Powered By Blogger

Sunday, June 18, 2017

ஆன்லைன் வணிக அசுரன் அலிபாபா..! உருவான கதை

ஒரு எலெக்ட்ரானிக் நிறுவனத்தின் தலைவர் தன் இரு சேல்ஸ்மேன்களிடம்  "ஆப்பிரிக்காவிற்கு செல்லுங்கள். அங்கு நமது ரேடியோவிற்கு சந்தை இருக்கிறதா" என்று பார்த்து வாருங்கள் என்று அனுப்பினார். இருவரும் ஆப்பிரிக்கா முழுதும் சுற்றிவிட்டு வந்து நிறுவனரிடம் ரிப்போர்ட் செய்தார்கள். முதல் சேல்ஸ்மேன் “நம்ம ரேடியோவிற்கு அங்கு சந்தையே இல்லை. ஏனென்றால் அங்கு பெரும்பாலான ஊர்களில் மின்சாரமே இல்லை. மின்சாரவசதி இல்லாத ஊரில் எப்படி நம்ம பொருள் விற்கும்?” என்று கூறினார். இரண்டாவது சேல்ஸ்மேனிடம் வரும்போதே அத்தனை உற்சாகம். “சார். நமக்கு ஆப்ரிக்காவில் பெரிய சந்தை இருக்கிறது. அங்கு ஒருத்தரிடம் கூட ரேடியோ இல்லை. காரணம் பல இடங்களில் மின்சாரமே இல்லை. ஆதலால் நம்ம ரேடியோவிற்கு மட்டுமல்ல, நம்ம கம்பெனி ஜெனரேட்டர்க்கு, பேட்டரிக்கு, எல்லா எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் அங்கு பெரிய சந்தை இருக்கிறது. இப்பவே நாம் அந்த சந்தையை பிடித்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது” என்றார்.

ஒருவர்க்கு குறையாக தெரிந்தது மற்றொருவர்க்கு பெரிய வாய்ப்பாக தெரிந்தது. இதுதான் ஸ்டார்ட்-அப்பின் அடிப்படை. இதைக் கச்சிதமாக புரிந்து சாதித்தவர் தான் ஜாக்மா (Jack Ma). சீனாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர். சிறுவயதில் ஆங்கிலத்தில் பேசவேண்டி, அருகில் இருந்த நகரின் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சென்று அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு இலவச கைடாக இருந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு பல வெளிநாட்டு நட்புகளும் கிடைக்க அது ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

ஜாக் சற்று குள்ளம். மிகவும் ஒல்லியான தேகம். இதனால் பிறர் ஏளனம் செய்து தாழ்வுமனப்பான்மை வளர்ந்தது. இருந்தாலும் போராடும் குணம் அவரிடம் இயல்பாகவே இருந்தது. சீனாவில் கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு கூட நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். மூன்று வருடம் தோல்வி. நான்காவது முறை வெற்றி பெற்று BA ஆங்கிலம் சேர்கிறார். அதன்பிறகு அந்தக் கல்லூரியின் மாணவர் தலைவராக உருவாகும் அளவிற்கு வளர்கிறார். படித்துமுடித்து ஒரு பல்கலைகழகத்தில் பகுதிநேர ஆங்கில விரிவுரையாளராகவும் சேர்கிறார். அதற்குமுன் அவர் பல வேலைகளுக்கு முயற்சித்திருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது விதமான வேலைகளுக்கு முயற்சித்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. இதில் காவல்துறை உள்பட பலரும் அவரை நிராகரித்தார்கள்.
ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி. அப்போது அவரது ஊருக்கு KFC வந்திருக்கிறது. வேலைக்கு ஆள் எடுத்திருக்கிறார்கள். அவர் உட்பட நேர்முகத்தேர்வுக்கு 24 பேர் வந்திருக்கிறார்கள். அதில் 23 பேரை வேலைக்கு எடுத்திருக்கிறார்கள், இவர் ஒருவரை தவிர. மனுஷனுக்கு எப்படி இருந்திருக்கும்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு நாம் புலம்புவோம் இல்லையா? அவர் அப்படி புலம்பவில்லை. 
அவர் ஹாவர்ட் யுனிவர்சிட்டிக்கு 10 முறைக்கு மேல் விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். பின்னாளில் அதே யுனிவர்சிட்டி அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தபோது இவர் இந்த கதையை அங்கு சொல்லியிருக்கிறார்.
ஜாக் மா

 இணையம் வளர ஆரம்பித்த 1996இல் நண்பர்களுடன் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்குதான் இணையம் பற்றி அவருக்கு தெரிய வருகிறது. தேடுபொறியில் எதையாவது தேடிப் பார்ப்போமென்று ’பீர்’ என்று டைப் பண்ணினால் எல்லா நாட்டு பீர்களும் வந்திருக்கின்றன. சீனாவைத் தவிர. மேலும் ஒரு சீன வெப்சைட் கூட அவர் கண்ணில் படவில்லை. ”என்னடா இது சீனாவிற்கு வந்த சோதனை... ஊருக்கு போறோம். முதல் வேலையா வெப்சைட் கம்பெனி தொடங்குறோம்” என்று கிளம்புகிறார்.
நினைத்தபடியே அவர் சீனா வந்ததும் இணையதள நிறுவனம் தொடங்கி இணைய தொடர்பு கொடுத்து அதை பத்திரிகைகளுக்கு, வர்த்தகர்களுக்கு அறிமுகப்படுத்த அழைத்தார். அதுவும் ஒரு காமெடி. இணையத்தை தொடர்பு கொடுத்துவிட்டு முதல் இணைய பக்கம் லோடாக காத்திருக்க, இரண்டு மணிநேரம் கழித்து அது லோடு ஆனதாம். இப்படி ஒரு கடினமான சூழ்நிலையில் அவரது நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவிற்கு இணைய உலகை அறிமுகப்படுத்தியது.
ஆரம்பக்கட்ட சறுக்கல்களுக்கு பிறகு அலிபாபா.காம் என்ற ஆன்லைன் வர்த்தக இணையதளத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறார் ஜாக்மா. நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அப்போது மலேசியாவில் இருந்து முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருந்த சமயம். என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது அரேபியாவின் ஆயிரத்தொரு இரவுகள் கதைகளில் வரும் அலிபாபா ஞாபகம் வருகிறது. நல்ல பெயராக இருக்கிறதே என்று யோசிக்கிறார். அவரின் டேபிளுக்கு உணவு கொண்டுவந்த பணிப்பெண்ணிடம் உனக்கு அலிபாபா பெயர் தெரியுமா என்று கேட்கிறார். ’ஓ தெரியுமே.. திறந்திடு சீசேம் என்று சொல்வாரே அவர் தானே’ என்கிறார். ஜாக்மாவிற்கு நம்பிக்கை பிறக்கிறது. உலகம் அறிந்த சரியான பெயரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இன்னும் கண்ணில் பட்டவர் அனைவரிடமும் இதையே கேட்கிறார். எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. முடிவு செய்துவிட்டார். இது தான் நம்ம கம்பெனியின் பெயர். Alibaba
அடுத்து மளமளவென்று வேலைகள் ஆரம்பித்து வளர்கிறது. அலிபாபா வளர்ச்சியின் வேகம் கண்டு அடுத்தடுத்து மூன்று முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 25 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்கின்றன. அடுத்து எந்த பெரிய முதலீடும் கோராமல் அசுர வளர்ச்சி அடைகிறது. அலிபாபா ஹாங்காங் பங்குசந்தையில் நுழைய அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஜாக்மாவின் வாழ்வில் முதல்முயற்சியில் எப்போதும் ஒரு தோல்வியும் அதன் பிறகு ஒரு பெரும் அசுர வெற்றியும் கிடைப்பதே வழக்கம். அதே போல ஹாங்காங் சந்தையில் கிடைக்காத அனுமதி அமெரிக்க பங்குசந்தையில் கிடைக்கிறது. வெறும் 12% நிறுவன பங்குகளை மட்டுமே பங்குசந்தையில் விடுகிறார். அலிபாபாவின் அசுரவளர்ச்சி உலகம் அறிந்த ஒன்று என்பதால் பங்கு வெளியிட்ட முதல்நாளே பங்கின் மதிப்பு எகிறியது. இன்று உலகத்திலேயே பங்குசந்தையின் மூலம் அதிக மூலதனம் திரட்டிய நிறுவனம் அலிபாபா தான். 25 பில்லியன் டாலர்கள் நியுயார்க் பங்குசந்தையில் திரட்டப்பட்டது.
அலிபாபாவின் நுகர்பொருள் வர்த்தகம் அமேசான், ஈபே இரண்டையும் சேர்த்தாலும் அதிகம். அசுரவளர்ச்சிக்கு இன்னொரு பெயர் அலிபாபா. இன்று அலிபே, டோபோ, டிமால், அலிஎக்ஸ்பிரஸ் என்று பல கிளைநிறுவனங்களோடு மிக உறுதியாக வளர்ந்துகொண்டு வருகிறது.

தோல்விக்கு அஞ்சியே பலரும் தொழில்முனைவோராக வரத் தயங்குகின்றனர். உண்மை என்னவென்றால் ஸ்டார்ட்-அப் உலகில் தோல்விதான் முதல் பரீட்சை. அதைத் தாண்டாமல் வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. அதிலிருந்து மீண்டு வருவது தான் ஒரு ஸ்டார்ட்-அப்பின் முக்கிய விதி.

