Powered By Blogger

Sunday, June 18, 2017

‘சே’ என்னும் மந்திரச் சொல்!

சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. 

அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால், ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம்வைத்து ஆயுதம் எடுப்பது என்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இந்தக் காரணத்தால்தான் சேகுவேரா மனிதருள் மாணிக்கமாகப் போற்றப்படுகிறார்.
1958-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புரட்சிப் படை ஹவானாவுக்குள் ஊடுருவியபோது, கியூபா முழுவதும் காஸ்ட்ரோவிடம் வந்துசேர்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி உலக நாடுகள் அனைத்தையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போது, ‘டைம்’ பத்திரிகையானது இவ்வாறு ஒரு தலையங்கம் எழுதியது. ‘புரட்சிகளின் மூளை சே’ என்று.
கியூபா விடுதலையடைந்து காஸ்ட்ரோ அதிபர் ஆனபிறகு, ‘சே’ விவசாயத் துறையின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கியூபா தேசிய வங்கியில் தலைவராக நியமனம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு உயர்ந்தார். பின், தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவ்வளவு பதவிகள் வகித்தபோதும் எப்போதும் தன்னை ஒரு சராசரி குடிமகனாகவே நினைத்து விவசாயம் செய்துவந்தார். சேகுவேராவுக்கும் ஃபிடலுக்கும் இடையே யுத்தத்துக்கு முன்னும், பின்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர்.
‘‘அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை, ஒரு மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக தன்னால் வேரறுக்க முடியும்’’ என்று ஒருமித்த மனதோடு நம்பினார். கியூபாவுக்கு ஆயுதங்கள் தருவதாக ரஷ்யா சொன்னபோது, ‘‘ரஷ்யாவின் ஆயுதங்கள் கியூபாவில் இறங்கினால், அவைகள் அமெரிக்காவின் பெருநகரங்களைக் குறிவைக்கும்’’ என்று தைரியமாகச் சொன்னார் ‘சே’. இதற்குக் காரணம், கியூபா மீது அமெரிக்கா போட்ட பொருளாதாரத் தடையே ஆகும். அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்று, நேர்காணலுக்காக ‘சே’வை அழைத்தது. அதில், ‘‘அமெரிக்கா ஒரு ‘கழுதைப்புலி.’ அதன், ஏகாதிபத்தியத்தை நான் அடியோடு கருவறுப்பேன்’’ என்று அமெரிக்க மண்ணிலேயே கம்பீரமாக கர்ஜித்தார்.
‘சே’வின் கடைசி நிமிடங்கள்!
1967 அக்டோபர் 8-ம் தேதி காலைவேளையில்... யூரோ கணவாயை கெரில்லா வீரர்களுடன் கடந்துசென்றார் சே. அங்கு ஆடு மேய்க்கும் பெண்ணின் மீது பரிதாபப்பட்டு 50 பெஸோக்களைப் பரிசளித்தார். நண்பகல் வேளையில் அந்தப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தார். ‘சே’வைச் சுற்றி வளைத்த ராணுவம் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. பதிலுக்கு, கெரில்லா வீரர்களும் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ‘சே’வின் காலில் குண்டடிப்பட்டது. அப்போது, ‘சே’ சொன்னார்... ‘‘நான் இறப்பதைக் காட்டிலும் உயிரோடு இருப்பதுதான் உங்களுக்குப் பயன் தரும்’’ என்று.
குண்டடிப்பட்ட ‘சே’வை, வீரர்கள் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று பள்ளிக்கூடம் ஒன்றில் தங்கவைத்தனர். ‘சே’, கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவுகொடுத்துப் பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் 19 வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலைப் பார்த்துவிட்டு இவ்வாறாகச் சொன்னார். ‘‘இதுபோன்றச் சூழலில் எப்படிக் குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்தால், உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருவேன்.’’ ‘சே’ எப்போதும் ஒரு புரட்சியாளர்தான். ஆம், மக்களுக்கான புரட்சியாளர் அவர்.
‘‘ ‘சே’வைச் சுட்டுக்கொல்ல வேண்டும். யார் அந்தக் காரியத்தை செய்கிறீர்கள்’’ என்று கேட்டபோது, ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அந்தக் கொடும்செயலைச் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறான். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘சே’, ‘‘மண்டியிட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது எவ்வளவோ மேல்’’ என்றார். ஆனால், அந்த ராணுவ வீரனோ, ‘சே’ வை ஒரு கோழைபோல் கொல்வதற்குத் தயாரானான்.
‘‘கடைசி நிமிடத்தில்கூட என்னை நிற்கவைத்துச் சுடுங்கள்’’ என்றார் ‘சே’. ஆனால், அந்தக் கோழையோ ‘சே’வின் பார்வையைக்கூட நம்மால் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலோ என்னவோ, அந்த மாவீரர் சொன்னதை அலட்சியப்படுத்தினான்.
“கோழையே... நீ சுடுவது ஒரு ‘சே’வை அல்ல. ஒரு சாதாரண மனிதனைத்தான்” என்று இதயம் கிழிக்க, கண்கள் மின்ன தன்னுடைய கடைசி வார்த்தைகளை உமிழ்ந்தார் ‘சே.
எந்தத் தேசம் அவரை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியதோ, எந்தத் தேசம் அவர் வரலாற்றை முழுவதும் அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, அந்தத் தேசத்தில்தான் இன்று ‘சே’வின் முகம் பதிக்கப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. எந்தத் தேசம் அவர் பெயரைக் காற்றில் கரைந்துபோக நினைத்ததோ, அந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் காற்றில் கலந்து கோடிக்கணக்கான இளைஞர்களின் தாரக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.
கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் ‘சே’வைப்போல இருப்போம்!”
“விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது’’ என்பதே அவர் அடிக்கடி சொல்லும் முழக்கம். ஆம்... அவர் அழிக்கப்படவில்லை. ‘சே’ எனும் சொல்லாக வாழ்ந்துகொண்டிருக்கிறார், மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த!



