Powered By Blogger

Wednesday, November 23, 2016

அறிவியல் சொல்லும் ஆன்மிகம்!

காலம்தொட்டு நம் தமிழர் மரபில் கோவில் கட்டி கும்பிட்டு வருவது வழக்கம். மன்னர்களும் மாமனிதர்களும் அந்தக் காலத்திலேயே பிரம்மாண்ட கோவில்களைக் கட்டி வழிபட்டு வந்தனர். ‘அவன் சாமி கும்பிடுறதால தாண்டா அவன் உடம்பும் வாழ்க்கையும் ஆரோக்கியமா இருக்கு’ என பேசிக் கொள்வார்கள். உண்மையாகவே நாம் கோவிலுக்குப் போகும்போது நம் மனதிலும் உடலிலும் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அந்த புத்துணர்ச்சி எப்படி நம் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கிறது… இதோ ஓர் அறிவியல் பூர்வமான அலசல்!
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் அந்தக் காலத்திலேயே கோவில்கள் கட்டியிருக்கிறார்கள். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான். இதன் குறிப்பு.கோயில்களில் ஒரு அபரிமிதமான காந்த சக்தியும், நேர்மறை ஆற்றலும் அதிகம் கொண்டிருக்கும். வட துருவமும் தென் துருவமும் இணையும் அந்த சிறிய இடத்தில் தான் கடவுளின் சிலை வீற்றிருக்கும். அதை நாம் கர்ப்ப கிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
மூலஸ்தானத்தில் சிலைக்கு கீழே செப்புத் தகடுகளை வைத்து பதிக்கப்பட்டிருக்கும். இந்த செப்புத் தகடுகள் அந்த காந்த ஆற்றலை ஈர்த்து வெளியே கொண்டு வரும் ஆற்றலை உடையது. அந்த மூலஸ்தானத்தில் மூன்று பக்கமும் சிலைக்கு நெருக்கமாக சுவரை எழுப்பி, ஒரு பக்கம் மட்டும் பக்தர்கள் உள்ளே வந்து கடவுளை வணங்கும் வண்ணமாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஒரு பக்கம் திறந்திருக்கும் வழியின் மூலமாகத்தான் அந்த காந்த ஆற்றல் நமக்கு கிடைக்கிறது.
அது மட்டுமின்றி கோவிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த காந்த ஆற்றல் கோவில் கருவறையின் இடமிருந்து வலமாக பாய்கிறது. அந்தச் சுற்றுப் பாதையில் நாம் மூலஸ்தானத்தை சுற்றும்போது காந்த ஆற்றலும் நம் உடலை முழுமையாக வந்தடைகிறது. காந்த ஆற்றலும் நேர்மறை ஆற்றலும் நம் உடலுக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒருவித சக்தியை கொடுக்கிறது.கோவிலின் கருவறையில் எப்போதும் ஒரு விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். மேலும் கோவில் விக்கிரகத்திற்கு பின் புறமும் ஒரு விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். ஆனால் இப்போது விக்கிரகத்திற்கு பின்புறம் மின்சார விளக்குகளையே எரிய விடுகிறார்கள். விளக்கில் இருந்து வெளிப்படும் ஒளி, காந்த ஆற்றலை உந்தி வெளியே தள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது.
அது போக மந்திரம் சொல்லும் போது மணியடிப்பதும், அங்கே செய்யப்படும் அபிஷேகம் அந்த ஆற்றலை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரி விதமான காந்த ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம், கற்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 அறையில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மட்டும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொண்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடத்தில் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த ஆற்றலை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கற்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் பாத்திரத்தில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை தொடர்ந்து உண்பவர்களுக்கு உடலில் எந்த நோயும் ஏற்படுவதில்லை என்பது அறிவியல் பூர்வமான உண்மை. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான். வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்தப் படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம். கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல ஆற்றல்களை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் சக்தியை பற்றி கொள்ளுமாம்.எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜியும் வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும்போது ஒரு உற்சாகம் கிடைக்கிறது.
அது போக கோயிலின் கொடி மரத்திற்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி. அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளிப் பிரகாரத்தை காக்கும் இன்னொரு பாதுகாப்பான். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால், மின்னலால் ஏற்படும் மின் அழுத்தத்தை நியூட்ரல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

நீங்கள் நலமாக இருப்பதற்கான 10 அறிகுறிகள் இவைதான்!

