Powered By Blogger

Saturday, August 20, 2016

ராஜீவ் படுகொலை: பதற வைக்கும் 10 மர்மங்கள்

ராஜீவ் கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மற்றும் தடயவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் வலியுறுத்தினர்.

ராஜீவ் காந்தி படுகொலையின் மர்மங்கள் குறித்து 'பைபாஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர் மருத்துவர்கள் ரமேஷ் மற்றும் புகழேந்தி ஆகியோர்.

ஆவணப்படம் பற்றி நம்மிடம் பேசிய கொளத்தூர் மணி, " பல புதிய ஆதாரங்களையும் புதிய செய்திகளையும் உலகுக்குச் சொல்கிறது இந்த ஆவணப்படம். இதுவரையில் ராஜீவ்காந்தி படுகொலையின் மர்மம் குறித்து வெளியான செய்திகளைவிட, இது முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. புலனாய்வு அதிகாரிகளின் விசாரணை குளறுபடிகள், ஏன் அவ்வாறு செய்தார்கள்? போலீஸாரின் கடுமையான, மிக மோசமான தவறுகள் என அனைத்தையும், விசாரணையின் ஆவணங்களில் இருந்தே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
ஒரு கொலை வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், குற்றவாளி என்று சொல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய முடியும். ஆவணப்படத்தில் காட்டப்படும் ஆதாரங்களைக் கொண்டே, இந்திய நீதித்துறையின் மரபை உடைக்கும் வகையில், புதிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் அதற்காகப் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரையும் சட்டப்பிரிவு 72 மற்றும் 161 வது பிரிவுகளின்படி விடுதலை செய்ய வேண்டும். 'பைபாஸ்' ஆவணப்படம் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் மிக முக்கியமான ஆவணம்" என்கிறார்.

ஆவணப்படம் சொல்லும் ஆதாரங்களை மறுத்துப் பேசிய சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமனும், தடயவியல் துறை பேராசிரியர் சந்திரசேகரும், " சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது ஹரிபாபுவின் உடல்தான். சிறுவயதில் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்திருந்தார். அவரது பெற்றோர்தான் உடலை அடையாளம் காட்டினார்கள். சம்பவ இடத்தில் ஹரிபாபு சடலமாக இருக்கும் படம் விகடனிலும் வெளியாகி இருந்தது"  என்கின்றனர்.

ஆனால், ஆவணப்படம் எழுப்பும் சந்தேகங்கள் அதிர வைக்கின்றன.

1. மே மாதம் 21-ம் தேதி இரவு 10.20 மணிக்கு, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நடந்தது. இரவு 10.35 மணிக்கெல்லாம், ' ராஜீவ்காந்தி இறந்துவிட்டார்' என்பதை உறுதி செய்துவிட்டார்கள். 22-ம் தேதி மதியம் 3 மணிக்கு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், ஒரு சடலத்திற்கு போஸ்ட்மார்ட்டம் நடத்தப்பட்டது. அந்த நிமிடம் வரையில் அந்த உடலுக்கு யாருமே உரிமை கொண்டாட வரவில்லை. 23- ம் தேதிதான் அது ஹரிபாபுவின் உடல் என அவரது தந்தை சுந்தரமணி உரிமை கொண்டாடினார். ஒருநாள் முழுவதும் அவர்கள் வராமல் இருந்தது ஏன்?

2. ஹரிபாபு என்று இவர்கள் சொல்லும் உடலில், 'முகம் முழுவதும் எரிந்து போய்விட்டது. அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போய்விட்டது' என்கிறார்கள். பிறகு எப்படி ஹரிபாபுதான் என உறுதியாக நம்பினார்கள்?

3. படுகொலை நிகழ்ந்த இடத்தில், ஹரிபாபு விழுந்து கிடக்கும் படம் விகடனில் வெளியானது. அந்தப் படத்தில் அவரது முகம் தெளிவாக இருக்கிறது. ஆனால், போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில், ' முகம் முற்றிலும் சிதைந்துபோய்விட்டது. அடையாளம் காணமுடியவில்லை' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை புலனாய்வு அதிகாரிகள் படித்துப் பார்க்கவில்லையா? மயக்க நிலையில் இருந்த அவருக்கு, சிகிச்சை அளித்து தப்ப வைத்துவிட்டு, முற்றிலும் சிதைந்த போன ஒரு முகத்தைக் காட்டி, 'இது ஹரிபாபுவின் உடல்' என மற்றவர்களை நம்ப வைத்திருக்கிறது போலீஸ் என்கிறது ஆவணப்படக் குழு.

4. ஹரிபாபு எனக் காட்டப்பட்ட உடலில் இருந்து தனியாக தலையை துண்டித்து எடுக்க என்ன காரணம்? சூப்பர் இம்போஷிசன் முறையில் அடையாளம் காண முடியும் என்பதால்தான் தலை துண்டிக்கப்பட்டது என அதிகாரிகள் சொல்கிறார்கள். இதை ஏற்றுக் கொண்டாலும், ஹரிபாபுவுக்கு அப்போது 22 வயதுதான். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் 30 வயது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், இறந்து கிடந்தது யார்?

5. ஹரிபாபுவின் அப்பா சுந்தரமணியிடம், சடலத்தைக் காட்டியபோது தலையில்லாத முண்டமாகத்தான் உடல் இருந்துள்ளது. அந்த சடலத்தின் உடலில் ப்ளு கலர் பேன்ட் போடப்பட்டிருந்தது. இது ஒன்றுதான் ஹரிபாபு எனக் கண்டறியக் காரணம் என்கிறார்கள். ஆனால், வீட்டில் இருந்து கிளம்பிய போது, கிரீம் கலர் சட்டை அணிந்திருந்தார். சடலத்தில் பச்சை நிறக் கலர் சட்டை இருந்தது. இந்தக் கேள்வியை ஹரிபாபுவின் அக்கா பதிவு செய்திருக்கிறார். இந்தக் குளறுபடி ஏன்?

6. அந்த சடலத்திற்கு ஏற்கெனவே, சுன்னத் செய்யப்பட்டிருக்கிறது என்றால், உடலுக்கு உரிமை கோருபவர்களிடம், ' உங்கள் பையனுக்கு சுன்னத் செய்தீர்களா?' என்ற அடிப்படைக் கேள்வியை போலீஸார் கேட்டிருக்க வேண்டும். அப்படி எங்குமே கேட்கவில்லை. ஆவணத்தின் எந்தப் பக்கத்திலும் சிறுவயதில் ஹரிபாபுவுக்கு சுன்னத் செய்யப்பட்டிருந்தது எனவும் பதிவாகவில்லை. சாதாரண ஒரு சடலத்தையே பல கேள்விகளுக்குப் பிறகுதான் உரியவர்களிடம்  ஒப்படைப்பார்கள். ஹரிபாபு சடலம் என்பது மிகப் பெரிய படுகொலைக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான சாட்சி. இந்த விஷயத்தில் போலீஸார் வேண்டுமென்றே தவறு செய்தார்களா?

7. ஆவணப்படத்தில் இருக்கும் இன்னொரு முக்கிய ஆதாரம். ஹரிபாபுவின் பக்கத்திலேயே ஜெயபாலன் என்பவர் போட்டோ எடுப்பதற்காக நின்றிருக்கிறார். இவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் ட்ரூப்பில் புகைப்படக்காரராக இருந்தவர். ' ஹரிபாபுவின் தோள்பட்டையை சப்போர்ட்டாக வைத்துக் கொண்டு படம் எடுத்தேன். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. விழித்தபோது வீட்டில் இருந்தேன். என் ட்ரூப்பில் இருந்தவர்கள் என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் சிகிச்சை அளித்திருக்கிறார்கள்' என அவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இவர் முகத்திலும் காயம் ஏற்பட்டிருந்தது. அவருடைய கேமராவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவரோடு ஹரிபாபுவும் சம்பவ இடத்தில் மயக்க நிலையில்தான் இருந்திருக்கிறார் என்கிறது ஆவணப்படக் குழு. இது உண்மையா?

8. சடலத்தை ஹரிபாபுவின் பெற்றோரிடம் கொடுத்த போலீஸார், ' உடலை புதைக்கத்தான் வேண்டும். எரிக்கக் கூடாது' என உறுதியாகக் கூறியதாகவும், 'அதையும் மீறி அவர்கள் எரித்துவிட்டதாக' இவ்வழக்கு தொடர்பான போலீஸின் ஆவணம் சொல்கிறது. போலீஸார் அவ்வாறு உறுதிபடக் கூறிய பின்பும், சடலம் எரியூட்டப்பட்டது ஏன்? புதைத்திருந்தால், எலும்பு சோதனையில் உண்மை வெளியாகும் என போலீஸார் விழிப்போடு செயல்பட்டார்கள் என்கிறார்கள். ராஜீவ்காந்தி நடந்து வரும்போது பூ போட்டவர்கள் வலதுபக்கம் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். இதில் இறந்து போன ஒரு முஸ்லிம் இளைஞரை ஹரிபாபு என போலீஸ் நம்ப வைத்துவிட்டது என்கிறார்கள். இது உண்மையா?

9. படுகொலை சம்பவத்தை புலனாய்வு செய்த அதிகாரிகள் கார்பெட்டின் கீழ், பூ மாலையில் வெடிகுண்டு, பூக்கூடையில் பாம், கடைசியாக மனித வெடிகுண்டு என நான்கு தியரிகளை முன்வைத்தார்கள். இதில், பூ போடுவதற்கான வேலையைச் செய்த சுலைமான் சேட்டிடம், ' நாங்கள் சொல்வதுபடி கேட்காவிட்டால் பூக்கூடையில் பாம் எனக் கதைகட்டிவிடுவோம்' என போலீஸார் மிரட்டியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இறந்துபோன இஸ்லாமியரின் உடலை 'கிளைம்'  செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. அதையே ஹரிபாபுவின் உடலாக சித்தரித்து வெளியுலகை நம்ப வைத்துவிட்டார்கள். ஓரளவு சிதைந்திருந்த அந்த முகத்தை, போலீஸாரே முற்றிலும் சிதைத்திருக்கலாம் என்கிறது ஆவணப்படக் குழு.

10. ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷனில் இரண்டு வீடியோக்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீடியோக்களில், ராஜீவ்காந்திக்கு மாலை போடும் நேரத்தில் மட்டும் கோளாறு செய்திருக்கிறார்கள். அதாவது அந்தக் காட்சியை மட்டும் அழித்திருக்கிறார்கள். இதுபற்றி நீதிமன்றம் கேட்டபோது, ' நாங்கள் வைத்திருந்தோம். மழை வந்து பூஞ்சை படிந்ததால் அந்தப் பகுதி அழிந்துவிட்டது' என காரணம் சொல்லியிருக்கிறார்கள். இந்த வழக்கில் ஆதாரங்களை அழிப்பதில் கூடுதல் அக்கறை காட்டியிருக்கிறது புலனாய்வுத்துறை என்கிறார்கள் ஆவணப்படத்தை இயக்கிய மருத்துவர்கள்.

 இணைய உலகில் 'பைபாஸ்' படத்தை  பதிவேற்றுகிறார்கள் ஆவணப்படக் குழுவினர்.  1991-ம் ஆண்டு இதேநாள் இரவில்தான் மனித வெடிகுண்டுக்கு பலியானார் ராஜீவ்காந்தி.


