Powered By Blogger

Friday, July 31, 2015

பத்து வகையான ஃபேஸ்புக் பயனாளிகளில் நீங்கள்?


மூக வலைப்பின்னல் தளங்களில் ஃபேஸ்புக் செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது என்பதை சொல்லவே வேண்டாம். இணையத்தை பயன்படுத்துபவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இணையவாசிகளில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக் பயனாளிகளாக இருப்பதுடன் அவர்களில் பலர் ஃபேஸ்புக்கே கதி என்றும் இருப்பது உண்டு. சிலர் ஃபேஸ்புக்கை சுய புலம்பல்களுக்காக பயன்படுத்துகின்றனர். சிலர் நண்பர்களின் எண்ணிக்கை பற்றி பெருமை பட்டுக்கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் எதை எடுத்தாலும் ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக்கி விடுகின்றனர்.

இப்படி பலவிதமாக ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்டாலும், ஃபேஸ்புக் பயனாளிகள் மத்தியில் காணப்படும் பொதுவான சில அம்சங்களின் அடிப்படையில் அவர்களை பிரித்து விடலாம் என்கின்றனர். அந்த வகையில் ஃபேஸ்புக்கில் பார்க்க கூடிய பத்து வகையான பயனாளிகளை தொழில்நுட்ப இணையதளமான மேக்யூஸ்ஆப் விவரித்துள்ளது.

சுய விரும்பிகள்

எப்போதும் தங்களைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் சுய விரும்பிகளுக்கு ஃபேஸ்புக்கை விட சிறந்த இடம் வேறில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி நுணுக்கமாக பகிர்ந்து கொள்ளலாம். செல்பிக்களை வெளியிடலாம். உலகம் தங்களைச்சுற்றியே இருக்கிறது என நினைத்து மகிழலாம். இவர்கள் மதிய உணவு முதல் மாலை நேர காபி வரை எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு, அதை மற்றவர்கள் லைக் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஃபேஸ்புக் கால நார்சிஸ்ட்கள் என்று இவர்களை சொல்லலாம். ஐயோ பாவம் என்றும் நினைத்துக்கொள்ளலாம்.

நச்சரிக்கும் மனைவி

இது உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், உண்மை என்ன என்றால் சில மனைவிமார்கள் ஃபேஸ்புக்கிலும் கணவன்களை விரட்டிக்கொண்டிருக்கின்றனர் என்பது தான். மின்சார பில் கட்ட வேண்டும், மாலை காய்கறி வாங்கி வர வேண்டும், பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் போன்ற கட்டளைகளை எல்லாம் கணவகளுக்கு ஃபேஸ்புக் மூலமே பிறப்பிக்கும் மனைவிகள் இருக்கின்றனர்.

கண்காணிப்பு அம்மாக்கள்

ஃபேஸ்புக் இளைஞர்களின் கூடாரம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். அம்மாக்கள் அங்கு முற்றுகையிட்டு இருக்கின்றனர். ஃபேஸ்புக் என்றால் என்ன என்று முழித்த நிலை மாறி இன்றைய புத்திசாலி அம்மாக்கள், பிள்ளைகள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள இதை விட்டால் சிறந்த இடம் வேறில்லை என புரிந்து கொண்டுள்ளனர். எனவே, ஃபேஸ்புக் அம்மாக்கள் பிள்ளைகளின் நிலைத்தகவலை உடனே படித்து தவறாமல் லைக் செய்கின்றனர். இதன் மூலம், மகனே/மகளே, நான் கவனித்துக்கொண்டே இருக்கிறேன் என உணர்த்துகின்றனர்.

செயற்பாட்டாளர்

இவர்கள், சூடான செய்தியை பார்த்து பொங்கியதுமே, அந்த குமுறலை ஃபேஸ்புக்கில் வந்து கொட்டுபவர்கள். முக்கிய செய்திகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு அது பற்றிய கருத்துக்களையும் பகிர்வது தான் இவர்களின் முக்கிய வேலை. இப்படி பகிரப்படும் செய்திகளை படிக்கும் போது இன்னும் உற்சாகமாக கருத்தும் சொல்வார்கள். ஃபேஸ்புக் விவாதம் மூலம் உலகையே மாற்றிவிடலாம் என்றும் கூட நினைத்துக்கொண்டிருப்பவர்கள்.

சதியாளர்கள்

அடிப்படையில் சந்தேகப்பிராணிகளான இவர்களுக்கு ஃபேஸ்புக் சரியான களம். எந்த தகவலாக இருந்தாலும் அதன் பின் ஒரு சதி வலையை உருவாக்கி, அது பற்றிய விவாத்ததை உண்டாக்குவது இவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இதை ரசித்து செய்வதோடு முழுமையாக நம்புவதும் உண்டு.
நம்பிக்கையாளர்கள்

பொன்மொழிகள், மேற்கோள்கள் என தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டிருப்பவர்கள். உலகம் இனிமையான இடம் என்ற உணர்வை தரும் வகையில் பாசிட்டிவான செய்திகளை பகிர்வதற்கு முக்கியத்துவம் தருபவர்கள். உலகம் அன்பால் இயங்குகிறது என்பது தான் இவர்களின் நம்பிக்கை. சில நேரங்களில் எரிச்சல் தரலாம். ஆனால், சோர்வான நேரங்களில் இவர்களின் பக்கத்தில் எட்டிப்பார்த்தால் உற்சாகம் தானாக வரும்.

கவன ஈர்ப்பாளர்கள்

சுய விரும்பிகளின் இன்னொரு வகையாக இருப்பவர்கள். இவர்களுக்கு தங்களைப்பற்றி பேசினால் மட்டும் போதாது. உலகம் தங்களை கவனிக்க வேண்டும் என விரும்பி அதற்காக திடுக்கிடும் வகையில் எதையாவது பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அவை அபத்தமாக கூட இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதே முக்கியம்.
ஜோக் ரசிகர்கள்

உலகம் சிரித்து மகிழ வேண்டும் என நினைப்பவர்கள். ஒரு நல்ல ஜோக் அல்லது நகைச்சுவை வீடியோ கிடைத்தால் உடனே தன்னைப்போலவே மற்றவர்களும் ரசித்து சிரிக்கட்டும் என அதை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், சில நேரங்களில் கடி ஜோக்கையும் அனுப்பி கடுப்பேற்றுவார்கள்.

விவாகரத்து களம்

ஃபேஸ்புக்கில் பல விவாதங்கள் நடைபெறுவதுண்டு தான். ஆனால், சில நேரங்களில் விவாகரத்து பெற்ற மாஜி கணவன், மனைவிகள் தங்கள் கருத்து மோதல்களை ஃபேஸ்புக்கிலும் தொடர்வது உண்டு. நீதிமன்றம் மூலம் பிரிந்து விட்டாலும் கூட ஃபேஸ்புக்கில் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார்கள். நம்மூரில் இந்த ரகத்தினர் உண்டா? எனத்தெரியவில்லை.
சுற்றுலா பயணிகள்

அப்புறம் இருக்கவே இருக்கின்றனர் சுற்றுலா பயணிகள். தாங்கள் பார்த்து ரசித்த இடங்களை புகைப்படமாக பகிர்ந்து கொளவதில் மகழ்ச்சி அடைபவர்கள் இவர்கள். சமயங்களில் உலகின் சொர்க்கங்களை பார்க்கலாம். ஆனால், சில நேரங்களில் பார்த்து சலித்த சாதாரண இடங்களை கூட சுற்றுலா சொர்க்கமாக சொல்லிக்கொள்வார்கள்.

Thursday, July 23, 2015

மொஸாட் (Mossad).


பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை.
அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம்.
சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன?
அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா?
பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம் என்பது உலகுக்கே தெரியும்.
அத்தனை தேசங்களும் தத்தம் கண்டனத்தை எப்போதும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் எந்த தைரியத்தில் இஸ்ரேல் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது?
ஏன் யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை?
எகிப்து, சிரியா, ஜோர்டன் என்று மூன்று தேசங்கள் இணைந்துதான் 1967 யுத்தத்தில் இஸ்ரேலை எதிர்த்தன. இத்தனைக்கும் அவர்களுக்கு சோவியத் யூனியனின் மறைமுக ஆதரவு வேறு இருந்தது.
ஆனாலும் யுத்தத்தில் இஸ்ரேல்தான் வெற்றி பெற்றது; தான் நினைத்ததைச் சாதித்தது. அதற்கு முன்னால் நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின் போதும் போர்
நிறுத்தத்துக்கு முன்னதாகத் தனக்கு என்ன வேண்டுமோ அதை இஸ்ரேலால் அடைந்துவிட முடிந்தது. அதற்கும் முன்னால் நடைபெற்ற 1948 யுத்தத்திலும் இஸ்ரேலுக்குத்தான் வெற்றி.
எப்படி இது சாத்தியம்? அரேபியர்களின் வீரம் இஸ்ரேலிடம் எடுபடக்கூடிய தரத்தில் இல்லையா?
அது இருக்கட்டும். ஆயிரம் எதிர்ப்புகள் வருகின்றன; ஐ.நா. சபையில்
அடிக்கொருதரம் தீர்மானம் போடுகிறார்கள்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனபோதும் எல்லாம் அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருந்து மறைந்துவிடுவது ஏன்?
இவை எல்லாவற்றுக்கும் காரணம், இஸ்ரேலின் தனிப்பெரும் அடையாளமும் மிகப்பெரிய பலமுமான அதன் உளவு அமைப்பு. அதன் பெயர் HaMossad leModiin uleTafkidim Meyuhadim. சுருக்கமாக மொஸாட் (Mossad).
உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் தரத்தில் மொஸாட், சி.ஐ.ஏ., எம் 16 ஆகிய அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது.
பொதுவாக உளவு அமைப்புகளுக்குரிய அதிகார வரம்புகளைக் காட்டிலும் சற்றே கூடுதல் அதிகாரங்கள் பெற்ற அமைப்பு இது. ஆனால் மொஸாடில் வெளிப்படையான ராணுவப் பிரிவு கிடையாது.
சி.ஐ.ஏ.வில் அது உண்டு. எம்.16_ல் உண்டு. ரஷ்யாவின் கே.ஜி.பி.யில் கூட ஒரு துணை ராணுவப்பிரிவு உண்டு என்று சொல்லுவார்கள்.
ளின்டின் பணிகள் மிகவும் எளிமையானவை.
1. ஆட்சிக்கு இடையூறு தரக்கூடியவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல்.
2. தேவைப்பட்டால் சத்தமில்லாமல் அரசியல் கொலைகளைச் செய்தல்,
3. யுத்தங்களுக்கான திட்டம் தீட்டி, வழி நடத்திக் கொடுத்தல்
4. அரபு தேசங்கள், உலகெங்கும் பரவியிருக்கும் அரபு அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.
இவற்றுள் முதலாவது மற்றும் மூன்றாவது, நான்காவது பணிகளை உலகின் அனைத்து தேசங்களின் உளவு அமைப்புகளும் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால்அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு அனுமதி பெற்ற ஒரே உளவு அமைப்பு மொஸாட் மட்டுமே.
இஸ்ரேலில் மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொஸாட் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது உலகின் வேறெந்த நாட்டு உளவு அமைப்புக்கும் இல்லாத அதிகாரம். சி.ஐ.ஏ.வுக்குக் கூடக் கிடையாது.
ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் மொஸாட் உளவாளிகள், எக்காரணம்
கொண்டும் யூதர்களைக் கொல்லக்கூடாது! அவ்வளவுதான்.
இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியான டேவிட் பென் குரியன், 1951-ம் ஆண்டு மொஸாட்டைத் தோற்றுவித்தார். ஆரம்பத்தில் பாலஸ்தீன் போராளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக மட்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, தனது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக விரைவில் மிகப் பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது.
இன்றைய தேதியில் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு மாதச்
சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2000.
ஆனால் கண்ணுக்குப் புலப்படாத மொஸாட் ஏஜெண்டுகள் பல்லாயிரக் கணக்கில் உலகெங்கிலும் உண்டு.
மொஸாட்டின் இணையத்தளத்துக்கு முடிந்தால் போய்ப் பாருங்கள். அழகாக, சுத்தமாக, மிகவும் வெளிப்படையாக அப்ளிகேஷன் பாரம் கொடுத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் மொஸாட்டின் ஏஜெண்டாக விண்ணப்பிக்கலாம்.
உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டபிறகு, வேறு சில வினாக்களும் அங்கே கேட்கப்படும்.
உதாரணமாக நீங்கள் ஒரு யூதர் அல்லாதவர் என்றால் எதற்காக மொஸாட்டுக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள்? என்று கேட்பார்கள்.
இது தவிரவும் ஏராளமான கேள்விகள் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் விடை எழுதி அனுப்பினால், அந்த விடைகள் அவர்களுக்குத் திருப்தி தரக்கூடுமென்றால் ஒரு வேளை உங்களை யாராவது ஒரு மொஸாட் ஏஜெண்ட் கண்காணிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இன்னும் அதிகமோ, குறைவோ. நீங்கள் சரியான நபர்தான், தேவையான நபர்தான் என்று அவர்கள் தீர்மானித்தால் அடுத்தகட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகும்.
எத்தனை கட்டங்களாகப் பரிசோதிப்பார்கள், என்னென்ன பயிற்சிகள்
அளிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள். மொஸாட்டின் விண்ணப்பப் படிவம் மட்டும்தான் வெளிப்படை.
மற்றபடி அவர்களின் நடவடிக்கைகள் காற்றுக்கும் கடவுளுக்கும் கூடத் தெரியாது!மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் மொத்தம் ஆறு துறைகள் இயங்குகின்றன. (ஆரம்ப காலத்தில் எட்டு துறைகளாக இருந்திருக்கிறது. பின்னால் அதனை ஆறாகச் சுருக்கி இருக்கிறார்கள்.)
1. தகவல் சேகரிப்புப் பிரிவு (Collections Department). இதுதான் அளவில் மிகப் பெரியது. உலகெங்கும் மொஸாட் உளவாளிகள் அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் இஸ்ரேல் அரசுக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகச் சேகரித்துத் தொகுத்து வைப்பார்கள். அரசுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை தருவது, ஆயத்தங்களுக்கு அறிவுறுத்துவது போன்றவை இந்தப் பிரிவின் தலையாய பணி.
2. அரசியல் மற்றும் நல்லுறவுப் பிரிவு (Political Action and Liaison Department). இது கிட்டத்தட்ட ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சகம் போன்றது. இஸ்ரேலின் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, தகவல் பரிமாற்றத்துக்கு வழி செய்து தமக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகப் பெற்றுத் தரவேண்டியது இந்தப் பிரிவின் பணி. எதிரி தேசங்கள் என்றால் அங்குள்ள அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை வளைக்க முடியுமா என்று பார்ப்பதும் இவர்களின் பணியே.
3. Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவு. இவர்கள்தான் அரசியல் கொலைகளைச் செய்பவர்கள். ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவது, வழிகாட்டுவது, தேவைப்பட்டால் தாங்களே களத்தில் இறங்குவது ஆகியவை இப்பிரிவின் பணிகள்.
4. Lohamah Psichlogit என்கிற மனோதத்துவப் பிரிவு. விசாரணைகள், ரகசிய ஆராய்ச்சிகள் செய்வது, தேவையான தகவல்களை மக்களிடையே பரப்புவது, மீடியாவைக் கண்காணிப்பது, இஸ்ரேல் குறித்து மீடியா வெளியிடும் தகவல்களைச் சரிபார்ப்பது, தேவைப்பட்டால் சர்வதேச மீடியாவுக்குள் ஊடுருவி, தமக்குச் சாதகமான செய்திகளை வரவைப்பது போன்றவை இப்பிரிவின் பணிகள்.
5. Research Department என்கிற ஆராய்ச்சிப் பிரிவு. மேற்சொன்ன அத்தனை பிரிவினரும் கொண்டுவந்து சேர்க்கும் தகவல்களை வைத்துக்கொண்டு ஆய்வு செய்து வேண்டிய விவரங்களைத் தேடித்தொகுப்பது இவர்கள் பணி.
6. இறுதியாகத் தொழில்நுட்பப் பிரிவு (Technology Department). மொஸாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து அல்லது கடன் வாங்கி, துறையை எப்போதும் நவீனமயமாக வைத்திருப்பது இவர்கள் வேலை.
இந்த ஆறு பிரிவினருள் உலகுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், மொஸாட்டின் Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவுதான்.
முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து குருஅக்ஷவ் பேசிய ஒரு சர்ச்சைக்கிடமான பேச்சைக் கண்டறிந்து வெளி உலகுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான்.
பாலஸ்தீன் பிரச்னை குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Black September என்கிற ஒரு தீவிரவாத அமைப்பு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் ஒரு மாபெரும் படுகொலைத் திட்டத்தைத் தீர்மானித்து நடத்தி, உலகையே உலுக்கிப் பார்த்தது. இந்தச் சம்பவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான இஸ்ரேல் அரசு,
படுகொலைக்குக் காரணமானவர்களைக் கொல்லும்படி மொஸாட்டுக்குக் கட்டளையிட்டது.கறுப்பு செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த அலி ஹாஸன் ஸல்மே (Ali Hassan Salameh) என்கிற தீவிரவாதிதான் அந்தக் கொலைக்குப் பொறுப்பாளி.
ஆனால் மொஸாட்டின் மெட்ஸடா பிரிவு உளவாளிகள், சம்பந்தமே இல்லாமல் நார்வே நாட்டில் இருந்த அஹமத் பவுச்சிகி (Ahmed Bouchiki) என்கிற ஒரு வெயிட்டரைக் கொலை செய்துவிட்டார்கள்.
அதுவும் எப்படி? மொஸாட்டின் உளவாளிகள், போலியான கனடா தேசத்து பாஸ்போர்ட்களை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு நார்வேக்குச் சென்று இந்தக் கொலையைச் செய்தார்கள்!
கனடா மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தால் மொஸாட்டுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லை! இஸ்ரேல் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ‘சரியான நபரை மீண்டும் தேடிக் கொலை செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டார்கள்!
இச்சம்பவம் மட்டுமல்ல; பல்வேறு பாலஸ்தீன் போராளிகளைக் கொலை செய்வதற்காக பிரிட்டன், சைனா, ஜோர்டன் தேசத்து பாஸ்போர்ட்களைப் போலியாக உருவாக்கிப் ‘புகழ்’ பெற்றவர்கள் இவர்கள்.
மொஸாட்டின் மிகப்பெரிய பலம், அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது டெல் அவிவ் நகரில் இருக்கும் அதன் தலைமையக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஒருபோதும் வெளியே வராது என்பதுதான்.
அத்தனை விசுவாசமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு அது. யுத்தங்களின்போது இஸ்ரேலிய ராணுவம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை போதிப்பதற்காக, மொஸாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருபத்து நான்கு மணி நேரமும் உலகெங்கும் நடக்கும் யுத்தங்களைக் கூர்மையாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டே இருக்கும்.
எதிரிப் படைகளின் இருப்பையும் நகர்வையும் கண்காணிப்பதற்குச் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்கள் அவர்கள். 1967 யுத்த சமயத்தில் ஒரு மொஸாட் உளவாளி யுத்தம் நடந்த ஆறு தினங்களும் கோலன் குன்றுப் பகுதிகளில் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு மரத்தடியில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தவன் போலக் கிடந்திருக்கிறான். சோறு தண்ணீர் கிடையாது! சுவாசிக்கக்கூட முடியாது! அசையாமல் அப்படியே இருந்து ரகசியமாகத் தகவல்களைக் கடத்தியிருக்கிறான்.
இஸ்ரேல் அரசு இன்றைக்கும் தனது ஆண்டு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மொஸாட்டுக்காக ஒதுக்குகிறது. இது வெளியே சொல்லப் படுவதில்லை. ஆனால் ஆயிரம் சிக்கல்கள் வந்தாலும் இஸ்ரேல் சமாளிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்த மொஸாட்தான்.
மொஸாட் உருவானதிலிருந்து இன்றுவரை மொத்தம் பதினொரு பேர் அதன் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் பலபேர் ராணுவ அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றபோதும் மொஸாட்டில் ராணுவப் பதவிகள் ஏதும் கிடையாது. ஒரு சிவிலியன் அமைப்பாகத்தான்
மொஸாட் செயல்படுகிறது.
இந்த உளவு பலத்தைக் கொண்டுதான் இஸ்ரேல் தொட்டதிலெல்லாம் வெற்றிவாகை சூடுகிறது என்பது பாலஸ்தீனப் போராளிகளுக்குப் புரிவதற்கு வெகுகாலம் ஆனது.