அறிகுறிகள்
`ங்களைச் சுற்றி இன்னமும் அழகோடு இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்… மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் ஆனி ஃப்ராங்க்.
ஆனி ஃப்ராங்க், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனில் வாழ்ந்த யூதச் சிறுமி. இவரும் ஹிட்லரின் வதைமுகாமில் இறந்துபோனவர்களில் ஒருவர்தான். நாஜிப் படைகளுக்கு பயந்து, இரண்டாண்டுகள் ஓர் இடத்தில் ஒளிந்திருந்தபோது ஆனி எழுதிய `தி டயரி ஆஃப் எ யங் கேர்ள்’ நாட்குறிப்பு உலகப் பிரசித்தி பெற்றது. ஹிட்லரின் படையால் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை வலி மிகுந்த வார்த்தைகளோடு விவரிக்கிறது அவருடைய நாட்குறிப்பு. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு `எந்த நேரமும் நம்மை அள்ளிக்கொண்டுபோய், வதை முகாமில் போட்டுவிடுவார்கள்’ என்கிற சூழ்நிலையில் ஆனி ஃப்ராங்க் எழுதுகிறார்… `…மகிழ்ச்சியாக இருங்கள்!’ நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அதற்கு முன்னால் சில விஷயங்களைப் பார்ப்போம்.
`என்னப்பா… சாதாரண இன்கம் அண்ட் எக்ஸ்பெண்டிச்சர் கணக்கு… அக்கவுன்டன்ஸியில பால பாடம்… அதை டேலி பண்ண முடியலை உனக்கு…’ கடிந்துகொள்கிறார் மேனேஜர். ஒரு கணக்கு உதவியாளராக இருக்கும் நாம் சுருங்கிப்போகிறோம்.  
`தெனோமும்தானே வாங்கிட்டு வர்றே… சர்க்கரை போடாம காபி வாங்கிட்டு வரத் தெரியாது?’ எரிந்துவிழுகிறார் அதிகாரி. ஒரு ப்யூனாக நாம் கூனிக் குறுகி நிற்கிறோம்.
அலுவலகம் போகும் அவசரம்… ஏற்கெனவே தாமதம்… வழியில் நின்று போகிறது இருசக்கர வாகனம். எவ்வளவு உதைத்தும் கிளம்பாமல் அடம்பிடித்து நிற்கிறது. சிக்னலில் சின்னாபின்னப்பட்டு, வண்டியை உருட்டிக்கொண்டு போனால், இருக்கிற ஒரே ஒரு மெக்கானிக் ஷாப்பும் ஷட்டவுண்! ஒரு சராசரி சென்னைவாசியான நாம் பதைபதைத்து, என்ன செய்வதென்று அறியாமல் ரோட்டில் நிற்கிறோம்… 
இவையெல்லாம் சிறிய பிரச்னைகள்… தீர்த்துவிடக்கூடியவை. உண்மையில், எவ்வளவு பெரிய சிக்கலாக, கஷ்டமாக இருந்தாலும்கூட அவையும் தீர்க்கக்கூடியவையே. என்ன… அவற்றுக்கான வழிமுறைகள் மட்டும் மாறுபடலாம். `எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குது?’, `நான் என்ன பாவம் செஞ்சேன்… என்னை இந்தப் பாடுபடுத்துறியே சாமி…’, `இதெல்லாம் ஒரு பொழைப்பா… ச்சீ… நாய் பொழைப்பு…’, `என்னால முடியலை…’ இப்படியெல்லாம் சாதாரண மனிதர்களாக புலம்பிப் புலம்பி மருகிப்போகிறோம். `உனக்கும் கீழே உள்ளவர் கோடி…’ என்ற கண்ணதாசனின் வரிகளை ரசிக்க முடிகிற நம்மால், அதைக் கடைப்பிடிக்க முடிவதில்லை. தேவையற்ற, எளிதில் தூக்கியெறியக்கூடிய விஷயங்களை எல்லாம் மூளையில் ஏற்றிக்கொண்டு, அன்றாடம் நொந்து திரிவதே நம் வாழ்க்கைமுறையாகிவிட்டது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… பின்வரும் 10 அறிகுறிகள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் தெரிகின்றனவா என ஒப்பிட்டுப் பாருங்கள்… பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். 
இனி 10 அறிகுறிகள்…  
1.தலைக்கு மேல இருக்கு கூரை… போதாதா பாஸ்? 
