Powered By Blogger

Saturday, December 14, 2019

ஒரே செக்டார்... ஒரே பங்கு... நல்லதா? பங்குச்சந்தை பயில்வோம்!

 

பங்குச்சந்தை
பங்குச்சந்தையை `சூதாட்டம்' என்கின்றனர் பலர்; `பணக்காரர்களின் பொழுதுபோக்கு' என்கின்றனர் சிலர். ஆனால், பங்குச்சந்தையில் செய்த தவற்றைத் திருத்திக்கொண்டோ அல்லது ஆரம்பத்திலேயே எந்த ஒரு தவறும் செய்யாமலோ நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம். பங்குச்சந்தை என்பது முதலீடு செய்வதற்காக நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. சந்தையை நன்றாகப் புரிந்துகொண்டால், எளிய முறையில் பணத்தைச் சேர்க்கலாம். சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. 
பங்குச்சந்தை, சூதாட்டம்

நம் எல்லோருக்கும் பரிச்சயமான நிறுவனம் எம்.ஆர்.எஃப் டயர்ஸ். வெறும் 500 ரூபாயில் வர்த்தகத்தைத் தொடங்கிய இந்தப் பங்கின் இன்றைய விலை 68,000 ரூபாய். சிறந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து, அதை நீண்டகாலத்துக்கு வைத்திருந்தால், அபரிமிதமான லாபம் கிடைக்கும் என்பதற்கு எம்.ஆர்.எஃப் பங்கு சிறந்த உதாரணம். இப்போது புரிந்துகொண்டிருப்பீர்களே, பங்குச்சந்தை என்பது சூதாட்டம் அல்ல... சூட்சுமம்தான் என்பதை... பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 
1. பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகம் அல்லது நீண்டகால முதலீடு என எதுவாக இருந்தாலும் உணர்ச்சிரீதியாக உங்களை இணைத்துக்கொள்ளாதீர்கள். விளையாட்டில் வெற்றி - தோல்வி சகஜம் என்பதைப்போல, பங்குச்சந்தை வியாபாரத்தில் லாப - நஷ்டம் சகஜம் என்பதை முதலில் உணர்ந்து முதலீடு செய்யுங்கள். 
2. பங்குச்சந்தையில் எந்த ஒரு நிறுவனத்தின் பங்கும் அதன் `52 வார உச்சத்தில் வர்த்தகம் அல்லது இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தில் வர்த்தகம்' என உச்சத்தில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கும்போது அந்தப் பங்கை விற்பனை செய்து `கீழே இறங்கும்போது வாங்கிக்கொள்ளலாம்' என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். 
3. பி/இ விகிதத்தை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே எந்த ஒரு நிறுவனத்தின் பங்கையும் வாங்கலாம் என நினைக்காதீர்கள். ஒரு நிறுவனத்தின் பங்கின் தற்போதைய சந்தை விலை 100 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அதனுடைய ஒரு பங்கு ஆதாயம் (Earnings per share - EPS) மிகச் சமீபத்திய 12 மாதங்களுக்கு 10 ரூபாய் என எடுத்துக்கொள்வோம். அந்தப் பங்கின் பி/இ விகிதமானது 100/10=10. குறிப்பாக, `குறைந்த பி/இ விகிதமுள்ள பங்குகள் எப்போதுமே நல்லது; அதிக பி/இ விகிதமுள்ள பங்குகள் நல்லதல்ல' என நினைக்காதீர்கள். 
4. பங்குச்சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, உங்கள் பணத்தை ஒரே ஒரு துறையிலோ அல்லது ஒரே ஒரு நிறுவனத்தின் பங்கிலோ முதலீடு செய்யாதீர்கள். முடிந்தவரை நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் உள்ள துறைரீதியிலான பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். 
5. தினசரி வர்த்தகத்தில் பங்குகளை எப்போதுமே ஷார்ட் (பங்கை விற்பனை செய்து, பிறகு வாங்கிக்கொள்வது) செய்யாதீர்கள். ஒருவேளை சந்தை முடிவடைவதற்குள் அந்தப் பங்கை நீங்கள் வாங்கவில்லை என்றால், இறுதியில் அந்தப் பங்கு ஸ்கொயர் ஆஃப் செய்யப்பட்டு ஏலத்தில் அதிக இழப்பைச் சந்திக்கவேண்டிவரும். குறிப்பாக, கார்ப்பரேட் ஏலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அதிக நஷ்டத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது, உஷார். 
6. பங்குச்சந்தையில் `டார்கெட்' அல்லது `ஸ்டாப் லாஸ்' எனச் சொல்லப்படும் அனைத்தும் ஒருவகையில் சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸ் மட்டுமே. உண்மையில், இது வேலை செய்யலாம்... வேலை செய்யாமலும் இருக்கலாம். எனவே, ஒரு நிறுவனத்தின் பங்கை 100 ரூபாய்க்கு வாங்கி, 110 ரூபாய்க்கு டார்கெட் என்றால் அந்தப் பங்கின் விலை நிச்சயம் 110 ரூபாயை எட்டும் என்றில்லை. 109 ரூபாயைத் தொட்டபிறகும்கூட மீண்டும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 
7. பங்குச்சந்தையில் ஒரு நிறுவன பங்கின் சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸைப் பொறுத்தவரை அந்தப் பங்கின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. பங்குச்சந்தையில் ஒருவேளை அதிகப் பணத்தை நீங்கள் இழந்திருந்தால், அதை மீட்பதற்காகச் செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்து பணத்தை இழக்காதீர்கள். பங்குச்சந்தையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆழமான அறிவு, அனுபவம் அல்லது சந்தை வல்லுநர்களிடமிருந்து சிறந்த வழிகாட்டல் போன்றவை அவசியம் தேவை.