பி.எல்.ஓ.விலும் ஒரு சரியான உளவுப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆறு நாள் யுத்தத்துக்குப் பிறகு முடிவு செய்தார்கள். அதற்கு முன் தலைவரை மாற்றினால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்துதான் யாசர் அராஃபத்தைப் பிடித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
72] அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 72
1967 – இஸ்ரேலிய அரேபிய யுத்தத்தின் விளைவுகளுள் மிக மிக முக்கியமானது, பாலஸ்தீனிய அரேபியர்களின் மனமாற்றம்.
ஒரு வரியில் சொல்லுவதென்றால், அரபு அரசாங்கங்கள் எதையுமே இனி நம்பக்கூடாது என்று பாலஸ்தீன் மக்கள் தீர்மானமே செய்தார்கள்.
அத்தனைபேருமே கையாலாகாதவர்கள் என்று பகிரங்கமாகவே அவர்கள்
குற்றம் சாட்டினார்கள்.
நேற்று முளைத்த தேசம் இஸ்ரேல். மூன்று அரபு தேசங்கள் இணைந்து போர் புரிந்தும் வெல்லமுடியவில்லை என்றால், அப்புறம் இந்த அரசாங்கங்களை நம்பி என்ன புண்ணியம்?
ஆகவே, ஏதாவது ஒரு மாற்று வழி யோசித்தே தீரவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.மக்களுடைய இந்தச் சிந்தனைப் போக்கின் விளைவுதான், பாலஸ்தீனில் ஏராளமான விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயின. அத்தனை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, சரியான திட்டம் வகுத்து, கவனம் குவித்து, இஸ்ரேலுக்கெதிரான முழுநீள யுத்தத்தை வழி நடத்தும் பொறுப்பு, பி.எல்.ஓ.வின் தலையில் விழுவதற்குக்
காரணமானது.
அப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் இருப்பவர், மிகப்பெரிய ராஜதந்திரியாகவும் மாவீரராகவும் மனிதாபிமானியாகவும்
இருக்கவேண்டுமென்றுதான் யாசர் அராஃபத்தை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார்கள்.
அதுவரை குவைத்தில் இருந்தபடி அல் ஃபத்தாவை வழிநடத்திக்கொண்டிருந்த அராஃபத். அரபு தேசங்களில் இருந்த எந்த ஒரு போராளி இயக்கத்துக்கும் அதுவரை பரிச்சயமில்லாமல் இருந்த ‘கெரில்லா’ தாக்குதல் முறையில் தன்னிகரற்ற திறமை கொண்டிருந்த அராஃபத்.1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கெய்ரோவில் கூடிய பாலஸ்தீன் தேசிய காங்கிரஸின் சிறப்புக் கூட்டத்தில், யாசர் அராஃபாத் முறைப்படி பி.எல்.ஓ.வின் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் அந்தப் பொறுப்புக்கு வந்தபோது பி.எல்.ஓ.வில் உறுப்பினராக இருந்த விடுதலை இயக்கங்கள் இவை:
1. Fatah, 2. western Sector, 3. Force 17, 4. Popular Front for the Liberation of Palestine PFLP, 5. Democratic Front for the Liberation of Palestine DFLP), 6. Hawatmah Faction; 7.
Abd Rabbu Faction; 8. Popular Front for Liberation of Palestine (General Command), 9. Palestine Liberation Front, (PLF) 10. Abu Abbas Faction, 11. Tal’at Yaqub Faction, 12.
AlSaiqa Organization, 13. Arab Liberation Front (ALF), 14. Palestinian Arab Liberation Front , 15. Palestinian Democratic Union (Fida), 16. Palestine Islamic Jihad Movement, 17.
Palestinian People’s Party [Hizb Al Sha’ab], 18. Palestinian Popular Struggle Front.
இவற்றுள் ஃபத்தா மட்டும் அராஃபத்தின் சொந்த இயக்கம்.
மற்ற அனைத்தும் தோழமை இயக்கங்கள். இத்தனை இயக்கங்களையும் கட்டிக்காப்பதுடன் மட்டுமல்லாமல் சரியான, முறைப்படுத்தப்பட்ட போர்ப்பயிற்சி அளிப்பது, இஸ்ரேலை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கவனம் கவர வழி செய்வது என்று அராஃபத்துக்கு இருந்த பொறுப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.
வெற்றிகரமாக அவரால் அதனைச் செய்ய முடிந்ததற்கு மிகப்பெரிய காரணம், முன்பே பார்த்ததுபோல, அரசுகள் மீது மக்கள் இழந்துவிட்டிருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை அப்படியே அப்போது விடுதலை இயக்கங்களின்பக்கம் சாயத் தொடங்கியது.
இன்னும் புரியும்படி சொல்லுவதென்றால், பாலஸ்தீன் மக்கள், ஆளும் வர்க்கத்துக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைத்தார்கள். அதே சமயம், இந்தப் போராளி இயக்கங்கள்தான் தமக்கு விடுதலை பெற்றுத் தரப்போகிறவர்கள் என்றும் கருதினார்கள்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.
போராளி இயக்கங்கள் பொதுவாக, தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களாகச் சித்திரிக்கப்படுவது சர்வதேச மரபு.
இதை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா. அமெரிக்க அரசுக்குத் தலைவலி தரக்கூடிய எந்த ஓர் அமைப்பையும், பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதுதான் அத்தேசத்தின் வழக்கம்.
அமெரிக்கா தொடங்கி வைத்த இந்த வழக்கத்தை முதலில் இங்கிலாந்தும் பிறகு ஐரோப்பிய யூனியனில் உள்ள அத்தனை தேசங்களும் அப்படியே எவ்வித மாறுதலும் செய்யாமல் ஏற்றுக்கொண்டுவிட்டன.
சர்வதேச அளவில் எந்த ஒரு தேசத்தில் விடுதலைக் குரல் கேட்கிறதோ, அந்தக் குரலுக்கு உரியவர்களைத் தீவிரவாதிகள் என்று உடனே சொல்லிவிடும் வழக்கம், அப்போது ஆரம்பித்ததுதான்.
உண்மையில் விடுதலை இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அரசாங்கங்கள் கைவிட்டு, அரபு லீக்கும் கைவிட்டு, ஐ.நா.சபையும் கைவிட்டபிறகு, இழந்த தங்கள் நிலத்தைத் திரும்பப்பெற பாலஸ்தீன் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்றானது வரலாறு.
அவர்களைப் போராளிகள் என்று சொல்லாமல் தீவிரவாதிகள் என்று வருணிப்பது எப்படிச் சரியாகும்?
ஆனால் இந்தப் போராளி இயக்கங்கள் சமயத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதுண்டு என்பதும், மறுக்கமுடியாத உண்மையே ஆகும். உதாரணமாக, யாசர் அராஃபத் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஐந்தாம் ஆண்டு, அதாவது 1974-ம் வருடம் பி.எல்.ஓ.வின் ஒரு குழுவினர் இஸ்ரேலில் உள்ள மா’லாட் என்கிற இடத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் புகுந்து, கையெறி குண்டுகளை வீசி 21 குழந்தைகளை ஈவிரக்கமில்லாமல் கொன்று வீசினார்கள். இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீவிரவாதம்.
இன்னும் சொல்லப்போனால் கொலைவெறியாட்டம். இஸ்ரேலிய அரசுக்கு எதிரான யுத்தத்துக்கும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? யூதர்களில் சிறுவர், பெரியவர் என்று பாராமல் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவிட்ட ஆரியக் கிறிஸ்துவரான ஹிட்லருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டது இஸ்ரேல்.
நியாயப்படுத்தவே முடியாத இத்தகைய செயல்களால்தான் போராளி இயக்கங்களுக்கு சர்வதேச ஆதரவோ, அனுதாபமோ பெரும்பாலும் கிடைக்காமல் போகிறது.
போராளி இயக்கங்களின் நோக்கத்தில், செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய சறுக்கல்களால்தான் அவர்கள்மீது விழவேண்டிய நியாயமான கவனம், விழாமல் போகிறது.
அராஃபத் பொறுப்புக்கு வந்த ஆரம்ப வருடங்களில் மிகக் கவனமாக இஸ்ரேலிய ராணுவம், காவல்துறை போன்ற இலக்குகளின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இது,
இஸ்ரேலுக்குள்ளாக. இஸ்ரேலுக்கு வெளியிலும் பல்வேறு தேசங்களில் பி.எல்.ஓ.வின் போராளிகள் கவன ஈர்ப்புக்காக ஏராளமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
ஆனால் மிகக் கவனமாக அத்தனை தாக்குதல்களுமே, யூத இலக்குகளின் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.
உலகம் முழுக்க பி.எல்.ஓ., பி.எல்.ஓ., என்று பேசிக்கொண்டிருந்த காலம் அது. யார், என்ன என்கிற விவரம் கூடத் தெரியாமல், அராஃபத்தைப் பற்றிப் பேசினார்கள்.
அணுகுண்டுகள் வைத்திருக்கும் இயக்கம் என்றெல்லாம் கதை பரப்பினார்கள். உண்மையில், நாட்டுவெடி குண்டுகளுக்கு அப்பால் பி.எல்.ஓ.வினரிடம் அப்போது வேறெந்த ஆயுதமும் கிடையாது.
வாங்குவதற்குப் பணம் கிடையாது முதலில். பி.எல்.ஓ.வின் பிரசாரப் பிரிவினர் அரபு தேசங்களெங்கும் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி வசூல் செய்தே இயக்கத்தை வழி நடத்திக்கொண்டிருந்தனர்.
சவுதி அரேபியா போன்ற மிகச் சில தேசங்களின் அரசுகள் மட்டும் மறைமுகமாக பி.எல்.ஓ.வுக்கு நிதியுதவி செய்திருப்பதாகத் தெரிகிறது.
1973-ம் ஆண்டுவரை பி.எல்.ஓ.வுக்கு மிகப்பெரிய அளவில் நிதிப்பிரச்னை இருந்திருக்கிறது. இது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை.
ஒரு பக்கம் பி.எல்.ஓ.வில் இருந்த இயக்கங்கள், மிகத் தீவிரமாக இஸ்ரேலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதே காலகட்டத்தில், பாலஸ்தீனில் வேறு சில புதிய இயக்கங்களும் தோன்றத் தொடங்கின.
‘இஸ்ரேல் என்கிற திடீர் தேசத்தை வேரோடு ஒழித்துவிட்டு, அகண்ட பாலஸ்தீனை மறுபடியும் ஸ்தாபிப்பதற்காக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
ஆயுதங்கள் மூலம் அச்சமூட்டுவோம். இன விருத்திமூலம்கலவரமூட்டுவோம். யூதர்களைத் தூங்கவிடமாட்டோம். ஜெருசலேம் உள்பட, இஸ்ரேல் எங்களிடமிருந்து அபகரித்த அத்தனையையும் திரும்பப் பெறாமல் ஓயமாட்டோம்’ என்கிற யாசர் அராஃபத்தின் அன்றைய பிரகடனம் ஒரு வேத மந்திரம் போல, அத்தனைபேரின் செவிகளிலும் விழுந்து சிந்தனையைக் கிளறிவிட்டதன் விளைவே இது.
இப்படித் தோன்றிய இயக்கங்களில் சில திசைமாறிப் போயின என்றாலும், பெரும்பாலான இயக்கங்கள் பி.எல்.ஓ.வில் சேராவிட்டாலும் பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யத் தயங்கவில்லை.
குறிப்பாக, ஆயுதங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது அன்றைக்கு பி.எல்.ஓ.வினரின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.
குறிப்பாக அரபு தேசங்களுக்கு வெளியே அவர்கள் திட்டமிட்ட ஒவ்வொரு கவன ஈர்ப்புச் செயலுக்கும் தேவையான ஆயுதங்களைக் கடத்தியோ, உருவாக்கியோ, வாங்கியோ தரும் பணியைச் செய்ய இத்தகைய இயக்கங்கள் மிகவும் உதவி செய்தன.
அப்படி 1967 யுத்தத்துக்குப் பிறகு உதித்த பாலஸ்தீன் இயக்கங்களுள் ஒன்றுதான் ஹமாஸ்.
‘இஸ்ரேல் அரபுப் பிரச்னை என்பது அரசியல் சார்ந்ததல்ல. அது இஸ்லாத்துக்கும் யூதமதத்துக்குமான பல நூற்றாண்டு காலப் பிரச்னையின் நீட்சி. நடப்பது அரசியல் யுத்தமல்ல. அது இரு மதங்களின் மோதல் மட்டுமே’ என்கிற பிரகடனத்துடன் உருவான இயக்கம் இது.
பிரச்னையை முற்றிலும் அரசியல் சார்ந்து மட்டுமே பார்க்கக்கூடியவராக அராஃபத் இருந்த நிலையில், ஹமாஸின் இந்த திடீர் பிரவேசம் உரிய கவன ஈர்ப்பைப் பெற்றதே தவிர, ஹமாஸால் இதன் காரணம் பற்றியே பி.எல்.ஓ.வில் இணைய முடியாமலும் போனது.
அது அவர்களுக்கு ஒரு பிரச்னையாகவே இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னென்ன பிரகடனங்கள் செய்துகொண்டாலும், எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். குறிக்கோள் ஒன்றுதான். கனவும் நினைவும் ஒன்றுதான்.
அது இஸ்ரேலை ஒழிப்பது. யூதர்களைப் பூண்டோடு அடித்துத் துரத்துவது.இழந்த தங்கள் நிலங்களை மீண்டும் அடைந்து, பாலஸ்தீனுக்குப் புத்துயிர் அளிப்பது.
ஆகவே, பி.எல்.ஓ.வுக்குள் இல்லாமலேயே ஹமாஸ் பாலஸ்தீன் விடுதலைக்காகத் தன்னாலான பணிகளைச் செய்ய ஆரம்பித்தது.
தொடர்ந்தும் தீவிரமாகவும் இஸ்ரேலிய ராணுவத்தை, காவல்துறையை, அரசு இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலம் அச்சுறுத்தி வருவதுதான், சரியான ஆரம்பமாக இருக்கும் என்பதில் இவர்கள் யாருக்குமே கருத்து வேறுபாடு இல்லை. தேவைப்பட்டால் ஆயுதப் போராட்டத்துக்காக அவர்கள் வகுத்து வைத்திருந்த வழிமுறைகளில் சில மாறுதல்கள், கூடுதல், குறைவுகள் செய்துகொள்ளலாமே தவிர, போராட்டத்தை வேறு எந்த விதமாகவும் தொடருவதற்கான வாய்ப்பில்லை என்றுதான் அத்தனை பேருமே கருதினார்கள்.
பி.எல்.ஓ.வின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த யாசர் அராஃபத்துக்கு அந்தத் தொடக்க காலத்திலேயே வெஸ்ட் பேங்க் பகுதியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது.
அறிவிக்கப்படாததொரு மகாராஜாவாகத்தான், அவரை மக்கள் அங்கே கருதினார்கள்.
அதே போல, காஸா பகுதியில் தோன்றி, வேர்விட்டு, வளர்ந்து, நிலைபெற்ற ஹமாஸுக்கு அங்கே பி.எல்.ஓ.வைக்காட்டிலும் செல்வாக்கு அதிகம். இந்த வெஸ்ட் பேங்க் என்று சொல்லப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளை இணைத்துத்தான், சுதந்திர பாலஸ்தீனை உருவாக்க வேண்டும் என்று இன்றுவரை பேசிவருகிறார்கள்.