இருக்க வீடில்லாமல், ஒண்ட ஒரு குடிசைகூட இல்லாமல் நடைபாதையில், ஊருக்கு வெளியே மரத்தடியில், கோயில் சுற்றுப் பகுதிகளில், ரயில்வே ஸ்டேஷனில், பெரிய பேருந்து நிறுத்தங்களில் இரவு வாழ்க்கையை நடத்துகிறவர்கள் இந்தியாவில் லட்சக்கணக்கானோர். `இந்தியக் குடிமகன்’ என்கிற அங்கீகாரம் இல்லாமல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அடையாளங்கள் இல்லாமல் இருப்பவர்கள் அவர்கள். வெளுத்து வாங்குகிற வெய்யிலோ, அடித்துப் பெய்கிற மழையோ நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. குடியிருக்க வாடகைக்கோ, சொந்தமாகவோ ஒரு வீடு என்று இருக்கிறதுதானே… நீங்கள் பாக்கியவான் சார்… இயற்கை, உங்களை ஆதரித்துக்கொண்டிருக்கிறது. 
2. வயிறு நிறைய சாப்பிட்டாச்சு
சோமாலியா… இன்னும் பல ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்குக்கூட சாப்பிட ஒன்றும் கிடைப்பதில்லை. வெறும் மண்ணைத் தின்று வயிறு வீங்கித் திரியும் குழந்தைகளை நெட்டில் பார்த்திருக்கிறீர்களா? அந்தத் துயரம் நமக்கு வேண்டாம்… இன்று காலை டிபன், மதியம் லஞ்ச், இரவு டின்னர் எல்லாம் உங்களுக்கு உத்தரவாதம்தானே… நீங்கள் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். 
3. இதயம் ஆரோக்கியமாக துடிச்சுக்கிட்டு இருக்கு… அப்புறம் என்ன?
`ராத்திரி படுத்தாரு… காலையில எந்திரிக்கலை… தூக்கத்துலயே உயிர் போயிடுச்சு…’ என்பது பாமரர் புலம்பல். உறக்கத்தில் இதயத் துடிப்பு நின்றுபோனதால்அவர் இறந்திருப்பார் என்பதே உண்மை.  காலை எழுந்தது முதல் இரவு படுத்து உறங்கும் வரை உங்கள் இதயம் உங்களுக்காக ஒத்துழைத்து, விடாமல், சரியாகத் துடித்துக்கொண்டிருக்கிறதுதானே… பிறகென்ன… உங்களை இயற்கை, அரவணைத்துக் காக்கிறது என்று அர்த்தம். 
4. மத்தவங்களுக்கு நல்லது நினைச்சோம்!
பேருந்தில் பயணம். சிக்னல். இடதுபக்கம், தன்னை அந்தப் பக்கம் அழைத்துப் போய் யாராவது சேர்க்க மாட்டார்களா… என்ற பரிதவிப்போடு நிற்கிறார் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி. `அய்யய்யோ… நாம மட்டும் இந்த பிளாட்ஃபார்ம் ஓரமா இருந்திருந்தா, அவரைக் கொண்டுபோய் அந்தப் பக்கம் விட்டிருக்கலாமே..!’ என நினைக்கிறீகளா? இது போதும்… இந்த நல்ல சிந்தனை உங்களுக்கு இருப்பது பெரிய விஷயம். இயற்கை, உங்களைக் கைவிடாது! 
5. குடிக்க சுத்தமான தண்ணி கிடைச்சுது!
தண்ணீர்… இதற்காக ராஜஸ்தான் எல்லாம் போக வேண்டாம். நம் மாநிலத்தில் இருக்கும் பல ஊர்களில் தண்ணீர் பஞ்சம். நல்ல தண்ணீருக்கு, தாக வேட்கையில் உலகின் பல நாடுகளில் அலையோ அலை என்று அலைகிறார்கள் பாஸ்… இது உண்மை. வீட்டில் காசுகொடுத்து ஃபிக்ஸ் செய்த ஆர்.ஓ வாட்டரோ, 30 ரூபாய் கொடுத்து வாங்கும் மினரல் வாட்டரோ, அலுவலகத்தில் அளவில்லாமல் குடிக்க தண்ணீரோ… ஏன்… குறைந்தபட்சம் கார்ப்பரேஷன் தண்ணீரையாவது நீங்கள் குடிக்கிறீர்கள்தானே! இயற்கை, உங்களை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. 
6. யாரோ ஒருத்தருக்கு உங்க மேல ரொம்ப அக்கறை..! 
`நல்லா இருக்கீங்களா...?’, `சாப்டீங்களா..?’, `பார்த்துப் போங்க..!’, `வண்டியில போகும்போது ஜாக்கிரதைப்பா!’, `உடம்பு சரியில்லைன்னா லீவு போட்டுட்டு டாக்டர்கிட்ட போக வேண்டியதுதானே’, `என்ன வேலையா இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிட்டுடணும்’… இது போன்ற வாசகங்களில் ஏதாவது ஒன்றையாவது இன்று நீங்கள் கேட்டீர்களா? இதற்குப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உற்றமும் சுற்றமும் சூழ வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை (அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி) பிறகென்ன… இயற்கை உங்கள் மீது பெருங்கருணையோடு இருக்கிறது! 