குற்றம் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டபோதிலும் இன்னமும் அந்தச் சம்பவம் குறித்துவரும் தகவல்கள் அதற்கான சூடு குறையாமல் இருக்கின்றன. குற்றம், விசாரணை, தண்டனை, மேல் முறையீடு என ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் ராஜிவ் கொலை குறித்து ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள், விஷயங்கள் எழுப்பும் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.
‘ராஜீவ் காந்தி கொலை- ஓர் உள்வேலையா?’
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊடகவியலாளர் பெரோஸ் அகமது எழுதிய, ‘ராஜீவ் காந்தி கொலை- ஓர் உள்வேலையா?’ என்கிற புத்தகத்தில், ராஜிவ் காந்தி கொலையால் புலிகளுக்கு எந்த ஓர் ஆதாயமும் இல்லை. அது, ஓர் அரசியல் ஒப்பந்தக் கொலை. சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையில், ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தை ராஜிவ் காந்தி ஆட்சிக்கு வந்தால் அழித்துவிடுவார்’ என்பதற்காகவே கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது முற்றிலும் பொய். ராஜிவ் மரணத்தால் ஆதாயம் பெற்றிருக்கக் கூடியவராக இருப்பவர்களால்தான் இந்தக் கொலை நடந்திருக்கும் என்று தெரிவித்திருந்த கருத்து, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


'தான் கொல்லப்படுவோம்' என்பதை அறிந்திருந்த ராஜிவ்!
இந்தநிலையில், சமீபத்தில் வெளியாகி இருக்கும், ‘ராஜிவ் காந்தியின் படுகொலை’ புத்தகத்தை எழுதிய நீனா கோபால் என்கிற பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கும் கருத்துகள் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நாளான மே 21, 1991 அன்று, அவரைப் பேட்டி எடுப்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் மைதானம் வரை அவருடனே பயணித்தவர் நீனா. ‘தான் கொல்லப்படுவோம் என்பது ராஜிவ் காந்திக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது’ என்கிற விஷயத்தைத் தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறார் நீனா. அந்த மைதானத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததையும் அழுத்தமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவரது புத்தகத்தில், ''நாங்கள் மைதானத்தை நெருங்கும் சமயத்தில் என்னுடைய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்த ராஜிவ், ‘இதைக் கவனித்தீர்களா? ஒவ்வொரு முறையும் தெற்காசிய நாடுகளில் இருந்து ஒரு தலைவர் உருவாகும்போதோ அல்லது தனது மக்களுக்காகவோ, தனது நாட்டுக்காகவோ ஏதாவது ஒன்றைச் சாதிக்கும்போது அவர் தாக்கப்படவோ, கொல்லப்படவோ செய்கிறார். உதாரணமாக இந்திரா காந்தி, ஷேக் முஜிப், பூட்டோ, ஜியா உல் ஹக், பண்டாரநாயக என இந்த எண்ணிக்கை தொடர்கிறது. இதில், நானும் சில தீயசக்திகளின் இலக்காக இருக்கலாம்’ என்று சொல்லி இருக்கிறார். இதைச் சொன்ன சில மணி நேரங்களிலேயே அவர் கொல்லப்பட்டிருக்கிறார்'’ என்பதைப் பதிவுசெய்ததோடு மற்றொரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.
மாத்தையா - புலிகள் அமைப்பில் இருந்த இந்திய உளவாளி!

அது புலிகளின் அடுத்தகட்ட தலைவராக விளங்கிய மாத்தையா இந்திய உளவு அமைப்போடு தொடர்புடையவர் என்று சொல்லி, அவரை கைதுசெய்து தூக்கிலிட்டது விடுதலைப்புலிகள் அமைப்பு. அது உண்மை என்பதையும் விளக்கி இருக்கிறார் நீனா. ‘'விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த மாத்தையா 1987-ம் ஆண்டில் அதன் இணைத் தலைவராக உயர்ந்தார். பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இருந்த நேரத்தில் அவருக்கு, இந்திய உளவு அமைப்பான ராவோடு தொடர்பு ஏற்பட்டது. அதன்படி, விடுதலைப்புலிகள் பற்றிய ரகசியத் தகவல்களை அந்த அமைப்போடு பரிமாறிக்கொண்டார்.
விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பின்பு, அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரனை அழித்து, தக்க சமயத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே மாத்தையாவுக்கு, ரா அமைப்பு  கொடுத்திருந்த முக்கியமான பணி. அதற்கான எல்லா ஆதரவையும் செய்தது. இந்தச் சமயத்தில், அமிர்தலிங்கம், மகேஸ்வரன் ஆகியோர் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அப்போது மாத்தையா மீது பொட்டு அம்மானுக்கு சந்தேகம் வந்ததால் அவரது தகவல் பரிமாற்றம் அனைத்தும் ஒட்டுக் கேட்கப்பட்டது.
அதில் அவருக்கும், இந்திய உளவு அமைப்புக்குமான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. தான் இரண்டாம்கட்ட தலைவராக இருந்த காலத்தில் இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு அதிகார வட்டத்தில் இருப்பவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தபோது மாத்தையாவுக்குள் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதன்பின்பு மாத்தையா கைது செய்யப்பட்டு 19 மாதங்களுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, கொடூரமான அளவு துன்புறுத்தப்பட்டார். அதன் பின்னரே தூக்கிலிடப்பட்டார். அதோடு, மாத்தையாவின் ஆதரவாளர்களாக இருந்த 257 பேரையும் கொன்று குவித்ததோடு மட்டுமில்லாமல், குழிதோண்டி தீயிட்டுத் தங்களது வழக்கமான பாணியில் விடுதலைப்புலிகள் கொலை செய்தார்கள்’’ என்று புத்தகத்தில் தெரிவித்துள்ளார் நீனா.
 உளவு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம்!
இதில் பேசி இருக்கும் முன்னாள் உளவு அதிகாரி ஒருவர், '’1987 முதல் 1990 காலகட்டத்தில் இலங்கையில் இந்திய ராணுவம் முகாமிட்டிருந்த சமயத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தினுள் அவர்கள் ஊடுருவினார்கள். இது முழுக்க நமது தவறுதான். நாம் பிரபாகரனைத் தவறாக மதிப்பிட்டுவிட்டோம். இந்த விஷயம் இவ்வளவு தவறாகப் போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. பிரபாகரன் மனவோட்டத்தை அறிந்திருந்தால் நாம் ராஜிவ் காந்தி மரணத்தைத் தடுத்திருக்க முடியும்’' என்று தெரிவித்திருக்கிறார். இப்படிப் பல சர்ச்சைக் கருத்துகளைத் தாங்கி வெளிவந்திருக்கிறது அந்தப் புத்தகம். இன்னும் எத்தனை விஷயங்கள் இதில் இருக்கிறதோ தெரியவில்லை?!
யார் இந்த நீனா?
37 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணிபுரிந்து வருபவர் நீனா கோபால். 1980-களில் ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிந்தவர். 1990-களில் ஏற்பட்ட முதல் வளைகுடா போரில் செய்தியாளராகப் பணியாற்றினார். போரினால் பாதிக்கப்பட்ட ஈராக் மற்றும் அதன் அண்டை நாடுகளில் இரண்டாம் வளைகுடா போரின்போது பணியாற்றினார். அதன்பின் இந்தியா வந்த அவர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை குறித்த செய்திகளைச் சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். தற்போது பெங்களூரூவில் 'டெக்கான் கிரானிக்கல்' பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.




thanx - Vikadan 


Friday, August 19, 2016

பங்குச் சந்தையில் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்!



பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதித்தவர்களைவிட இழந்தவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். இதை ஒரு சூதாட்டம் என்று பல பேர் சொல்லி இருப்பதை  கேட்டு இருப்பீர்கள். சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையானது, இப்போது வெறும் 8 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதைச் சூதாட்டம் என்று யாரும் கூற முடியாது. இதைப்போலத்தான் பங்குச் சந்தையில் பங்குகள் விலை ஏறுவதும், இறங்குவதும். சில விஷயங்களை கடைபிடித்தால் பங்குச்சந்தை வருமானத்துக்கு நல்ல வழிதான்.

1. சொல் புத்தி 
எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதை விட சுயமாகச் சிந்தித்து செயல்படுவதே சிறந்தது. பங்குச் சந்தையில் இது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்பதற்காக எந்த ஒரு பங்கையும் வாங்கக் கூடாது, விற்கவும் கூடாது. நீங்களே சுயமாக சிந்தித்து அலசி ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுத்துச் செயல்படுவதே நல்லது. 

2. ஒரே நாளில் ராஜா 
ஒரு நிலத்தையோ அல்லது தங்கத்தையோ வாங்கிய உடனே அதன் விலை ஏறுவதில்லை. அதைப்போலத்தான் பங்குச் சந்தையும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பிறகு ஒரே நாளில் அதன் விலை அதிக உச்சத்தை எட்ட வேண்டும்; அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையைத் தவிர்க்க வேண்டும். பங்குச் சந்தையில் முதலீடுகளைப் பொறுத்தவரை குறுகிய கால நோக்கத்தில் முதலீடுகளைச் செய்யாதீர்கள்; பணத்தைப் பன்மடங்காக பெருக்க நீண்ட காலத்திற்கு முதலீடுகள் செய்து காத்திருப்பது அவசியம். 

3. ஸ்டாப் லாஸ் 
பங்குச் சந்தையில் எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றோம் என்பதை விட எவ்வளவு பணம் இழக்காமல் இருக்கின்றோம் என்பது மிக முக்கியம். பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்டாப் லாஸ் என்பது நிச்சயம் தெரிந்து இருக்கும். ஆனால், இதைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதே கிடையாது. இதைச் சரியாக பயன்படுத்தி இனிமேலாவது உங்கள் பணத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒட்டுமொத்த பணத்தையும் ஒரே நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதை தவிருங்கள். ஒரு குறிப்பிட்ட 5 துறைகளைத் தேர்ந்தெடுத்து அந்தத் துறையில் உள்ள சிறந்த நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள். 

4. நிறுவனங்களை நம்பாதீர் 

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை எந்த ஒரு புரோக்கிங் நிறுவனத்தையும் நம்பாதீர்கள். ஏனெனில் பெரும்பாலான புரோக்கிங் நிறுவனங்கள் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திலிருந்து புரோக்கரேஜ் எடுப்பதில்தான் குறியாக இருப்பார்கள். ஆகையால் இவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள். உதாரணத்திற்கு, ஆப்சனில் டிரேட் செய்தால் பணத்தை அல்லலாம் என்பார்கள். ஆனால் அதில் பலர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. 

5. டிப்ஸ் வேண்டாமே 
பங்குச் சந்தையைப் பற்றி போதிய அறிவின்றி வர்த்தகம் செய்யாதீர்கள். போனில் அழைத்து Buy/Sell டிப்ஸ், மெசெஜ் மூலமாக வரும் டிப்ஸ் போன்றவற்றைத் தவிருங்கள். பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதற்கு ஆர்வமாக இருந்தால் மட்டும் போதாது; அது தொடர்பாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். பங்கு வர்த்தகம் எப்படிச் செயல்படுகிறது; பங்குகள் விலை எப்படி ஏறுகிறது; ஏன் இறங்குகிறது உட்படப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இதை ஓரளவிற்கு கற்றுக்கொண்ட பிறகு பங்குச் சந்தையில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் முதலீடு செய்யுங்கள். 

தவிர்க்கமுடியாத பத்து புகைப்படங்கள் .