நமக்குப் புரியும் விதத்தில் சொல்லுவதென்றால், இந்தியா – பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது எப்படி மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று இரு வேறு துண்டுகளை இணைத்து ஒரே தேசத்தை உருவாக்கினார்களோ, அதுபோல.

Wednesday, July 22, 2015

-விலை வீழ்ந்தாலும் கண்ணைக் கசக்கத் தேவையில்லை....!



வெங்காய நடவு...
வெங்காய விலை அநியாயத்துக்கு விழுந்து போச்சி... ஏகப்பட்ட நஷ்டம்'' என்று சில வாரங்களுக்கு முன் கோவை பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அதுகுறித்து பசுமை விகடனிலும் கட்டுரை வெளியாகியிருந்தது.
'வெங்காயத்தை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகள் வேண்டும்... வெங்காய ஏற்றுமதி தடையை ரத்து செய்யவேண்டும்' என்றெல்லாம் அரசுக்கு கோரிக்கை விட்டார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள். இதுவரை அரசுத்தரப்பிலிருந்து உரிய பதில்கள் வந்தபாடில்லை... இதற்கு நடுவே, ''இயற்கை முறையில நாட்டு ரக வெங்காயத்தை விளைவிச்சா, விலை குறைஞ்சாலும் தாக்குப்பிடிக்கலாம்'' என்று ஆலோசனை சொல்கிறார்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதி வெங்காய விவசாயிகள் சிலர்.
அவர்களில் ஒருவர் காவேரிஅம்மாபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (93459-41301). சின்ன வெங்காய சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இவர், இதுதொடர்பான கருத்தரங்கங்களுக்குச் செல்வது, விவசாயிகளைச் சந்தித்து விவரங்களைப் பெறுவது, பல்கலைக்கழகத்தின் ஆலோசனைகளை அள்ளிக் கொள்வது என்று மிகவும் நுணுக்கமாகவே செயல்பட்டு வருபவர்.
''சரியான பட்டத்துல விதைச்சா வெகுமதியை அள்ளிக்கொடுக்கும் அற்புத பயிர்தான் (சின்ன) வெங்காயம். வைகாசி-ஆனியில ஒரு பட்டம், ஐப்பசி-கார்த்திகையில ஒரு பட்டம்னு வருசத்துக்கு ரெண்டு பட்டம். இந்தப்பகுதி விவசாயிங்க இந்த ரெண்டு பட்டத்துலதான் பெரும்பாலும் வெங்காயம் பயிர் செய்வாங்க. எங்க பகுதியில விளையற காய் நல்லா கெட்டியா இருக்கிறதால, ஆறு மாசம் வரைக்கும் பாதுகாத்து, நல்ல விலை வரும்போது வித்துக்கலாம். அதனால எங்களுக்கு வெங்காயம் லாபமாத்தான் இருக்கு. 
களையெடுத்தல்
நடவு செய்த 60 முதல் 80 நாளுக்குள்ள அறுவடை முடிஞ்சிரும். வெங்காயத்தை நேரடியாவோ... நாத்துவிட்டோ நடவு செய்யலாம். நேரடி நடவுல விளையற வெங்காயம் கெட்டியா இருக்கும். பட்டறை போட்டு சேமிச்சி வச்சா ரொம்ப நாளைக்குத் தாங்கும். நாத்து விட்டு நட்டா சேமிச்சி வைக்க முடியாது. காயவைச்சி உடனே வித்துறணும். ஆனா, நாத்து விடுறதுல காய் பெருசா வரும். வெளைச்சலும் கூடுதலா கிடைக்கும். அதுக்காகவே சில ஏரியாவுல அந்த முறையில பயிர் செய்றாங்க. ஆனா, விலை குறையும்போது தாக்குப்பிடிக்க முடியாம போயிடுது.
போன வைகாசி பட்டத்துல ரெண்டு ஏக்கருல கோ-4 ரக வெங்காயத்தை இயற்கை முறையில வெள்ளாமை பண்ணிணேன். பதினாறு டன் கிடைச்சுது. மனு (பத்து கிலோ) எம்பது ரூவாய் ரேட்டுக்கு 1 லட்சத்து 28 ஆயிரத்துக்கு வித்தேன். செலவு 33 ஆயிரம் போக 95 ஆயிரம் லாபம். ஊடுபயிரா பூசணி போட்டிருந்தேன். அது 120 நாள் பயிர். அதுல 9 டன் கிடைச்சுது. டன் ரெண்டாயிரம் ரூபாய்னு 18 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. செலவு மூவாயிரம் போக, 15 ஆயிரம் லாபம். மொத்தமா ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 1 லட்சத்தி 10 ஆயிரம் ரூபா கிடைச்சுது.
இந்தத் தடவையும் ரெண்டு ஏக்கருல வெங்காயம் நட்டிருக்கேன். வெங்காய விதையையும் உற்பத்தி பண்றேன். வெங்காயத்தை விதைக்காக வளர்த்தா 120 நாள் ஆகும். வெங்காயத் தாள்ல இருந்து வரும் தண்டுல பூ பிடிக்கும். அது காய்ஞ்சி, தண்டு மஞ்சள் நிறத்துக்கு வந்தப்புறம் கேப்பை கதிரை அறுக்குற மாதிரி பூவை மட்டும் அறுத்து, காயவெச்சி, குச்சியால அடிச்சி விதையை பிரிச்சி எடுக்கணும். விதைக்கு வளக்குறப்ப காய் கம்மியாத்தான் கிடைக்கும். காய் உருட்டும் இருக்காது. ஒரு ஏக்கர்ல ஒரு டன்னுக்கும் கம்மியான காயும், நூறு கிலோ விதையும் கிடைக்கும். போன வருசம் கிலோ ஆயிரம் ரூபாய்னு விதை வித்திச்சி. இந்தத் தடவை எண்ணூறு ரூபா வரைக்கும்தான் விலைபோகுது’’ என்று சொன்ன செல்வராஜ், சாகுபடி முறைகளை பட்டியல் போட்டார். 
-'வைகாசி பட்டம் என்றால் ஆனி மாதத்துக்குள் நடவு செய்யவேண்டும். ஐப்பசி பட்டம் என்றால் கார்த்திகை மாதத்துக்குள்ளாக நடவேண்டும். அப்போதுதான் மழையிலிருந்து தப்பிக்க முடியும். நல்ல விலையும் கிடைக்கும். பெரும்பாலும் கோ-3, கோ-4 ரக விதைகளைத்தான் விவசாயிகள் நடவு செய்கிறார்கள். இதை நேரடியாக நடலாம். ஏக்கருக்கு 600 கிலோ விதைக்காய் தேவைப்படும். ஒன்றரை அடி பார்களை அமைத்து, செடிக்குசெடி 3 விரல் அளவு இடைவெளி விட்டு நடவேண்டும். ஆரம்பத்திலேயே தொழு உரம் ஏக்கருக்கு ஒரு டன்னுக்கும் குறையாமல் போடுவது நல்லது.
நாற்று முறையில் நடுவதற்கு கோ-5 ரகம்தான் சிறந்தது. ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதும். நேரடியாக நடவு செய்யும்போது விதைக்காய்களுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். நாற்று முறை என்றால், ஆயிரம் ரூபாய் போதும். நாற்றங்காலில் 45 நாள் வளர்ந்த செடிகளை நடவு செய்யலாம். நடவு செய்த 5 முதல் 7 நாளுக்குள்ளாக முளை விடும். 15 முதல் 20 நாளில் ஒரு களையும், 30-ம் நாளில் ஒரு களையும், 45-ம் நாள் ஒரு களையும் எடுக்கவேண்டும். நுனிகருகல் நோய் தாக்குதல் இருந்தால், இரண்டு கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஊற வைத்து சாறு தயாரித்து தெளிக்கவேண்டும்.
30 மற்றும் 40-ம் நாளில் மண்புழு உரம், அசோஸ் பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா எல்லாவற்றையும் கலந்து கொடுத்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும். அதிகமாக நோய் தாக்காது. ரசாயனம் போட்டு விவசாயம் செய்வதை விட இயற்கை முறையில் செய்தால் செலவு குறைவு. 60 முதல் 70 நாட்களில் வெங்காயதாள் பழுப்பு நிறத்துக்கு வந்துவிடும். அந்த சமயத்தில் செடி தரையில் சாய ஆரம்பிக்கும். அதுதான் அறுவடைக்கான நேரம். வெங்காயதாளை மட்டும் லேசாக அறுத்துவிட்டு, வேரை அறுக்காமல் காய வைத்து சேமிக்கலாம். உடனடியாக விற்பனை செய்ய நினைத்தால், தாள் மற்றும் வேர் அனைத்தையும் நீக்கிவிடவேண்டும். 
வெங்காய சேமிப்பு பட்டறை
ஒட்டன்சத்திரம் பகுதியில் நாட்டுரகம்தான் பயிரிடப் படுகிறது. கோவை வேளாண்மை பல்கலைக் கழகம்தான் அவற்றை எங்களுக்குக் கொடுக்கிறது. அவற்றில் கோ-3, கோ-4 ஆகிய ரகங்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதிக நாள் தாங்கும் தன்மை இந்த ரகங்களுக்கு இருப்பதால், ஏற்றுமதிக்கும் ஏற்றதாக உள்ளன. கோ-5 ரகம் விதை எடுப்பதற்காக பயிர்செய்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் பல்லடம், குண்டடம் பகுதியில் வெங்காயம் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. இங்கெல்லாம் முன்பு நாட்டு ரகங்களைத்தான் அதிகம் விளைவித்து வந்தார்கள். ஆனால், வீரிய விதைகள் வந்த பிறகு அதற்கு பரவலாக மாறிவிட்டார்கள். வீரிய ரகங்கள் அதிக விளைச்சலைக் கொடுத்தாலும் சாகுபடி செலவும் அதிகம்தான். அதாவது, ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கிறது. சேமிப்புத் திறன் இல்லாததால் வைத்திருந்தும் விற்க முடியாமல் கிடைக்கும் விலைக்கு விற்கிறார்கள். இதே நாட்டு ரகங்களுக்கு மாறினால் நிச்சயம் அவர்களுக்கு பாதிப்பு இருக்காது' என்று தன் அனுபவத்திலிருந்து எடுத்துச் சொன்னார் செல்வராஜ்.

Wednesday, July 8, 2015

நோ டென்ஷன்!



