Powered By Blogger

Sunday, June 18, 2017

பங்குச்சந்தை பயில்வோம்

பங்குச்சந்தையை `சூதாட்டம்' என்கின்றனர் பலர்; `பணக்காரர்களின் பொழுதுபோக்கு' என்கின்றனர் சிலர். ஆனால், பங்குச்சந்தையில் செய்த தவற்றைத் திருத்திக்கொண்டோ அல்லது ஆரம்பத்திலேயே எந்த ஒரு தவறும் செய்யாமலோ நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம். பங்குச்சந்தை என்பது முதலீடு செய்வதற்காக நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. சந்தையை நன்றாகப் புரிந்துகொண்டால், எளிய முறையில் பணத்தைச் சேர்க்கலாம். சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. 
பங்குச்சந்தை, சூதாட்டம்

நம் எல்லோருக்கும் பரிச்சயமான நிறுவனம் எம்.ஆர்.எஃப் டயர்ஸ். வெறும் 500 ரூபாயில் வர்த்தகத்தைத் தொடங்கிய இந்தப் பங்கின் இன்றைய விலை 68,000 ரூபாய். சிறந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து, அதை நீண்டகாலத்துக்கு வைத்திருந்தால், அபரிமிதமான லாபம் கிடைக்கும் என்பதற்கு எம்.ஆர்.எஃப் பங்கு சிறந்த உதாரணம். இப்போது புரிந்துகொண்டிருப்பீர்களே, பங்குச்சந்தை என்பது சூதாட்டம் அல்ல... சூட்சுமம்தான் என்பதை... பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 
1. பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகம் அல்லது நீண்டகால முதலீடு என எதுவாக இருந்தாலும் உணர்ச்சிரீதியாக உங்களை இணைத்துக்கொள்ளாதீர்கள். விளையாட்டில் வெற்றி - தோல்வி சகஜம் என்பதைப்போல, பங்குச்சந்தை வியாபாரத்தில் லாப - நஷ்டம் சகஜம் என்பதை முதலில் உணர்ந்து முதலீடு செய்யுங்கள். 
2. பங்குச்சந்தையில் எந்த ஒரு நிறுவனத்தின் பங்கும் அதன் `52 வார உச்சத்தில் வர்த்தகம் அல்லது இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தில் வர்த்தகம்' என உச்சத்தில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கும்போது அந்தப் பங்கை விற்பனை செய்து `கீழே இறங்கும்போது வாங்கிக்கொள்ளலாம்' என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். 
3. பி/இ விகிதத்தை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே எந்த ஒரு நிறுவனத்தின் பங்கையும் வாங்கலாம் என நினைக்காதீர்கள். ஒரு நிறுவனத்தின் பங்கின் தற்போதைய சந்தை விலை 100 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அதனுடைய ஒரு பங்கு ஆதாயம் (Earnings per share - EPS) மிகச் சமீபத்திய 12 மாதங்களுக்கு 10 ரூபாய் என எடுத்துக்கொள்வோம். அந்தப் பங்கின் பி/இ விகிதமானது 100/10=10. குறிப்பாக, `குறைந்த பி/இ விகிதமுள்ள பங்குகள் எப்போதுமே நல்லது; அதிக பி/இ விகிதமுள்ள பங்குகள் நல்லதல்ல' என நினைக்காதீர்கள். 
4. பங்குச்சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, உங்கள் பணத்தை ஒரே ஒரு துறையிலோ அல்லது ஒரே ஒரு நிறுவனத்தின் பங்கிலோ முதலீடு செய்யாதீர்கள். முடிந்தவரை நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் உள்ள துறைரீதியிலான பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். 
5. தினசரி வர்த்தகத்தில் பங்குகளை எப்போதுமே ஷார்ட் (பங்கை விற்பனை செய்து, பிறகு வாங்கிக்கொள்வது) செய்யாதீர்கள். ஒருவேளை சந்தை முடிவடைவதற்குள் அந்தப் பங்கை நீங்கள் வாங்கவில்லை என்றால், இறுதியில் அந்தப் பங்கு ஸ்கொயர் ஆஃப் செய்யப்பட்டு ஏலத்தில் அதிக இழப்பைச் சந்திக்கவேண்டிவரும். குறிப்பாக, கார்ப்பரேட் ஏலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அதிக நஷ்டத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது, உஷார். 
6. பங்குச்சந்தையில் `டார்கெட்' அல்லது `ஸ்டாப் லாஸ்' எனச் சொல்லப்படும் அனைத்தும் ஒருவகையில் சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸ் மட்டுமே. உண்மையில், இது வேலை செய்யலாம்... வேலை செய்யாமலும் இருக்கலாம். எனவே, ஒரு நிறுவனத்தின் பங்கை 100 ரூபாய்க்கு வாங்கி, 110 ரூபாய்க்கு டார்கெட் என்றால் அந்தப் பங்கின் விலை நிச்சயம் 110 ரூபாயை எட்டும் என்றில்லை. 109 ரூபாயைத் தொட்டபிறகும்கூட மீண்டும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 
7. பங்குச்சந்தையில் ஒரு நிறுவன பங்கின் சப்போர்ட் அல்லது ரெசிஸ்டன்ஸைப் பொறுத்தவரை அந்தப் பங்கின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. பங்குச்சந்தையில் ஒருவேளை அதிகப் பணத்தை நீங்கள் இழந்திருந்தால், அதை மீட்பதற்காகச் செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்து பணத்தை இழக்காதீர்கள். பங்குச்சந்தையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆழமான அறிவு, அனுபவம் அல்லது சந்தை வல்லுநர்களிடமிருந்து சிறந்த வழிகாட்டல் போன்றவை அவசியம் தேவை. 