7. மன்னிச்சுட்டீங்க… மன்னிச்சுட்டீங்க..!
சகிப்புத் தன்மை இருக்கிறதா உங்களுக்கு? அப்படியானால், நீங்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்று அர்த்தம். கனமான செருப்பணிந்த ஒருவர், பேருந்து நெரிசலில் உங்கள் காலை மிதித்துவிட்டு, ‘சாரி’ என்ற ஒற்றை வார்த்தையோடு நகர்ந்திருக்கலாம்... நீங்கள் எதிர் வார்த்தை பேசாமல் நின்றிருப்பீர்கள். ஆடி, சித்திரை மாதங்களில் வீட்டுக்கு நேர் எதிரே கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் இருந்து சத்தமாக அம்மன் பாடல் கேட்பதாக இருக்கலாம்… `ஒரு வாரம்தானே…’ என்கிற ரீதியில் உங்கள் அன்றாடப் பணிகளை இரைச்சலுக்கு மத்தியில் நகர்த்தியிருக்கலாம்… இவ்வளவு ஏன்… பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சக ஊழியர் கேட்கும் அர்த்தமற்ற, அபத்தமான கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் நிதானமாக, சரியாக பதில் சொல்பவராக இருக்கலாம்… இதுபோல எது வேண்டுமானாலும் இருக்கட்டும்… நீங்கள் பொறுமை காக்கிறீர்களா? உங்களுக்கு மன்னிக்கும் மனப்பான்மை அதிகம் என எடுத்துக்கொள்ளலாம். இயற்கை, உங்களுக்கு என்றென்றும் துணை நிற்கும். 
8. உடுத்த உடை இருக்கு!
`கபாலி’ போல கோட், சூட்கூட வேண்டாம்... அலுவலகத்துக்கோ, வேறு பணிகளுக்கோ, வெளியில் செல்லவோ அணிந்து செல்ல உங்களிடம் கண்ணியமான தோற்றம் தரும் உடைகள் இருக்கின்றனவா? அதுகூட வேண்டாம் பாஸ்… மானத்தை மறைக்கிற உடை உங்களிடம் உண்டுதானே… நீங்கள் அதிர்ஷ்டசாலி! இயற்கை, உங்களை மனதார நேசிக்கிறது என்று பொருள். 
9. நம்பிக்கை இருக்குல்ல..? 
இந்த மாத, வார, அன்றாட சேல்ஸ் டார்கெட்டோ, ப்ராஜக்ட்… எதுவாகவும் இருக்கட்டும். `இது என்ன பெரிய மலையா? நான் கில்லி… முடிச்சிடுவேன்ல?’ என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அன்றாடப் பாடை விடுங்கள்… எப்படியாவது சமாளித்து வாழ்க்கையை ஓட்ட முடியுமென்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அது கூட வேண்டாம்… அடுத்த வேளை உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை… இவையெல்லாம் உத்தரவாதமாகக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அப்படிப் போடுங்க! இந்த நம்பிக்கை போதும்… இயற்கை, உங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ளும். 
10. மூச்சுவிட முடியுது
`ஏ யப்பா… என்னா பொல்யூஷன்!’ அங்கலாய்ப்பதை விடுவோம். நடமாடும்போதோ, அமர்ந்திருக்கும்போதோ, உறங்கும்போதோ காற்று சீராக உள்ளே வந்தும் போயும்… நீங்கள் நன்றாக சுவாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே… மூச்சு என்பது வெறும் காற்று சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை சார். அது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். எதையும் எதிர்கொள்ள நீங்கள் திராணியோடு இருக்கிறீர்கள்… உங்களால் எதையும் சமாளிக்க முடியும் என்கிற தைரியத்தைக் கொடுக்க உயிர் உங்கள் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இயற்கை, இன்னும் பன்னெடுங்காலம் உங்களை பத்திரமாக வைத்திருக்கும். 