பங்குச்சந்தையை `சூதாட்டம்' என்கின்றனர் பலர்; `பணக்காரர்களின் பொழுதுபோக்கு' என்கின்றனர் சிலர். ஆனால், பங்குச்சந்தையில் செய்த தவற்றைத் திருத்திக்கொண்டோ அல்லது ஆரம்பத்திலேயே எந்த ஒரு தவறும் செய்யாமலோ நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம். பங்குச்சந்தை என்பது முதலீடு செய்வதற்காக நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. சந்தையை நன்றாகப் புரிந்துகொண்டால், எளிய முறையில் பணத்தைச் சேர்க்கலாம். சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 
பங்குச்சந்தை,
1. சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் வணிகம், விற்பனை, வருமானம், காலாண்டு முடிவுகள், செயல்திறன் உள்பட பல விஷயங்களை அலசி ஆராய வேண்டும். ஆனால், `ரமேஷ் சொன்னாரு, சுரேஷ் சொன்னாரு' என்று யாரோ ஒருவர் சொல்வதற்கிணங்க மோசமான பங்குகளில் முதலீடு செய்து பணத்தை இழக்கின்றனர். இனிமேலாவது உங்கள் நண்பரோ, உறவினரோ, யார் என்ன அறிவுரை சொன்னாலும் தாராளமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், அவற்றைக் குறித்த ஆழமான ஆலோசனைக்குப் பிறகே முதலீட்டு முடிவைத் தீர்மானியுங்கள். 
2. பங்குச்சந்தையில், அதிக கடன் வாங்கிய நிறுவனங்கள் எல்லாம் மிக மோசமான நிறுவனங்கள் என்றும், கடன் இல்லாத நிறுவனங்கள் எல்லாம் நல்ல நிறுவனங்கள் என்றும் நினைக்காதீர்கள். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் கடன் வாங்குகிறது என்றால், அந்த நிறுவனம் எதற்காகக் கடன் வாங்குகிறது, அந்தக் கடனை வைத்து அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதே தொடர்ந்து கவனித்திட வேண்டும். குறிப்பாக, சந்தையில் ஒரு நிறுவனத்தின் கடனைவிட அந்த நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதே மிக அவசியம். 
3. எந்த ஒரு வணிகத்திலும் நடைமுறை அறிவைவிட சிறந்தது வேறு எதுவுமில்லை. என்றாலும், பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, முதலீடு என்றால் `ஃபண்டமென்டல் அனாலிசிஸ்', வணிகம் என்றால் `டெக்னிக்கல் அனாலிசிஸ்' எனப் பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. சந்தையைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் அல்லது ஓரளவு தெரிந்தவர்கள்கூட இந்த இரண்டு அனாலிசிஸ்களைக் கற்றறிந்து முதலீடு அல்லது வணிகம் செய்வதே நல்லது. இவற்றைக் கற்றறிந்தால் பங்குச்சந்தையில் பணத்தைச் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை நிச்சயம் இழக்காமல் இருக்கலாம்.
4. `ஸ்டாப் லாஸ்' என்பது, நாம் வாங்கிய ஒரு பங்கின் விலை சரிந்தால், நாம் எந்த விலையில் அந்தப் பங்கிலிருந்து வெளியேற வேண்டும் என முடிவுசெய்வது. அதாவது, நம்மால் எவ்வளவு நஷ்டம் தாங்க முடியும் என்பதைப் பொறுத்து ஒரு விலையை நிர்ணயிப்பது. சந்தை சரிந்துகொண்டிருக்கிறது அல்லது பங்கின் விலை சரிந்துகொண்டிருக்கிறது என்றால், உடனடியாக உங்களது ஸ்டாப் லாஸ் விலையில் உங்கள் பங்கு விற்றுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கும், நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கும் `ஸ்டாப் லாஸ்' என்பது பெரிதாகத் தேவைப்படாது. தினசரி வர்த்தகம், எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அவசியம் ஸ்டாப் லாஸ் பயன்படுத்துவது நல்லது.
5. பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ என எவ்வளவு பெரிய நல்ல நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் நீங்கள் முதலீடு செய்துவந்தாலும், குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் முதலீட்டை மதிப்பாய்வு செய்வது மிக முக்கியம். அந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், செயல்திறன் போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் முதலீட்டைத் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பதைத் தீர்மானிப்பது நல்லது.
6. இப்போது, பங்குச்சந்தையில் பெரும்பாலானோர் `எஃப் அண்ட் ஓ' எனும் முன்பேர வர்த்தகத்தில்தான் பணத்தை இழக்கின்றனர். இதில் `குறைந்த முதலீடு, அதிக லாபம்' எனச் சொல்வார்கள். அதே சமயம், இதில் அதிக நஷ்டமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எஃப் அண்ட் ஓ வர்த்தகம் என்பது, கலை. எதுவுமே தெரியாமல் நஷ்டத்தைச் சந்திப்பதைவிட, இதில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. இல்லையெனில், இதுகுறித்து ஓரளவு தெரிந்த பிறகு வணிகத்தில் ஈடுபடுவதே நல்லது. 
7. தெருக்குத் தெரு டீக்கடையைப் போல, நம் ஊரில் நிதி ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் பல நிதி ஆலோசகர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அணுகுமுறை, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை எனப் பல விஷயங்களைக் கவனித்து, அதன்பிறகு ஆலோசனைகளைக் கேட்டு பங்குச்சந்தையில் முதலீட்டை மேற்கொள்வது நல்லது. நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஃபேமிலி டாக்டரை அணுகுவதுபோல, நிதி சார்ந்த விஷயங்களிலும் ஃபைனான்ஷியல் டாக்டரை அணுகி, அவரின் ஆலோசனைப்படி செயல்படுவது சிறந்தது.



பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக...
1. அறிமுகமில்லாத எந்த ஒரு புதிய தொழிலைத் தொடங்கினாலும் `ஆழம் தெரியாமல் காலை விடாதே' என்பார்கள். ஆனால், பங்குச் சந்தையில் பலரும் காலை விட்ட பிறகே ஆழத்தைப் பார்க்கின்றனர், பின் அழ ஆரம்பிக்கின்றனர். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, அவசரத் தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்யவே கூடாது; உபரியாக இருக்கும் பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் மில்லியன் டாலர் உண்மை. பங்குச் சந்தையில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அறிவின்மையால், விழிப்பு உணர்வின்றி, பேராசையால் முழுப்பணத்தையும் இழந்து விழிபிதுங்கி நிற்காதீர்கள். 
2. பங்குச் சந்தையில் யாருக்கு வருமானம் வருகிறோதோ இல்லையோ, புரோக்கிங் நிறுவனங்களுக்குப் பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் புரோக்கரேஜ் கமிஷன் வந்துவிடுகிறது. குறிப்பாக பெரும்பாலான புரோக்கிங் நிறுவனங்கள் இன்ட்ராடே கால்ஸ் (Intraday Calls) என்று சொல்லப்படும் `அன்றே வாங்கி, அன்றே விற்பனை' செய்யும் வழிமுறையை வற்புறுத்துவார்கள். காரணம், நீங்கள் ஒரு பங்கை வாங்கி, 10 ஆண்டுகள் கழித்து அந்த பங்கை விற்பனை செய்தால் அவர்களுக்கு புரோக்கரேஜ் கமிஷனும் கிடைக்காது, எந்த ஒரு பலனும் இருக்காது. ஆகையால், அவர்களின் ஆசை வார்த்தையில் வீழ்ந்துவிடாதீர்கள், உங்கள் வருமானத்தை இழக்காதீர்கள். மாறாக, அவர்கள் வழங்கும் பங்கு பரிந்துரைகள் ஆராய்ந்து, அவை வெற்றியடைகிறதா என்பதை பல முறை பார்த்த பிறகு அதன் அடிப்படையில் முதலீட்டு முடிவைத் தீர்மானிப்பது நல்லது. 
பங்குச்சந்தை
3. `எஃப் அண்ட் ஓ' எனும் ப்யூச்சர் அண்ட் ஆப்சன் முன்பேர வர்த்தகத்தில் குறைந்த பணத்தை வைத்து அதிக பங்குகளை வாங்கி வணிகம் செய்யாதீர்கள். உதாரணத்துக்கு, நிஃப்டி இப்போது 9,600 புள்ளிகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நிஃப்டி 9,800 கால் ஆப்சன் (Call Option) 10 ரூபாய், ஒரு lot size 10*50= ரூ.500 என்பதற்காக, ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே பணத்தை வைத்துக்கொண்டு,  10 lot-ஐ 5,000 ரூபாய்க்கு வாங்காதீர்கள். இதைவிட, பல புரோக்கிங் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் 5,000 ரூபாய் மட்டுமே பணம் வைத்திருந்தால்கூட, அவர்களுக்கு 50,000 ரூபாய் வரை வர்த்தகம் செய்ய வாய்ப்பளிக்கின்றனர். நிறுவனங்கள் அதிக பணத்தை வைத்து வணிகம் செய்ய வாய்ப்பளிக்கின்றார்களே என்பதற்காக, வர்த்தகம் செய்து உங்களுடைய முழுப் பணத்தையும் இழந்துவிடாதீர்கள். `அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு' என்பதை உணர்ந்து முதலீடு அல்லது வர்த்தகம் செய்யுங்கள். 
4. பங்குச் சந்தையில் முதலீடு அல்லது வர்த்தகம் எதுவாக இருந்தாலும் சரியான நேரம் வரை வரை காத்திருந்து அதன் பிறகு முதலீட்டைத் தொடருங்கள். கையில் பணம் இருக்கிறதே என்பதற்காக எந்த ஒரு பங்கிலும் தேவையில்லாமல் வணிகம் செய்யாதீர்கள். பங்குச் சந்தை எங்கும் ஓடிப் போகாது; எதிர்காலத்தில் பல சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடி வரும். கிடைக்கும் அந்த நல்ல சந்தர்பந்தத்திற்காக காத்திருந்து அதன் பிறகு வர்த்தகம் செய்யுங்கள். ஏனெனில் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, ஏற்ற, இறக்கம் என்பது இருந்தாலும் பல நாள்களில் சந்தை மந்தமாகத்தான் இருக்கும். ஆனால், சந்தை அல்லது ஒரு பங்கின் விலை எந்தத் திசையில் செல்லும் என்பதை யூகிக்கவே முடியாத நேரத்தில் தேவையில்லாமல் வர்த்தகம் மேற்கொள்ளாதீர்கள், பணத்தை இழக்காதீர்கள். 
5. பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் பலரும் பணத்தை முதலீடு செய்கின்றனர், வணிகம் புரிகின்றனர். ஆகையால், பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபங்களை அவ்வப்போது பதிவு செய்வது என்பது மிக முக்கியம். பங்குச் சந்தையில் ஒவ்வொரு முறை வணிகம் மேற்கொள்ளும் போதும் லாபத்தைப் பதிவு செய்வதற்காக அவசரப்படாதீர்கள். நீங்கள் ஒரு வேளை அவசரப்பட்டால், அதிக வருமானத்தைக் கூட இழக்க நேரிடலாம். அதேசமயம், உங்கள் ஆர்டரை தவறாகப் போட்டு நஷ்டங்கள் கூட ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதை உணருங்கள். ஆகையால், அளவுக்கு அதிகமாக அவசரப்படாதீர்கள், அவதிப்படாதீர்கள். 