'இந்த விஷயத்தை எப்படிச் சமாளிக்கப்போறேன்னு தெரியலையே?’ என்கிற நினைப்புதான் மன அழுத்தத்தின் ஆரம்பம். ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்னைகள் வந்து சுமையாக இறங்கும்போது, 'ஸ்ட்ரெஸ்’ என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி, தொடர்ந்து மன அழுத்தம் நேரும்போது, உடல் சார்ந்த பல்வேறு நோய்கள் நம்மை வாட்டி எடுக்கத் தொடங்கிவிடும்.
 வேலைக்காக... குடும்பத்தையோ, குடும்பத்துக்காக... வேலையையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக்கொள்பவர்களே இன்று அதிகம். இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளிடம்கூட மன அழுத்தம் புகுந்துவிட்டது என்பதுதான் வேதனை.
மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்கத் தெரிந்துகொண்டால், ஆரோக்கியமாக வாழ முடியும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பம் இயற்கையாகவே வந்துவிடாது. அவற்றை நாம் கற்று நம் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப அமைத்துக்கொண்டால் மன அழுத்தத்தை வெல்லலாம்.
'வா‌ய்‌ ‌வி‌ட்டுச் ‌சி‌ரி‌த்தா‌ல், நோ‌ய் ‌வி‌ட்டு‌ப் போகும்’ எ‌ன்ற பழமொ‌ழி, மன அழு‌த்த‌த்‌துக்கு மிகச் சரியாகப் பொரு‌ந்து‌ம். மன அழுத்தம் என்றால் என்ன? அது ஏற்படுத்தும் பாதிப்புகள்,  அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றி மனநல மருத்துவர்கள் பி.ஆர்.ராஜேஷ் குமார், ஆவுடையப்பன், பொது மருத்துவர் நாகராஜன் ஆகியோர் இங்கே  பகிர்ந்துகொள்கின்றனர்.
  இனி, எல்லாம் சுகமே! வாழ்த்துக்கள்!
மன அழுத்தம்:
தாவது ஒரு காரணம், உங்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையோ உங்களின்  திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும்போது, உணரப்படும் விரும்பத்தகாத உணர்வை, 'மன அழுத்தம்’ (ஸ்ட்ரெஸ்) என்று கூறலாம். இது கோபம், பயம், இயலாமை, கவலை, வெறுப்பு, அமைதியின்மை, கவனமின்மை என எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
ஆபத்து ஏற்படும்போது நம் உடம்பு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியாகவும் மன அழுத்தம் இருக்கிறது.
நமக்கு ஆபத்து நேரப்போகிறது என்று நாம் உணரும்போது (அது உண்மையாகவோ அல்லது நம்முடைய கற்பனையாகவோ இருக்கலாம்) அதை எதிர்கொள்ள, நம் உடலே சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அந்தப் பிரச்னையை எதிர்த்துப் போராடுவதற்கும் தப்பிப்பதற்கும் நம்மைத் தயார்படுத்தும்.
மன அழுத்தம் ஏற்படும்போது நம் நரம்பு மண்டலம், அட்ரினல் மற்றும் கார்டிசோல்  ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. ரத்தத்தில் கலக்கும் இந்த ஹார்மோன்கள், உடல் முழுவதும் பாய்ந்து அவசரநிலையை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்துகிறது. இதனால், இதயம் வேகமாகத் துடிக்கும். தசைகள் கடினம் அடையும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுவாசம் வேகமாகும். நம் அனைத்துப் புலன்களும் பிரச்னையைக் கூர்ந்து கவனிக்கும். இந்த உடல்ரீதியான மாற்றம், நம்முடைய பலத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும். எதிர்வினை புரியும் நேரத்தை விரைவுபடுத்தும். பிரச்னையை நாம் எதிர்க்கவும்  தப்பிக்கவும்  இவை உதவுகின்றன.
இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை உடலின் சமநிலையைப் பாதிக்கும்போது, அதுவே அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது. மன அழுத்தத்தின்போது இதயம் வேகமாகச் செயல்படத் தூண்டப்படுகிறது. இந்தக் கூடுதல் சுமை, இதயத்தில் பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது.
மன அழுத்தத்தின் காரணங்கள்:
சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.
மன அழுத்தம்- மன விரக்தி, மாற்றம், முரண்பாடுகள், நிர்பந்தம் ஆகியவற்றால் ஏற்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மனவிரக்தி:
ர் இலக்கை அடைய, பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடியும்போது, 'மனவிரக்தி’ ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் யதார்த்தம் இல்லாத இலக்குகளையும், எதிர்பார்ப்புகளையும், ஒப்பீடுகளையும் மனதில் வைத்து விரக்தியடைகிறோம். உதாரணத்துக்கு, சுமாராகப் படிக்கக்கூடிய ஒரு மாணவனை, அவனது பெற்றோர், அதிகப் பணம் செலவழித்து பிரபலமான ஒரு பள்ளியில் சேர்க்கின்றனர். மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் அவன் முதலாவதாக வருவான் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தால், விரக்திதான் மிஞ்சும். அதேபோல சிலர், ஒரே நாளில் பல வேலைகளைச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள். வரிசையாக, பல பணிகளைச் செய்ய கால நிர்ணயம் செய்வார்கள். ஆனால், பணிகளைக் குறித்த நேரத்தில் செயல்படுத்தமுடியாமல் விரக்தி அடைவார்கள்.
மாற்றம்:
மைதியான நதியில் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் படகைப்போன்றது நம் வாழ்க்கை. இதில், திடீரென ஏற்படும் மாற்றங்கள் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றன. சில சமயங்களில் இந்த மாற்றங்கள், நம் பொறுமைக்கும், சிக்கலைச் சமாளிக்கும் திறமைக்கும் சவாலாக இருக்கும். இந்தத் திடீர் மாற்றம்- திருமணம், பதவி உயர்வு, மகப்பேறு, பண வரவு போன்ற சந்தோஷமான நிகழ்வாகவோ... குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம், விபத்து, தொழில் நஷ்டம், வேலை இழப்பு போன்ற துயரமான நிகழ்வாகவோ இருக்கலாம்.
முரண்பாடுகள்:
ன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் முரண்பாடுகள் கணக்கில் அடங்காதவை. காலையில் எழுந்தது முதல், இரவு உறங்கச் செல்வது வரை முரண்பாடுகளுடனேயே போராட வேண்டியுள்ளது. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட ஆசைகள், விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படும்போது, அங்கு முரண்பாடு ஏற்படும். உதாரணத்துக்கு, காலையில் எழுந்திருக்க வேண்டிய கட்டாயமும் கண்ணைக் கட்டும் ஆனந்தத் தூக்கமும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும்போது எதைச் செய்வது என முடிவெடுக்க முடியாமல் முரண்பாட்டுக்கு ஆளாகிறோம்.
நிர்பந்தம்:
 ன அழுத்தத்துக்கான அடுத்த காரணம், நிர்பந்தம். உலகில் எல்லோரும் ஏதாவது ஒரு நிர்பந்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.  நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் நேரும். நமக்குத் தேவையே இல்லாமல் சமூக அந்தஸ்துக்காக ஆடம்பர வீடு கட்டுகிறோம், கார் வைத்துக்கொள்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையால், மன உளைச்சலுக்கு ஆளாவோம். இதேபோல சமூக அந்தஸ்து, பதவி இவற்றால் நம்மால் சுதந்திரமாகவும், மனதுக்குப் பிடித்தவாறு வாழவும் பலரால் முடிவது இல்லை.
மன அழுத்தம் ஏற்படுத்தும் உடல்ரீதியான பாதிப்புகள்:
''மன அழுத்தம் ஏற்படும்போது அது உங்கள் நரம்பு மண்டலம், மூளை, இதயம், ரத்த ஓட்டம், சிறுநீரகம், இனப்பெருக்க மண்டலம் என பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கிறது.''
சுவாச மண்டலம்
ன அழுத்தம் அதிகரிக்கும்போது மூச்சை அதிக அளவில் உள் இழுத்து வெளியேவிடச் செய்யும். இது சிலருக்கு படபடப்பு, மாரடைப்பை ஏற்படுத்தலாம்.
இதயச் செயல்பாடு
திடீரென ஏற்படும் மன அழுத்தமானது இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதிக அளவில் ரத்தம் பம்ப் செய்யப்படும்போது ரத்தக் குழாய்கள், இதய தசைகள் அதிக அளவில் வேலை செய்கின்றன. தொடர்ந்து இப்படி நடக்கும்போது, ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படும், மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
செரிமான மண்டலம்
ன அழுத்தம் அதிகரிக்கும்போது, அதிக அளவிலோ குறைவாகவோ சாப்பிடத் தோன்றும். மேலும், மது, புகைப்பழக்கம் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். இரைப்பையின் செரிமானம்  பாதிக்கப்படும். இதனால் ஊட்டச்சத்து தரும் பலனும் பாதிக்கப்படும்.
இனப்பெருக்க மண்டலம்
ன அழுத்தத்தின்போது அதிக அளவில் சுரக்கப்படும் கார்டிசோல் மற்றும் அட்ரினல் ஹார்மோன்கள் இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணிகளைப் பாதிக்கின்றன. நீண்ட நாள் மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கு டெஸ்டோடிரான் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம். பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி, சரியான கால இடைவெளியில் மாதவிலக்கு வராமை போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.  உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் மன அழுத்தம் குறைக்கும். இதனால் கணவன் - மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் தோன்றும்.
இனி இல்லை மன அழுத்தம்:
உளவியல்ரீதியான முரண்பாடுகளில் மூன்று வகை உள்ளன
1பிடித்த இரண்டு விஷயங்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பது. மாணவன் ஒருவருக்கு மருத்துவம், பொறியியல் என இரண்டும் கிடைக்கும்போது, எதைத் தேர்வுசெய்வது என்பதில் முரண்பாடு இருக்கும். இரண்டுமே பிடித்திருக்கிறது. ஆனால், ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றபோது மன அழுத்தம் வரும்.
2பிடிக்காத இரண்டு விஷயங்களில் கண்டிப்பாக ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது முரண்பாடு உருவாகும். உதாரணத்துக்கு, ஒருவருக்கு வயிற்றுவலி வந்து, 'அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்’ என்று டாக்டர் கூறும்போது முரண்பாடு தோன்றும். ஏனெனில், அவருக்கு வயிற்றுவலியையும் சகித்துக்கொள்ள முடியாது; அதற்குச் செய்யப்பட உள்ள அறுவைசிகிச்சையையும் ஏற்க மனம் வராது. ஆனால், இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மன அழுத்தம் வரும்.
3ஒரு விஷயத்தில் சாதக பாதக அம்சங்கள் இரண்டுமே இருக்கும்போது அதைச் செய்வதில் முரண்பாடு ஏற்படும். உதாரணத்துக்கு, தனது ஒரே மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக, தொலைதூரத்தில் உள்ள ஒரு சிறந்த கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைக்கலாம் என்று எண்ணுகிற நேரத்தில், மகனைப் பிரிய வேண்டுமே என்ற வருத்தம் வாட்டி எடுக்கும். மகனின் எதிர்காலமா அல்லது மகனின் பிரிவா என்பதில் முடிவெடுக்க முடியாமல் முரண்பாடு ஏற்படும்.
இந்த மூன்று வகைகளும் மன அழுத்தத்துக்கு வழிவகுப்பவை.
மனஅழுத்தம்கெட்டதா?
பொதுவாக மன அழுத்தம் உள்ளவர் என்றால் எப்போதும் எதிர்மறையான சிந்தனை கொண்டவர், எந்த ஒரு வேலையை முடிக்கவும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்பவர், சிடுமூஞ்சி என்பதுபோன்ற எண்ணம் இருக்கும். அதனால் மன அழுத்தம் என்றாலே தவறானது என்ற கருத்து உள்ளது. இதுவே தவறு. சிலருக்கு மேல்படிப்பு படிக்க வேண்டும், பதவி உயர்வு பெற வேண்டும், திருமணம் நிகழ்ச்சி, சொந்த வீடு வாங்க விரும்புவது போன்ற நல்ல நோக்கத்துக்காகவும் மன அழுத்தம் ஏற்படலாம்.
மன அழுத்தத்தின் வகைகள்:
ற்காலிகமானது, நீண்ட காலம் இருப்பது என மன அழுத்தத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.
வேலைக்கு நேர்முகத் தேர்வு செல்லும்போது, பரீட்சை எழுதச் செல்லும்போது என எப்போது வேண்டுமானாலும் மன அழுத்தம் ஏற்படலாம். இவை எல்லாம் தற்காலிகமானவை. இதனால் பெரிய அளவில் பிரச்னை இருக்காது.