பங்குச்சந்தை பயில்வோம்

பங்குச்சந்தையை `சூதாட்டம்' என்கின்றனர் பலர்; `பணக்காரர்களின் பொழுதுபோக்கு' என்கின்றனர் சிலர். ஆனால், பங்குச்சந்தையில் செய்த தவற்றைத் திருத்திக்கொண்டோ அல்லது ஆரம்பத்திலேயே எந்த ஒரு தவறும் செய்யாமலோ நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம். பங்குச்சந்தை என்பது முதலீடு செய்வதற்காக நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. சந்தையை நன்றாகப் புரிந்துகொண்டால், எளிய முறையில் பணத்தைச் சேர்க்கலாம். சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. 
பங்குச்சந்தை, சூதாட்டம்

நம் எல்லோருக்கும் பரிச்சயமான நிறுவனம் எம்.ஆர்.எஃப் டயர்ஸ். வெறும் 500 ரூபாயில் வர்த்தகத்தைத் தொடங்கிய இந்தப் பங்கின் இன்றைய விலை 68,000 ரூபாய். சிறந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து, அதை நீண்டகாலத்துக்கு வைத்திருந்தால், அபரிமிதமான லாபம் கிடைக்கும் என்பதற்கு எம்.ஆர்.எஃப் பங்கு சிறந்த உதாரணம். இப்போது புரிந்துகொண்டிருப்பீர்களே, பங்குச்சந்தை என்பது சூதாட்டம் அல்ல... சூட்சுமம்தான் என்பதை... பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 
1. பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகம் அல்லது நீண்டகால முதலீடு என எதுவாக இருந்தாலும் உணர்ச்சிரீதியாக உங்களை இணைத்துக்கொள்ளாதீர்கள். விளையாட்டில் வெற்றி - தோல்வி சகஜம் என்பதைப்போல, பங்குச்சந்தை வியாபாரத்தில் லாப - நஷ்டம் சகஜம் என்பதை முதலில் உணர்ந்து முதலீடு செய்யுங்கள். 
2. பங்குச்சந்தையில் எந்த ஒரு நிறுவனத்தின் பங்கும் அதன் `52 வார உச்சத்தில் வர்த்தகம் அல்லது இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தில் வர்த்தகம்' என உச்சத்தில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கும்போது அந்தப் பங்கை விற்பனை செய்து `கீழே இறங்கும்போது வாங்கிக்கொள்ளலாம்' என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். 
3. பி/இ விகிதத்தை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே எந்த ஒரு நிறுவனத்தின் பங்கையும் வாங்கலாம் என நினைக்காதீர்கள். ஒரு நிறுவனத்தின் பங்கின் தற்போதைய சந்தை விலை 100 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அதனுடைய ஒரு பங்கு ஆதாயம் (Earnings per share - EPS) மிகச் சமீபத்திய 12 மாதங்களுக்கு 10 ரூபாய் என எடுத்துக்கொள்வோம். அந்தப் பங்கின் பி/இ விகிதமானது 100/10=10. குறிப்பாக, `குறைந்த பி/இ விகிதமுள்ள பங்குகள் எப்போதுமே நல்லது; அதிக பி/இ விகிதமுள்ள பங்குகள் நல்லதல்ல' என நினைக்காதீர்கள். 
4. பங்குச்சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, உங்கள் பணத்தை ஒரே ஒரு துறையிலோ அல்லது ஒரே ஒரு நிறுவனத்தின் பங்கிலோ முதலீடு செய்யாதீர்கள். முடிந்தவரை நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் உள்ள துறைரீதியிலான பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். 
5. தினசரி வர்த்தகத்தில் பங்குகளை எப்போதுமே ஷார்ட் (பங்கை விற்பனை செய்து, பிறகு வாங்கிக்கொள்வது) செய்யாதீர்கள். ஒருவேளை சந்தை முடிவடைவதற்குள் அந்தப் பங்கை நீங்கள் வாங்கவில்லை என்றால், இறுதியில் அந்தப் பங்கு ஸ்கொயர் ஆஃப் செய்யப்பட்டு ஏலத்தில் அதிக இழப்பைச் சந்திக்கவேண்டிவரும். குறிப்பாக, கார்ப்பரேட் ஏலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அதிக நஷ்டத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது, உஷார். 
6. பங்குச்சந்தையில் `டார்கெட்' அல்லது `ஸ்டாப் லாஸ்' எனச் சொல்லப்படும் அனைத்தும் ஒருவகையில் சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸ் மட்டுமே. உண்மையில், இது வேலை செய்யலாம்... வேலை செய்யாமலும் இருக்கலாம். எனவே, ஒரு நிறுவனத்தின் பங்கை 100 ரூபாய்க்கு வாங்கி, 110 ரூபாய்க்கு டார்கெட் என்றால் அந்தப் பங்கின் விலை நிச்சயம் 110 ரூபாயை எட்டும் என்றில்லை. 109 ரூபாயைத் தொட்டபிறகும்கூட மீண்டும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 
7. பங்குச்சந்தையில் ஒரு நிறுவன பங்கின் சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸைப் பொறுத்தவரை அந்தப் பங்கின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. பங்குச்சந்தையில் ஒருவேளை அதிகப் பணத்தை நீங்கள் இழந்திருந்தால், அதை மீட்பதற்காகச் செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்து பணத்தை இழக்காதீர்கள். பங்குச்சந்தையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆழமான அறிவு, அனுபவம் அல்லது சந்தை வல்லுநர்களிடமிருந்து சிறந்த வழிகாட்டல் போன்றவை அவசியம் தேவை. 


பங்குச்சந்தையில் செய்த தவற்றைத் திருத்திக்கொண்டோ அல்லது ஆரம்பத்திலேயே எந்த ஒரு தவறும் செய்யாமலோ நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம். பங்குச்சந்தை என்பது முதலீடு செய்வதற்காக நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. சந்தையை நன்றாகப் புரிந்துகொண்டால், எளிய முறையில் பணத்தைச் சேர்க்கலாம். சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 

பங்குச்சந்தை,
1. சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் வணிகம், விற்பனை, வருமானம், காலாண்டு முடிவுகள், செயல்திறன் உள்பட பல விஷயங்களை அலசி ஆராய வேண்டும். ஆனால், `ரமேஷ் சொன்னாரு, சுரேஷ் சொன்னாரு' என்று யாரோ ஒருவர் சொல்வதற்கிணங்க மோசமான பங்குகளில் முதலீடு செய்து பணத்தை இழக்கின்றனர். இனிமேலாவது உங்கள் நண்பரோ, உறவினரோ, யார் என்ன அறிவுரை சொன்னாலும் தாராளமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், அவற்றைக் குறித்த ஆழமான ஆலோசனைக்குப் பிறகே முதலீட்டு முடிவைத் தீர்மானியுங்கள். 
2. பங்குச்சந்தையில், அதிக கடன் வாங்கிய நிறுவனங்கள் எல்லாம் மிக மோசமான நிறுவனங்கள் என்றும், கடன் இல்லாத நிறுவனங்கள் எல்லாம் நல்ல நிறுவனங்கள் என்றும் நினைக்காதீர்கள். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் கடன் வாங்குகிறது என்றால், அந்த நிறுவனம் எதற்காகக் கடன் வாங்குகிறது, அந்தக் கடனை வைத்து அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதே தொடர்ந்து கவனித்திட வேண்டும். குறிப்பாக, சந்தையில் ஒரு நிறுவனத்தின் கடனைவிட அந்த நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதே மிக அவசியம். 
3. எந்த ஒரு வணிகத்திலும் நடைமுறை அறிவைவிட சிறந்தது வேறு எதுவுமில்லை. என்றாலும், பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, முதலீடு என்றால் `ஃபண்டமென்டல் அனாலிசிஸ்', வணிகம் என்றால் `டெக்னிக்கல் அனாலிசிஸ்' எனப் பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. சந்தையைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் அல்லது ஓரளவு தெரிந்தவர்கள்கூட இந்த இரண்டு அனாலிசிஸ்களைக் கற்றறிந்து முதலீடு அல்லது வணிகம் செய்வதே நல்லது. இவற்றைக் கற்றறிந்தால் பங்குச்சந்தையில் பணத்தைச் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை நிச்சயம் இழக்காமல் இருக்கலாம்.
4. `ஸ்டாப் லாஸ்' என்பது, நாம் வாங்கிய ஒரு பங்கின் விலை சரிந்தால், நாம் எந்த விலையில் அந்தப் பங்கிலிருந்து வெளியேற வேண்டும் என முடிவுசெய்வது. அதாவது, நம்மால் எவ்வளவு நஷ்டம் தாங்க முடியும் என்பதைப் பொறுத்து ஒரு விலையை நிர்ணயிப்பது. சந்தை சரிந்துகொண்டிருக்கிறது அல்லது பங்கின் விலை சரிந்துகொண்டிருக்கிறது என்றால், உடனடியாக உங்களது ஸ்டாப் லாஸ் விலையில் உங்கள் பங்கு விற்றுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கும், நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கும் `ஸ்டாப் லாஸ்' என்பது பெரிதாகத் தேவைப்படாது. தினசரி வர்த்தகம், எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அவசியம் ஸ்டாப் லாஸ் பயன்படுத்துவது நல்லது.
5. பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ என எவ்வளவு பெரிய நல்ல நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் நீங்கள் முதலீடு செய்துவந்தாலும், குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் முதலீட்டை மதிப்பாய்வு செய்வது மிக முக்கியம். அந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், செயல்திறன் போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் முதலீட்டைத் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பதைத் தீர்மானிப்பது நல்லது.
6. இப்போது, பங்குச்சந்தையில் பெரும்பாலானோர் `எஃப் அண்ட் ஓ' எனும் முன்பேர வர்த்தகத்தில்தான் பணத்தை இழக்கின்றனர். இதில் `குறைந்த முதலீடு, அதிக லாபம்' எனச் சொல்வார்கள். அதே சமயம், இதில் அதிக நஷ்டமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எஃப் அண்ட் ஓ வர்த்தகம் என்பது, கலை. எதுவுமே தெரியாமல் நஷ்டத்தைச் சந்திப்பதைவிட, இதில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. இல்லையெனில், இதுகுறித்து ஓரளவு தெரிந்த பிறகு வணிகத்தில் ஈடுபடுவதே நல்லது. 
7. தெருக்குத் தெரு டீக்கடையைப் போல, நம் ஊரில் நிதி ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் பல நிதி ஆலோசகர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அணுகுமுறை, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை எனப் பல விஷயங்களைக் கவனித்து, அதன்பிறகு ஆலோசனைகளைக் கேட்டு பங்குச்சந்தையில் முதலீட்டை மேற்கொள்வது நல்லது. நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஃபேமிலி டாக்டரை அணுகுவதுபோல, நிதி சார்ந்த விஷயங்களிலும் ஃபைனான்ஷியல் டாக்டரை அணுகி, அவரின் ஆலோசனைப்படி செயல்படுவது சிறந்தது.