6. பங்குச் சந்தையில் பலரும் பொதுவாக `வதந்தியை நம்பி ஒரு பங்கை வாங்கும் நிலையும், கிடைக்கும் செய்தியின் அடிப்படையில் ஒரு பங்கை விற்கும்' நிலைதான் நீடிக்கிறது. ஆனால், பங்குச் சந்தையில் செய்தி மற்றும் வதந்திகள் அடிப்படையில் எப்போதும் முதலீட்டு முடிவைத் தீர்மானிக்காதீர்கள். குறைந்தபட்சம் ஒரு நிறுவனம் குறித்து ஆராய்ச்சி செய்து அதன் அடிப்படையில் மட்டுமே முதலீட்டைத் தொடருங்கள் அல்லது வெளியேறுங்கள். 



1. `பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை ஏற்ற-இறக்கத்தை 80 சதவிகிதம் டெக்னிக்கல் அனாலிசிஸும், 20 சதவிகிதம் ஃபண்டமென்டல் அனாலிசிஸும் வைத்து நிர்ணயிக்கலாம்' என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், இது எல்லா சூழ்நிலைகளிலும் உதவாது. கடும் பொருளாதார வீழ்ச்சி, அரசின் ஸ்திரத்தன்மை, தீவிரவாதிகள் தாக்குதல் என, பங்குச்சந்தையைப் பாதிக்கும் முக்கிய நிகழ்வுகள் சந்தைக்குப் பாதகமாகவே முடியும். இதுபோன்ற சூழ்நிலையில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அவ்வளவாக உதவாது. ஆனால், அதேசமயம் எந்த ஒரு பங்கையும் அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், எந்த ஒரு தாக்கம் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உங்களுடைய முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொண்டுவாருங்கள். 
2. பங்குச்சந்தையில் உங்களுடைய பணத்தைப் போட்டு வணிகம் செய்வதற்கு முன், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முடிந்தவரை வீணாக்காமல் இருக்க `பேப்பர் டிரேடிங்' (Paper Trading or Mock Trading) எனச் சொல்லப்படும் காகித வர்த்தகம் செய்து பழகுங்கள். அதாவது, பணத்தை நேரடியாக பங்குச்சந்தையில் இறக்காமல், சந்தையை மட்டும் கவனித்து ஒரு பங்கை வாங்குவது, விற்பது என வெறுமனே பேப்பரில் செய்துபார்ப்பது. இதில் நிபுணத்துவம் கிடைத்த பிறகு வர்த்தகம் செய்வது நல்லது. நிஜத்தில் ஒன்றுமே இல்லாமல் குழந்தைகள் சோறு, குழம்பு, பொரியல் எனச் சமைப்பதுபோல நடிப்பார்களே, அதுபோல.
Share Market
3. பங்குச்சந்தையில் மட்டுமல்ல, இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் வணிகத்தை மையமாக வைத்தே தங்களுடைய நிறுவனத்தை நடத்திவருகின்றன. குறிப்பாக, பல நிறுவனங்கள் அதிக வருமானம் ஈட்டுவதற்காக அதிகம் பரிந்துரைப்பார்கள். ஆனால், கண்மூடித்தனமாக யாரோ ஒருவரின் பரிந்துரையை நம்பாதீர்கள். ஒருமுறைக்கு, பலமுறை அலசி ஆராய்ந்த பிறகு முதலீட்டு முடிவை நீங்களே தீர்மானியுங்கள். 
4. பங்குச்சந்தை வர்த்தகத்தில் மிகவும் அபாயகரமான மற்றும் ஆபத்தான விஷயம் எவை என்றால், `தினசரி வர்த்தகத்தில் ஷார்ட் அடிப்பது மற்றும் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன் வணிகத்தில் ஈடுபடுவது'. இந்த இரண்டிலும் எந்த அளவுக்கு வருமானம் வருகிறதோ, அதே அளவுக்கு நஷ்டம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எஃப் அண்ட் ஓ வணிகம் பற்றி உங்களுக்குப் புரியவில்லை அல்லது தெரியவில்லையெனில், தயவுசெய்து இதில் வர்த்தகம் மேற்கொள்ளாதீர். மாறாக, உங்களுக்குத் தெரிந்த நல்ல ஒருசில நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து அந்த நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் தொடர்ந்து முதலீடு மேற்கொள்ளுங்கள். வருமானத்தை உறுதியாக ஈட்டலாம். 
5. களமிறங்கிய பிறகு எந்த ஒரு நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டாலும், தயங்காமல் பயப்படாமல் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து முதலீட்டை மேற்கொண்டு வாருங்கள். ஆனால், எதிர்காலத்தில் அந்த நிறுவனம்குறித்து வரும் முக்கியச் செய்திகளைத் தொடர்ந்து கவனியுங்கள். காலாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது உங்கள் முதலீட்டில் லாபம் அல்லது நஷ்டம் என எது வந்தாலும், கொஞ்சம் மதிப்பாய்வு செய்து அதன் பிறகு முதலீட்டைத் தொடருங்கள். 
6. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பல காரணிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான முக்கியச் செய்திகள், நிறுவனத்தின் செயல்திறன், விற்பனை, வருவாய், கடன், பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உலகச் செய்திகள், இந்தியப் பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம், பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசியல் காரணிகள், பொருளாதாரக் காரணிகள், பொருளாதாரக் கொள்கைகள், நிதி கொள்கை (Fiscal Policy), பணவியல் கொள்கை (Monetary Policy), சார்ட் பேட்டன்கள், பரபரப்பூட்டும் விஷயம், முதலீட்டாளர்களின் பயம் மற்றும் பேராசை என அடுக்கிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் ஓரளவுக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பங்குச்சந்தையில் பணத்தைச் சம்பாதிக்க முடியாது. ஆகையால், பங்குச்சந்தையில் பணத்தைப் போட்டவர்கள்,  என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு முதலீட்டை மேற்கொள்ளலாம். 