ற்ற உயிரினங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனித இனத்தின் ஒப்பற்ற தனித்தன்மைகளுள் ஒன்று தன் வரலாற்றைப் பதிவு செய்யும் குணம். ஆதி மனிதன் குகை ஓவியங்கள் வழி தன் வரலாற்றைப் பதிவு செய்த காலம் முதல் தற்கால மனிதன் செல்ஃபி எடுத்துத் தன் நினைவுகளைப் பாதுகாத்து வைக்கும்வரை அதன் வரலாற்றின் வழி நீளமானது. அதில், மிக முக்கியமானது புகைப்படங்கள். இன்றைய நவீன உலகில் புகைப்படங்களோடு தொடர்பில்லாத மனிதன் என்று யாரையும் சொல்லிவிட முடியாது. உலகில் ஒவ்வொரு நொடியும் யார் மூலமாகவோ, எங்கோ, எப்படியோ, ஏதோ ஒரு வகையில், யாரோ ஒருவரது புகைப்படக் கருவிக்குள் பத்திரமாகச் சேமிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பக்கம் பக்கமாக எழுதி வைக்கக்கூடிய வரலாற்றைக்கூட ஒரு புகைப்படத்தில் பதிவு செய்துவிட முடியும்.
நம் வாழ்வில் மிக முக்கிய இடம்பிடித்துவிட்ட இந்தப் புகைப்படக் கருவிகளின் தோற்றமும், வளர்ச்சியும் அபரிவிதமானது. 13-ம் நூற்றாண்டில் இருந்து புகைப்படக் கருவிகளின் வரலாறு தொடங்கினாலும் அது உச்சம் பெற்றது 1800-களில்தான். அப்போதுதான், ‘போட்டோகிராபி’ என்ற பெயரே சூட்டப்பட்டது. கிரேக்க மொழியில் அதன் அர்த்தம் என்ன தெரியுமா? ‘ஒளியின் எழுத்து!’
'நல்ல புகைப்படம் என்பது ஒரு நகைச்சுவைத் துணுக்கைப் போன்றது. அதை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சிறப்பானது எனக் கொள்ள முடியாது' - எது சிறந்த புகைப்படம் என்கிற கேள்விக்கு சொல்லப்படுகிற ஓர் ஆங்கிலப் பழமொழி. புகைப்படங்களின் வழியே கடந்தகால அரசியல் நிகழ்வுகள், வரலாறு, போர் மற்றும் புரட்சி, அவை ஏற்படுத்திய அழிவுகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எனப் பலவற்றை வரலாற்றுப் புகைப்படங்களாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இன்றுவரை மனித இனத்தினுடைய கடந்தகால வரலாறாக, அவலமாக, மகிழ்ச்சியாக அவை ஏதோ ஒரு வகையில்  நிழல் சாட்சிகளாக இருந்துவருகிறது.
அந்த வகையில் உலகின் முக்கியமான 10 படங்கள் இதோ...
ஹிரோஷிமா நாகசாகி குண்டுவெடிப்பு :
இன்றுவரை உலகையே நடுங்கவைக்கும் ஒரு பேரழிவாகச் சொல்லப்படுவது ஹிரோஷிமா - நாகசாகி குண்டுவெடிப்பு.  அமெரிக்க விமானப் படையால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இன்றுவரை ஓர் அழிவின் சாட்சியாக இருக்கிறது. 1945 ஆகஸ்ட்6-ம் மற்றும் 9-ம் தேதிகளில் போடப்பட்ட இந்தக் குண்டுகளினால் உடல் கருகி  சுமார் இரண்டரை லட்சம் மக்கள் இறந்திருப்பார்கள். அதுபோக தீக்காயங்கள், கதிர்வீச்சு, உணவுப் பற்றாக்குறை என வருடக்கணக்கில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். அதன் பாதிப்புகளைப் புகைப்படங்களாகப் பதிவுசெய்தவர்கள் யோஷிட்டோ மட்சுஷிக்,யோசுக்கே யமஹாட்டா ஆகிய இரண்டு கலைஞர்கள். நேரடியாக இந்தக் குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டபோதிலும் அதை ஏன் பதிவுசெய்தார்கள் என்பதற்கு யமஹாட்டா சொன்ன காரணம் என்ன தெரியுமா?
"மனிதனின் ஞாபகங்கள் காலப்போக்கில் மறந்துவிடக் கூடியது. அதேபோல அவர்களது செயல்களும் வாழ்க்கை முறைகளும் காலத்துக்குத் தகுந்ததுபோல மாறிக்கொண்டே வரும். ஆனால், கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் மறந்துவிட்ட அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும். இப்போது நாம் ஹிரோஷிமா, நாகசாகியைப் பார்க்கும்போது அந்த அழிவுகளின் சுவடுகள் இருக்காது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் மூலமாக அந்தக் கொடூரங்களையும் கோரங்களையும் பார்க்கமுடியும்."  எத்தனை உண்மை வார்த்தைகள் இவை. இன்றுவரை உலகில் இருக்கும் மனிதர்களுக்கு அணு விபத்தின் கோரத்தை முன்வைக்கும் சாட்சிகளாக இவை இருக்கின்றன.
ஆப்பிரிகாவின் விரக்தி :
வறண்ட தேசம் என்று உங்களைக் கற்பனை செய்யச்சொன்னால் எல்லோர் மனதிலும் வரும் சித்திரம் கண்டிப்பாக ஆப்பிரிக்காவாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அதன் பாதிப்பு நமக்குள் இருக்கும். 1993-ம் ஆண்டு, 'நியூயார்க் டைம்ஸ்' இதழில் வெளியான இந்தப் புகைப்படத்தின் தாக்கம்தான் அது. அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் பேராசையால் வளங்கள் சுரண்டப்பட்டு, போரால் நிர்க்கதியாக ஆக்கப்பட்ட ஆப்பிரிக்கா, சோமாலியா, கென்யா, சூடான் போன்ற நாடுகளில் மக்கள் பஞ்சத்தால் வாடும் நிலையைக் காட்டியது இந்தப் புகைப்படம். தன்னை இரையாக்க வரும் கழுகினைக்கூட விரட்ட முடியாமல் சுருண்டு விழுந்துக் கிடக்கும் குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து இந்த உலகமே கொதித்து எழுந்தது. அதை எடுத்த புகைப்படக் கலைஞர் கெவின் கார்ட்டருக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அவரும் இந்தப் புகைப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது.
நிலவின் முதல் காலடி :
இன்று விஞ்ஞான உலகின் எல்லா நாடுகளும் பல எல்லைகளை எட்டி இருந்தாலும், மனித இனத்தின் மைல்கல்லாகப் பார்க்கப்படுவது நிலவின் மனிதன் வைத்த முதல் காலடி. 1969-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படம் அமெரிக்காவின் மதிப்பைக் கூட்டியது. நிலவில் மனிதனின் சிறிய காலடியாக இருந்தாலும், பூமியில் அது மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பாகக் கொண்டாடப்பட்டது.
கறுப்பின வெறியை தகர்த்த நெகிழ்ச்சி :

நிறவெறி கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டமான 1970-களில் வெளியான இந்தப் புகைப்படம் அன்று மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பிரேசிலின் பீலேவும், இங்கிலாந்து கேப்டன் பாபி மூரும் பரஸ்பரம் கட்டிப்பிடித்து தங்களது மேலாடையை மாற்றிக் கொண்டனர். அந்தப் புகைப்படம் உலக அரங்கில் கறுப்பின வெறிக்கெதிரான ஒரு முக்கியப் புள்ளியாக அமைந்தது.
போரை நிறுத்துங்கள் :

1967-ல் அமெரிக்க - வியட்நாமுக்கு எதிராகப் போர் நடந்துகொண்டிருந்த காலம் அது. மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில் அமெரிக்காவில், மக்கள் போரை நிறுத்தச் சொல்லி போராடிக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு போராட்டத்தில் பெண்டகன் சதுக்கத்துக்கு முன்  நின்றிருந்த வீரர்களைப் பார்த்து ஒரு பெண்மணி, பூ ஒன்றை நீட்டினார். அது, சமாதானத்துக்கான தூதாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிஞ்சு முகத்தில் பயம் :

பிஞ்சு முகத்தில் பயம்... அழுகை வெடிக்கும் நிலை... கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை. இந்தக் காட்சியைப் படம்பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான். சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டுப் பழகிய இந்தக் குழந்தை, படம்பிடிக்க கேமராவைச் சரிசெய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சி இது. சிரியாவின் துயரத்தை விளக்க இந்த ஒரு படம் போதும்.
மாவீரனின் மரணம் :

சேகுவாரா என்ற மனிதர் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் ''எல்லா நாடும் என் தாய்நாடே. அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே '' என்ற சேகுவாராவின்  மனிதகுணம்தான். அக்டோபர் 9-ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர், உலக நாளேடுகள் யாவும் தவறாமல் சேகுவாராவின் மரணப் படத்தையே தம் முகப்பில்வைத்து அஞ்சலி செலுத்தியது. இன்றுவரை லட்சக்கணக்கான மக்களின் ஆதர்சமாக விளங்கும் சேகுவாராவின் கடைசிப் படம் இது.
அமெரிக்காவின் அதிர்ச்சி :
உலகையே தன்னுடைய அசுரபலத்தால் மிரட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவை மிரட்சியடைய வைத்த சம்பவம். 2001 செப்டம்பரில் நடந்த இரட்டைக் கோபுர தகர்ப்பு. அமெரிக்காவின் உட்சபட்ச பாதுகாப்பு, ராணுவம், உளவுத்துறை என எல்லாவற்றுக்கும் தண்ணி காட்டிவிட்டு நடத்தப்பட்ட சம்பவம்தான் தீவிரவாதத்தின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது. அல்கொய்தாவின் இந்தத் தாக்குதலுக்குப் பிறகுதான் பின்லேடனைத் தேடிக் கொன்றதோடு இல்லாமல், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் மீது தன் கோரமான கரங்களைவைத்தது அமெரிக்கா.
உசேன் போல்டின் பெருமித சிரிப்பு :

சமீபத்தில் உலகை மிகவும் ரசிக்கவைத்த புகைப்படம் இது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் நடந்த 100 மீ., ஓட்டப்போட்டியை உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் வெடித்து ஓடிய வீரர்களை மின்னல் வேகத்தில் முந்திய உசேன் போல்ட், தன் பின்னால் ஓடி வருகிற வீரர்களைப் பார்த்து சிரித்த சிரிப்பு இது. அதுதான் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. மின்னலைவிட வேகத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்வை புகைப்படமாக்கியவர் கேமரூன் ஸ்பென்ஸர்.
சிரியாவுக்காக உலகம் அழுதது :

அதிகாரத்தைக் கைப்பற்ற சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் சொந்த நாட்டு மக்களே அகதிகளாகி வருகின்றனர். எப்படியாவது எஞ்சிய வாழ்நாட்களைக் கழித்துவிட வேண்டும் என்பதற்காக அண்டை நாடான துருக்கி வழியே பல நாடுகளுக்கும் அகதிகளாக சென்று வருகிறார்கள். அப்படி ஒரு நாளில் எப்படியாவது தப்பித்துப்போய் வாழ்ந்துவிட வேண்டும் என்று எண்ணித் தப்பித்த ஒரு தந்தையின் கையில் இருந்து தவறி, படகில் இருந்து கடலில் விழுந்த குழந்தைதான் அய்லான் குர்டி. கடற்கரையில் பிணமாக அந்த மூன்று வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்ட புகைப்படம், ஒட்டுமொத்த அகதிகளின் நிர்கதியான வாழ்க்கையின் சாட்சியாக இருந்தது. உலக மக்கள் பலரின் மனச்சாட்சியை உலுக்கிய புகைப்படமாக அது அமைந்தது.

thanx -Vikadan

Monday, August 8, 2016

டார்க்வெப் தெரியுமா உங்களுக்கு?