காதலையும் காமத்தையும் ஆண் மனம் குழப்பிக் கொள்வது ஏன்?

மனம்

ஆதி உண்மை இது. எப்போதும் ஆண் வேறு, பெண் வேறு. அவர்களின் உடல், மனம் எல்லாம் வேறு. ஒரே ஒற்றுமை... இருவரும் மனித இனம் அவ்வளவுதான்.
ஆண்களுக்கு வேட்டை குணம் உண்டு. இரை கிடைக்கும் வரை அந்த இரையைத் துரத்திப் பிடிப்பது இயற்கை. சில சமயம் அந்த இரையாக பெண்களைக் கருதிவிடுவதும் நடக்கும். சுவாரசியமான இந்த விளையாட்டில் ஆண், பெண்ணை வீழ்த்தியவுடன் அவளைத் தன்னுடையவள் என்று கருத ஆரம்பிக்கிறான். எனவே அவள் மீது ஓர் அலட்சியம் ஏற்படுகிறது. சொந்தம் கொண்டாடும் ஒரு வேட்கையில் அதிகாரமும் வரலாம்.
பெண், தான் வேட்டையாடப்படும்வரை மிக அதிகாரம் மிக்கவளாக, உறவைத் தன் கையில் வைத்திருப்பவளாக, தான் சொல்லும் செயலை தன் ஆணைச் செய்யவைக்க முடிந்தவளாக இருப்பாள். இனி இந்த ஆண்தான் தனக்கு என்று தீர்மானம் செய்தவுடன் அன்பில் இணைந்து, குழைந்து அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவாள்.
அதுவரை சவாலாக, சுவாரசியமாக இருந்த பெண், தன் ஈர்ப்புத்தன்மையை இழக்க ஆரம்பிக்கும் புள்ளி இதுதான். அதேசமயம், பெண்ணுக்கு இந்தப் புள்ளியில்தான் தன் ஆணின் மேல் அக்கறை அதிகமாகும். தன் பாதுகாப்பு உணர்வு பலப்படும். இனி தன் இனவிருத்திக்கு இவன்தான் என்ற உணர்வில் தன்னை முழுமையாக ஒப்படைப்பாள். கிட்டத்தட்ட பல பெண்கள் அன்பின் சரணாகதி நிலையிலேயே இருப்பர். சிலர் விதிவிலக்கு. திருமணம், குழந்தைகள் போன்ற பிடிப்புகள் வேறு விஷயங்கள்.

இந்த விளையாட்டில் சுவாரசியம் இழக்கும் ஆணுக்கு ஒரு கட்டத்தில் சலித்துப்போகும். அந்தச் சமயத்தில் மெதுவாக அந்தப் பெண்ணை விட்டு விலக ஆரம்பிப்பான். ஆனால் அவளுக்கோ விலகல் பிடிபடாது. 'சரி நாம் மிகவும் ஆதிக்கமாக இருந்துவிட்டோம் போல' என்று தன்னை சரிசெய்ய ஆரம்பிப்பாள். எல்லாவற்றையும் அவனுக்குப் பிடித்தவாறு மாற்றிக்கொள்வாள். எனவே இன்னும் அவளின் சுயம் இழப்பாள்.
சுயம் இழந்த பெண்ணின் இயல்பு பறிபோகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மனதளவில் கூடுதல் விலகல் நடக்கும். இன்னும் மோசமாக 'மை டியர் மார்த்தாண்டன்' படத்தில் வருவதுபோல 'தங்கள் சித்தம் மன்னா' என்ற அளவுக்குப் போவாள்.
இணை, துணை எல்லா உறவுகளுமே சரிசம நிலையில் இருக்கும்போது மட்டுமே ஈர்ப்பு வரும். பெண் மதிப்பு குறைந்து போகும்போது, அவள் மீதான பிரமிப்பு அகன்று காதலும் குறைய ஆரம்பிக்கும். ஆண் அவளிடம் இருந்து இன்னும் விலகுவான். அப்போது அவள் இன்னும் நெருக்குவாள். ஆணுக்கு தன் சுதந்திரம் பறிபோவது பிடிக்காது. அந்த வெறுப்பில் இறுக்கமாவான். பெண்ணுக்கு அவன் மாற்றத்துக்கான காரணம் புரியாமல் அவன் என்ன செய்தாலும் சந்தேகப்பட்டு சண்டை போட ஆரம்பிப்பாள். தன்னை நம்பாத பெண் மேல் அவனுக்குக் கோபம் அதிகமாகும். விலகல் விஸ்வரூபமெடுத்து நிற்கும்.