பங்குச்சந்தை என்பது முதலீடு செய்வதற்காக நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. சந்தையை நன்றாகப் புரிந்துகொண்டால், எளிய முறையில் பணத்தைச் சேர்க்கலாம். சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். 

பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக...
1. அறிமுகமில்லாத எந்த ஒரு புதிய தொழிலைத் தொடங்கினாலும் `ஆழம் தெரியாமல் காலை விடாதே' என்பார்கள். ஆனால், பங்குச் சந்தையில் பலரும் காலை விட்ட பிறகே ஆழத்தைப் பார்க்கின்றனர், பின் அழ ஆரம்பிக்கின்றனர். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, அவசரத் தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்யவே கூடாது; உபரியாக இருக்கும் பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் மில்லியன் டாலர் உண்மை. பங்குச் சந்தையில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அறிவின்மையால், விழிப்பு உணர்வின்றி, பேராசையால் முழுப்பணத்தையும் இழந்து விழிபிதுங்கி நிற்காதீர்கள். 
2. பங்குச் சந்தையில் யாருக்கு வருமானம் வருகிறோதோ இல்லையோ, புரோக்கிங் நிறுவனங்களுக்குப் பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் புரோக்கரேஜ் கமிஷன் வந்துவிடுகிறது. குறிப்பாக பெரும்பாலான புரோக்கிங் நிறுவனங்கள் இன்ட்ராடே கால்ஸ் (Intraday Calls) என்று சொல்லப்படும் `அன்றே வாங்கி, அன்றே விற்பனை' செய்யும் வழிமுறையை வற்புறுத்துவார்கள். காரணம், நீங்கள் ஒரு பங்கை வாங்கி, 10 ஆண்டுகள் கழித்து அந்த பங்கை விற்பனை செய்தால் அவர்களுக்கு புரோக்கரேஜ் கமிஷனும் கிடைக்காது, எந்த ஒரு பலனும் இருக்காது. ஆகையால், அவர்களின் ஆசை வார்த்தையில் வீழ்ந்துவிடாதீர்கள், உங்கள் வருமானத்தை இழக்காதீர்கள். மாறாக, அவர்கள் வழங்கும் பங்கு பரிந்துரைகள் ஆராய்ந்து, அவை வெற்றியடைகிறதா என்பதை பல முறை பார்த்த பிறகு அதன் அடிப்படையில் முதலீட்டு முடிவைத் தீர்மானிப்பது நல்லது. 
பங்குச்சந்தை
3. `எஃப் அண்ட் ஓ' எனும் ப்யூச்சர் அண்ட் ஆப்சன் முன்பேர வர்த்தகத்தில் குறைந்த பணத்தை வைத்து அதிக பங்குகளை வாங்கி வணிகம் செய்யாதீர்கள். உதாரணத்துக்கு, நிஃப்டி இப்போது 9,600 புள்ளிகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நிஃப்டி 9,800 கால் ஆப்சன் (Call Option) 10 ரூபாய், ஒரு lot size 10*50= ரூ.500 என்பதற்காக, ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே பணத்தை வைத்துக்கொண்டு,  10 lot-ஐ 5,000 ரூபாய்க்கு வாங்காதீர்கள். இதைவிட, பல புரோக்கிங் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் 5,000 ரூபாய் மட்டுமே பணம் வைத்திருந்தால்கூட, அவர்களுக்கு 50,000 ரூபாய் வரை வர்த்தகம் செய்ய வாய்ப்பளிக்கின்றனர். நிறுவனங்கள் அதிக பணத்தை வைத்து வணிகம் செய்ய வாய்ப்பளிக்கின்றார்களே என்பதற்காக, வர்த்தகம் செய்து உங்களுடைய முழுப் பணத்தையும் இழந்துவிடாதீர்கள். `அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு' என்பதை உணர்ந்து முதலீடு அல்லது வர்த்தகம் செய்யுங்கள். 
4. பங்குச் சந்தையில் முதலீடு அல்லது வர்த்தகம் எதுவாக இருந்தாலும் சரியான நேரம் வரை வரை காத்திருந்து அதன் பிறகு முதலீட்டைத் தொடருங்கள். கையில் பணம் இருக்கிறதே என்பதற்காக எந்த ஒரு பங்கிலும் தேவையில்லாமல் வணிகம் செய்யாதீர்கள். பங்குச் சந்தை எங்கும் ஓடிப் போகாது; எதிர்காலத்தில் பல சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடி வரும். கிடைக்கும் அந்த நல்ல சந்தர்பந்தத்திற்காக காத்திருந்து அதன் பிறகு வர்த்தகம் செய்யுங்கள். ஏனெனில் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, ஏற்ற, இறக்கம் என்பது இருந்தாலும் பல நாள்களில் சந்தை மந்தமாகத்தான் இருக்கும். ஆனால், சந்தை அல்லது ஒரு பங்கின் விலை எந்தத் திசையில் செல்லும் என்பதை யூகிக்கவே முடியாத நேரத்தில் தேவையில்லாமல் வர்த்தகம் மேற்கொள்ளாதீர்கள், பணத்தை இழக்காதீர்கள். 
5. பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் பலரும் பணத்தை முதலீடு செய்கின்றனர், வணிகம் புரிகின்றனர். ஆகையால், பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபங்களை அவ்வப்போது பதிவு செய்வது என்பது மிக முக்கியம். பங்குச் சந்தையில் ஒவ்வொரு முறை வணிகம் மேற்கொள்ளும் போதும் லாபத்தைப் பதிவு செய்வதற்காக அவசரப்படாதீர்கள். நீங்கள் ஒரு வேளை அவசரப்பட்டால், அதிக வருமானத்தைக் கூட இழக்க நேரிடலாம். அதேசமயம், உங்கள் ஆர்டரை தவறாகப் போட்டு நஷ்டங்கள் கூட ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதை உணருங்கள். ஆகையால், அளவுக்கு அதிகமாக அவசரப்படாதீர்கள், அவதிப்படாதீர்கள். 
6. பங்குச் சந்தையில் பலரும் பொதுவாக `வதந்தியை நம்பி ஒரு பங்கை வாங்கும் நிலையும், கிடைக்கும் செய்தியின் அடிப்படையில் ஒரு பங்கை விற்கும்' நிலைதான் நீடிக்கிறது. ஆனால், பங்குச் சந்தையில் செய்தி மற்றும் வதந்திகள் அடிப்படையில் எப்போதும் முதலீட்டு முடிவைத் தீர்மானிக்காதீர்கள். குறைந்தபட்சம் ஒரு நிறுவனம் குறித்து ஆராய்ச்சி செய்து அதன் அடிப்படையில் மட்டுமே முதலீட்டைத் தொடருங்கள் அல்லது வெளியேறுங்கள். 

சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். 
பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 
1. `பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை ஏற்ற-இறக்கத்தை 80 சதவிகிதம் டெக்னிக்கல் அனாலிசிஸும், 20 சதவிகிதம் ஃபண்டமென்டல் அனாலிசிஸும் வைத்து நிர்ணயிக்கலாம்' என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், இது எல்லா சூழ்நிலைகளிலும் உதவாது. கடும் பொருளாதார வீழ்ச்சி, அரசின் ஸ்திரத்தன்மை, தீவிரவாதிகள் தாக்குதல் என, பங்குச்சந்தையைப் பாதிக்கும் முக்கிய நிகழ்வுகள் சந்தைக்குப் பாதகமாகவே முடியும். இதுபோன்ற சூழ்நிலையில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அவ்வளவாக உதவாது. ஆனால், அதேசமயம் எந்த ஒரு பங்கையும் அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், எந்த ஒரு தாக்கம் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உங்களுடைய முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொண்டுவாருங்கள். 
2. பங்குச்சந்தையில் உங்களுடைய பணத்தைப் போட்டு வணிகம் செய்வதற்கு முன், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முடிந்தவரை வீணாக்காமல் இருக்க `பேப்பர் டிரேடிங்' (Paper Trading or Mock Trading) எனச் சொல்லப்படும் காகித வர்த்தகம் செய்து பழகுங்கள். அதாவது, பணத்தை நேரடியாக பங்குச்சந்தையில் இறக்காமல், சந்தையை மட்டும் கவனித்து ஒரு பங்கை வாங்குவது, விற்பது என வெறுமனே பேப்பரில் செய்துபார்ப்பது. இதில் நிபுணத்துவம் கிடைத்த பிறகு வர்த்தகம் செய்வது நல்லது. நிஜத்தில் ஒன்றுமே இல்லாமல் குழந்தைகள் சோறு, குழம்பு, பொரியல் எனச் சமைப்பதுபோல நடிப்பார்களே, அதுபோல.
Share Market
3. பங்குச்சந்தையில் மட்டுமல்ல, இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் வணிகத்தை மையமாக வைத்தே தங்களுடைய நிறுவனத்தை நடத்திவருகின்றன. குறிப்பாக, பல நிறுவனங்கள் அதிக வருமானம் ஈட்டுவதற்காக அதிகம் பரிந்துரைப்பார்கள். ஆனால், கண்மூடித்தனமாக யாரோ ஒருவரின் பரிந்துரையை நம்பாதீர்கள். ஒருமுறைக்கு, பலமுறை அலசி ஆராய்ந்த பிறகு முதலீட்டு முடிவை நீங்களே தீர்மானியுங்கள். 
4. பங்குச்சந்தை வர்த்தகத்தில் மிகவும் அபாயகரமான மற்றும் ஆபத்தான விஷயம் எவை என்றால், `தினசரி வர்த்தகத்தில் ஷார்ட் அடிப்பது மற்றும் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன் வணிகத்தில் ஈடுபடுவது'. இந்த இரண்டிலும் எந்த அளவுக்கு வருமானம் வருகிறதோ, அதே அளவுக்கு நஷ்டம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எஃப் அண்ட் ஓ வணிகம் பற்றி உங்களுக்குப் புரியவில்லை அல்லது தெரியவில்லையெனில், தயவுசெய்து இதில் வர்த்தகம் மேற்கொள்ளாதீர். மாறாக, உங்களுக்குத் தெரிந்த நல்ல ஒருசில நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து அந்த நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் தொடர்ந்து முதலீடு மேற்கொள்ளுங்கள். வருமானத்தை உறுதியாக ஈட்டலாம். 
5. களமிறங்கிய பிறகு எந்த ஒரு நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டாலும், தயங்காமல் பயப்படாமல் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து முதலீட்டை மேற்கொண்டு வாருங்கள். ஆனால், எதிர்காலத்தில் அந்த நிறுவனம்குறித்து வரும் முக்கியச் செய்திகளைத் தொடர்ந்து கவனியுங்கள். காலாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது உங்கள் முதலீட்டில் லாபம் அல்லது நஷ்டம் என எது வந்தாலும், கொஞ்சம் மதிப்பாய்வு செய்து அதன் பிறகு முதலீட்டைத் தொடருங்கள். 
6. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பல காரணிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான முக்கியச் செய்திகள், நிறுவனத்தின் செயல்திறன், விற்பனை, வருவாய், கடன், பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உலகச் செய்திகள், இந்தியப் பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம், பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசியல் காரணிகள், பொருளாதாரக் காரணிகள், பொருளாதாரக் கொள்கைகள், நிதி கொள்கை (Fiscal Policy), பணவியல் கொள்கை (Monetary Policy), சார்ட் பேட்டன்கள், பரபரப்பூட்டும் விஷயம், முதலீட்டாளர்களின் பயம் மற்றும் பேராசை என அடுக்கிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் ஓரளவுக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பங்குச்சந்தையில் பணத்தைச் சம்பாதிக்க முடியாது. ஆகையால், பங்குச்சந்தையில் பணத்தைப் போட்டவர்கள்,  என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு முதலீட்டை மேற்கொள்ளலாம்.


பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 
1. `பங்குச் சந்தையைப் பொறுத்தவரை குறைந்த விலை கொண்ட (penny stocks) பங்குகளை வாங்குவது நல்லது; அதிக விலை கொண்ட பங்குகளை விற்று வாங்கலாம்' என்பது தவறான கண்ணோட்டம். பங்குச் சந்தையில் எந்த ஒரு பங்கிலும் அதன் வாழ்நாள் உயர்வு அல்லது அதன் வாழ்நாள் இறக்கத்தின்போது அந்த பங்கில் பெரும்பாலும் முதலீட்டை மேற்கொள்ளாமல் இருப்பதே நல்லது. 
2. பங்குச் சந்தையில் அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனப் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்வது என்பது உண்மையில் ஒரு நல்ல ஐடியா. ஆனால், இதை ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து எந்த ஒரு நிறுவன பங்கிலும் தொடர்ச்சியாக முதலீடு மேற்கொள்வது என்பது சரியாக இருக்காது என்கின்றனர். அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனத்துடன், கூடுதலாக அந்த நிறுவனத்தின் வளர்ச்சி, வருமானம், காலாண்டு முடிவு, கடன் உள்பட சில காரணிகளை இணைத்துக்கொண்டு அந்த பங்கில் தாராளமாக முதலீட்டை மேற்கொண்டு லாபம் ஈட்டலாம். 
3. ஒரு நிறுவன பங்கின் விலை திடீரென்று மிக குறைந்த விலையில் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்படாதீர்கள். ஒரு பங்கின் விலை மிகவும் குறைந்த விலையில் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, போனஸ், டிவிடெண்ட், நிறுவன பிரிப்பு நடவடிக்கை என சொல்லலாம். பங்குச் சந்தையில் நீங்கள் வாங்கும் பங்குகள் மற்றும் அதன் விவரங்கள் அனைத்தும் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். மாறாக, அந்த பங்கு விவரங்களை உங்களுடைய புரோக்கிங் நிறுவனம் அல்லது சப் புரோக்கர்களிடம் எந்த ஒரு ஆவணங்களையும் வழங்காதீர்கள். 
பங்குச்சந்தை
4. பங்குச் சந்தையில் யாருமே 100 சதவிகிதம் சிறந்த கில்லாடிகள் என்று சொல்லிவிட முடியாது. ஏன் நம் நாட்டில் எடுத்துக்கொண்டால்கூட சிறந்த நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்கள் கூட பல சமயங்களில் பல தவறுகளை செய்திருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் சிறப்பாக செயல்படாத பங்குகளை கூட வைத்திருக்கிறார்கள்.
பங்குச் சந்தையில் எப்போதுமே உங்களுடைய வருமானத்தை அல்லது நஷ்டத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். மற்றவர்களைவிட நீங்கள் குறைந்தளவே வருமானம் அல்லது நஷ்டத்தை ஈட்டி வரலாம். ஆனால், அவர்களுடைய கடந்தகால லாப, நஷ்டங்கள் உங்களுக்கு முழுவதுமாக தெரியாது. ஆகையால், பங்குச் சந்தையில் மற்றவர்களுடன் உங்கள் வர்த்தகத்தை ஒப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள், முதலீட்டைத் தொடருங்கள், லாபத்தை ஈட்டுங்கள்.
5. பங்குச் சந்தையில் ஒவ்வொரு முறையும் ஒரு பங்கினை வாங்கி விற்பதன் மூலம் நமக்கு லாபம் வருகிறோதோ, இல்லையோ புரோக்கிங் நிறுவனத்துக்கு கமிஷன் மூலமாக லாபம் கிடைத்து விடுகிறது. பெரும்பாலான பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் அதிக புரோக்கரேஜ் கட்டணங்களை வசூலிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன. ஒரு பங்கை ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கி விற்பதன் மூலம் ஒரு சிறிய தொகை கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த லாபத்தின் பெரும் பகுதி புரோக்கிங் கட்டணம், வரி என்றால் மீதி ஒரு லாபமும் இருக்காதே. ஆகையால் முடிந்தவரை நீங்கள் முதலீடு அல்லது வர்த்தகம் மேற்கொள்ளும் புரோக்கிங் நிறுவனங்களிடம், உங்கள் கமிஷன் கட்டணத்தை வெகுவாக குறைத்திட வற்புறுத்துங்கள். 
6. ஒரு பங்கின் விலை ஏற்ற, இறக்கத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருப்பதால் முதலீடு மேற்கொள்வதற்கு முன் அந்த பங்கினை தீர ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது. பங்குச் சந்தையில் ஒரே ஒரு பங்கு அல்லது பல பங்குகளில் உங்களுடைய மொத்த பணத்தையும் முதலீடு செய்யாதீர்கள். நீங்கள் எந்த பங்கில் முதலீட்டை மேற்கொண்டாலும் அந்த பங்கினை தொடர்ந்து கவனமாக பார்த்து வாங்குவது நல்லது. பங்குச் சந்தையில், எப்போதும் `ஒரு பங்கை குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்கலாம்' என்று நினைக்காதீர்கள். இது சாத்தியமில்லாத ஒன்று. நீங்கள் வாங்கிய ஒரு பங்கின் அடிப்படை சரியாக இருந்தால், அந்த பங்கின் விலை ஏறினாலும், இறங்கினாலும் எந்த பிரச்னையும் இல்லை. பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதிக்க சிறந்த வழிகளில் ஒன்று நீண்ட கால முதலீடு. இதை இப்பொழுதாவது உணர்ந்து நீண்ட கால நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள், பயனடையுங்கள்.


உலகை உலுக்கிய புகைப்படங்கள்

முகம் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சோகத்தையும் தாண்டிய அப்பழுக்கற்ற, வீரம் செறிந்த பார்வையுடன் இருக்கும் சே குவேராவின் (Che Guevara) இந்தப் படம் புரட்சியின் குறியீடு. இந்துக்களுக்கு எப்படி சூலாயுதம் அடையாளமாக மாறிப்போனதோ, கிறிஸ்தவர்களுக்கு எப்படி சிலுவை அடையாளமாக மாறிப்போனதோ, அப்படி புரட்சியாளர்களுக்கான அடையாளமாக ’சே’வின் இந்தப் புகைப்படம் மாறிவிட்டது. உலக வரலாற்றிலேயே ஓவியம், சிற்பம், டாட்டூ, எம்ப்ராய்டரி என அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட புகைப்படம், ’சே’வின் இந்தப் புகைப்படம்தான். மேலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் (Fidel Castro) தாய்நாடா...? மரணமா...? என்ற வாக்கியம் அச்சு அசலாய் பொருந்திப் போவதும் ஆல்பர்டோ கொர்தாவினால் (Alberto Korda) எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்திற்குத்தான்.
 