 

கண்ணுக்குத் தெரியாத இருளுலகம்
 
நாம் அடிக்கடி விசிட் செய்யும் தளங்களை பட்டியலிட்டால் ஒரு பக்கத்தில் அடங்கிவிடும். ஃபேஸ்புக், ட்விட்டர், ஃப்ளிப்கார்ட், விக்கிப்பீடியா என விரல் விட்டு எண்ணிவிடலாம். இவை எல்லாம் சாதாரணமாக தேடினாலே கிடைத்துவிடும் வகை. இவ்வகை இணையம், Surface web எனப்படுகிறது. அதாவது, எந்த வகை தடையும், மறைப்புமின்றி நீங்கள் தேடியவுடன் சர்ச் ரிசல்ட்டில் வந்து விழும் வகை. இன்னும் சில தளங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் நார்மல் ப்ரவுசரில் எவ்வளவு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம், கூகுள் போன்ற சர்ச் என்ஜின்கள் பயன்படுத்தும் அல்காரிதம்கள், க்ராலிங், இன்டெக்ஸிங் டெக்னிக்குகள் எதுவும் இந்த தளங்களிடம் செல்லுபடியாகாது. இவற்றை டார்க்வெப் அல்லது டீப்வெப் என அழைக்கிறார்கள். இந்த தளங்களை Tor போன்ற ஸ்பெஷல் ப்ரவுசர்களின் வழி மட்டுமே அக்சஸ் செய்ய முடியும்.  
 
Tor வரலாறு
 
Tor சாஃப்ட்வேரை 90களின் மத்தியில் வடிவமைத்தது அமெரிக்க கடற்படையின் ஆராய்ச்சிப் பிரிவு. அமெரிக்க உளவு ரகசியங்களை, இணையத்தில் மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைக்க இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தத் தொடங்கினார்கள். 2004-ல் இந்த கோடிங் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. அதன்பின் The Tor Project, Inc என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் இந்த சாஃப்ட்வேரை வைத்து ஒரு நெட்வொர்க் உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
 
 
என்ன ஸ்பெஷல் இந்த ப்ரவுசரில்?
 
நீங்கள் சாதாரணமாக ப்ரவுஸ் செய்யும்போது ஒரு தகவலை தேடுவது, டைரக்ட் டூ வே ட்ராபிக் எனப்படுகிறது. சிம்பிளாக சொல்லப்போனால், உங்கள் கணினியை A என வைத்துக்கொள்வோம். அதில் நீங்கள் தேடும் தகவல் சர்வர் B- ல் ரிக்வ்ஸ்ட்டாக பதிவாகிறது. பின் அதற்கான டேட்டாவை,  சர்வர் உங்கள் கணினிக்கு அனுப்பும். இது முழுக்க முழுக்க A,B ஆகிய இரண்டுக்கும் இடையில் நடக்கும் நேரடித் தகவல் பரிமாற்றம். இந்த முறையில் தகவல் கேட்டது யார், எங்கிருந்து பெறப்பட்டது போன்ற தகவல்களை எளிதில் ட்ரேஸ் செய்துவிடலாம். 
 
ஆனால் டார் போன்ற ப்ரவுசரில் இந்த டைரக்ட் செயல்முறை இருக்காது. அதே தகவலை நீங்கள் உங்கள் சிஸ்டம் A-வில் இருந்து தேடினால் அது ரேண்டமாக C,F,J,K,O என ஏகப்பட்ட சர்வர்களின் வழி சென்று B-ஐ அடைகிறது. இதனால் சர்வர் B-யில், ரிக்வஸ்ட் விடுத்த சிஸ்டமை பற்றிய தகவல்கள் எதுவும் பதிவாகாது. நம் சிஸ்டமிலும் எந்த சர்வரில் இருந்து நாம் கேட்ட தகவல் பெறப்பட்டது என்ற தகவல் பதிவாகாது. இப்படி சுத்தி விடுவதை 'virtual tunnel' எனக் கூறுகிறார்கள். இந்த ரகசியத்தன்மைதான் டார் ப்ரவுசரின் பலம். டார்க்வெப்பின் கொள்கை.
 
யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சிலர் இஷ்டப்பட்டதை இங்கே செய்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக எதையாவது செய்தால் போலீஸ் ஒவ்வொரு சர்வராய் தேடி சம்பந்தப்பட்டவரின் அடையாளத்தை கண்டுபிடிப்பதற்கு மிகுந்த சிரமமாகிவிடும். காரணம், ஒரு தகவலை நான்காயிரம் ரவ்ட்டர்களின் வழிகூட ரிலே செய்ய டார் ப்ரவுசரால் முடியும் என்பதுதான். இதனாலேயே டார்க்வெப்பை onionland எனவும் அழைக்கிறார்கள். வெங்காயத்தை போல பல அடுக்கு பாதுகாப்பு இருப்பதால் இந்தப் பெயர்.
 
இந்த ப்ரவுசரை இன்ஸ்டால் செய்வது சுலபம். பார்க்க மொஸில்லா ஸர்ச் போலதான் இருக்கும். இதை விண்டோஸில் இன்ஸ்டால் செய்வதை விட லினக்ஸில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
 
என்னதான் இருக்கிறது டார்க்வெப்பில்?
 
பொது இணையத்தில் இருப்பது போலவே இங்கும் நல்ல தளங்களும் இருக்கின்றன. தீய தளங்களும் இருக்கின்றன. குறிப்பாக Whistleblowers எனப்படும் அரசாங்கத்தின் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவரும் நபர்கள், பெரிதும் நம்புவது டார்க்வெப்பைதான். அமெரிக்க சி.ஐ.ஏவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென்,  டார்க்வெப்பின் அதி தீவிர ஆதரவாளர். பேரரசுகளின் ரகசியங்களை சாமான்யர்களும் வெளிப்படுத்த முடிவது இங்கேதான் என்பது அவரின் வாதம்.  
 
ஜூலியன் அசாஞ்சேயும், விக்கிலீக்ஸும் பலமாக கால் பதிப்பதற்கு உதவியாய் இருந்தது Tor ப்ரவுசரும், டார்க்வெப்பும்தான். இதுபோக, தங்களை மாபெரும் அரசுகள் கண்காணிப்பதை விரும்பாத தொழில்நுட்ப வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் டார்க்நெட்டை பயன்படுத்துகிறார்கள். அதுவும் சீனா போன்ற இணையக் கட்டுபாடுகள் மிகுந்த நாடுகளில் டார்க்வெப் அரசியல் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவர பெரிதும் பயன்படுகிறது.
 
 
இது நாணயத்தின் ஒருபக்கம் மட்டுமே. எல்லாவற்றுக்கும் இருப்பது போல டார்க்வெப்பிற்கும் ஒரு கொடூர முகம் இருக்கிறது. ஆள்கடத்தல், போர்னோக்ராபி, போதை மருந்து வியாபாரம், ஆயுத வியாபாரம், ஹேக்டிவிசம் போன்றவையும் இங்கு எக்கச்சக்கமாக நடக்கின்றன. டார்க்வெப்பில் இருக்கும் டேட்டாக்களில் 15 சதவீதத்திற்கும் மேல் இருப்பது போதைமருந்து வியாபாரம்தான் என்கிறார் கேரத் ஓவன் என்ற ஆராய்ச்சியாளர்.  
 
நாம் ஆன்லைனில் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்கள் வாங்குவது போல, வெளி மார்க்கெட்டில் கிடைக்காத போதை மருந்துகள், ஆயுதங்களை விற்க பிரத்யேக தளங்கள் டார்க்வெப்பில் இயங்குகின்றன. இந்த தளங்களில் ஏதாவது ஒன்றை வாங்க விரும்பினால் 'Buy Now' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உடனே அந்த விற்பனையாளர் அவரின் வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புவார். அதில் அந்த பொருளுக்கான தொகையை பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் கரன்சி முறையில் செலுத்த வேண்டும். ( இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் இந்திய மதிப்பு 42 ஆயிரம் ரூபாய். கரன்சியை பிட்காயினாக மாற்றித் தருவதற்கென்றே ஏராளமான நிறுவனங்கள் உலகளவில் செயல்படுகின்றன ). இந்த பிட்காயின்கள் Escrow எனப்படும் மூன்றாம் நபரின் அக்கவுன்ட்டில் முதலில் வரவு வைக்கப்படும். வாடிக்கையாளருக்கு பொருள் போய் சேர்ந்தவுடன் விற்றவரின் கணக்கிற்கு பிட்காயின் சென்று சேர்ந்துவிடும். இந்த பாதுகாப்பான நடைமுறை காரணமாக ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் பிட்காயின்கள் டார்க்வெப் சந்தைகளில் புழங்குகின்றன. 
 
இதுபோக, இன்னும் ஏராளமான நெட்வொர்க்குகள் இந்த பரந்த பிரதேசத்தில் இயங்குகின்றன. ஹேக்கர்கள், தங்கள் சேவைகளை குறிப்பிட்ட தொகைக்கு விற்பார்கள். சர்வதேச கூலிப்படைகள், ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் போன்றவையும் இங்கே இயங்குகின்றன. இதுபோக, Cicada 3301 போன்ற கோட்பிரேக்கர்களின் நெட்வொர்க்களும் இங்கே செயல்படுகின்றன. இங்கு நடைபெறும் வர்த்தகம் அனைத்துமே பிட்காயின்கள் கொண்டுதான்.   
 
சாமான்யனுக்குத் தடா!
 
டார்க்வெப்பை ஏதோ Tor இன்ஸ்டால் செய்தவுடன், ஜஸ்ட் லைக் தட் அக்சஸ் செய்ய முடியாது. சாதாரணமாக எதையாவது தேடினால் லிங்க்களின் வழி அவற்றை கண்டுபிடிக்கலாம். ஆனால் டார்க்வெப் தளங்கள் Node-களை வைத்து செயல்படுகின்றன. எனவே சும்மா தேடினால் எதுவும் கிடைக்காது. இதற்கென பிரத்யேக டைரக்டரிகள் செயல்படுகின்றன. அவற்றை தேடிக் கண்டுபிடிப்பதும் கடினம்தான். இதுபோக, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தளங்கள் ஜாகை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு தடவை நீங்கள் சென்ற தளம் அடுத்த தடவை காணாமல் போயிருக்கும். அதன் புது நோடை தேடி அலைய வேண்டும். எஃப்.பி.ஐ போன்ற முன்னணி துப்பறியும் நிறுவனங்கள் முடிந்தவரை போர்னோக்ராபி, போதை மருந்து வியாபாரம் போன்றவற்றை தடை செய்யப் போராடுகின்றன. அவர்களின் கையில் மாட்டினால் களிதான். மாட்டமாட்டோம் என அசட்டையாக இருந்த 'சில்க் ரோட்' என்ற பில்லியன் டாலர் நெட்வொர்க்கை 2013-ல் கண்டுபிடித்து, விலங்கு மாட்டியது எஃப்.பி.ஐ. போர்னோக்ராபியை ப்ரவுஸ் செய்தால் நீங்கள் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே சாமான்யர்கள் விலகி இருப்பதே நல்லது.
 
 
'டார்க்வெப்பில் யாரையும் நம்பக்கூடாது. வெப் கேமராவை டேப்பால் கவர் செய்துவிடவேண்டும். அங்கிருக்கும் எந்த ஃபைலையும் டவுன்லோட் செய்துவிடக்கூடாது. அதன் உள்ளே இருக்கும் மால்வேர்கள் உங்களின் டிஜிட்டல் தரவுகளை திருடிவிடலாம். கடைசியாக, அங்கிருக்கும் ஃபோரம்களில் யாரையும் தப்பித் தவறி கூட கிண்டல் செய்துவிடக்கூடாது. அவர்கள் கடுப்பில் உங்கள் சிஸ்டமை ஹேக் செய்து, அத்தனை பெர்சனல் சங்கதிகளையும் முடக்கிவிடலாம். எவ்வளவுக்கு எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்தும் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டரைவிட டார்க்வெப் நம்மை பயங்கரமாக அடிக்ட் ஆக்கிவிடும். பின் அதிலிருந்து மீள்வது சிரமம். எனவே தேவையில்லாமல் அந்தப்பக்கம் காற்று வாங்கக் கூட போகாதீர்கள்' என எச்சரிக்கிறார் டார்க்வெப்-பை பயன்படுத்தி சலித்துப் போன நண்பர் ஒருவர். 
 