பல்வேறு ஆண் பெண் பிரச்னைகளின் ஆணிவேர்க் காரணம்... ஆணை ஆணின் இயல்போடு பெண்ணால் அணுக முடியாததும், பெண்ணைப் பற்றிய புரிதலே இல்லாமல் ஆண் அவளை அடைய நினைப்பதும்தான்.
பெண்ணுக்கு அரவணைப்பும், அதன் மூலம் கிடைக்கும் பாதுகாப்பும் முக்கியமென்றால், ஆணுக்கு உடற் பசி தீரலும், சுதந்திரமும் மிக முக்கியம். அதைத் தவிர தன்னுடைய வேலை மிகமிக முக்கியம். என்னதான் காதலாக இருந்தாலும் வேலை நேரத்தில் நெருக்கும் பெண் மேல் அவருக்கு வெறுப்புதான் வரும்.
பெண்களுக்கு உடனே எல்லாவற்றையும் பேசித் தீர்த்து, உடனே அனைத்தும் சரியாகிவிட வேண்டும். ஆண் மௌனத்தை ஆயுதமாக எடுப்பான். இவள் வார்த்தைகளை வாதை செய்யும் அளவுக்கு கூர் தீட்டி அனுப்புவாள். ஐந்தாம் உலகப்போர் ஆண், பெண் காதலில்தான் இனி அதிகம் நடக்கும்.
இந்தியாவில் காமம் பற்றிய புரிதல் இல்லாமலே வளர்ந்துவிடுகிறார்கள். இதில் பெண்கள் பூஜ்ஜியம் என்றுகூட சொல்லலாம். இனக்கவர்ச்சி, உடல் சார்ந்த ஈர்ப்பு எல்லாவற்றையும் காதலோடு குழப்பிக்கொள்வது நடக்கிறது. பெண்ணை உடலாகப் பார்க்கும் வழக்கம் இங்கு அதிகம். அவளை அடைய என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்ய ஆரம்பிக்கிறான் ஆண். மோகம் தீர்ந்த பின் அவனுக்கு 'அவ்ளோதானா?' என்று தோன்ற ஆரம்பிக்கிறது.
பெண்ணுக்கோ உடலைக்கூட மனதால் மட்டுமே தொட வேண்டும். அவளால் இவன் விட்டு விலகிச் செல்வதை தாங்க முடியாது. உயிர் பிரியும் வலியாக உணர்வாள். தன்னை நடுத்தெருவில் விட்டுவிட்டதாக, ஏமாற்றியதாகக் கதறுவாள். ஆண், இந்த உணர்வு வேகம் கண்டு பயந்து திரும்பவே வர முடியாத இடத்துக்குப் போய்விடுவான். இதுதான் பெரும்பாலான காதல்களில் நடக்கிறது.
இந்த இடத்தில் பெண் புரிந்துகொள்ள வேண்டியது, ஆணின் உணர்வுகளை. ஆண் மிகமிக முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது இது... ஒரு பெண், அதுவும் இந்திய சூழ்நிலையில் ஒருவனிடமே மனம் போக வேண்டும் என்ற சிந்தனைத் திணிப்பை சமூக வழக்கமாகக் கொண்ட பெண், ஆணை நிஜமாக விரும்பிவிட்டால், அவள் மனம் மாறுவது மிகக் கடினம். இந்தியா என்றில்லை, உலகம் முழுவதும் பெண் அவ்வளவு எளிதில் தான் நேசித்த ஆணை விட்டுச் செல்வதில்லை. பெண்களை பலவீனப் படுத்த சமூகம் பலவிதத்தில் ஈடுபடுவதையும் இந்த இடத்தில் நினைவு கூர வேண்டியிருக்கிறது.
ஆண்களுக்கு ஒரு கோரிக்கை. காமம்தான் உங்களின் எதிர்பார்ப்பு என்றால், அதைத் தோழமையோடு சொல்லிவிடுங்கள். 'என்னால் கமிட்மென்ட்கள் கொடுக்க முடியாது' என்று அவளிடம் தெளிவாக வரையறுத்துவிடுங்கள். காதலையும், காமத்தையும் குழப்பி ஒரு பெண்ணச் சிதைப்பது, அதனால் உங்களுக்கு ஏற்படும் குற்ற உணர்வில் தவிப்பது போன்றவை தவிர்க்கப்படும்.
ஆணும் பெண்ணும் இணைவதே இயற்கை, பிரிவது அல்ல. ஆண்கள் துரோகம் செய்வதில்லை, பெண்கள் ஏமாற்றப்படுவதில்லை. ஆனால் அப்படித்தான் சமூகம் சொல்லிக்கொடுக்கிறது. தெளிவாகப் பேசுங்கள். உங்கள் அன்பை, ஆசையை நிர்ணயுங்கள். ஆண்கள் உலகம், அவர்களின் மனது பற்றி பெண் குழந்தைகளுக்கும், பெண்களின் மனது, அவர்களின் பிரச்னை பற்றி ஆண் குழந்தைகளுக்கும் சொல்லிகொடுத்து, நடுவில் இருக்கும் இரும்புச் சுவற்றை தகர்ப்பதுதான் முன்னேறிக்கொண்டு இருக்கும் சமூகத்துக்கு அவசியத் தேவை.

