவும் பேசப்படுவதற்குக் காரணம் உலகத்தின் முதல் போர் புகைப்படக்காரரான பெலிசி பியட்டோ எடுத்த இந்தப் புகைப்படம்தான்.