உண்மைதான். த்ரிலுக்காக அங்கே செல்லத் தொடங்கி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம். இவற்றை எல்லாம் தாண்டி டார்க்வெப் மூலம் நடக்கும் நல்ல விஷயங்களுக்காகவே உலகம் முழுவதும் அதற்கு ஆதரவு அலை வீசுகிறது. சுத்தியலை, ஆணி அறையவும் பயன்படுத்தலாம், ஆளைக் காலி செய்யவும் பயன்படுத்தலாம். டார்க்வெப்பும் சுத்தியல் மாதிரிதான். நாம் பயன்படுத்துவதை பொறுத்து நமக்கு அது எதிர்வினையாற்றும்.

Wednesday, August 3, 2016

‘அமைதியின் கடவுள்’ ஹிட்லர்!

1. ஹிட்லரின் ஒலிம்பிக்ஸ்! 


முதல் உலகப் போர் நடக்கக் காரணம் யார்?... அதனால் உலகமே சீரழிந்து கிடக்கிறதே, அனைத்துக்கும் காரணம் யார்? அந்தக் கொடூரக் குற்றவாளி யார்?... முதல் உலகப் போருக்கு ‘நன்றி’ கார்டு போட்ட சமயத்தில், இந்தக் கேள்விகள் எழுந்தபோது இதற்கான ஒற்றை பதிலாக சகல திசைகளிலிருந்தும் ஆள்காட்டி விரல்கள் ‘ஜெர்மனி’யை நோக்கித்தான் நீண்டன. ஜெர்மனி, முதல் உலகப்போரில் சந்தித்த இழப்புகளைவிட, அடுத்த 10 ஆண்டுகளில் போர்க் குற்றவாளியாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு சந்தித்த பேரிழப்புகளே மிக அதிகம்.
'ப்ச்... என்னதான் இருந்தாலும் ஜெர்மனி பாவம். பொருளாதார ரீதியாக சோம்பிப் போய்க் கிடக்கிறது. அதைக் கொஞ்சம் உற்சாகப்படுத்துவோமே.' சர்வதேச நாடுகளுக்கு 1931ல் ஜெர்மனி மீது கருணை சுரந்தது. ஆகவே 1936 சர்வதேச கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகளை ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடத்துவதற்கு ஓர் வாய்ப்பு கொடுத்தனர்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தினர் நடத்திய வாக்கெடுப்பில் பெர்லின் வென்றது.
ஆனால், 1933ல் ஜெர்மனியில் நாஜி கிரகணம் படர ஆரம்பித்து விட்டது. ஆல் இன் ஆல் ஆரிய வீரியர் அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மனியைத் தன் வசப்படுத்தியிருந்தார். அவரது அரசியல் காய் நகர்த்தல்கள் ஒவ்வொன்றும் சர்வதேச அளவில் அதிர்வுகளை, அதிர்ச்சிகளை உருவாக்கின. குறிப்பாக, யூத எதிர்ப்பு நடவடிக்கைகள்!

ஒலிம்பிக்கில் யூத விளையாட்டு வீரர்கள் யாரையும் ஹிட்லர் பங்குபெற அனுமதிக்கமாட்டார் என்ற கருத்து அழுத்தமாகப் பரவியது. ஏற்கெனவே ஜெர்மனியில் பல்வேறு விளையாட்டுக்களில் புகழ் பெற்றிருந்த வீரர்கள், தாங்கள் யூதர் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகக் குமுற ஆரம்பித்திருந்தனர். ஜிப்ஸி வீரர்களுக்கும் இதே நிலைமைதான்.
‘இப்படிப்பட்ட இனவெறி ஆட்சி நடக்கும் ஒரு நாட்டுக்கு யூத வீரர்களை அனுப்ப முடியாது. ஆகவே, ஒலிம்பிக் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும்’ என்று எதிர்ப்புக் குரல்கள் 1934ல் எழ ஆரம்பித்தன. சர்வதேச யூதர்களின் அழுத்தத்தால் அதை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆதரித்தன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினர் இடத்தை மாற்றிவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். பெர்லினுக்கான வாய்ப்பு கை நழுவிப் போகும் நிலை.

‘யூதக் கொசு ஒழிப்புத் திட்டத்துக்கே நேரம் போதவில்லை. இதில் பெர்லினுக்கு ஒலிம்பிக்ஸ் எல்லாம் அநாவசியமே!’ என்ற மனநிலையில்தான் ஹிட்லரும் இருந்தார். ஆனால், கொள்கைப் பரப்பு அமைச்சரான ஜோசப் கோயபெல்ஸ், ஹிட்லரிடம் கிசுகிசுத்தார். ‘ஐயன்மீர்! ஜெர்மனியின் மீதான களங்கங்களைத் துடைத்தெறிய, அதற்கு சர்வதேச அளவில் நன்மதிப்பு பெற்றுத்தர இந்த ஒலிம்பிக்ஸ் உதவும். அதைக் கொண்டு நாம் வருங்காலத்தில் பல விஷயங்களைச் சாதிக்கலாம். விஷமங்களை அரங்கேற்றலாம்.’ ஆகவே, ஹிட்லர் ‘நல்லவன்’ முகமூடியை எடுத்து அணிந்துகொண்டார். சர்க்கரைப் பொங்கல் வார்த்தைகள் பேச ஆரம்பித்தார்.
சர்வதேசப் பெரியோர்களே! தாய்மார்களே! தாங்கள் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறோம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எந்தவிதத் தடையுமில்லை. அவர்கள் தாராளமாக ஓடலாம், எம்பிக் குதிக்கலாம், மல்லாக்க நீந்தலாம், ஈட்டி எறியலாம், துப்பாக்கிக்கூட சுடலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். ஒலிம்பிக்கை மிகச் சிறந்த முறையில் நடத்திக் காட்ட பெர்லின் தயாராகிக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஜெர்மானியனும் இந்த ஒலிம்பிக்கை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அனைவரும் வருக! நல்ஆதரவு நல்குக!

சொன்னதோடு மட்டுமல்லாமல், ஹெலன் மேயர் என்ற யூதப் பெண்ணை ஜெர்மனி சார்பில் போட்டியிடும் வாள் சண்டை வீராங்கனையாகவும் அறிவித்தார். அதுவரை யோசித்து வந்த அமெரிக்கா, பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருப்பதாக அறிவித்தது. இதனால், யூத எதிர்ப்புக் குரல்கள் அமுங்கிப் போயின. பிற நாடுகளும் தங்கள் நாட்டின் சார்பில் யூத வீரர்களை அனுப்பத் தயாராகின.

ஒலிம்பிக்கை நல்லவிதமாக நடத்திக் காட்ட வேண்டிய முழுப்பொறுப்பும் கோயபெல்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. பெர்லினில் நடந்த ஒலிம்பிக்ஸ் போல் வேறெங்கும் கண்டதே இல்லை என அனைவரும் பிளந்த வாயை மூடாமல் ஊர் திரும்ப வேண்டுமென்றும் ஹிட்லர், கோயபெல்ஸுக்கு அன்புக் கட்டளை இட்டிருந்தார்.
கோயபெல்ஸ், பரபரவெனத் தயாரானார். அதுவரை ஜெர்மனியெங்கும் மிளிர்ந்து கொண்டிருந்த யூத எதிர்ப்புப் பிரசார சுவரொட்டிகள், அறிவிப்புகள், இன்னபிற அடையாளங்கள் எல்லாம் ஒரே இரவில் காணாமல் போயின. யூத எதிர்ப்பு விதிகள், சட்டங்கள் அனைத்தும் (தற்காலிகமாக) நீக்கப்பட்டன. செய்தித்தாள்கள் யூத எதிர்ப்புப் பிரசாரமின்றி இயல்பாக வெளிவந்தன. ஜெர்மன் ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக் குறித்த செய்திகளை, விளம்பரங்களை, தகவல்களை, வழிகாட்டிகளை ஜெர்மன், ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் அசத்தலாக அச்சிட்டு வழங்கியது.

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கும் வழக்கம் பண்டைய ஒலிம்பிக்ஸில் உண்டு. அது 1928 ஒலிம்பிக் போட்டிகளில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு மேலும் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமென கோயபெல்ஸ் யோசித்தார். ஜெர்மனியின் விளையாட்டுத் துறை செயலாளரான கார்ல் டயெம் ஒரு யோசனை சொன்னார். ‘ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸில் இருந்து ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வோம். பின் அதை ஜெர்மனிக்கு கொண்டு வந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றுவோம்.’

அந்த அருமையான யோசனை அழகாகச் செயல்படுத்தப்பட்டது. வெயில், சூறாவளி, பனி, மழை என எதிலும் அணைந்துவிடாத விசேஷமான ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஜெர்மானிய நிறுவனம் ஒன்று தயாரித்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாரத்தான் வீரர்கள், ஆளுக்கு ஒரு கிலோ மீட்டர் வீதம், கிரீஸின் ஒலிம்பியாவிலிருந்து, பெர்லினுக்கு ஒலிம்பிக் தீப்பந்தத்துடன் ஓடி வந்தார்கள். அது பெர்லின் ஒலிம்பிக்ஸுக்கு மிக நல்ல விளம்பரத்தையும் நன்மதிப்பையும் தேடிக் கொடுத்தது. அதிலிருந்து ஒலிம்பிக் தீப்பந்தம் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்யும் வழக்கம் ஆரம்பமானது.
'1932ல அமெரிக்காக்காரன் லாஸ் ஏஞ்சல்ஸுல ஒலிம்பிக்னு ஒண்ணு நடத்துனானே... அதெல்லாம் சப்பை. 1936ல தலைவர் ஹிட்லர் பெர்லின்ல ஒலிம்பிக் நடத்துனாரு பாரு... ஆயுசுக்கும் மறக்க முடியாது. ஆஹா ஓஹோன்னு அசத்திட்டாரு!' 