நீண்ட காலம் மன அழுத்தம் இருப்பதை, தனிப்பட்ட பிரச்னை, சமூகம் அல்லது சுற்றுப்புறச்சூழல் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
தனிப்பட்ட பிரச்னை:
தய நோய், சர்க்கரை நோய் போன்ற உடல் நலப் பிரச்னைகள்.
அவமரியாதை, செய்த தவறை நினைத்து வருந்துவது போன்ற உணர்வுபூர்வமான பிரச்னை, நண்பர்கள் இல்லாதது, பிரச்னை என்று வரும்போது உதவுவதற்கு யாரும் இல்லாதது, உறவு ரீதியான பிரச்னை, பெற்றோர், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், நண்பர்களின் திடீர் மரணம், வாழ்க்கைமுறை மாற்றங்கள், பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்காததால், பெற்றோருக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் போன்றவை. இவை நீண்ட காலம் இருக்கக்கூடியவை.
சமூகப் பிரச்னை:
பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் பார்க்கும் வேலைதான், மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. தவிர அரசியல், மதம், சாதி போன்ற தனிப்பட்ட வாழ்க்கை முறை தொடர்பான நம்பிக்கைகள், வாக்குவாதங்கள் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்:
ம் எண்ணத்தில் ஏற்படும் மாற்றங்கள், உணர்வில் ஏற்படும் மாற்றங்கள், உடல் ரீதியான மாற்றங்கள், நடத்தை மாற்றங்கள் என மன அழுத்தத்தின் அறிகுறிகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. எண்ணத்தில் ஏற்படும் மாற்றங்கள்
நினைவாற்றல் பிரச்னை, கவனச் சிதறல், தவறாக மதிப்பிடுதல், எதையும் எதிர்மறையாகப் பார்ப்பது, கவலை.
2.  உணர்வில் ஏற்படும் மாற்றங்கள்
சோகமான மனநிலை, எரிச்சல், முன்கோபம், எதிர்ப்பு, அமைதியாக முடியாத நிலை, தனித்திருக்கும் உணர்வு, மகிழ்ச்சியற்ற மனநிலை.
3. உடல் ரீதியான மாற்றங்கள்
லி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், நெஞ்சு வலி, அதிவேக இதயத்துடிப்பு, பாலியல் உணர்வு இன்மை.
4. நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள்
திகம் சாப்பிடுதல், சாப்பிட விருப்பமின்மை,  தூக்கம் அல்லது தூக்கமின்மை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டு இருத்தல், பொறுப்புகளைத் தட்டிக்கழித்தல், மது, சிகரெட்  போதைப்பொருட்கள் பயன்படுத்துதல், எப்போதும் 'உதறல்’ மனப்பான்மை.
மன அழுத்தம் ஏற்படும்போது என்ன நடக்கிறது?
த்த அழுத்தம் அதிகரித்து, மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். செரிமான மண்டலத்தின் பணிகள் குறையும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் குறையும். தசைகளில் அழுத்தம் ஏற்படும். தூக்கம் தடைபடும்.
மன அழுத்தம் ஏற்படும்போது செய்யும் தவறான விஜயங்கள்:
ன அழுத்தத்தை எதிர்கொள்கிறேன் பேர்வழி என்று நாம் செய்யும் காரியங்கள் உடல் நலத்துக்கே வேட்டு வைத்துவிடும்.  மன அழுத்தத்தைச் சமாளிக்க பலர் செய்யும் காரியங்கள், எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடக் கூடியவை.
பொதுவாக மன அழுத்தம் ஏற்படும்போது எல்லோரும் செய்யக்கூடியவை:
சிகரெட் புகைப்பது, அதிக அளவில் மது அருந்துவது, அதிக அளவில் சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது
நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் உடனான உறவைத் துண்டிப்பது, தூக்கம் வேண்டி மருந்து மாத்திரை, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது,
அதிக அளவில் தூங்குவது, மற்றவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவது,  வன்முறைச் செயல்களில் இறங்குவது.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள் 1
தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்ப்போம்
ல்லா மன அழுத்தங்களையும் தவிர்க்க முடியாது. அதேபோல எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் இருப்பதும் நல்லது அல்ல. இருப்பினும் மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய சில விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
'நோ’ சொல்லிப் பழகுங்கள்
ற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக, அனைத்தையும் செய்யவேண்டியது இல்லை. உங்களின் திறன், வரையறை எவ்வளவு என்பதை முதலில் தெரிந்துகொண்டு அதில் உறுதியாக இருங்கள். பொதுவாழ்வோ, தனிப்பட்ட வாழ்வோ எதுவாக இருந்தாலும் உங்களால் முடியாத விஷயங்களில் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். இதனால், குறிப்பிட்ட காலத்தில், வாக்களித்த விஷயத்தைச் செய்ய முடியாமல் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும். கூடுதல் பொறுப்பு சுமத்தப்படும்போது, உங்கள் திறன் மற்றும் எல்லையை உணர்ந்து நாசூக்காக அதைத் தவிர்த்துவிடுங்கள்.
உங்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் நபர்களைத் தவிர்த்திடுங்கள்.
தொடர்ந்து குறிப்பிட்ட நபரால், உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால், முடிந்தவரை அவரைத் தவிர்த்துவிடுங்கள். அவர் உங்கள் குடும்பத்தில் ஒருவர், உயர் அதிகாரி எனவே அவர்களைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில், அவர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
சுற்றுப்புறச்சூழலை உங்கள் வசப்படுத்துங்கள்.
போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினால், அலுவலகத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகச் சென்றுவிடுங்கள். அல்லது போக்குவரத்து நெரிசல் குறைந்த சாலையைப் பயன்படுத்துங்கள். இரவு செய்தி கேட்கும்போது பதற்றம் ஏற்படுகிறது என்றால், டி.வி.யை அணைத்துவிடுங்கள். இதுபோன்று சுற்றுப்புறச்சூழ்நிலையை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும்போது, மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.
செய்யக்கூடியது, செய்யக் கூடாதவை பற்றிய அட்டவணை தயார்செய்யுங்கள்
ங்களின் தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகள், பொறுப்புகள், செய்யவேண்டிய வேலைகள் பற்றிய அட்டவணையை முன்கூட்டியே தயார் செய்துகொள்ளுங்கள். இதில் அதிகப்படியான நடவடிக்கைகள் இருந்தால் அதில், 'எது மிகவும் அவசியமானது’, 'எது செய்யவில்லை என்றாலும் பிரச்னை இல்லை’ என்பதைக் கண்டறியுங்கள். தேவையற்றது என்று நீங்கள் நினைப்பவற்றுக்கு அட்டவணையில் கடைசி இடம் கொடுங்கள், அல்லது அவற்றை நீக்கிவிடுங்கள்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள் 2
உங்கள் நிலைமையை மாற்றுங்கள்
ன அழுத்தம் ஏற்படும்போது நிகழ்பவற்றைத் தவிர்க்க முடியாது, ஆனால் அவற்றை மாற்றியமைக்க முயற்சிக்கலாம். மன அழுத்த நேரங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பட்டியலிட்டு, அவற்றை எப்படி மாற்றியமைக்கலாம் என்பதைப்பற்றிப் பார்க்கலாம்.
மன அழுத்தத்தை அடக்கிவைக்காமல், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
ங்கள் மீது அக்கறைகொண்டவர்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் பற்றி வெளிப்படையாகவும் அதேநேரத்தில் மரியாதையான முறையிலும் வெளிப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை வெளியில் கொட்டாவிடில், மனதை அது அழுத்திக்கொண்டே இருக்கும். இதனால், எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது நிம்மதி பிறக்கும்.
சமரசத்துக்குத் தயாராக இருங்கள்
ருவரிடம், 'உங்கள் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று கூறுகிறோம் என்றால், அதேபோல நம்மை மாற்றிக்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இருவரும் சிறிதளவாவது வளைந்துகொடுத்துச்செல்லத் தயாராக இருந்தீர்கள் என்றால், மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான மனநிலையைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
உறுதியாக இருங்கள்
பிரச்னையை தைரியமாக எதிர்கொண்டு, அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் காணுங்கள். தேர்வுக்குத் தயாராகிவருகிறோம்... அந்த நேரத்தில் முக்கிய உறவினர், நெருங்கிய நண்பர் வருகிறார் என்றால், அவர்களிடம், ''ஐந்து நிமிடங்கள்தான் என்னால் பேச முடியும்'' என்று தைரியமாகச் சொல்லுங்கள்.
சிறப்பான நேர மேலாண்மை
மிக மோசமான நேர மேலாண்மைதான் அதிக அளவிலான மன அழுத்தத்துக்குக் காரணமாகிறது. குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை அந்த நேரத்தைத் தாண்டியும் செய்ய முடியவில்லை என்றால், மன அழுத்தம் அதிகரிக்கத்தான் செய்யும். எனவே, முன்கூட்டியே திட்டமிட்டு வேலை செய்யுங்கள். வேலையை இழுத்தடிக்காதீர்கள். இதனால் மன அழுத்தம் உங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள் 3
 மன அழுத்தத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஏற்றபடி மாறிவிடுங்கள்.
ங்களால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விஷங்களை மாற்றியமைக்க முடியவில்லை என்றால், அதற்கு ஏற்றபடி உங்களை மாற்றிக்கொள்வதும் அதையே நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதும் ஒரு வழிதான்.
பிரச்னைகளை மாற்றியமையுங்கள்.
ன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை நேர்மறையான கண்ணோட்டத்துக்கு மாற்றிவிடுங்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல், ஒலிபெருக்கிச் சத்தம் இவற்றை நினைத்து எரிச்சல்படாமல், அந்த நேரத்தில் மனதுக்குப் பிடித்த பாடல் கேட்பது, போன்று சூழ்நிலையை  மாற்றிக்கொள்ளுங்கள்.
எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்.
நீண்ட காலக் கண்ணோட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மன அழுத்தம் எந்த அளவுக்கு முக்கியமானது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இந்தப் பிரச்னை ஒரு மாதத்தில் சரியாகக்கூடியதா? ஒரு வருடத்தில் சரியாகக் கூடியதா? இதுபற்றிக் கவலைப்படுவது உண்மையில் நியாயமானதுதானா என்று உங்களை நீங்களே கேளுங்கள். பதில் இல்லை என்று வருமேயானால், உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை வேறு நல்ல விஷயத்துக்குச் செலவிடுங்கள்.
தர நிர்ணயத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. இது தவிர்க்கக்கூடிய மன அழுத்தமாகும். உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ ஏதேனும் ஓர் அளவுகோலை நிர்ணயித்துவிட்டு, அதை அப்படியே எதிர்பார்க்காதீர்கள். ஓரளவுக்கு நியாயமான தர அளவுகளை நிர்ணயுங்கள். 'இதுவே போதுமானது’ என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்  4
உங்களால் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ன அழுத்தத்துக்கான சில காரணிகளைத் தவிர்க்க முடியாது. நமக்கு நெருக்கமானவர்களின் மரணம், மிக மோசமான நோய்கள், நாடு தழுவிய அளவிலான பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றை நம்மால் தடுக்க, தவிர்க்க முடியாது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில், இந்த விஷயங்களை ஏற்றுக்கொள்வதுதான் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க ஒரே வழி. இது மிகவும் கடினமான விஷயம்தான். ஆனால், நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் நம்மால் மாற்ற முடியாத ஒரு விஷயத்தை நினைத்து வருந்திக்கொண்டிருப்பதைவிட, அதை ஏற்றுக்கொள்வது மிகவும் எளிதானது.
 