1. `பங்குச் சந்தையைப் பொறுத்தவரை குறைந்த விலை கொண்ட (penny stocks) பங்குகளை வாங்குவது நல்லது; அதிக விலை கொண்ட பங்குகளை விற்று வாங்கலாம்' என்பது தவறான கண்ணோட்டம். பங்குச் சந்தையில் எந்த ஒரு பங்கிலும் அதன் வாழ்நாள் உயர்வு அல்லது அதன் வாழ்நாள் இறக்கத்தின்போது அந்த பங்கில் பெரும்பாலும் முதலீட்டை மேற்கொள்ளாமல் இருப்பதே நல்லது. 
2. பங்குச் சந்தையில் அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனப் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்வது என்பது உண்மையில் ஒரு நல்ல ஐடியா. ஆனால், இதை ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து எந்த ஒரு நிறுவன பங்கிலும் தொடர்ச்சியாக முதலீடு மேற்கொள்வது என்பது சரியாக இருக்காது என்கின்றனர். அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனத்துடன், கூடுதலாக அந்த நிறுவனத்தின் வளர்ச்சி, வருமானம், காலாண்டு முடிவு, கடன் உள்பட சில காரணிகளை இணைத்துக்கொண்டு அந்த பங்கில் தாராளமாக முதலீட்டை மேற்கொண்டு லாபம் ஈட்டலாம். 
3. ஒரு நிறுவன பங்கின் விலை திடீரென்று மிக குறைந்த விலையில் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்படாதீர்கள். ஒரு பங்கின் விலை மிகவும் குறைந்த விலையில் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, போனஸ், டிவிடெண்ட், நிறுவன பிரிப்பு நடவடிக்கை என சொல்லலாம். பங்குச் சந்தையில் நீங்கள் வாங்கும் பங்குகள் மற்றும் அதன் விவரங்கள் அனைத்தும் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். மாறாக, அந்த பங்கு விவரங்களை உங்களுடைய புரோக்கிங் நிறுவனம் அல்லது சப் புரோக்கர்களிடம் எந்த ஒரு ஆவணங்களையும் வழங்காதீர்கள். 
பங்குச்சந்தை
4. பங்குச் சந்தையில் யாருமே 100 சதவிகிதம் சிறந்த கில்லாடிகள் என்று சொல்லிவிட முடியாது. ஏன் நம் நாட்டில் எடுத்துக்கொண்டால்கூட சிறந்த நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்கள் கூட பல சமயங்களில் பல தவறுகளை செய்திருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் சிறப்பாக செயல்படாத பங்குகளை கூட வைத்திருக்கிறார்கள்.
பங்குச் சந்தையில் எப்போதுமே உங்களுடைய வருமானத்தை அல்லது நஷ்டத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். மற்றவர்களைவிட நீங்கள் குறைந்தளவே வருமானம் அல்லது நஷ்டத்தை ஈட்டி வரலாம். ஆனால், அவர்களுடைய கடந்தகால லாப, நஷ்டங்கள் உங்களுக்கு முழுவதுமாக தெரியாது. ஆகையால், பங்குச் சந்தையில் மற்றவர்களுடன் உங்கள் வர்த்தகத்தை ஒப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள், முதலீட்டைத் தொடருங்கள், லாபத்தை ஈட்டுங்கள்.
5. பங்குச் சந்தையில் ஒவ்வொரு முறையும் ஒரு பங்கினை வாங்கி விற்பதன் மூலம் நமக்கு லாபம் வருகிறோதோ, இல்லையோ புரோக்கிங் நிறுவனத்துக்கு கமிஷன் மூலமாக லாபம் கிடைத்து விடுகிறது. பெரும்பாலான பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் அதிக புரோக்கரேஜ் கட்டணங்களை வசூலிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன. ஒரு பங்கை ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கி விற்பதன் மூலம் ஒரு சிறிய தொகை கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த லாபத்தின் பெரும் பகுதி புரோக்கிங் கட்டணம், வரி என்றால் மீதி ஒரு லாபமும் இருக்காதே. ஆகையால் முடிந்தவரை நீங்கள் முதலீடு அல்லது வர்த்தகம் மேற்கொள்ளும் புரோக்கிங் நிறுவனங்களிடம், உங்கள் கமிஷன் கட்டணத்தை வெகுவாக குறைத்திட வற்புறுத்துங்கள். 
6. ஒரு பங்கின் விலை ஏற்ற, இறக்கத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருப்பதால் முதலீடு மேற்கொள்வதற்கு முன் அந்த பங்கினை தீர ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது. பங்குச் சந்தையில் ஒரே ஒரு பங்கு அல்லது பல பங்குகளில் உங்களுடைய மொத்த பணத்தையும் முதலீடு செய்யாதீர்கள். நீங்கள் எந்த பங்கில் முதலீட்டை மேற்கொண்டாலும் அந்த பங்கினை தொடர்ந்து கவனமாக பார்த்து வாங்குவது நல்லது. பங்குச் சந்தையில், எப்போதும் `ஒரு பங்கை குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்கலாம்' என்று நினைக்காதீர்கள். இது சாத்தியமில்லாத ஒன்று. நீங்கள் வாங்கிய ஒரு பங்கின் அடிப்படை சரியாக இருந்தால், அந்த பங்கின் விலை ஏறினாலும், இறங்கினாலும் எந்த பிரச்னையும் இல்லை. பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதிக்க சிறந்த வழிகளில் ஒன்று நீண்ட கால முதலீடு. இதை இப்பொழுதாவது உணர்ந்து நீண்ட கால நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள், பயனடையுங்கள்.

1. பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை அதிக அளவில் சரிவடைந்தால், அந்தப் பங்கின் விலையை சராசரி செய்வதற்காகக் கீழே வரும்போது வாங்கிக்கொள்ளலாம் என்பது பெரும்பாலான சமயங்களில் சரியாக இருக்காது. ஏனெனில், அந்தப் பங்கின் விலை எதுவரை சரிவடையும் என்பது யாருக்கும் தெரியாது. ஆகையால், ஒரு பங்கின் விலை அதிக அளவில் சரிவடையும்போது, நீங்களே முடிவெடுப்பதைவிட நல்ல ஆலோசகர்களைக் கலந்து ஆலோசித்த பிறகு, முதலீட்டைத் தொடருவதா, சராசரி செய்வதா அல்லது அதிலிருந்து வெளியேறுவதா என்பதை முடிவுசெய்யுங்கள். 
2. பங்குச்சந்தை முதலீடு அல்லது வர்த்தகம் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு முறை வர்த்தகத்தின்போதும் லாபமே வரும் எனச் சொல்லிவிட முடியாது. நஷ்டமும் வரலாம். அப்படி வந்தால் பயப்பட வேண்டாம். அதை சரிசெய்ய, சராசரி செய்யலாம் அல்லது ஹெட்ஜிங் (Hedging) மேற்கொள்ளலாம் எனத் தவறாகத் திட்டமிடாதீர்கள். இது எல்லா சமயங்களிலும் சரியாக வரும் எனச் சொல்ல முடியாது. ஆகையால், உங்களுக்குத் தெரியாத அல்லது குழப்பமான நேரத்தில் ஒரு பங்கில் வர்த்தகம் மேற்கொண்டு அதில் அதிக நஷ்டம் ஏற்படுவதைவிட, குறைந்த நஷ்டத்தில் இருக்கும்போதே அந்தப் பங்கிலிருந்து வெளியேறுவதுதான் புத்திசாலித்தனம். 
share market
3. பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் பலர் முதலீடு மேற்கொண்டிருந்தாலும், எஃப்.ஐ.ஐ. (FIIs), டி.ஐ.ஐ.(DIIs) மற்றும் ஹெச்.என்.ஐ (HNIs) போன்றோர் கோடிக்கணக்கில் முதலீடு மேற்கொள்கின்றனர். இவர்கள்தான் சந்தையைப் பெரும்பாலும் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். ஆகையால், தினசரி அல்லது குறுகியகால வர்த்தகம் மேற்கொள்ளும்போது உஷாராக இருப்பது நல்லது. நீண்டகால நோக்கில் ஒரு பங்கில் முதலீடு மேற்கொள்ளும்போது அந்தப் பங்கின் விலை குறைந்தாலும், கவலைப்படாமல் தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்ளுங்கள். 
4. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கிலிருந்து அதன் உரிமையாளர்கள் தங்கள் பங்குகளை வெகுவாகக் குறைக்கும்போது அந்தப் பங்கை விற்பது என்பது ஒரு நல்ல அறிகுறி.  ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடு மேற்கொண்டுவரும்போது அந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவை மட்டுமே வைத்து அந்தப் பங்கிலிருந்து வெளியேறுவது என்பது சரியானதல்ல. பங்குச்சந்தையில் குறைந்தது இரண்டு, மூன்று காலாண்டு முடிவுகளைப் பார்த்து, அதன் பிறகு ஆராய்ந்து முதலீட்டைத் தொடருவதா அல்லது வெளியேறுவதா என்பதை முடிவெடுங்கள். 
5. பங்குச்சந்தை நேற்று இருந்ததைப்போல் இன்று இருக்காது; இன்று இருப்பதைப்போல் நாளை இருக்காது. தினம்தோறும் சந்தை மாறிக்கொண்டேதான் இருக்கும். ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைக் கற்கலாம். பங்குச்சந்தையில் முதலீட்டைப் பொறுத்தவரை, `பாசிட்டிவ்' ஆக முதலீட்டை மேற்கொள்ளுங்கள். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக இருந்து, அந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது என்றால், சென்செக்ஸ்/நிஃப்டி உயர்ந்தாலும் இறங்கினாலும் கவலையடையத் தேவையில்லை. மாறாக, நீங்கள் மேற்கொள்ளும் முதலீட்டில் தாராளமாக முதலீட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுடைய முதலீடு லாபத்தை ஈட்டித்தரும். 
6. `பங்குச்சந்தையில் தினம்தோறும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும். பத்தாயிரம் மட்டுமே முதலீடு செய்துவிட்டு தினமும் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும். கடன் வாங்கி, நகையை விற்று பங்குச்சந்தையில் பணத்தைப் போட்டு சம்பாதிக்க வேண்டும். இழந்த பணத்தை மீட்க வேண்டும்' போன்ற மனநிலையைத் தவிருங்கள். பணம் சம்பாதிப்பதைவிட அதில் இழக்காமல் இருப்பதே மிக முக்கியம். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய குறைந்த பணம் இருந்தாலே போதுமானது. பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவதும் எளிது...  விற்பதும் எளிது. பங்குச்சந்தையில் நல்ல பங்குகளை வாங்கி, ஒரு வருடம் கழித்து விற்றால் வரக்கூடிய லாபத்துக்கு, வருமானவரியிலிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்படுகிறது.