இதுவரை உலகில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் ஹிட்லர் நடத்திய பெர்லின் ஒலிம்பிக்போல் பிரமாண்டமான ஒன்றை யாம் வேறெங்கும் கண்டதில்லை பராபரமே! இப்படி சகல தேசத்தினரும் வியந்தே வீழ்ந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தார் கோயபெல்ஸ்.
ஒலிம்பிக் ஏற்பாடுகளுக்காகவே ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது. சர்வ வசதிகளுடனும் கூடிய, ஒரு லட்சம் பேர் அமரும் விதத்தில் ஒலிம்பிக் ஸ்டேடியம் அதிவேகமாகத் தயாரானது. 130 ஏக்கர் பரப்பளவில், ஜெர்மனியின் வரைபட வடிவில், சர்வதேச வீரர்களும் தங்கும் வகையிலான ஒலிம்பிக் கிராமம் இயற்கையான சூழலில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு நாட்டின் வீரர்களுக்கும் தனித்தனி குடியிருப்புகள்; எல்லா வசதிகளும் நிறைந்த 160 கான்கிரீட் வீடுகள்; அந்தந்த நாட்டின் மொழி பேசத் தெரிந்த உதவியாளர்கள்; அந்தக் குடியிருப்புகளில் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள்.  வீரர்களுக்கு அவர்களது சொந்த நாட்டின் உணவுக் கலாசாரத்துக்கேற்ற வகையில் உணவுகள் வழங்கப்பட்டன. தவிர, அவர்களது படுக்கை அறைகூட, அந்தந்த நாடுகளுக்கேற்ப அமைக்கப்பட்டன.
உடற்பயிற்சிக்கான வசதிகள், நீச்சல் குளங்கள், 400 மீ தடகளப் பாதை, வங்கி, அஞ்சலகம் போன்ற வசதிகளும் உண்டு. அனைத்து வீரர்களும் இந்தக் கவனிப்பில் திக்குமுக்காடிப் போனார்கள்.
ஒலிம்பிக்கைக் காண பெர்லினுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், ஜெர்மானியர்களின் பணிவான வரவேற்பை, அன்பான உபசரிப்பை, வியத்தகு விருந்தோம்பலைக் கண்டு நெக்குருகிப் போனார்கள். ‘ச்சே! ஹிட்லரைப் போய் தப்பா நெனைச்சுட்டோமே!’ என்று நொந்து கொண்டார்கள். பெர்லின் சாலைகளும் தெருக்களும் அவ்வளவு சுத்தமாக மின்னின. நகரமெங்கும் விதவிதமான சிலைகள், அலங்காரங்கள் அசத்தின. ஒலிம்பிக் சார்ந்த நிகழ்ச்சிகள், பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கண்களை நிறைத்தன.
அதுவரை அவர்கள் கேள்விப்பட்ட ‘இனவெறி சமாசாரங்கள்’ எதுவுமே எங்கும் தென்படவில்லை. ‘ஐ லவ் ஜெர்மனி!’ என்று சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வாயார ‘குட் சர்டிபிகேட்’ கொடுத்தார்கள். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், இதர ஊடகத்தினரும் நல்ல முறையில் கவனிக்கப்பட்டனர். மிதமிஞ்சிய மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆக, சர்வதேச அளவிலும் செய்திகள் ‘சிறப்பாகவே’ வெளிவந்தன.

‘தன் மேலுள்ள அத்தனைக் களங்கங்களையும் துடைத்தெறிய இந்த வாய்ப்பை ஜெர்மனி அருமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இன்றைய தேதியில் உலகிலேயே அமைதியாக, அழகாக வாழ்பவர்கள் பெர்லின் நகர மக்களே!’ - தி நியு யார்க்கர் இதழ் கொண்டாடியது. ‘தற்போது ஜெர்மானியர்கள் மிகச்சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று உலகிலிருக்கும் மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் ஹிட்லரும் ஒருவர்’ - நியு யார்க் டைம்ஸ் உச்சி மோந்தது. ஹிட்லருக்கு பரம திருப்தி. ஆகவே, கோயபெல்ஸுக்கு 100மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வாங்கிய திருப்தி.
1936, ஆகஸ்ட் 2; பதினோராவது ஒலிம்பிக் தொடக்க விழா; லட்சம் பேர் மைதானத்தில் நிரம்பி வழிந்தார்கள்; மூவாயிரம் பேர் சேர்ந்திசைப் பாடல் ஒன்றைப் பாட, மறைந்த ஜெர்மனியின் அதிபர் ‘ஹிண்டென்பெர்க்’ பெயரிடப்பட்ட மாபெரும் விமானம் ஒன்று, மைதானத்தை ஜெர்மனியின் கொடியுடன் கடந்து சென்றது. ஜெர்மானியர்கள் தேச பக்தி பொங்க மெய் சிலிர்த்தார்கள். ஹிட்லர், கையில் பூங்கொத்தை ஏந்தியபடி, ஒரு சிறுமியுடன் ‘அமைதியின் கடவுள்’ போல மைதானத்துக்குள் பிரசன்னமானார். அந்தப் பொழுதில் 360 டிகிரியிலும் நாஜி சல்யூட். ஹிட்லரைப் புகழ்ந்து ஓயாத கோஷங்கள். சர்வதேசப் பார்வையாளர்கள் பிரமித்துப் போனார்கள். ஜெர்மானியர்கள் ஹிட்லர் மேல் இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்களா! ஹிட்லர் இத்தனை வலிமையானவரா!

 20000 வெண்புறாக்கள் சிறகடித்துப் பறக்க, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பலத்த ஆரவாரத்துக்கிடையே ஹிட்லர், மைதானமே அதிரும் குரலில் உரையாற்றினார். ‘இப்போதும் சரி, எப்போதும் சரி, நான் அமைதியையே விரும்புகிறேன். நாம் அத்தகைய அமைதியான உலகில் என்றும் வாழ்வோம்!’ என்று அவர் பேசிய பேச்சுக்கு அமைதிக்கான நோபல் பரிசைத் தூக்கி விட்டெறிந்திருக்கலாம். மைதானத்தில் பறக்கவிடப்பட்ட பல்லாயிரம் புறாக்கள் அங்கேயே சுற்றி வந்தன.

தொடக்க விழாவின் ஒரு நிகழ்வாக பீரங்கிகள் முழங்க, புறாக்களுக்கு அடிவயிறு கலங்கிவிட்டது. ஹாயாக வாய் பிளந்து கண்டுகளித்த பார்வையாளர்கள் மேல் ஆய்! தலைகளும் தொப்பிகளும் நாசமாயின. சலசலப்பு; அருவருப்பு; கலகலப்பு.  அதில் ஏதேனும் ஒரு யூதப் புறா ஹிட்லரைத் தேடிப்பிடித்து அவர் மீது எச்சமிட்டதா என்பது குறித்த வரலாற்று புருடாக்கள் ஏதுமில்லை.

(பெர்லின் ஒலிம்பிக்ஸ் முதல் நாள் நிகழ்வுகள் : வீடியோ https://www.youtube.com/watch?v=_s_K3-FEwQA)
Leni Riefenstahl - நாஜிக்களுக்கான பிரசாரப் படங்கள் எடுத்துக் கொடுத்த ஜெர்மனியின் பெண் இயக்குநர். நடிகை, நடனப்பெண், புகைப்படக்காரர் என்று லெனிக்குப் பல முகங்கள் உண்டு. புதிய கருவிகளைக் கொண்டு, நவீன உத்திகளில், ஆச்சரியமான கோணங்களில் படமெடுக்கும் திறமை கொண்ட லெனியின் திறமை ஹிட்லருக்குப் பிடிக்கும். நாஜியின் அதிகாரபூர்வ ஃபிலிம் மேக்கரான லெனி, ஒலிம்பிக் நிகழ்வுகள் பலவற்றையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் படம் பிடித்தார். பெர்லின் நகருக்குள் இருபத்தைந்து இடங்களில் திரைகட்டி, ஒலிம்பிக் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முப்பத்து மூன்று கேமராமேன்கள், சுமார் பத்துலட்சம் அடி நீளமுள்ள காட்சிகளைப் பதிவு செய்தார்கள். பெர்லின் ஒலிம்பிக்ஸின் பிரமாண்டம் அதில் அச்சு அசலாகப் பதிவு செய்யப்பட்ட லெனியின் ஆவணப்படம், இரண்டு பாகங்களாக 1938 ஏப்ரலில் வெளியிடப்பட்டு, சர்வதேச அளவில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. காட்சிகள் சரியாகத் தெரியவில்லை, தெளிவில்லை என்று குறைகள் எழுந்தாலும், ஒலிம்பிக் வரலாற்றில் தொலைக்காட்சி உபயோகப்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை.

தொடக்க விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் அகர வரிசைப்படி அணிவகுத்து வந்தனர். இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் கொடியை ஏந்தி வந்தனர். பிரான்ஸ் வரும்போது, ஜெர்மானியர்களிடையே சலசலப்பு. பிரான்ஸ் வீரர்கள், எதிரித் தலைவரான ஹிட்லருக்கு சல்யூட் வைப்பார்களா என்று. அவர்கள் சல்யூட் வைத்தார்கள். ஜெர்மானியர்கள் ஆர்ப்பரித்தார்கள். ‘ஹிட்லருக்கு வைத்த சல்யூட் அல்ல, அது ஒலிம்பிக் சல்யூட்’ என்று பின்னர் பிரான்ஸ் சமாதானம் சொன்னது. இங்கிலாந்து வீரர்களும், அமெரிக்க வீரர்களும் ஹிட்லருக்கு கையால் சல்யூட் வைக்காமல், ராணுவ ஸ்டைலில் வலதுபக்கம் தலையைத் திருப்பி மரியாதை செய்து கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
உலகுக்குத் தன்னை உத்தமனாகக் காட்டிக் கொண்ட ஹிட்லர், ஒரு விஷயத்தில் விட்டுக் கொடுக்க வில்லை. ‘பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஜெர்மனியே அதிகப் பதக்கங்கள் வெல்ல வேண்டும். ஆரியர்களே வீரியமானவர்கள் என்று நிரூபித்தே தீர வேண்டும்’ என்ற ரகசியமாகக் கட்டளை இட்டிருந்தார்.

ஜெர்மானிய வீரர்களுக்கு ‘தேச வெறியை’ ஊட்டும் விதத்தில் பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன. நம் தேசத்துக்குப் பெருமை சேர்க்க நாம் இதில் வென்றே ஆக வேண்டுமெனக் களத்தில் ஆவேசமாகச் செயல்படக் கூர்தீட்டப்பட்டனர்.
1936 பெர்லின் ஒலிம்பிக்கின் இறுதியில் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்தாலும், ஒரு கருப்பரிடமும், ஓர் இந்தியரிடமும் ஹிட்லரின் ஆரிய வெறி படுதோல்வி அடைந்தது.


3. இருவர் ராஜ்ஜியம்!

வாசலுக்கே வந்து வெற்றிலை பாக்கு வைத்து ஹிட்லர் அழைத்தாலும் சரி, நாங்கள் பெர்லின் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கிறோம்’ என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தது சோவியத் ரஷ்யா. தவிர, பல நாடுகளில் உள்ள யூத விளையாட்டு வீரர்கள், பெர்லின் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார்கள். ஸ்பெயின் ஒருபடி மேலே சென்று, அதே சமயத்தில் பார்சிலோனாவில் போட்டி ஒலிம்பிக் ஒன்றை நடத்தத் திட்டமிட்டது. அதற்காகப் பல்வேறு ஏற்பாடுகளும் நடந்துவந்த நிலையில், ஸ்பெயினில் மக்கள் புரட்சி வெடித்ததால், போட்டி ஒலிம்பிக் புஸ்வானமாகிப் போனது.

19 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், 5 யூதர்கள் உள்பட 312 வீரர்களை அமெரிக்கா அனுப்பிவைத்தது. ‘நாங்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை மிகுந்த மதிப்புடன் நடத்துவோம்’ என்று புன்னகைத்தது ஜெர்மனி. அதிகபட்சமாக 348 வீரர்களை ஜெர்மனி களமிறக்கியிருந்தது. 1932 ஒலிம்பிக்ஸில் ஜெர்மனி மூன்று தங்கப்பதக்கங்கள் பெற்று ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், 1936 பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஜெர்மனி, 89 பதக்கங்களை அள்ளி முதலிடத்தைப் பிடித்தது. அதில் 33 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம்.

எப்போதும் உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா, 56 பதக்கங்களுடன் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டது. ஒரே ஒலிம்பிக்கில் ஒன்பதாம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு வருவதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். நாஜிக்கள் ஏமாற்றுகிறார்கள் என்று கிளம்பிய சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை.

அந்தச் சூழலில் சர்வதேச ரசிகர்களின் பார்வையும் (ஜெர்மானியர்கள் உள்பட) ஒரு வீரரின் மேல் குவிந்திருந்தது. அவர் அமெரிக்கத் தடகள வீரரான 23 வயது ஜெஸி ஓவன்ஸ். கருப்பினத்தைச் சேர்ந்தவர். வறுமையை தன் மனவலிமையால் வென்று மேலே வந்தவர். இருந்தாலும் சொந்த தேசத்திலேயே அவர் எதிர்கொண்ட இனவெறி இன்னல்கள் ஏராளம். அதையெல்லாம் மீறி, உலகம் உற்றுக் கவனிக்கும் அமெரிக்கத் தடகள வீரராக அசத்திக் கொண்டிருந்தார்.