ஜூன் 14, 1952-ஆம் வருடம். அவர் அமேசான் மழை காடுகளில் இருக்கும் சான் பாப்லோவில் இருந்தார். அன்று அவருக்கு 24-வது பிறந்தநாள். சகல வசதிகளுடன் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வெளியே ஓர் ஏரி இருந்தது. அதற்கு அருகில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத நோயாளிகளும் ஏழைகளும் இருந்தனர். தனது பிறந்தநாள் விழா, ஆடம்பரத்துக்கு நடுவில் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை. குளிர்ந்த அந்த ஏரிக்குள் ஆஸ்துமா நோயாளியான அவர் குதித்தார். பெரு மூச்சு வாங்கி, அவர் நீந்தி முன்னேறினார். இருபக்கமும் இருந்த மக்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். ஆஸ்துமா நோய், அமேசானின் குளிர்ந்த ஏரி யாவையும் கடந்து அவர் தனது இலக்கை அடைந்தார். இப்படியான  சாகசங்களையே அவர் வாழ்நாள் முழுவதும் விரும்பினார். அவர் பெயர் எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா. சுருக்கமாகச் சொன்னால் 'சே குவேரா'. எதார்த்தங்களை கடந்த அசாத்தியங்களை  விரும்பியப் போராளி. தனக்கென ஒரு கூடு இல்லாமல் சுற்றி திரிய நினைத்த ஒரு ஜிப்ஸி. இன்று அவருக்குப் பிறந்தநாள்! 