பங்குச்சந்தையில் செய்த தவற்றைத் திருத்திக்கொண்டோ அல்லது ஆரம்பத்திலேயே எந்த ஒரு தவறும் செய்யாமலோ நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம். பங்குச்சந்தை என்பது முதலீடு செய்வதற்காக நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. சந்தையை நன்றாகப் புரிந்துகொண்டால், எளிய முறையில் பணத்தைச் சேர்க்கலாம். சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 

பங்குச்சந்தை,
1. சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் வணிகம், விற்பனை, வருமானம், காலாண்டு முடிவுகள், செயல்திறன் உள்பட பல விஷயங்களை அலசி ஆராய வேண்டும். ஆனால், `ரமேஷ் சொன்னாரு, சுரேஷ் சொன்னாரு' என்று யாரோ ஒருவர் சொல்வதற்கிணங்க மோசமான பங்குகளில் முதலீடு செய்து பணத்தை இழக்கின்றனர். இனிமேலாவது உங்கள் நண்பரோ, உறவினரோ, யார் என்ன அறிவுரை சொன்னாலும் தாராளமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், அவற்றைக் குறித்த ஆழமான ஆலோசனைக்குப் பிறகே முதலீட்டு முடிவைத் தீர்மானியுங்கள். 
2. பங்குச்சந்தையில், அதிக கடன் வாங்கிய நிறுவனங்கள் எல்லாம் மிக மோசமான நிறுவனங்கள் என்றும், கடன் இல்லாத நிறுவனங்கள் எல்லாம் நல்ல நிறுவனங்கள் என்றும் நினைக்காதீர்கள். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் கடன் வாங்குகிறது என்றால், அந்த நிறுவனம் எதற்காகக் கடன் வாங்குகிறது, அந்தக் கடனை வைத்து அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதே தொடர்ந்து கவனித்திட வேண்டும். குறிப்பாக, சந்தையில் ஒரு நிறுவனத்தின் கடனைவிட அந்த நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதே மிக அவசியம். 
3. எந்த ஒரு வணிகத்திலும் நடைமுறை அறிவைவிட சிறந்தது வேறு எதுவுமில்லை. என்றாலும், பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, முதலீடு என்றால் `ஃபண்டமென்டல் அனாலிசிஸ்', வணிகம் என்றால் `டெக்னிக்கல் அனாலிசிஸ்' எனப் பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. சந்தையைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் அல்லது ஓரளவு தெரிந்தவர்கள்கூட இந்த இரண்டு அனாலிசிஸ்களைக் கற்றறிந்து முதலீடு அல்லது வணிகம் செய்வதே நல்லது. இவற்றைக் கற்றறிந்தால் பங்குச்சந்தையில் பணத்தைச் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை நிச்சயம் இழக்காமல் இருக்கலாம்.
4. `ஸ்டாப் லாஸ்' என்பது, நாம் வாங்கிய ஒரு பங்கின் விலை சரிந்தால், நாம் எந்த விலையில் அந்தப் பங்கிலிருந்து வெளியேற வேண்டும் என முடிவுசெய்வது. அதாவது, நம்மால் எவ்வளவு நஷ்டம் தாங்க முடியும் என்பதைப் பொறுத்து ஒரு விலையை நிர்ணயிப்பது. சந்தை சரிந்துகொண்டிருக்கிறது அல்லது பங்கின் விலை சரிந்துகொண்டிருக்கிறது என்றால், உடனடியாக உங்களது ஸ்டாப் லாஸ் விலையில் உங்கள் பங்கு விற்றுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கும், நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கும் `ஸ்டாப் லாஸ்' என்பது பெரிதாகத் தேவைப்படாது. தினசரி வர்த்தகம், எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அவசியம் ஸ்டாப் லாஸ் பயன்படுத்துவது நல்லது.
5. பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ என எவ்வளவு பெரிய நல்ல நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் நீங்கள் முதலீடு செய்துவந்தாலும், குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் முதலீட்டை மதிப்பாய்வு செய்வது மிக முக்கியம். அந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், செயல்திறன் போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் முதலீட்டைத் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பதைத் தீர்மானிப்பது நல்லது.
6. இப்போது, பங்குச்சந்தையில் பெரும்பாலானோர் `எஃப் அண்ட் ஓ' எனும் முன்பேர வர்த்தகத்தில்தான் பணத்தை இழக்கின்றனர். இதில் `குறைந்த முதலீடு, அதிக லாபம்' எனச் சொல்வார்கள். அதே சமயம், இதில் அதிக நஷ்டமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எஃப் அண்ட் ஓ வர்த்தகம் என்பது, கலை. எதுவுமே தெரியாமல் நஷ்டத்தைச் சந்திப்பதைவிட, இதில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. இல்லையெனில், இதுகுறித்து ஓரளவு தெரிந்த பிறகு வணிகத்தில் ஈடுபடுவதே நல்லது. 
7. தெருக்குத் தெரு டீக்கடையைப் போல, நம் ஊரில் நிதி ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் பல நிதி ஆலோசகர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அணுகுமுறை, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை எனப் பல விஷயங்களைக் கவனித்து, அதன்பிறகு ஆலோசனைகளைக் கேட்டு பங்குச்சந்தையில் முதலீட்டை மேற்கொள்வது நல்லது. நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஃபேமிலி டாக்டரை அணுகுவதுபோல, நிதி சார்ந்த விஷயங்களிலும் ஃபைனான்ஷியல் டாக்டரை அணுகி, அவரின் ஆலோசனைப்படி செயல்படுவது சிறந்தது.