ஜூலை 26, 1953-ல் ஆரம்பித்த கியூபா புரட்சி  ஜனவரி 1, 1959-ல் முடிந்தது. புரட்சி முடிவில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஃபிடல் காஸ்ட்ரோ, தனது இராணுவத்தை பலப்படுத்தும் வேளையின் முதல் கட்டமாக அதற்குத் தேவையான இராணுவத் தளவாடங்களை பெல்ஜியத்திலிருந்து (Belgium) வாங்கினார். அப்படி வாங்கப்பட்ட துப்பாக்கிகள், வெடி மருந்துகள் உள்ளிட்ட எழுபத்தி ஆறு டன் எடை கொண்ட ஆயுதங்களுடன் லா க்ப்ரே (La Coubre) என்ற பிரெஞ்சுக் கப்பல் கிளம்பியது. அந்தக் கப்பல் மார்ச் 4, 1960 அன்று கியூபாவின் (Cuba) ஹாவனா (Havana) துறைமுகத்திற்கு வந்தது. ஆயுதங்களை அந்தக் கப்பலிலிருந்து இறக்கிக் கொண்டிருந்த போது அதி பயங்கர சத்தத்துடன் வெடித்த குண்டு ஒன்று பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் உடல்களை சிதறச் செய்தது. அப்போது அசம்பாவிதம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த 'சே' உடனே அங்கு ஓடி வந்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்று யூகிப்பதற்குள் சரியாக 48 நிமிடத்தில் மீண்டும் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் மாலுமிகள், அவசர காலப் பணியாளர்கள் என சுமார் நூறு பேர் பலியானார்கள். இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். புரட்சியின் மூலம் வெற்றியைப் பறித்த காஸ்ட்ரோ தலைமையிலான கியூபாவின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல். அமெரிக்க உளவுப் படையான சிஐஏவின் (Central Intelligence Agency-America) நயவஞ்சகத் தாக்குதல் அது. கியூபாவிற்கு இராணுவத் தளவாடங்களைக் கொடுக்கக் கூடாது என்று அரசியல் ரீதியான பல அழுத்தங்களை பெல்ஜியத்திற்கு கொடுத்துப் பார்த்தது அமெரிக்கா. ஆனால், உலகத்தின் எந்த மூலையில் கம்யூனிசம் இருந்தாலும் அதை அழிக்க நினைக்கும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பெல்ஜியம் கட்டுப்படாததால், அவை கியூபாவிற்கு அனுப்பிய ஆயுதங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தது சிஐஏ. இந்த சம்பவம் நடந்து ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தக் குற்றச்சாட்டை எதிர்க்கவும் இல்லை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மேலும் அது தொடர்பான எந்த ஆவணங்களையும் மக்கள் மத்தியில் சமர்ப்பிக்காமல் கள்ள மௌனத்தை மட்டுமே அளித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் இறுதிச் சடங்கில் பங்கெடுப்பதற்காக மார்ச் 5, 1960 அன்று ஃபிடல் காஸ்ட்ரோ தனது உயர்மட்டக் குழுவினருடனும், 'சே' உள்ளிட்ட தோழர்களுடனும் அங்கே வந்தார். அப்போது அங்கே ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிக மேடையில் ஏறிய காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு எதிராகவும், கம்யூனிசத்திற்கு ஆதரவாகவும் எழுச்சி உரையை நிகழ்த்தினார். இந்த மேடையில்தான் தாய்நாடா...? மரணமா...? (The Motherland or Death) என்ற வார்த்தையை உலகத்தை நோக்கி முழங்கினார் காஸ்ட்ரோ. அப்போது இந்த நிகழ்வுகளை  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும் புகைப்படக் கலைஞருமான ஆல்பர்டோ கொர்தாவினால் (Alberto Korda). அப்போது காஸ்ட்ரோவிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த 'சே' சற்று நகர்ந்து வர, சுமார் முப்பது அடி தூரத்திலிருந்து தனது லைக்கா எம் 2 கேமராவினால் (Leica M2 with a 90 mm lens, loaded with Kodak Plus-X pan film) இரண்டே இரண்டு படங்கள் மட்டும் எடுக்கிறார் கொர்தா. இரண்டு விநாடிகள்தான் அதன் பிறகு 'சே' அங்கிருந்து விலகிவிட்டார்.

புகைப்படக் கலைஞர் கொர்தா அந்த தருணத்தை "அப்போது அந்தப் புகைப்படத்தை எடுக்கும்போதே எனக்குக் கண்டிப்பாகத் தெரிந்தது இது ஒரு வரலாற்றுப் புகழ் பெற்றதாக மாறும் என்று. காரணம் எனது கேமரா வியூ ஃபைண்டரில் பார்க்கும்போதே ’சே’வின் சக்தி மிகுந்த பார்வையும் அதிலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் என்னை அப்போதே உலுக்கிவிட்டது’’ என பதிவு செய்திருக்கிறார். இந்த நிகழ்வின் போது எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் தான் அப்போது வேலை செய்த புரட்சி (Revolución) என்ற பத்திரிகை நிறுவனத்திற்குக் கொடுத்தார் கொர்தா. ஆனால் அவ்வளவு ஈர்ப்பு இல்லை என்று சொல்லி 'சே'வின் இந்தப் புகைப்படத்தை நிராகரித்து விட்டார் அதன் ஆசிரியர். ஆனால் கொர்தாவோ அந்தப் புகைப்படத்தை தனது வீட்டில் மாட்டி வைத்ததோடு அதிகமாக பிரிண்ட் செய்து நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தார்.

ஆல்பர்டோ கொர்தா (Alberto Korda) மார்க்சிஸ்ட் சிந்தனையுடன் இருந்த கியூபாவின் புரட்சி புகைப்படக் கலைஞன். கியூபாவின் வெற்றிக்குப் பிறகு காஸ்ட்ரோ உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவரை நிழலாகத் தொடர்ந்து தனது கேமராவில் பதிவு செய்தவர் இவர். அந்த அளவுக்கு காஸ்ட்ரோவிற்கு நண்பனாக, ஆலோசகராக, ஆஸ்தான புகைப்படக் கலைஞராகவும் இருந்தவர். கேமராவின் மூலம் இவர் பார்க்கும் கோணம் முற்றிலும் அனைவரது பார்வையில் இருந்தும் வேறு பட்டதாக இருக்கும். அந்த காரணத்தினாலேயே காஸ்ட்ரோவிற்கு கொர்தாவை மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் திருமண புகைப்படக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய இவர், அதற்காக ஒரு ஸ்டூடியோவையும் வைத்திருந்தார். அப்போதுதான் அழகான பெண்கள் புகைப்படம் எடுக்க வருவார்கள் என்று அதற்கான காரணத்தையும் தமாஷாக ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். பிளாஷ் உள்ளிட்ட செயற்கை ஒளிக்கருவிகள் தவிர்த்து இயற்கை ஒளியைக் கொண்டு படம் எடுப்பது இவரது பழக்கம். இப்படி இருந்த தன்னை, தலையில் விறகுடனும் கையில் விளையாடும் பொம்மையுடனும் ஒரு குழந்தை நடந்து சென்ற காட்சிதான் இந்த சமூகத்தின் மீது வெறுப்பை உண்டாக்கி காஸ்ட்ரோவுடன் சேர வைத்தது என்கிறார்.

உலகம் முழுவதிலும் இவரது இந்தப் புகைப்படம் பயன்படுத்தப்பட்டாலும் அதற்காக இன்றுவரை ஒரு ரூபாய்கூட இவர் வாங்கியது இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்பு 2000-ல் ஸ்மிர்னோஃப் (Smirnoff) என்ற சாராயக் கம்பெனி தனது பாட்டிலில் இளைஞர்களைக் கவர்வதற்காக இந்தப் புகைப்படத்தை பிரிண்ட் செய்து விற்றது. அப்போது அதனை கடுமையாக எதிர்த்த கொர்தா அந்த நிறுவனத்தின் மீது வழக்கையும் தொடர்ந்தார். அதன்பிறகு தனது செயலுக்கு மன்னிப்பு கோரியது அந்த நிறுவனம். மேலும் நீதிமன்றத்திற்கு வெளியே கொர்தாவிற்கு 50,000 அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாகக் கொடுத்ததுடன் ’சே’வின் படத்தை பாட்டிலில் பிரிண்ட் செய்வதையும் நிறுத்திக் கொண்டு சமரச தீர்வைக் கண்டது. அந்தப் பணத்தை அப்படியே கியூபா மருத்துவக் கழகத்திற்கு (Cuban healthcare system) அளித்ததோடு, 'சே' உயிருடன் இருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்று அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் கொர்தா. அதேபோல லண்டனில் 1999-ல்  இந்தப் புகைப்படத்திற்கு சே ஜீசஸ் (Che Jesus) என்று பெயர் வைத்து இளஞர்களை அதிகப்படியாக தங்கள் மதத்திற்குள் கொண்டு வரவும் பயன்படுத்தின கிறிஸ்தவ சபைகள்.

ஒருமுறை லண்டனைச் சேர்ந்த ஜியாங்ஜியாகோமோ ஃபெல்டிரிநெல்லி (Giangiacomo Feltrinelli) என்பவர் கியூபா இராணுவத்தின் அனுமதியுடன் ‘சே’வின் புகைப்படங்களுக்காக கொர்தாவின் வீட்டுக்கு செல்ல, கொர்தாவும் பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் இரு படங்களை பிரிண்ட் செய்து அவரிடம் கொடுத்து அனுப்பினார். இதன் பின்னர் ஆகஸ்ட் 1967-ல் பாரிஸ் மேட்ச் (Paris Match magazine) என்ற பிரெஞ்சுப் பத்திரிகையில் Les Guerrilleros என்ற தலைப்பில் இந்தப் புகைப்படம் முதன் முதலில் வெளிவந்தது. பின் அதே வருடம் அக்டோபர் 9ஆம் தேதி 'சே' சுட்டுக் கொல்லப்பட, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜியாங்ஜியாகோமோ ஃபெல்டிரிநெல்லி (Giangiacomo Feltrinelli) இந்தப் புகைப்படத்தை லட்சக்கணக்கில் பிரிண்ட் செய்து இலவசமாக விநியோகித்தார். ’சே’வைக் அழித்த அமெரிக்காவால் அந்நாட்டின் டீ கோப்பைகளிலும், டீ ஷர்ட்டுகளில் இடம்பெரும் அவரது புகைப்படத்தை அழிக்க முடியவில்லை. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாகி விட்ட ’சே‘வை அனைத்து நிறுவனங்களும் வியாபாரமாக்குகின்றன. ஆனால் புரட்சி விதையாக மன்னுக்குள் போன  ’சே‘ வணிகமயமாக்குவதை விட அவரையும் அவரது கருத்துக்களையும் உலகமயமாக்குவதே தற்போதைய உடனடி தேவை.

‘சே’ என்னும் மந்திரச் சொல்!

சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. 

அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால், ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம்வைத்து ஆயுதம் எடுப்பது என்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இந்தக் காரணத்தால்தான் சேகுவேரா மனிதருள் மாணிக்கமாகப் போற்றப்படுகிறார்.
1958-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புரட்சிப் படை ஹவானாவுக்குள் ஊடுருவியபோது, கியூபா முழுவதும் காஸ்ட்ரோவிடம் வந்துசேர்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி உலக நாடுகள் அனைத்தையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போது, ‘டைம்’ பத்திரிகையானது இவ்வாறு ஒரு தலையங்கம் எழுதியது. ‘புரட்சிகளின் மூளை சே’ என்று.
கியூபா விடுதலையடைந்து காஸ்ட்ரோ அதிபர் ஆனபிறகு, ‘சே’ விவசாயத் துறையின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கியூபா தேசிய வங்கியில் தலைவராக நியமனம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு உயர்ந்தார். பின், தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவ்வளவு பதவிகள் வகித்தபோதும் எப்போதும் தன்னை ஒரு சராசரி குடிமகனாகவே நினைத்து விவசாயம் செய்துவந்தார். சேகுவேராவுக்கும் ஃபிடலுக்கும் இடையே யுத்தத்துக்கு முன்னும், பின்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர்.
‘‘அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை, ஒரு மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக தன்னால் வேரறுக்க முடியும்’’ என்று ஒருமித்த மனதோடு நம்பினார். கியூபாவுக்கு ஆயுதங்கள் தருவதாக ரஷ்யா சொன்னபோது, ‘‘ரஷ்யாவின் ஆயுதங்கள் கியூபாவில் இறங்கினால், அவைகள் அமெரிக்காவின் பெருநகரங்களைக் குறிவைக்கும்’’ என்று தைரியமாகச் சொன்னார் ‘சே’. இதற்குக் காரணம், கியூபா மீது அமெரிக்கா போட்ட பொருளாதாரத் தடையே ஆகும். அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்று, நேர்காணலுக்காக ‘சே’வை அழைத்தது. அதில், ‘‘அமெரிக்கா ஒரு ‘கழுதைப்புலி.’ அதன், ஏகாதிபத்தியத்தை நான் அடியோடு கருவறுப்பேன்’’ என்று அமெரிக்க மண்ணிலேயே கம்பீரமாக கர்ஜித்தார்.
‘சே’வின் கடைசி நிமிடங்கள்!
1967 அக்டோபர் 8-ம் தேதி காலைவேளையில்... யூரோ கணவாயை கெரில்லா வீரர்களுடன் கடந்துசென்றார் சே. அங்கு ஆடு மேய்க்கும் பெண்ணின் மீது பரிதாபப்பட்டு 50 பெஸோக்களைப் பரிசளித்தார். நண்பகல் வேளையில் அந்தப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தார். ‘சே’வைச் சுற்றி வளைத்த ராணுவம் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. பதிலுக்கு, கெரில்லா வீரர்களும் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ‘சே’வின் காலில் குண்டடிப்பட்டது. அப்போது, ‘சே’ சொன்னார்... ‘‘நான் இறப்பதைக் காட்டிலும் உயிரோடு இருப்பதுதான் உங்களுக்குப் பயன் தரும்’’ என்று.
குண்டடிப்பட்ட ‘சே’வை, வீரர்கள் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று பள்ளிக்கூடம் ஒன்றில் தங்கவைத்தனர். ‘சே’, கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவுகொடுத்துப் பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் 19 வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலைப் பார்த்துவிட்டு இவ்வாறாகச் சொன்னார். ‘‘இதுபோன்றச் சூழலில் எப்படிக் குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்தால், உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருவேன்.’’ ‘சே’ எப்போதும் ஒரு புரட்சியாளர்தான். ஆம், மக்களுக்கான புரட்சியாளர் அவர்.
‘‘ ‘சே’வைச் சுட்டுக்கொல்ல வேண்டும். யார் அந்தக் காரியத்தை செய்கிறீர்கள்’’ என்று கேட்டபோது, ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அந்தக் கொடும்செயலைச் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறான். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘சே’, ‘‘மண்டியிட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது எவ்வளவோ மேல்’’ என்றார். ஆனால், அந்த ராணுவ வீரனோ, ‘சே’ வை ஒரு கோழைபோல் கொல்வதற்குத் தயாரானான்.
‘‘கடைசி நிமிடத்தில்கூட என்னை நிற்கவைத்துச் சுடுங்கள்’’ என்றார் ‘சே’. ஆனால், அந்தக் கோழையோ ‘சே’வின் பார்வையைக்கூட நம்மால் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலோ என்னவோ, அந்த மாவீரர் சொன்னதை அலட்சியப்படுத்தினான்.
“கோழையே... நீ சுடுவது ஒரு ‘சே’வை அல்ல. ஒரு சாதாரண மனிதனைத்தான்” என்று இதயம் கிழிக்க, கண்கள் மின்ன தன்னுடைய கடைசி வார்த்தைகளை உமிழ்ந்தார் ‘சே.
எந்தத் தேசம் அவரை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியதோ, எந்தத் தேசம் அவர் வரலாற்றை முழுவதும் அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, அந்தத் தேசத்தில்தான் இன்று ‘சே’வின் முகம் பதிக்கப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. எந்தத் தேசம் அவர் பெயரைக் காற்றில் கரைந்துபோக நினைத்ததோ, அந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் காற்றில் கலந்து கோடிக்கணக்கான இளைஞர்களின் தாரக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.
கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் ‘சே’வைப்போல இருப்போம்!”
“விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது’’ என்பதே அவர் அடிக்கடி சொல்லும் முழக்கம். ஆம்... அவர் அழிக்கப்படவில்லை. ‘சே’ எனும் சொல்லாக வாழ்ந்துகொண்டிருக்கிறார், மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த!



ஜூன் 14, 1952-ஆம் வருடம். அவர் அமேசான் மழை காடுகளில் இருக்கும் சான் பாப்லோவில் இருந்தார். அன்று அவருக்கு 24-வது பிறந்தநாள். சகல வசதிகளுடன் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வெளியே ஓர் ஏரி இருந்தது. அதற்கு அருகில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத நோயாளிகளும் ஏழைகளும் இருந்தனர். தனது பிறந்தநாள் விழா, ஆடம்பரத்துக்கு நடுவில் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை. குளிர்ந்த அந்த ஏரிக்குள் ஆஸ்துமா நோயாளியான அவர் குதித்தார். பெரு மூச்சு வாங்கி, அவர் நீந்தி முன்னேறினார். இருபக்கமும் இருந்த மக்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். ஆஸ்துமா நோய், அமேசானின் குளிர்ந்த ஏரி யாவையும் கடந்து அவர் தனது இலக்கை அடைந்தார். இப்படியான  சாகசங்களையே அவர் வாழ்நாள் முழுவதும் விரும்பினார். அவர் பெயர் எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா. சுருக்கமாகச் சொன்னால் 'சே குவேரா'. எதார்த்தங்களை கடந்த அசாத்தியங்களை  விரும்பியப் போராளி. தனக்கென ஒரு கூடு இல்லாமல் சுற்றி திரிய நினைத்த ஒரு ஜிப்ஸி. இன்று அவருக்குப் பிறந்தநாள்! 