உலகின் திகில் கிளப்பும் தீவுகள்

ஒரு நொடி கண்ணை மூடுங்கள். ஒரு தீவு... அங்கு யாருமே இல்லை... நீங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்கள். கொஞ்ச தூரம் நடக்கிறீர்கள். சில பாழடைந்த வீடுகள்... மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஓர் அமானுஷ்யம்... இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்?. கதையல்ல... நிஜம். அப்படி  குறித்த வரலாறு இது... 
கிளிப்பர்டன் தீவு (Clipperton Island) : 
1914-ம் ஆண்டு... மெக்சிகோவின் தென் - மேற்குப் பகுதியில் இருக்கும் இந்தத் தீவை  பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பாதுகாக்க 100 பேரை குடியமர்த்துகிறார், அன்றைய மெக்சிகோ அதிபர். ஒரு கலங்கரை விளக்கத்தையும் அமைக்கிறார். இவர்களுக்கான உணவுகள் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கப்பலில் அனுப்பப்பட்டு வந்தது. 
திடீரென மெக்சிகோவில் உள்நாட்டு கலவரம் வெடிக்க, இந்தத் தீவையும், இந்த 100 பேரையும் மறந்து போயினர். உண்ண உணவில்லாமல் போராடி, ஒவ்வொருத்தராக செத்து மடிய ஆரம்பித்தனர்.  கடைசியாக லைட் ஹவுஸ் வாட்ச்மேன், அல்வாரிஸும் , 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர். பித்துப் பிடித்து போன அல்வாரிஸ், அந்தப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொல்ல ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில், தன் குழந்தைகளைக் காக்க டார்ஸா ரென்டன் என்கிற பெண்மணி அவனை கொலை செய்கிறார். இரண்டாண்டுகள் உயிர் பிழைத்திருந்த 4 பெண்கள் மற்றும் 7 குழந்தைகளை 1917-ல், அந்த வழி வந்த அமெரிக்காவின் ஒரு கப்பல் காப்பாற்றியது. அன்று முதல், இன்று வரை மனித கால் தடம் பதியாமல், மர்ம பூமியாகத் திகழ்கிறது கிளிப்பர்டன் தீவு...
திகில் தீவுகள்
கன்கஞ்சிமா தீவு (Gunkanjima Island) :
ஜப்பானின் நாகசாகி அருகே இருக்கும் ஒரு தீவு. இந்தப் பகுதியில் 1800 களில்  நிலக்கரிச் சுரங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பிரபல மிட்சுபிஷி நிறுவனத்தின் இந்த சுரங்கத்தில் வேலை செய்ய மக்கள் தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 16 ஏக்கர் பரப்பரவிளான தீவு முழுக்க, காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக் கூடங்கள் என அனைத்தும் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரை பணியாளர்கள் அனவரும் கொத்தடிமை முறையிலேயே பணிபுரிந்து வந்தனர். 1960களின் முடிவில் சுரங்கம் மூடப்பட்டது. மக்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்தவாறு வெளியேறினர். ஒரு வரலாற்றுத் துயரத்தின் சாட்சியாக நீலக் கடலின் நடுவே கான்கிரீட் தீவாக நின்று கொண்டிருக்கிறது கன்கஞ்சிமா.
திகில் தீவுகள்