பங்குச்சந்தை என்பது முதலீடு செய்வதற்காக நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. சந்தையை நன்றாகப் புரிந்துகொண்டால், எளிய முறையில் பணத்தைச் சேர்க்கலாம். சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். 

பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக...
1. அறிமுகமில்லாத எந்த ஒரு புதிய தொழிலைத் தொடங்கினாலும் `ஆழம் தெரியாமல் காலை விடாதே' என்பார்கள். ஆனால், பங்குச் சந்தையில் பலரும் காலை விட்ட பிறகே ஆழத்தைப் பார்க்கின்றனர், பின் அழ ஆரம்பிக்கின்றனர். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, அவசரத் தேவைக்காக வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்யவே கூடாது; உபரியாக இருக்கும் பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் மில்லியன் டாலர் உண்மை. பங்குச் சந்தையில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அறிவின்மையால், விழிப்பு உணர்வின்றி, பேராசையால் முழுப்பணத்தையும் இழந்து விழிபிதுங்கி நிற்காதீர்கள். 
2. பங்குச் சந்தையில் யாருக்கு வருமானம் வருகிறோதோ இல்லையோ, புரோக்கிங் நிறுவனங்களுக்குப் பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் புரோக்கரேஜ் கமிஷன் வந்துவிடுகிறது. குறிப்பாக பெரும்பாலான புரோக்கிங் நிறுவனங்கள் இன்ட்ராடே கால்ஸ் (Intraday Calls) என்று சொல்லப்படும் `அன்றே வாங்கி, அன்றே விற்பனை' செய்யும் வழிமுறையை வற்புறுத்துவார்கள். காரணம், நீங்கள் ஒரு பங்கை வாங்கி, 10 ஆண்டுகள் கழித்து அந்த பங்கை விற்பனை செய்தால் அவர்களுக்கு புரோக்கரேஜ் கமிஷனும் கிடைக்காது, எந்த ஒரு பலனும் இருக்காது. ஆகையால், அவர்களின் ஆசை வார்த்தையில் வீழ்ந்துவிடாதீர்கள், உங்கள் வருமானத்தை இழக்காதீர்கள். மாறாக, அவர்கள் வழங்கும் பங்கு பரிந்துரைகள் ஆராய்ந்து, அவை வெற்றியடைகிறதா என்பதை பல முறை பார்த்த பிறகு அதன் அடிப்படையில் முதலீட்டு முடிவைத் தீர்மானிப்பது நல்லது. 
பங்குச்சந்தை
3. `எஃப் அண்ட் ஓ' எனும் ப்யூச்சர் அண்ட் ஆப்சன் முன்பேர வர்த்தகத்தில் குறைந்த பணத்தை வைத்து அதிக பங்குகளை வாங்கி வணிகம் செய்யாதீர்கள். உதாரணத்துக்கு, நிஃப்டி இப்போது 9,600 புள்ளிகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நிஃப்டி 9,800 கால் ஆப்சன் (Call Option) 10 ரூபாய், ஒரு lot size 10*50= ரூ.500 என்பதற்காக, ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே பணத்தை வைத்துக்கொண்டு,  10 lot-ஐ 5,000 ரூபாய்க்கு வாங்காதீர்கள். இதைவிட, பல புரோக்கிங் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் 