சேகுவேரா இந்த உலகம் முழுவதையும் ரசித்தார். பார் முழுவதும் பயணம் செய்ய ஆசைப்பட்டார். அதன் வித்தாய் அமைந்ததுதான் சே -அல்பர்ட்டோவின் மோட்டார் சைக்கில் பயணங்கள். மருத்துவம் பயின்ற இருவரும் 'லா பெடரோசா' பைக்கில், தென் அமெரிக்காவைச் சுற்றிவர வேண்டும் என தீர்மானித்தார்கள். அதன்படி தனது குடும்பத்திடம் இருந்து விடைபெற்று அவர்கள் கிளம்பினர். அர்ஜென்டினாவில் ஆடம்பரமான ஒரு வாழ்க்கை இருந்தும் சேவுக்கு புதிய விஷயங்களைத் தேட ஆசை. அதற்காக தனது காதலியிடம் இருந்தும் அவர் விடைபெற்று கொண்டார். தனக்கென நிலையான வசிப்பிடத்தோடும் மனிதர்களோடும் வாழ்வதை சே அசௌகரியமாக கருதினார். அதனால்தான் அவர் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றித்திரிந்தார்.
நீண்ட பயணத்துக்கு பின்னர்,  அன்று ‘சே’வும் அல்பர்ட்டோவும் வெனிசுலாவில் இருந்தனர். அல்பர்ட்டோவுக்கு, 'பயணத்தை முடித்துக்கொள்ளலாம்' என தோன்றிவிட்டது. 'நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுதான் தனது கடமை' என அல்பர்ட்டோ நினைத்தார். ஆனால் சே அதற்கு எதிர்மறையாக தனது பயனத்தைத் தொடர விரும்பினார். 'அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும்' என்ற கனவு அவரை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. அந்த  பயணத்தின்போது, குச்சிகாமாட்டா சுரங்கங்களையும் அங்கு நடக்கும் சுரண்டல்களையும் நேரில் கண்டார். ஏழ்மை நிலையிலும் கொள்கையில் உறுதியோடு இருக்கும் கம்யூனிச தம்பதியைப் பார்த்தார். துயரப்படும் தொழு நோயாளிகளைக் கண்டார். பழமையான நாகரிகங்கள் சிதைக்கப்பட்டதைப் பார்த்தார். மொத்தத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை உணர்ந்தார். இதன்பின்னரே, 'இம்மக்கள் சுதந்திரமாக வாழ வேன்டும்' என்று அவருக்குத் தோன்றியது. 'அதற்கான போராட்டங்கள் அனைத்தும் துப்பாக்கியைத் தாங்கி நடக்க வேண்டும்' எனத் தீர்மானித்தார். வெனிசுலாவில் தனது நண்பனைப் பிரிந்து, வாழ்வின் அடுத்த சாகசத்துக்கு தயாரானார் ‘சே’. அடுத்த 10 வருடங்களுக்கு அவர் அல்பர்ட்டோவைச் சந்திக்கவில்லை.
che guevara
கியூபாவின் புரட்சியை தவிர்த்துவிட்டு, சேகுவேராவை எழுதிவிட முடியாது. எங்கோ அர்ஜென்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்காக போராடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் அவர் விலங்கு பூட்டப்பட்ட மக்களின் விடுதலையிலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் மீதான நட்பிலும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். மருத்துவம் பயின்ற ஒருவர், ஆஸ்துமா நோயுடன் கைகளில் துப்பாக்கி ஏந்தி படைத் தளபதியாக செயல்பட முடியுமென்றால், அது சேகுவேரா எனும் சாகசக்காரனால்தான் முடியும். சேவும் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய புரட்சியால் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா ஆட்சியில் இருந்து வீழ்ந்தார். காஸ்ட்ரோவைக் கியூப மக்கள் தலைவராகக் கொண்டாடினார்கள். தலைநகர் ஹவானா உற்சாகக் கோலம் பூண்டது. ' இனி கியூப மக்கள் அமெரிக்காவின் அடிமையாக இருக்கப்போவதில்லை' என்ற மகிழ்ச்சி அனைவரிடத்திலும் ஏற்பட்டது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் போலவே சேகுவேராவை கியூப மக்களும் காஸ்ட்ரோவும் கொண்டாடினார்கள். சேகுவேராவுக்கு அரசு பதவியும் கியூப நாட்டு கரண்சியில் 'சே' எனக் கையெழுத்திடம் கவுரவுமும் வழங்கப்பட்டது. 
ஆடம்பரங்களையும் உதறித்தள்ளிவிட்டு, 'காங்கோவில் நடக்கும் ஆயுத புரட்சிக்கு உதவ போகிறேன்' என காஸ்ட்ரோவிடமிருந்து விடைபெற்று கொண்டார் ‘சே’. உடனே, “ 'சே’வை காணவில்லை; அவரை ஃபிடல் கொன்றுவிட்டார்” என பேசப்பட்ட போதிலும், “ 'சே’ எங்கு இருக்கிறார்” என்று காஸ்ட்ரோ சொல்லவில்லை. காரணம், 'அமெரிக்க உளவுதுறையிடம் அவர் சிக்கி கொள்ளக் கூடாது' என்பதற்காகத்தான். இப்படியான ஒரு தோழனை விட்டும் செல்லும் நிலை சேவுக்கு ஏற்பட காரணம், உலக மக்களின் விடுதலை மீது அவருக்க இருந்த பெரு விருப்பம்தான்.
che guevara
காங்கோவில் இருந்து பொலிவியா வந்த சேகுவேரா, அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு கெரில்லா பயிற்சிகளை அளித்தார். புதிய நாடு, வித்யாசமான தட்பவெட்ப சூழ்நிலை என பொலிவியாவில் சிரமத்தை எதிர்கொண்டார். அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. ஒருகட்டத்தில், (1967-ம் வருடம் அக்டோபர் மாதம்) அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார் சேகுவேரா. உலக முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சேகுவேரா பிடிப்பட்டதை அமெரிக்க அதிகாரிகளால் எளிதில் நம்ப முடியவில்லை. பொலிவியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவர் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு வழங்க ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டார். அவரிடம், 'இது என்ன இடம்?' என்று கேட்டார் ‘சே’. 'இது ஒரு பள்ளிக்கூடம்' என்றார் பணிப்பெண்.  'இப்படியொரு மோசமான நிலையில் ஒரு பள்ளிக்கூடமா... எங்களின் போராட்டம் வெற்றி பெறட்டும், உங்களுக்கு புதிய பள்ளி ஒன்றைக் கட்டி தருகிறோம்' என்று கூறினார் ‘சே’. அந்த பணிப்பெண் வெடித்து அழுது அங்கிருந்து கிளம்பினார். தான் இறக்கப்போவது தெரிந்த நிலையிலும், போராட்டங்கள் மீதும் மாற்றத்தின் மீதும் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அசாத்தியங்களை விரும்பும் எதார்த்தவாதியாக இருந்தார்.

அக்டோபர் 9, சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். 'நீ ஒரு கோழையை சுடவில்லை. ஒரு வீரனைத்தான் சுடுகிறாய்' என தோட்டாக்களை தனது நெஞ்சில் வாங்கி கொண்டார். அவர் மறைந்து 50 வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனால், இன்றும் ‘சே’ கொண்டாடப்படுகிறார். கியூபாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும். இப்போதும் இளைஞர்களின் சட்டைகளிலோ, போராட்டக் களத்திலோ சேகுவேரா புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. உலக மக்களின் விடுதலைக்காக அவர் போராடினார். இந்த உலகுக்கே அவர் பொதுவானவர். அடக்குமுறைகள் இருக்கும் வரையில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். போராட்டங்கள் இருக்கும் வரையில் ‘சே’வும் மக்கள் நினைவுகளில் வாந்துகொண்டுதான் இருப்பார். 

Friday, February 24, 2017

ஸ்டீவ் ஜாப்ஸ்!


Steve Jobs
1990க்கு முந்தைய தலைமுறை வரைக்கும் தான் ஆப்பிள் என்றது நியூட்டனை நினைவு கூறும். அதற்கு பின் வரும் அனைவருக்குமே ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் நினைவுக்கு வருவார் என்ற வாக்கியம் எப்போதுமே இணையத்தில் வைரல். புதுமை என்ற விஷயம் ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்பிலும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஜாப்ஸை கேட்டால் புதுமை என்று எதையுமே கூறிவிட முடியாது. அடுத்த நொடியே இதைவிட புதுமையான விஷயம் உருவாகிவிடும் என்பாராம். இன்றைய ஸ்மார்ட்போன் உலகின் வீரியத்தை முன்பிலிருந்தே உலகுக்கு எடுத்து சொன்ன ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்கள்.
1. 1955ம் ஆண்டு சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தவர் ஜாப்ஸ். பிறந்தவுடன் தன் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பால் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர்களிடம் ஜாப்ஸ் மகிழ்ச்சியாக வளர்ந்தாலும், தான் தத்துப்பிள்ளை என்பது ஜாப்ஸுக்கு அடிக்கடி வருத்தமளிக்கும் விஷயமாகவே இருந்துள்ளது. படிப்புக்காக தத்து கொடுக்கப்பட்ட ஜாப்ஸ் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர்.
2. எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் ஆர்வம் கொண்ட ஜாப்ஸால் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. அதோடி கல்வியில் சுதந்திரம் வேண்டும் என்று விரும்பியவர் ஜாப்ஸ். பிற்காலத்தில் வரைகலை பயின்ற ஜாப்ஸ் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களை தானே வடிவமைத்தார்.
Steve Jobs
3. படிப்பை விட்ட காலத்தில் நண்பர்களின் அறையில் தங்கி இருந்த ஜாப்ஸ் நீண்ட தொலைவுகளுக்கு நடந்து சென்றும், பசியால் வாடும் நேரத்தில் ஹரே கிருஷ்ணா கோவிலில் உணவு உண்டும் தனது காலத்தை கழித்துள்ளார்.
4. 1974ம் ஆண்டில் தலையில் நீண்ட முடியோடு, இந்தியாவில் இமையமலைப்பகுதிகளில் ஆன்மீக தேடலில் இருந்த ஜாப்ஸுக்கு தோல் நோய்கள் வந்துள்ளது. மேலும் கடும் புயலில் சிக்கி கொண்ட ஜாப்ஸ் ஆன்மீக தேடலை கைவிட்டு அறிவியல் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இல்லையென்றால் இந்தியாவில் சாமியாராகி இருப்பார் ஜாப்ஸ்.
Steve Jobs
5. ஆப்பிள் 1 கணினிக்கு பின்னால் அவர் நிகழ்த்திய மேஜிக் அளப்பறியது. தனது நண்பருடன் இணைந்து ஆப்பிள் 1 கணினியை உருவாக்கிய ஜாப்ஸ் அதனை ஒரு வீடியோ கேம் கணினிகளை விற்கும் ஃபைட் ஷாப் உரிமையாளரிடம் விளக்கினார். அவர் ஒரு மாதத்தில் 50 கணினிகள் வேண்டும் என ஆர்டர் தர இதனை ஒப்பந்தமாக எழுதி வாங்கி, அந்த ஒப்பந்தத்தை காட்டி மூலப்பொருட்களை கடனில் வாங்கி கணினியை தயாரித்துள்ளார் ஜாப்ஸ். 
6. 1985ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஜாப்ஸ். தளராமல் பிக்ஸார் அனிமேஷன் நிறுவனம் மூலம் ஹிட் அடித்தார். ஆப்பிள் நிறுவனமே வீழ்ச்சிக்கு சென்ற நிலையில் ரீ-என்ட்ரி கொடுத்து ஆப்பிளை முன்னணி பிராண்ட் ஆக்கினார் ஜாப்ஸ்.
Steve Jobs
7. ஜாப்ஸ் ஒரு சிறந்த வழிகாட்டி. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மூடிவிடலாம் என்று முடிவில் இருந்த போது இந்தியா சென்றுவிட்டு வா ஒரு ஐடியா கிடைக்கும் அவசரப்பட்டு நிறுவனத்தை மூடிவிடாதே என அறிவுரை கூறி மார்க்கை இன்று உலகின் நம்பர் 1 மனிதனாக மாற்றியதும் ஸ்டீவ் ஜாப்ஸ்தான்.
8. ஜாப்ஸ் ஒரு பெஸ்டேரியன் (pescetarian) அதாவது மீன் தவிர மற்ற மாமிசங்களை உண்ணாதவர். வாழ்நாளில் 7 மாதங்கள் தீவிரமாக புத்த மதத்தை பின் தொடர்ந்தவர் ஜாப்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Steve Jobs
9. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரஷ்யாவின் பங்குச் சந்தையை விட அதிகம், ஆப்பிளின் செயல்பாட்டு கையிருப்பு அமெரிக்காவின் கஜானாவை விட அதிகம் என்பதும் ஆப்பிளின் மிகப்பெரிய சிறப்பு.
10. ஆப்பிள் ஐபோன்களை ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உலகுக்கு அறிமுகம் செய்தார். முதன் முதலில் 9:41 மணிக்கு இந்த போன்களை அறிமுகம் செய்ததால் அனைத்து ஐபோன்களும் வெளியிடப்படும் மாடல்கள் மற்றும் போன்களின் புகைப்படங்களில் 9:41 என்ற மணியையே காட்டும். 

Wednesday, February 8, 2017

ஆட்டிசம் தவிர்க்க பல்லுயிர் நேயம் அவசியம்!