கட்டுப்படுத்த முடியாதவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள்
ம் வாழ்வில் பல்வேறு விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை மீறியது. குறிப்பாக மற்றவர்களின் நடவடிக்கைகள்.
மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
ல்ல நம்பிக்கைக்குரிய நண்பர், மனநல மருத்துவரிடம் சென்று உங்கள் பிரச்னைகள் பற்றி மனம்விட்டுப் பேசுங்கள். இதனால் மன அழுத்தச் சூழ்நிலையை மாற்றியமைக்க முடியாவிட்டாலும், மனதில் உள்ள சுமை குறையும்.
மன்னிக்கப் பழகுங்கள்
குற்றம் குறைகள் நிறைந்த உலகில், தவறுகள் செய்யும் மக்கள் மத்தியில்தான் நாம் வாழ்கிறோம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். தவறு செய்கிறார்கள் என்றாலும் அவர்களை மன்னித்து உங்கள் வழியில் நடைபோடுங்கள். இது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்  5
கேளிக்கை மற்றும் ஓய்வுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்
ன்னதான் மன அழுத்தம் இருந்தாலும் ஓய்வு மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடும்போது அவை மறைந்துவிடும். அன்றாட வாழ்வில் கேளிக்கை மற்றும் ஓய்வுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குபவர்களுக்கு, வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்.
செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள்
ன்பை அள்ளித்தந்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவை செல்லப்பிராணிகள். அதனுடன் பழகுவது உங்கள் உடல் மற்றும் மன நலத்துக்கும் ஆரோக்கியம் அளிக்கும். நாய்  பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் ஒரு நிமிடம் நேரத்தைச் செலவிடுவதும்கூட செரடோனின், ப்ரோலாக்டின் மற்றும் ஆக்சிடோசின் போன்ற நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச்செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஹார்மோன்கள் மன அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன்களைத் தாக்கி அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. மனப்பதற்றம் குறைகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பாடு மேம்படுகிறது.
உங்களை மகிழ்விக்கும் விஜயங்களுக்குச் சிறிது நேரத்தைச் செலவிடுங்கள்
மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, இசைக்கருவியை வாசிப்பது போன்ற உங்களுக்கு அமைதி மற்றும் ஆசுவாசம் அளிக்கும் விஷயங்களுக்கு நேரத்தைச் செலவிடுங்கள். எப்போதும் நகைச்சுவை உணர்வோடு இருங்கள். மனம்விட்டுச் சிரிப்பது பல்வேறு வகைகளில் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்  6
ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறுங்கள்
ன அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் உங்கள் உடல் நலத்தை மேம்படுத்திக்கொள்வது, மனஅழுத்தம் இன்றி வாழ வழிவகுக்கும்.
உடற்பயிற்சி செய்யுங்கள்
ன அழுத்தத்தில் இருந்து காக்கும் முக்கியப் பணியை உடற்பயிற்சி செய்கிறது. எனவே, தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள். நேரமில்லையெனில், வாரத்துக்கு மூன்று முறையாவது செய்யலாம். குழுவாக இணைந்து செய்யக்கூடிய ஏரோபிக்ஸ் நடனம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். அது மன அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும்.
யோகா, தியானம் பழகுங்கள்:
தினமும் கண்களை மூடி 15 முதல் 30 நிமிடங்களுக்கு மூச்சை ஆழமாக இழுத்துவிட்டபடி தியானம் செய்யுங்கள். அது மனதை அமைதிப்படுத்தும். இதேபோன்று உடலை ஓய்வுபெறச் செய்யும் பல்வேறு யோகப் பயிற்சிகளை, பயிற்சியாளரிடம் முறையாகக் கற்றுக்கொண்டு, மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.
ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுங்கள்
ங்கள் உடலுக்கு எது ஆரோக்கியமானதோ அந்த உணவைத் தேர்ந்தெடுங்கள்.  சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலில் போதுமான அளவு ஆற்றல் இருக்க அவசியம்.
வீட்டு வேலைகளில் ஆர்வம் காட்டுங்கள்
ன அழுத்தம் ஏற்படும் நேரத்தில் வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். அது தினசரி செய்யும் வேலையாக இருந்தாலும்கூட, அவற்றை வித்தியாசமான முறையில் செய்யுங்கள். மனதை மயக்கும் இசையைக் கேட்டபடி வேலை செய்யுங்கள். இதனால் கலோரிகள் எரிக்கப்படுவதுடன், வேலை முடிவில் மன அழுத்தமும் ஓட்டம் பிடித்திருக்கும்.
பழச்சாறு வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சுப் பழச்சாறு பருகுவது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் சி, மன அழுத்தத்துக்குக் காரணமான கார்டிசோல் ஹார்மோனைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரஞ்சு, திராட்சை, ஸ்டிராபெர்ரி போன்ற வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கும் பலம் சேர்க்கும்.
மது, சிகரெட் மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்த்திடுங்கள்
ன அழுத்தம் அதிகரிக்கும்போது பலரும் நாடுவது மது மற்றும் சிகரெட்டைத்தான். இது மன அழுத்தத்தில் இருந்து எளிதில் விடுவிப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் இது தற்காலிகமானது. தவிர வேறு பல பிரச்னைகளுக்கும் அது வழிவகுத்துவிடும். முகமூடி அணிந்துகொண்டால் பிரச்னை மறைந்துவிடாது. எனவே, தெளிவான மனநிலையுடன் பிரச்னையை எதிர்கொள்ளுங்கள். பிரச்னை முற்றிலும் விலகும்.
போதுமான தூக்கம்
ரு நாளைக்குக் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தினமும் குறித்த நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள். சரியான தூக்கம் இல்லை என்றால் சோர்வு, அசதி ஏற்பட்டு அன்றைய தினம் முழுவதும் எரிச்சலுடனே இருக்கும்.