சேகுவேரா இந்த உலகம் முழுவதையும் ரசித்தார். பார் முழுவதும் பயணம் செய்ய ஆசைப்பட்டார். அதன் வித்தாய் அமைந்ததுதான் சே -அல்பர்ட்டோவின் மோட்டார் சைக்கில் பயணங்கள். மருத்துவம் பயின்ற இருவரும் 'லா பெடரோசா' பைக்கில், தென் அமெரிக்காவைச் சுற்றிவர வேண்டும் என தீர்மானித்தார்கள். அதன்படி தனது குடும்பத்திடம் இருந்து விடைபெற்று அவர்கள் கிளம்பினர். அர்ஜென்டினாவில் ஆடம்பரமான ஒரு வாழ்க்கை இருந்தும் சேவுக்கு புதிய விஷயங்களைத் தேட ஆசை. அதற்காக தனது காதலியிடம் இருந்தும் அவர் விடைபெற்று கொண்டார். தனக்கென நிலையான வசிப்பிடத்தோடும் மனிதர்களோடும் வாழ்வதை சே அசௌகரியமாக கருதினார். அதனால்தான் அவர் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றித்திரிந்தார்.
நீண்ட பயணத்துக்கு பின்னர்,  அன்று ‘சே’வும் அல்பர்ட்டோவும் வெனிசுலாவில் இருந்தனர். அல்பர்ட்டோவுக்கு, 'பயணத்தை முடித்துக்கொள்ளலாம்' என தோன்றிவிட்டது. 'நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுதான் தனது கடமை' என அல்பர்ட்டோ நினைத்தார். ஆனால் சே அதற்கு எதிர்மறையாக தனது பயனத்தைத் தொடர விரும்பினார். 'அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும்' என்ற கனவு அவரை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. அந்த  பயணத்தின்போது, குச்சிகாமாட்டா சுரங்கங்களையும் அங்கு நடக்கும் சுரண்டல்களையும் நேரில் கண்டார். ஏழ்மை நிலையிலும் கொள்கையில் உறுதியோடு இருக்கும் கம்யூனிச தம்பதியைப் பார்த்தார். துயரப்படும் தொழு நோயாளிகளைக் கண்டார். பழமையான நாகரிகங்கள் சிதைக்கப்பட்டதைப் பார்த்தார். மொத்தத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை உணர்ந்தார். இதன்பின்னரே, 'இம்மக்கள் சுதந்திரமாக வாழ வேன்டும்' என்று அவருக்குத் தோன்றியது. 'அதற்கான போராட்டங்கள் அனைத்தும் துப்பாக்கியைத் தாங்கி நடக்க வேண்டும்' எனத் தீர்மானித்தார். வெனிசுலாவில் தனது நண்பனைப் பிரிந்து, வாழ்வின் அடுத்த சாகசத்துக்கு தயாரானார் ‘சே’. அடுத்த 10 வருடங்களுக்கு அவர் அல்பர்ட்டோவைச் சந்திக்கவில்லை.
che guevara
கியூபாவின் புரட்சியை தவிர்த்துவிட்டு, சேகுவேராவை எழுதிவிட முடியாது. எங்கோ அர்ஜென்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்காக போராடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் அவர் விலங்கு பூட்டப்பட்ட மக்களின் விடுதலையிலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் மீதான நட்பிலும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். மருத்துவம் பயின்ற ஒருவர், ஆஸ்துமா நோயுடன் கைகளில் துப்பாக்கி ஏந்தி படைத் தளபதியாக செயல்பட முடியுமென்றால், அது சேகுவேரா எனும் சாகசக்காரனால்தான் முடியும். சேவும் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய புரட்சியால் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா ஆட்சியில் இருந்து வீழ்ந்தார். காஸ்ட்ரோவைக் கியூப மக்கள் தலைவராகக் கொண்டாடினார்கள். தலைநகர் ஹவானா உற்சாகக் கோலம் பூண்டது. ' இனி கியூப மக்கள் அமெரிக்காவின் அடிமையாக இருக்கப்போவதில்லை' என்ற மகிழ்ச்சி அனைவரிடத்திலும் ஏற்பட்டது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் போலவே சேகுவேராவை கியூப மக்களும் காஸ்ட்ரோவும் கொண்டாடினார்கள். சேகுவேராவுக்கு அரசு பதவியும் கியூப நாட்டு கரண்சியில் 'சே' எனக் கையெழுத்திடம் கவுரவுமும் வழங்கப்பட்டது. 
ஆடம்பரங்களையும் உதறித்தள்ளிவிட்டு, 'காங்கோவில் நடக்கும் ஆயுத புரட்சிக்கு உதவ போகிறேன்' என காஸ்ட்ரோவிடமிருந்து விடைபெற்று கொண்டார் ‘சே’. உடனே, “ 'சே’வை காணவில்லை; அவரை ஃபிடல் கொன்றுவிட்டார்” என பேசப்பட்ட போதிலும், “ 'சே’ எங்கு இருக்கிறார்” என்று காஸ்ட்ரோ சொல்லவில்லை. காரணம், 'அமெரிக்க உளவுதுறையிடம் அவர் சிக்கி கொள்ளக் கூடாது' என்பதற்காகத்தான். இப்படியான ஒரு தோழனை விட்டும் செல்லும் நிலை சேவுக்கு ஏற்பட காரணம், உலக மக்களின் விடுதலை மீது அவருக்க இருந்த பெரு விருப்பம்தான்.
che guevara
காங்கோவில் இருந்து பொலிவியா வந்த சேகுவேரா, அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு கெரில்லா பயிற்சிகளை அளித்தார். புதிய நாடு, வித்யாசமான தட்பவெட்ப சூழ்நிலை என பொலிவியாவில் சிரமத்தை எதிர்கொண்டார். அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. ஒருகட்டத்தில், (1967-ம் வருடம் அக்டோபர் மாதம்) அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார் சேகுவேரா. உலக முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சேகுவேரா பிடிப்பட்டதை அமெரிக்க அதிகாரிகளால் எளிதில் நம்ப முடியவில்லை. பொலிவியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவர் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு வழங்க ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டார். அவரிடம், 'இது என்ன இடம்?' என்று கேட்டார் ‘சே’. 'இது ஒரு பள்ளிக்கூடம்' என்றார் பணிப்பெண்.  'இப்படியொரு மோசமான நிலையில் ஒரு பள்ளிக்கூடமா... எங்களின் போராட்டம் வெற்றி பெறட்டும், உங்களுக்கு புதிய பள்ளி ஒன்றைக் கட்டி தருகிறோம்' என்று கூறினார் ‘சே’. அந்த பணிப்பெண் வெடித்து அழுது அங்கிருந்து கிளம்பினார். தான் இறக்கப்போவது தெரிந்த நிலையிலும், போராட்டங்கள் மீதும் மாற்றத்தின் மீதும் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அசாத்தியங்களை விரும்பும் எதார்த்தவாதியாக இருந்தார்.

அக்டோபர் 9, சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். 'நீ ஒரு கோழையை சுடவில்லை. ஒரு வீரனைத்தான் சுடுகிறாய்' என தோட்டாக்களை தனது நெஞ்சில் வாங்கி கொண்டார். அவர் மறைந்து 50 வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனால், இன்றும் ‘சே’ கொண்டாடப்படுகிறார். கியூபாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும். இப்போதும் இளைஞர்களின் சட்டைகளிலோ, போராட்டக் களத்திலோ சேகுவேரா புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. உலக மக்களின் விடுதலைக்காக அவர் போராடினார். இந்த உலகுக்கே அவர் பொதுவானவர். அடக்குமுறைகள் இருக்கும் வரையில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். போராட்டங்கள் இருக்கும் வரையில் ‘சே’வும் மக்கள் நினைவுகளில் வாந்துகொண்டுதான் இருப்பார். 

No comments:

Post a Comment