7. `பங்குச்சந்தையில் தினமும் 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம்; 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்' எனப் பலரும் ஆசை வார்த்தை காட்டுவார்கள். ஆனால், பங்குச்சந்தை குறித்து அடிப்படை விஷயங்கள்கூட தெரியாமல், தினமும் ஐந்து ஆயிரம் சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு ஐந்து லட்சம் வரை இழந்தவர்கள் பலர். ஆகையால், பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகம் மேற்கொள்கிறீர்கள் என்றால், போதிய அறிவும் நேரமும் இருந்தால் மட்டுமே வர்த்தகம் மேற்கொள்ளுங்கள். இல்லையெனில், நீண்டகால நோக்கில் முதலீட்டை மேற்கொள்வதே நல்லது. பங்குச்சந்தையில் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஐந்து நல்ல துறைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்ல நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகளுக்காவது தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்ளுங்கள். வருமானத்தை ஈட்டுங்கள். 

பங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது ? நல்ல நல்ல நிறுவனத்தை அடையாளம் காண்பது : வருமானம்


index
இந்த பதிவை ஆரம்பிக்கும்  முன்பு, முந்தைய பதிவில் சொன்ன முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே திரும்பவும் பதிவு செய்ய வேண்டும் – “பங்குகளை வாங்கும்  போது, ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்குவதாக  நினைக்காமல்,நிறுவனத்தையே வாங்குவதாக எண்ண  வேண்டும்”. இந்த எண்ணம் இருந்தால் தான் வாங்கபோகும் பங்கை பற்றிய அனைத்து தகவல்களையும் சரிபார்த்து வாங்க ஒரு மிகுந்த ஈடுபாடு இருக்கும்.
சரி,இப்போது இந்த தலைப்பிற்கு வருவோம். முந்தைய தலைப்பில் சொன்னது  போல, ஒரு வளமான எதிர்காலம் உள்ள தொழில் துறைய  தேர்ந்தெடுத்த  பின்பு,  அடுத்து செய்ய வேண்டியது, அந்த துறையில், வருங்காலத்தில் நன்கு வளரக்கூடிய வாய்ப்புகள் உள்ள ஒரு நிறுவனத்தை தேர்வு  செய்வது. ஒரு துறை வளரக்கூடியது  என்றால், அந்த துறையில் பல நிறுவனங்கள்  ஈடுபட்டிருக்கும்.இந்த பல  நிறுவனங்களில், ஒன்றை தேர்வு செய்வது கொஞ்சம் கடினம்  என்றாலும், அதனை  எளிதாக்குவதற்கு, அந்த நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் வியாபார வளர்ச்சியை தெரிந்து கொள்ள சில காரணிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த  பதிவிலும், அடுத்த பதிவிலும் பார்ப்போம்.
  1. ஒரு பங்கின் மூலம் கடந்த நிதியாண்டில் கிடைத்த நிகர லாபம் (Earnings Per Share):
ஒரு நிறுவனம் ஒரு பங்கிற்கு எவ்வளவு ரூபாய் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் ஈட்டியது என்பதை தெரிந்து  கொண்டால், அந்த நிறுவனம் எந்த அளவுக்கு லாபகரமான நிறுவனம் என்பதை அறிந்து  கொள்ளலாம். ஒரு பங்கிற்கான லாபத்தை ஏன் பார்க்க வேண்டும்? மொத்த லாபத்தை வைத்து ஏன் ஒரு நிறுவனத்தை எடை போட கூடாது என்ற கேள்வி உங்களில் எழும்.  ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தை வைத்து அதனை அளவீடு செய்வதை  விட,ஒரு பங்கிற்கான லாபத்தை வைத்து அளவீடு  செய்யும்போது, அந்த நிறுவனத்தின் செல்யல்பாட்டை பற்றிய இன்னும் தெளிவான பார்வை  கிடைக்கும்.
உதாரணமாக, ராமு ஸ்டோர்ஸ், சோமு ஸ்டோர்ஸ் என்ற இரண்டு மளிகை கடைகள் இருப்பதாக  வைத்துக்கொள்வோம். ராமு ஸ்டோர்ஸ் கடையின் ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2015 வரையிலான காலத்திற்கான மொத்த லாபம் Rs. 50,000 என்றும், சோமு ஸ்டோர்ஸ் கடையின் ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2015 வரையிலான காலத்திற்கான மொத்த லாபம் Rs. 100,000 என்றும் வைத்துக்கொள்வோம்.
பொத்தம் பொதுவாக பார்த்தால், சோமு ஸ்டோர்ஸ் மிக லாபகரமான நிறுவனம் போல  தெரியலாம். ஆனால், அடுத்து வரும் கணக்கை பாருங்கள். அப்பொழுது இன்னும் தெளிவான பார்வை இந்த இரு நிறுவனங்களை பற்றி கிடைக்கும்
ராமு ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு தாரர்கள் 10 பேர் தலா 10000 முதலீடு செய்துள்ளனர்.
சோமு ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு தாரர்கள் 40 பேர் தலா 10000 முதலீடு செய்துள்ளனர்.
இப்போது, பங்கிற்கான லாபத்தை கணக்கிடும் போது, ராமு ஸ்டோர்ஸ் ஒரு பங்கின் மூலம் ஈட்டிய நிகர லாபம் = 50000 / 10 = Rs .5000
சோமு ஸ்டோர்ஸ் ஒரு பங்கின் மூலம் ஈட்டிய நிகர லாபம் = 100000 / 40 = Rs .2500
மொத்த லாபத்தை பார்க்கும்போது சோமு ஸ்டோர்ஸ்-ன் லாபம் இரட்டிப்பு போல தோன்றும், ஆனால் ஒரு பங்கிற்கான லாபத்தை பார்க்கும்போது ராமு ஸ்டோர்ஸ்-தான் சோமு ஸ்டோர்ஸ்-ஐ விட இரட்டிப்பு லாபத்தை வழங்கியுள்ளது. எனவே ராமு ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வது தான் உகந்த முதலீடு.