1935ல் ஜெஸி, தன் முதுகுத் தண்டின் வால் எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தாலும், மிச்சிகெனில் நடந்த பிக் டென் சாம்பியன்ஷிப்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டார். கீழே குனிந்து தரையைத் தொட முடியாத வலியுடன் தடகளத்தில் ஓடினார். தடதட வேகத்தில், 100 மீட்டரில் உலக சாதனை நேரத்தைச் சமன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் நீளம் தாண்டி, புதிய உலக சாதனை படைத்தார். அதற்கடுத்த முப்பதே நிமிடங்களில் 220 யார்டு ஓட்டத்தில் மற்றுமொரு உலக சாதனையை வசப்படுத்தினார்.
தொடர்ந்து 220 யார்டு தடை தாண்டும் ஓட்டத்தில் முதலாவதாக வந்தார். ஆக, அடுத்தடுத்த சாதனைகளால் 1936 ஒலிம்பிக்ஸில் அமெரிக்காவுக்கு தங்கம் அள்ளித்தரப்போகும் அசகாய வீரராக ஜெஸி ஓவன்ஸ் பேசப்பட்டார். பெர்லினில் வந்திறங்கிய ஜெஸியை சர்வதேச இளம் ரசிகைகள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அதேசமயம், ஜெஸியை அங்கிருந்து அடித்துத் துரத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஒரு கூட்டம் திரண்டிருந்தது. பலத்த பாதுகாப்புடன் ஜெஸி, ஒலிம்பிக் கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

’ஜெஸியின் முன்பு ஜெர்மனி வீரர்கள் ஒன்றுமில்லாமல் போய்விடுவார்களோ’ என ஜெர்மானியர்களுக்கு உள்ளூர பயம்தான். ஜெஸியின் போட்டிகளைக் கூர்ந்து கவனித்தார் ஹிட்லர். நீளம் தாண்டுதலுக்கான தகுதிச் சுற்று. லஸ் லாங் என்ற ஜெர்மானிய வீரர், முதல் வாய்ப்பிலேயே தகுதி பெற, ஹிட்லர் முகத்தில் அத்தனை உற்சாகம். நீளம் தாண்டுதலில் ஜெர்மனி தங்கப்பதக்கம் வென்றே தீர வேண்டும் என்பதற்காகவே ஹிட்லர், லஸ் லாங்குக்கு ரகசியப் பயிற்சிகள் கொடுத்து தயார் செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தார் ஜெஸி. அதுவே அவரைப் பதட்டத்துக்குள்ளாக்கியது.

கவனச்சிதறல். ஜெர்மனி ரசிகர்களில் எதிர்ப்புக் குரல்கள். பதக்கம் வெல்லாவிட்டால் தன்னை அமெரிக்கர்கள் இனவெறியால் எப்படியெல்லாம் குத்திக் கிழிப்பார்கள் என்ற மன அழுத்தம். ஜெஸி தடுமாறினார். தவறுக்கு மேல் தவறு செய்தார். அப்போது லஸ் லாங், ஜெஸியிடம் வந்தார். அன்புடன் பேசினார். அக்கறையும் நம்பிக்கையும் ததும்பும் வார்த்தைகள் பேசி, ஜெஸியின் பதட்டத்தைக் குறைத்தார். ஜெஸியும் லஸ் லாங்கும் நெருங்கிப் பேசுவதைக் கண்டதும் நாஜிக்களின் கண்களில் கனல். தெளிவு பெற்ற ஜெஸி, தெம்புடன் நீளம் தாண்டி, இறுதிச் சுற்றுக்குத் தகுதியடைந்தார்.
‘நாளை தங்கம் உங்களுக்கே! இன்றே வாழ்த்திவிடுகிறேன்!’ லஸ் லாங் அன்புடன் ஜெஸியின் கைகளைப் பற்றினார். ’இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா!’ ஜெஸி நெகிழ்ந்தார்.

மறுநாள். நீளம் தாண்டுதல்  - இறுதிப் போட்டியில் முதலில் தாண்டிய லஸ் லாங் அபாரமாக புதிய உலக சாதனை படைத்தார். மைதானமே மகிழ்ச்சியில் அதிர, ஹிட்லரின் முகத்தில் கர்வமும் பெருமிதமும். அடுத்த ஓவன்ஸ் நீளம் தாண்ட, ஹிட்லரின் முகம் தொங்கிப் போனது. ஆம். லஸ் லாங்கின் சமீபத்திய சாதனையை சுடச்சுட முறியடித்து புதிய உலக சாதனை. அந்த ஒலிம்பிக்கில் ஜெஸி ஓவன்ஸ், நான்கு பிரிவுகளில் (நீளம் தாண்டுதல், 100மீ, 200மீ, 4X100மீ) தங்கப்பதக்கங்கள்  வென்று புதிய சாதனை படைத்தார். ஆரியர்களே வீரியமானவர்கள் என்ற ஹிட்லரின் பொய்ப் பிரசாரம் அங்கே ஜெஸி ஓவன்ஸால் ஆட்டம் கண்டது. நிறவெறி பிடித்த அமெரிக்கர்களின் முகத்திலும் கரியைப் பூசி நெஞ்சை நிமிர்த்தினார் ஜெஸி ஓவன்ஸ்.

(பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஜெஸி ஓவன்ஸ் : வீடியோ

களத்தில் பல்வேறு விளையாட்டுகளில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியதும் உண்மை. ஆனால், ஒரே ஒரு விளையாட்டில் இந்தியாவை யாரும் நெருங்க முடியவில்லை. ஹாக்கி. அதிலும் சர்வதேச வீரர்களையும் தன் அசாத்தியத் திறமையால் அடக்கி மண்டியிட வைத்தார் ஓர் இந்தியர். அவர்... தியான் சந்த்.1905ல் உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர். 1922ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தவர். ஆகச்சிறந்த ஹாக்கி வீரர். 1928 ஒலிம்பிக்ஸில் இந்தியா ஹாக்கியில் தங்கம் வெல்லக் காரணமானவர் இவரே.

களத்தில் அவரது கட்டுப்பாட்டுக்குள் ஹாக்கி பந்து வந்துவிட்டால், எதிரணியினர் அதைக் கைப்பற்றுவது சிரமம். இவர் ஹாக்கி மட்டைக்குள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறாரா என்று ஒருமுறை ஜப்பானியர்கள் சோதனை செய்து பார்த்ததும் உண்டு. அதற்கு பதில் சொல்லும் விதமாக, ஒரு போட்டியில் சாதாரண வாக்கிங் ஸ்டிக்கை வைத்து, களமிறங்கி கோல்கள் அடித்துக் காட்டினார் தியான் சந்த்.

1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி ஃபைனலில் இந்தியா, அமெரிக்காவை 24-1 என்ற கோல் கணக்கில் புறமுதுகிட்டு ஓடச் செய்தது. அதில் தியான் சந்த் அடித்த கோல்கள் 8.
1936ல் பெர்லினுக்கு இந்தியா சார்பில் 27 வீரர்கள் சென்றிருந்தனர். 4 தடகள வீரர்கள், 3 மல்யுத்த வீரர்கள், பளுதூக்கும் வீரர் ஒருவர், ஹாக்கி அணியில் 19 பேர். ஹாக்கி அணியின் கேப்டனாக தியான் சந்த். இந்தியா சுலபமாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அங்கு எதிரணி ஜெர்மனி. டிரெஸ்ஸிங் ரூமில் பிரிட்டிஷ் தேசிய கீதத்தைப் பாடச் சொல்லி அணி மேலாளர்கள் வற்புறுத்தினர். இந்தியக் கொடியை ஏற்றி, வந்தே மாதரம் பாடலை பாடலைப் பாடிவிட்டுக் களமிறங்கினார் தியான் சந்த்.

ஜெர்மனி வென்றே தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஹிட்லரும் கேலரியில் அமர்ந்திருந்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் ஜெர்மனி விட்டதைப் பிடிக்குமென அதன் ரசிகர்கள் கனவு காண, இந்தியா விஸ்வரூபம் எடுத்தது. இந்திய வீரர்களின் ஆக்ரோஷத்தைச் சமாளிக்க இயலாமல் திணறியது ஜெர்மனி. மைதானத்தில் கைகலப்பு. ஜெர்மனி கோல் கீப்பர் தியான் சந்த் மீது வேண்டுமென்றே மோதியதில் அவரது பல் ஒன்று உடைந்து போனது. முதலுதவி பெற்று வந்த தியான் சந்த், ‘ஜெர்மானியர்களுக்கு பாடம் கற்றுத் தந்தே தீர வேண்டும்’ என்று மேலும் ஆவேசத்துடன் அணியுடன் பரபரவென இயங்கினார். போட்டியின் முடிவில் இந்தியா, 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3 கோல்களை அடித்திருந்த தியான் சந்த், ஹிட்லரை ஆக்கிரமித்திருந்தார்.
(1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ் இந்தியா - ஜெர்மனி ஹாக்கி இறுதிப் போட்டி வீடியோ: https://www.youtube.com/watch?v=095gsjCEg_k)


மறுநாள் ஹிட்லர், தியான் சந்தைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைத்திருந்தார். தியான் சந்த் சென்றார். ‘ஜெர்மனியின் ராணுவத்தில் மதிப்புமிக்க பதவி அளிக்கிறேன். இங்கேயே இருந்துவிடுங்கள்’ என்று வாய்ப்பளித்தார் ஹிட்லர். ‘தங்கள் அன்புக்கு நன்றி. இந்தியாவில் எனக்குப் பெரிய குடும்பம் இருக்கிறது. என்னால் இங்கிருக்க முடியாது’ என்று தன்மையாக மறுத்துவிட்டார் அவர். ஜெர்மனியின் ஹாக்கி அணியில் இணைந்துவிடுமாறு ஹிட்லர் அழைத்ததாகவும், ‘நான் இந்தியன், என் தேசம் தவிர வேறெந்த அணிகளுக்கும் விளையாட விருப்பமில்லை’ என்று தியான் சந்த் பதிலளித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.

1936 பெர்லின் ஒலிம்பிக்கை ஆகச் சிறப்பாக நடத்திக் காட்டியதன் மூலம், ‘ஜெர்மனி யூதர்களின் எதிரி’ என்ற இமேஜ் தூள் தூளாகிப் போயிருந்தது. ஒலிம்பிக்ஸின் முடிவில் சர்வதேச அளவில் ஹிட்லர், மாபெரும் தலைவராக மதிப்பு பெற்றார்.
அடுத்த ஒலிம்பிக் 1940ல் டோக்கியோவில் என்று ஒலிம்பிக் கமிட்டியினர் திட்டமிட்டிருந்தனர். அதை எப்படியெல்லாம் நடத்தலாம் என்று ஜப்பானியர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். ‘உங்கள் யாருக்கும் எதையும் திட்டமிடும் உரிமை கிடையாது. அடுத்தடுத்து உலகில் என்ன நடக்க வேண்டும் என்பதை நானே திட்டமிடுவேன்’ என்று தனக்குள் கொக்கரித்துக் கொண்டார் ஹிட்லர்.