ட்டிசம், கவனக்குறைவு நோய், அஸ்பெர்கர் நோய் (Asberger Syndrome), இன்னும் இன்னதென வரையறுக்க முடியாத நோய்களால் (Pervasive Development Disorder) பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உலகம் முழுக்க அதிகரித்துவருகிறது. 2014-ம் ஆண்டு கணக்குப்படி, உலக மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்கள்; அமெரிக்காவில் 68 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசம் பாதிப்போடு பிறக்கிறது. 
ஆட்டிசம்
இந்தியாவில், 2012-ம் ஆண்டு கணக்குப்படி, ஒரு கோடி பேருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது; பிறக்கும் 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் (Autism Spectrum Disorder) பிரச்னையோடு பிறக்கிறது. இது கவலையளிக்கக்கூடிய விஷயம். ஆட்டிசத்துக்கான தெளிவான காரணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. `மரபணுக்களின் சீரற்ற நிலை, சுற்றுச்சூழல் மாசு, காற்றில்... மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்களும், கனிமங்களும் காரணங்களாக இருக்கலாம்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். 
`ஒண்ணேகால் வயசு வரைக்கும் ஒழுங்காத்தான் இருந்தான். `அம்மா, அப்பா’னுகூட அழகாச் சொல்லிட்டுதான் இருந்தான். ஒண்ணரை வயசுக்கு அப்புறம்தான் சேட்டை கூடிப் போச்சு. ஒரு இடத்துல இருக்க மாட்டேங்குறான். ஒண்ணு, எல்லாப் பொருளையும் அடுக்கிவெச்சுட்டே இருக்கான். இல்லைனா, தூக்கி எறியறான். அவனை அடக்கவே முடியலை. பேச மாட்டேங்கிறான். படிக்க மாட்டேங்கிறான்...’ - இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளுடன் வரும் குழந்தைகளைப் பாதித்திருப்பது `ஆட்டிசம்’ எனும் நோய். 
ஆட்டிசம் ஏன்... எப்படி?
ஆட்டிசம், இரண்டு வயதுக்கு முன்னால் பெரும்பாலும் கணிக்கப்படுவது இல்லை. தாய் பாலூட்டும்போது குழந்தையுடன் கண்களால் பேச வேண்டும். தாயின் கண்ணசைவுக்கும் முக பாவனைக்கும் குழந்தை பதிலுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவேண்டியது மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. `மூணாம் மாசத்துல குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும்’ எனப் பாட்டி சொல்வது அனுபவம் மட்டும் அல்ல... அறிவியல். `இப்படி முகம் பார்க்காமல், கண்களைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருக்கலாம்’ என்கிறது நவீன அறிவியல். 
`ஆம்பிளைப் புள்ளை மெதுவாத்தான் பேசும். பொண்ணுங்க எப்பவுமே ரொம்ப சீக்கிரம் எட்டு மாசத்துல பேசிடுவாங்க’ எனச் சொல்லி, இரண்டரை வயது வரை பேசாமல் இருக்கும் தன் மகனுக்கு ஆட்டிசமோ, அதை ஒட்டிய நோய்த்தொகுப்போ இருப்பதைப் பெரும்பாலான பெற்றோர்கள் கணிக்கத் தவறிவிடுவார்கள். அந்தத் தாமதம், குழந்தையை முழுமையாகச் சீராக்கத் தரும் பயிற்சிக்குப் பெரும் தடையாக இருக்கும். 
சிறுவன்
இலக்கியத்தில் நம்மாழ்வார், அறிவியல் உலகின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோர் ஆட்டிசம் நோயால் பாதித்தவர்கள் என்று சில வரலாற்றுத் தகவல்கள் உண்டு. ஆனால், அனைத்து ஆட்டிசக் குழந்தைகளும் அப்படி அல்ல. அதனால் அவர்களுக்கு வெகு விரைவில் பயிற்சி தொடங்கப்பட வேண்டும். 
தன்னுடைய ஐம்புலன்களையும், தடுமாற்றம் இல்லா நிலையும் (Vestibular Sense), தன் மூட்டுகளை ஒருங்கிணைத்து ஓடியாடும் திறனிலும் இந்தக் குழந்தைகளுக்குச் சங்கடங்கள் இருப்பதால், சுற்றியிருக்கும் சூழலுக்கு இசைவாக அவர்களால் இத்தனையையும் ஒருங்கிணைத்துச் செய்ய முடியாது. ஒவ்வொரு புலனும் தனித்தனியே அதிகபட்ச ஆளுமையுடன் இருப்பதும் மிக முக்கியக் காரணம். ஹோவர்டு கார்டனர் (Howard Gardner) எனும் உளவியல் விஞ்ஞானி ஒன்பது வகை அறிவாற்றலை விளக்குகிறார். 
இயற்கையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அறிவாற்றல் (Naturalistic Intelligence), இசை அறிவாற்றல் (Musical Intelligence), கணக்கிடும் அறிவாற்றல் (Mathematicallogical Intelligence), ஏன் பிறந்தோம், மரணத்துக்குப் பின் என்ன என உள்ளார்ந்த தத்துவத் தேடல்கொண்ட அறிவாற்றல் (Existential Intelligence), பிறரிடம் முழுப் புரிதலுடன் இருக்கும் அறிவாற்றல் (Interpersonal Intelligence), நடன உடலசைவு குறித்த அறிவாற்றல் (Body Kinesthetic Intelligence), மொழி அறிவாற்றல் (Linguistic Intelligence), உளவியல் அறிவாற்றல் (Intrapersonal Intelligence), முப்பரிமாணத்தில் சிந்திக்கும் அறிவாற்றல் (Spatial Intelligence) ஆகியவையே அந்த ஒன்பது திறமைகள். 
ஒரு மனிதனுக்கு, இதில் ஏதாவது ஒன்றோ, பலவோ கண்டிப்பாக இருக்கும். ஆனால், அதை ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்துக் கணிக்க முடியாது. ஐக்யூ டெஸ்ட்டில் மிகவும் பின்தங்கியுள்ள பலர், இந்த அறிவாற்றல் சிலவற்றில் அதீதத் திறமையுடன் விளங்குவதை உலகம் பார்த்திருக்கிறது. இந்த ஒன்பது திறமைகளில் எது ஒரு குழந்தையிடம் ஒளிந்திருக்கிறது... எந்தப் புலனில் அவனுக்கு / அவளுக்கு ஆளுமை அதிகம் எனக் கண்டறிய பள்ளிகளுக்கு நேரம் கிடையாது: அதற்கென மெனக்கெடுவதும் கிடையாது. அம்மா, அப்பாவுக்குத்தான் அந்தக் கடமை இருக்கிறது. 
100 பொருட்கள் இருக்கும் இடத்தில், ஒன்று மட்டும் மாறுபாடாக இருந்தால், சில ஆட்டிசக் குழந்தைகள் கண நேரத்தில் அதைச் சரியாகக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் பெற்றிருப்பார்கள். பொதுவாக, கூட்டு விளையாட்டில் பிரகாசிக்க முடியாத இவர்கள், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் முதலான தனி விளையாட்டுகளில் எக்குத்தப்பான திறமையுடன் இருப்பார்கள். அவர்களை உரிய முறையில் முடுக்கிவிட்டால், ஆட்டிசக் குழந்தைகளில் இருந்தும் ஒரு உசேன் போல்ட்டையோ, வான்காவையோ உருவாக்க முடியும். 
குழந்தை
ஆட்டிசக் குழந்தைகளுக்கான உணவுகள்... 
* இவர்களின் பராமரிப்பில் உணவுப் பழக்கத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, குளூட்டன் சத்துள்ள மைதா மாவில் செய்யப்படும் உணவுகளும், கேசின் புரதம் அதிகம் உள்ள பாலும் இவர்களுக்கு நல்லதல்ல. `ஆட்டிசக் குழந்தைகளுக்கு அந்தப் புரதச்சத்துகள் அமினோ அமிலமாகப் பிரிவதற்கு முன்னரே, அரைகுறை நிலையிலேயே குடலில் உறிஞ்சப்படுவதால், ஆட்டிச நோயின் மூளைத் திறனில் பாதிப்பு அதிகம்’ என்கின்றனர் அறிவியலாளர்கள். 
* குளூட்டன் புரதம் இல்லாத பாரம்பர்ய அரிசி ரகங்கள், சிறுதானிய உணவுகள் அவர்களுக்குச் சிறந்தவை. 
* பெஞ்சமின் ஃபெய்ன்கோல்டு (Benjamin Feingold) என்ற மருத்துவர் எந்த அளவுக்கு வண்ணமூட்டி ரசாயனங்களும், பிரிசர்வேட்டிவ்களும், ஆட்டிசத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை ஆய்வில் விளக்கியிருக்கிறார். இப்போது ஃபெய்ன்கோல்டு உணவுமுறை மேலை நாடுகளில் ஆட்டிச நோய்க்கான பிரத்யேக உணவாக இருக்கிறது. பாரம்பர்ய உணவு வகைகளின் சாரம்தான் அது. 
* சித்த மருத்துவ நூற்குறிப்புகளில், ஆட்டிசத்தை ஒட்டிய கருத்துகள் அதிகம் இல்லை. அன்றைய ரசாயனம் இல்லா வாழ்க்கை, குளூட்டன் இல்லா பாரம்பர்ய உணவு, பதற்றம் இல்லா வாழ்வியல் ஆகியவையே இந்த நோயைத் தரவில்லை. 
ஆட்டிசம் சொல்லும் பாடங்கள் நிறைய. காற்றிலும், மண்ணிலும், நீரிலும் கழிக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத கசிவுகளை தினம் தினம் சுவாசித்து வாழ்கிறோம். நாளைய நம் சந்ததிக்கு இந்தத் துணுக்குகளை விட்டுச் செல்கிறோம் என்பதுதான் எபிஜெனடிக்ஸ் (Epigenetics) எனும் வளர்ந்துவரும் மருத்துவ அறிவியல் துறை சொல்லும் உண்மை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பழக்கம் மட்டுமே இந்தப் புவியையும் நம்மையும் இவற்றிலிருந்து பாதுகாக்கும்!