நாம் பார்த்த உதாரணம் போல, ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தை மட்டும்  பார்க்கும்பொழுது, அந்த நிறுவனம் சிறப்பானதாக தோன்றும், ஆனால் அந்த நிறுவனம் ஒரு பங்கிற்கு ஈட்டிய லாபத்தை கணக்கிடும் போது தான் அதனுடைய உண்மையான  செயல்திறனும், நிர்வாகத்தின் திறமையும் நமக்கு தெரிய வரும்.
ஒரு நிறுவனத்தின் EPS பற்றி தெரிந்து கொள்ள, அந்த நிறுவனத்தை BSE இணைய தளத்தில் (http://www.bseindia.com/) தேடி, Financials பகுதியில், EPS -ஐ பார்க்கலாம்.
ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கினால் கிடைக்கும் லாபத்தின் அளவு (EPS) உயர உயர, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்களின் நம்பிக்கை  உயரும். இதன் காரணமாக இந்த பங்கிற்கான தேவை (Demand) அதிகமாகும். Demand  அதிகமாகும்போது,இந்த பங்கின் விலையும் உயரும்.
2. மொத்த மூலதனத்திற்கான வருமானம் (ROCE  –  Return On Capital Employed):
ஒரு நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள உதவும் அடுத்த குறியீடு, அந்த நிறுவனத்தின் லாபம், மொத்த முதலீட்டில் எவ்வளவு சதவீதம் என்ற ஒரு குறியீடு. இது கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது
மொத்த மூலதனத்திற்கான வருமானம் (ROCE) = நிறுவனம் ஈட்டிய லாபம் / நிறுவத்தின் மூலதனம்.
உதரணமாக, பாபு ஹோட்டல், கோபு ஹோட்டல் என்ற இரண்டு உணவகம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
பாபு ஹோட்டலின் ஒரு ஆண்டிற்கான லாபம் : Rs 50000
கோபு ஹோட்டலின் ஒரு ஆண்டிற்கான லாபம் : Rs 50000
இரண்டு ஹோட்டல்களும் ஒரே அளவு லாபத்தை  ஈட்டியுள்ளன. எனவே இவ்விரண்டில் ஒன்றை தேர்ந்தேடுக்க மேலும் விவரங்கள் தேவை. அந்த கூடுதல் விவரத்தை, கீழ்க்கண்டவாறு வருமானம் மற்றும் மூலதனத்திற்கான விகிதத்திலிருந்து (ROCE) தெரிந்து  கொள்ளலாம்.
பாபு ஹோட்டலின் அதிபர் தன்னுடைய சொந்த பணம் Rs 100000 மற்றும் வங்கியிலிருந்து Rs 100000 கடன் – ஆக மொத்தம் Rs 2 லட்சத்தை மூலதனமாக போட்டு ஹோட்டலை நடத்துகிறார்.
கோபு ஹோட்டலின் அதிபர் தன்னுடைய சொந்த பணம் Rs 100000 மற்றும் வங்கியிலிருந்து Rs 50000 கடன் – ஆக மொத்தம் Rs ஒன்றரை  லட்சத்தை மூலதனமாக போட்டு ஹோட்டலை நடத்துகிறார்.
இப்போது, வருமானம் மற்றும் மூலதனத்திற்கான விகிதத்தை பார்க்கும்பொழுது,
பாபு ஹோட்டல்: 50000/200000 = 25%
கோபு ஹோட்டல் : 50000/150000 = 33.33%
எனவே, 100 ரூபாய் முதலீட்டிற்கு 33.33 ரூபாய் வருமானம் பெற்றுத்தரும் கோபு ஹோட்டல்  தான், 100 ரூபாய் முதலீட்டிற்கு 25 ருபாய் வருமானம் பெற்று தரும் பாபு ஹோட்டலை விட சிறந்த நிறுவனம் மற்றும் நம்முடைய பணத்தை முதலீடு செய்ய உகந்த நிறுவனம்.
ஒரு நிறுவனத்தின், ROCE பற்றி தெரிந்து கொள்ள, http://www.screener.in/ என்ற இணைய தளத்தை உபயோகிக்கலாம்.
ஒரு நிறுவனத்தின் பங்கை தேர்வு செய்யும்போது, கடந்த சில ஆண்டுகளில் (அல்லது காலாண்டுகளில்), EPS மற்றும் ROCE எந்த அளவுக்கு உயர்ந்து வந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். மிக  முக்கியமாக, எதிர்காலத்தில் இதே அளவு உயர வாய்ப்புள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். எதிர்காலத்தை எப்படி கணிப்பது? எதிர்காலத்தை கண்டிப்பாக துல்லியமாக கணிக்க வாய்ப்பில்லை. அப்படி கணிக்க முடியும் என்றால், வாழ்க்கையிலும், வர்த்தகத்திலும் ஒரு சுவாரசியமே இருக்காது 🙂
ஆனால், கடந்த காலத்தில் போட்ட முதலீட்டை வைத்து நிறுவனம் ஈட்டிய வருமானத்தை  வைத்தும், நிறுவனத்தின் வியாபாரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகளை வைத்தும் (உ.ம். – நிறுவனம் ஒரு புதிய பொருளை சந்தையில் அறிமுக படுத்த உள்ளது அல்லது புதிய கிளையை துவக்க உள்ளது), முந்தைய பதிவில் சொன்னது போல, அந்த நிறுவனம் சார்ந்துள்ள தொழிலுக்கு வருங்காலத்தில் உள்ள வளர்ச்சிக்கான வாய்ப்புக்களையும் வைத்து, அந்த நிறுவனத்தின் எதிர்கால வருமானத்தை ஓரளவு கணிக்க  வாய்ப்புள்ளது. அப்படி சரியாக கணிப்பவர்கள், சரியான பங்குகளை  வாங்கி, தங்களின் முதலீட்டை வளமாக்குவார்கள்.