4. தங்கப்பதக்கம் இல்லாத ஒலிம்பிக்!
அவர் பெயர் ஜீயஸ். ஒலிம்பியா மலையில் வாழ்பவர்; வானத்தின் கடவுள்; அதில் தோன்றும் இடியின் கடவுளும் அவரே; கடவுள்களுக்கெல்லாம் அரசரும் அவரே; காமத்தில் கரைகண்டவர்; பெண்களை ஆராதிப்பவர்.  மன்னிக்கவும். கடவுளல்லவா. அப்படிச் சொல்லக்கூடாது. ஏகப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கை அளித்தவர். அதனால், ஏகப்பட்ட கடவுள்களை வாரிசாகக் கொண்டவர். இப்பேர்ப்பட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஜீயஸ் என்கின்றன கிரேக்க புராணங்கள்.
அவரை மகிழ்விப்பதற்காகப் பண்டைய கிரேக்கர்கள்கிரீஸின் ஒலிம்பியா நகரத்தில் விழா எடுத்தார்கள்அதன் ஒரு பகுதியாக தடகளப் போட்டிகளை நடத்தினார்கள்பண்டைய கிரேக்கத்தின் வெவ்வேறு நகரங்களைராஜ்ஜியங்களைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டார்கள்கிமு 776 முதல் கிபி 393 வரை பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் (பொதுவாக ஆண்டுகளுக்கு ஒருமுறை)நடைபெற்றனகிபி 393ல் கிறித்துவ மதத்தை அரச மதமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனஅதன் ஒரு பகுதியாக பாரம்பரிய ஒலிம்பிக் போட்டிகள் நிறுத்தப்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிலர்ஒலிம்பிக் என்ற பெயரில் சிறிய அளவில் போட்டிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தி வந்தனர்இதையெல்லாம் பிரெஞ்சுக் கல்வியாளரும் வரலாற்று ஆய்வாளருமான பியெரி டி கோபெர்டின் கவனித்து வந்தார்அவருக்கு சர்வதேச அளவில் பல தேச வீரர்களை வரவழைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்;பண்டைய ஒலிம்பிக்குக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததுசமூகத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்த கோபெர்டின்பலருடன் இணைந்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். 1894ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார்முதல் நவீன ஒலிம்பிக் போட்டியைஅதன் பிறப்பிடமான கிரீஸில் 1896 ஏப்ரலில் நடத்த முடிவு செய்தார்கள்.இப்படியாக ஒலிம்பிக்குக்கு புத்துயிர் கொடுத்த கோபெர்டின்நவீன ஒலிம்பிக்கின் தந்தையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.
கிமு ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பான்ஏதெனிக் என்ற விளையாட்டரங்கம்பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுமுதல் ஒலிம்பிக்குக்காக மீண்டும் புதுப்பிக்கப்பட்டது, 60 ஆயிரம் பேர் அமரும் வகையில்கிரீஸ்,அமெரிக்காஇங்கிலாந்து,ஆஸ்திரேலியாபல்கேரியாசிலி,டென்மார்க்இத்தாலிஸ்வீடன்,பிரான்ஸ்ஜெர்மனிசுவிட்சர்லாந்து,ஹங்கேரிஆஸ்திரியா ஆகிய 14நாடுகள் முதல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டனஆசியாவிலிருந்து எந்த நாடும் இடம்பெறவில்லைஏப்ரல் அன்று ஆரம்பித்த ஒலிம்பிக்கில் கிரீஸின் அரசர் முதலாம் ஜார்ஜ் கலந்து கொண்டார்.கிரேக்கக் கவிஞர் காஸ்டிஸ் பலாமாஸ் இயற்றிகிரேக்க இசைக்கலைஞர் ஸ்பைரைடான் சமராஸ் இசையமைத்த ‘ஒலிம்பிக் கீதம்’ பாடப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்டவர்களெல்லாம் முறையாகப் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் இல்லைஏதாவது விளையாட்டு கிளப்களில் உறுப்பினராக இருந்தவர்கள்விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள், ‘சும்மா போய்த்தான் பார்ப்போமே’ என்ற ஆர்வக்கோளாறில் வந்தவர்கள் என்று விதவிதமான கேரக்டர்கள் கலந்துகொண்ட ஒலிம்பிக்ஸ் அது.
இந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கே பரிசு வழங்கப்பட்டதுஅதிலும் பட்ஜெட் கட்டுப்படியாகாது என்பதால் தங்கம் கிடையாதுமுதல் பரிசு வெள்ளிப் பதக்கம்ஆலிவ் மாலைஇரண்டாம் பரிசு தாமிரப் பதக்கம்லாரல் மாலைமூன்றாவது இடம்பிடித்தவர் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டாலும் எதுவும் கிடையாது.
1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளும் இருந்தன.ஆனால்அதற்கென தனியாக நீச்சல் குளம் கட்டப் பணம் இல்லை. ‘எல்லாரும் படகுல ஏறுங்கஏறியாச்சாகடலுக்குள்ள போப்பா!’என்று நீச்சல் வீரர்களை குறிப்பிட்ட தொலைவுக்கு கடலுக்குள் அழைத்துச் சென்றனர்அங்கிருந்து குதித்து கரையை நோக்கி நீந்தச் செய்தனர்ஆக்ரோஷ அலைகள்கடும் குளிர்கடல் நீச்சலில் அனுபவமின்மை போன்ற காரணங்களினால் பலரும் திணறினர்உயிர் பயம் சூழ மீண்டும் படகைத் தேடினார்கள்.
அந்தக் கடலுக்குப் பழகிய கிரீஸ் வீரர்களையே சுலபமாக முந்திக் கொண்டு சென்றார் அல்பிரெட் ஹாஜோஸ் என்ற ஹங்கேரிய வீரர்அசத்தலாக நீந்தி வேகவேகமாகக் கரையேறினார். 100மீ, 1200மீ ஃப்ரீஸ்டைல் பிரிவுகளில் முதலிடம் பிடித்தார் ஹாஜோஸ். 500 மீட்டர் போட்டியிலும் நீந்த அவருக்கு ஆசைதான்ஆனால், 100மீ போட்டி முடிந்த உடனேயே 500 மீ ஆரம்பித்ததால் ஹாஜோஸால் கலந்து கொள்ள முடியவில்லைமறுநாள், ‘ஹங்கேரியின் டால்பின்’ என்று பத்திரிகைகள் ஹாஜோஸைப் புகழ்ந்தன.
ஹாஜோஸின் நினைவில் தன் பதின்மூன்றாவது வயதில் நிகழ்ந்த மறக்கவியலாத துன்பியல் சம்பவம் நிழலாடியதுஅவர் கண்முன்பாகவே அவரது தந்தை ஆற்றில் மூழ்கி இறந்து போனார். ‘என் அப்பாவுக்கு நீச்சல் தெரிந்திருந்தால் பிழைத்திருப்பார் அல்லவா’ கண்கள் கசிந்தனதந்தையின் இழப்புதான் ஹாஜோஸை வெறியுடன் நீச்சல் கற்க வைத்தது என்பதுசோகமான பின்னணி .
அமெரிக்க வீரரான ராபர்ட் காரெட்குண்டு எறிதலில் பயிற்சி பெற்றவர். ‘கிரீஸ் ஒலிம்பிக்ஸ்ல வட்டு எறியுற போட்டி இருக்குதுகுண்டுக்கு பதிலா வட்டுஅவ்வளவுதான்நீ வேணா போய்ப்பாரு’ என்று ஒருவர் ஆலோசனை சொன்னார்ராபர்ட் தனக்குத் தெரிந்த கொல்லரிடம் வட்டு ஒன்றை செய்யச் சொன்னார்அவர் கற்பனையில் செய்து கொடுத்த வட்டு 14 கிலோ இருந்தது. ‘இவ்வளவு கனமெல்லாம் எறிய முடியாது.உருட்டித்தான் விடணும்வட்டே எறிய வேண்டாம்!’ என்று பின்வாங்கினார் ராபர்ட்.
ஏதென்ஸில் பயன்படுத்தப்படும் வட்டு சுமார் இரண்டே கால் கிலோதான் இருக்கும் என்ற உண்மை தெரிந்தபின்,சந்தோஷமாகப் பெட்டி படுக்கையுடன் ஏதேன்ஸ் கிளம்பினார் ராபர்ட்வட்டு எறிதல் கிரீஸின் பாரம்பரிய விளையாட்டுகிரீஸ் வீரரும் வட்டு எறிதலில் கில்லியுமான பனோஜியோடிஸ் என்பவர்,ஸ்டைலாக வட்டு எறிய மைதானம் அதிர்ந்தது. ‘இப்படித்தான் எறிய வேண்டுமா’ என்று அவரைப் பார்த்து கற்றுக் கொண்டு ராபர்ட் களமிறங்கினார்அவர் எறிந்த வட்டு பார்வையாளர்கள் மத்தியில் சென்று விழமைதானத்தில் சிரிப்பொலிபின் மூச்சைப்பிடித்துமுக்கி முனகி முழு மூச்சுடன் வட்டை எறிந்தார். 29.15 மீ சென்று விழுந்ததுமைதானமே மூர்ச்சையானதுஆம்,ராபர்ட்டுக்கே முதலிடம்தவிரகுண்டு எறிதலிலும் முதலிடம் பிடித்தார். மறக்காமல் தன்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டார் ராபர்ட். அந்தளவுக்கு அவருக்கே அதிர்ச்சியாக இருந்தது, அவரது சாதனை.
1900ல் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கும் ராபர்ட்,வட்டையும் குண்டையும் தூக்கிக் கொண்டு போனார்.வட்டு எறிதலில் ஏதென்ஸில் கைகொடுத்த அதிர்ஷ்டம்,பாரிஸில் கைவிட்டது.முறையான பயிற்சி இன்றி எறிந்ததால் காற்றில் வட்டு சகல திசைகளிலும் பறந்தது.சிலமுறை மரங்களில் மோதி விழுந்ததுராபர்ட் தகுதி இழந்தார்.
அதேசமயம்குண்டு எறிதலில் சுலபமாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்ஆனால்அதில் அவர் கலந்து கொள்ளவில்லை.காரணம்இறுதிப்போட்டி ஞாயிறு அன்று நடைபெற்றது. ‘அடப்போங்கய்யாசன்டே எனக்கு ஹாலிடே!’ என்று ஹாயாக இருந்துவிட்டார் ராபர்ட் காரெட்.
 
முதலாம் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ‘பெண்களா? அவங்க மைதானத்துல இறங்கி விளையாடறது சரிப்படாது. ஒழுக்கம் கெட்டுப் போயிரும். அதுக்கான தகுதியும் திறமையும் அவங்களுக்குக் கிடையாது. போட்டியெல்லாம் சுவாரசியமா இருக்காது. அதனால பெண்கள், தங்களோட மகன்களை திறமையா, வலிமையா வளர்த்து போட்டிக்கு அனுப்புற வேலையைப் பார்த்தா மட்டும் போதும்’ என்று பெண்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைத்தார் ஒலிம்பிக்கின் தந்தை கோபெர்டின். தவிர, பண்டைய ஒலிம்பிக்கிலும் பெண்களுக்கு இடமிருந்ததில்லை.

அது பல பெண்களுக்குக் கோபத்தைக் கொடுத்தது. அதில் ஒரு பெண் மட்டும், இந்தத் தடையை எல்லாம் மீறி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்க்கமாகக் களமிறங்கினாள். தான் மட்டும் அதில் கலந்து கொண்டு சாதித்துவிட்டால், தனக்குப் பெயர் கிடைக்கும், புகழ் கிடைக்கும், ஆணாதிக்க மனப்பான்மையை ஒழியும். பெண்களும் விளையாடுவதற்கான தடை உடையும். அனைத்தையும்விட தன் வறுமைக்கு ஒரு தீர்வும் உண்டாகும். யோசித்த அந்தப் பெண், மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்குவதற்காக ஆண் வீரர்கள் குவிந்திருந்த அந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள், தனி ஒருத்தியாக.