Monday, July 6, 2015

மகேந்திர சிங் டோனி


மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர்
இளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் ! கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டதால் தோனியை கீப்பிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம்.
இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டு இருந்தார் .டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும். இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக குறிப்பார்.
அப்பா உடற்பயிற்சி வகுப்புகளுக்கு போக சொன்னால் கடுக்காய் கொடுத்து விட்டு நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவார் . இப்பொழுதும் ஒரு லிட்டர் பாலை மில்க் ஷேக் அல்லது சாக்லேட் சுவையில் குழந்தை போல விரும்பி சாப்பிடுவார்
இளம் வயதில் பீகார் அணியில் ஆடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது பல போட்டிகளில் ஒற்றை ஆளாக டோனி சதம் அடிக்க அணி தோற்றுக்கொண்டு இருந்தது.அதனால் பெரும்பாலும் தோனியால் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை.அந்த தருணத்தில் இந்திய அளவில் இளம் திறமைகளை கண்டறியும் வேலையை பி.சி.சி.ஐ செய்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு தோனி இந்தியா ஏ அணிக்காக ஆடி கென்யா ஜிம்பாப்வே அணிகளோடு சதம் அடித்தது அப்போதைய கேப்டன் கங்குலி கண்ணில் பட்டது திருப்புமுனை.வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார்.ரன் சேர்க்காமல் ரன் அவுட் ஆனார்.
எனினும் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகள் தந்தார் கங்குலி.பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் 148
அடித்து கவனம் பெற்றார்.இலங்கையுடன் ஆன போட்டியில் சேஸ் செய்கிற பொழுது 183 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்சம் என்கிற உலக சாதனையை செய்தார். அதற்கு பின் அயர்லாந்து தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆனார்.ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் தலைவர் ஆனார். அப்பொழுது அதிரடியான மற்றும் வித்தியாசமான முடிவுகளால் கோப்பையை பெற்றுத்தந்தார்.
வாழ்வின் உச்சபட்ச நிகழ்வு நடந்தது ஏப்ரல் இரண்டு 2011 அன்று. சச்சினின் இறுதி உலகக்கோப்பை என அனைவரும் சொன்ன இறுதிப்போட்டியில் அணி மூன்று விக்கெட் இழந்து திணறிக்கொண்டு இருந்த பொழுது அது வரை தொடரில் அரை சதம் கூட அடிக்காத டோனி களம் இறங்கி ஆடி தொண்ணுற்றி ஓரு ரன்கள் அடித்தார். அப்பொழுது சச்சின் நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் தலை சிறந்தவர் என புகழ்ந்தார்
உலகக்கோப்பை வென்றதும் தோனி சொன்ன ஒரு உண்மை சம்பவம். 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் பொழுது தோனி டிக்கெட் கலெக்டர் ஆக கரக்பூரில் வேலை பார்த்து வந்தார் ! அப்பொழுது அடிக்கடி ஸ்கோர் கேட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து 'ஆமா.. இவரு உலகக்கோப்பையை ஜெயிக்க போறாராம்" என நக்கலாக ஒரு பிரயாணி அடித்த கமென்ட் தான் மிக சாதாரணம் ஆன என்னை இவ்வளவு தூரம் உத்வேகப்படுதி உள்ளது என்பார் தோனி
லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும்;சச்சின் மற்றும் கில்க்றிஸ்ட் பிடித்த விளையாட்டு வீரர்கள். வீடியோ கேம் வெறியர். கவுன்ட்டர் ஸ்ட்ரைக் பிடித்த வீடியோ கேம். புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். ஹார்லி டேவிட்சன் பைக்குகள் எல்லாமும் அவரிடம் உண்டு .
ஆடுகளத்தில் கோபப்பட்டு தோனியை பார்க்க முடியாது. எவ்வளவு சிக்கலான நிலையிலும் தோனி அவ்வளவு அழகாக புன்னகைப்பார். இளம் வயதில் வீட்டில் வறுமையால் அம்மா உணவு தயாரிக்க நேரம் அதிகம் ஆகும்.அப்பொழுதில் இருந்து இந்த பொறுமை உடன் இருக்கிறது என சிம்பிளாக சொல்வார்
ஜார்கண்ட் அரசாங்கம் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க 'ஸ்கூல் செல்வோம் நாம்' என்கிற விளம்பரத்தில் தோனியை நடிக்கக் கூப்பிட்ட பொழுது ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்
தோனி உச்சபட்ச தன்னம்பிக்கைக்காரர். உலககோப்பையை வென்றதும் உங்கள் அடுத்த இலக்கு என்ன என கேட்டதும் ,”ஐ.பி.எல் சாம்பியன்ஸ் லீக் .,இரண்டு உலகக்கோப்பை ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை வெல்ல வேண்டும். முடியாதா என்ன ?”என்றார் .அது தான் தோனி.