ராஸ் தீவு (Ross Island) :
அண்டார்டிக் பிரதேசத்தில் இருக்கும் ஒரு தீவு. 1841-ல் ஜேம்ஸ் ராஸ் என்ற பிரிட்டிஷ் ஊர்சுற்றி இந்த தீவைக் கண்டுபிடித்தார். அவரின் பெயரே இதற்கு சூட்டப்பட்டது. எரிபஸ், டெரர் என இரு எரிமலைகள் இங்கு உள்ளது. ராஸ் அமைத்த கூடாரங்கள் இன்னும் இந்த பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்டார்டிக் பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அடித்தளமிட்டது இந்த தீவு தான். 1979-ல் ஒரு மிகப்பெரிய விமான விபத்து ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் இங்கு இறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத் தீவின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று வரை யாருமே சென்றதில்லை.
திகில் தீவுகள்
அல்டாப்ரா தீவு (Aldabra Island) :
செஷல்ஸ் நாட்டின் தீவு. லட்சக்கணக்கான ஆமைகள் வசிக்கும் தீவு. 1888-ல் செஷல்ஸ் அரசாங்கம் இந்தத் தீவில் ஒரு கிராமத்தை உருவாக்கி மக்களை வாழச் செய்தனர். ஆனால், குடிநீர் ஆதாராமற்ற இந்தத் தீவில் மக்களால் தொடர்ந்து வசிக்க முடியவில்லை. இந்த வழி கப்பல்களில் போவோர் ஆமைகளை வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் ஆமைகளே அழியும் நிலை ஏற்பட்டது. ஆனால், 1950களுக்குப் பிறகு இந்த வழியில் போகும் கப்பல்கள் தீவை எட்ட பயப்படத் தொடங்கினர். காரணம் இன்றுவரைத் தெரியவில்லை. பல ஆண்டுகள் யாரும் அதன் அருகே போகவில்லை. இன்று ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
திகில் தீவுகள்
ஸ்ட்ரோமா தீவு (Stroma Island) :
திகில் தீவுகள்

ஸ்காட்லாண்டில் இருக்கும் சிறு தீவு. 1901யில் 375 பேர் வாழ்ந்த தீவில், 1961யில் 12 பேர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இன்று யாருமில்லை. ஒரேயொருவர் மட்டும் தன்னுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டபடி, அவ்வப்போது வந்து போகிறார். ஒரு காலத்தில் இந்த தீவு மக்களின் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருந்திருக்கிறது. தன்னிறைவு பெற்ற தற்சார்பு சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர். திடீரென மக்கள் தீவை விட்டு விலகியதற்கான உறுதியான காரணம் இன்று வரை தெரியவில்லை. வெளியேறிய மக்களும் காரணங்களைப் பேச மறுக்கிறார்கள். மக்கள் வெளியேறியத் தொடங்கியது முதல் இந்தப் பகுதியில் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகின. இன்றும் அலைகள் மிகச் சாதாரணமாக 12 அடி உயரம் வரை எழுகிறது. ஒரு அமானுஷ்யமான அமைதியோடு தனியே நின்று கொண்டிருக்கிறது ஸ்ட்ரோமா தீவு. 

Monday, October 24, 2016

மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப் படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.
வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.

ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்து அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.

1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது. அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.

பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாகபிபிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாகசிபிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாகடிபிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றதுடிபிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.

மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது. 1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.

டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.

ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும்நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon’s Grotto)” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல்உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.

ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோபெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லைஎன்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.

சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.