5,000 ரூபாய் மட்டுமே பணம் வைத்திருந்தால்கூட, அவர்களுக்கு 50,000 ரூபாய் வரை வர்த்தகம் செய்ய வாய்ப்பளிக்கின்றனர். நிறுவனங்கள் அதிக பணத்தை வைத்து வணிகம் செய்ய வாய்ப்பளிக்கின்றார்களே என்பதற்காக, வர்த்தகம் செய்து உங்களுடைய முழுப் பணத்தையும் இழந்துவிடாதீர்கள். `அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு' என்பதை உணர்ந்து முதலீடு அல்லது வர்த்தகம் செய்யுங்கள். 
4. பங்குச் சந்தையில் முதலீடு அல்லது வர்த்தகம் எதுவாக இருந்தாலும் சரியான நேரம் வரை வரை காத்திருந்து அதன் பிறகு முதலீட்டைத் தொடருங்கள். கையில் பணம் இருக்கிறதே என்பதற்காக எந்த ஒரு பங்கிலும் தேவையில்லாமல் வணிகம் செய்யாதீர்கள். பங்குச் சந்தை எங்கும் ஓடிப் போகாது; எதிர்காலத்தில் பல சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடி வரும். கிடைக்கும் அந்த நல்ல சந்தர்பந்தத்திற்காக காத்திருந்து அதன் பிறகு வர்த்தகம் செய்யுங்கள். ஏனெனில் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, ஏற்ற, இறக்கம் என்பது இருந்தாலும் பல நாள்களில் சந்தை மந்தமாகத்தான் இருக்கும். ஆனால், சந்தை அல்லது ஒரு பங்கின் விலை எந்தத் திசையில் செல்லும் என்பதை யூகிக்கவே முடியாத நேரத்தில் தேவையில்லாமல் வர்த்தகம் மேற்கொள்ளாதீர்கள், பணத்தை இழக்காதீர்கள். 
5. பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் பலரும் பணத்தை முதலீடு செய்கின்றனர், வணிகம் புரிகின்றனர். ஆகையால், பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபங்களை அவ்வப்போது பதிவு செய்வது என்பது மிக முக்கியம். பங்குச் சந்தையில் ஒவ்வொரு முறை வணிகம் மேற்கொள்ளும் போதும் லாபத்தைப் பதிவு செய்வதற்காக அவசரப்படாதீர்கள். நீங்கள் ஒரு வேளை அவசரப்பட்டால், அதிக வருமானத்தைக் கூட இழக்க நேரிடலாம். அதேசமயம், உங்கள் ஆர்டரை தவறாகப் போட்டு நஷ்டங்கள் கூட ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதை உணருங்கள். ஆகையால், அளவுக்கு அதிகமாக அவசரப்படாதீர்கள், அவதிப்படாதீர்கள். 
6. பங்குச் சந்தையில் பலரும் பொதுவாக `வதந்தியை நம்பி ஒரு பங்கை வாங்கும் நிலையும், கிடைக்கும் செய்தியின் அடிப்படையில் ஒரு பங்கை விற்கும்' நிலைதான் நீடிக்கிறது. ஆனால், பங்குச் சந்தையில் செய்தி மற்றும் வதந்திகள் அடிப்படையில் எப்போதும் முதலீட்டு முடிவைத் தீர்மானிக்காதீர்கள். குறைந்தபட்சம் ஒரு நிறுவனம் குறித்து ஆராய்ச்சி செய்து அதன் அடிப்படையில் மட்டுமே முதலீட்டைத் தொடருங்கள் அல்லது வெளியேறுங்கள். 

சந்தையில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் நம்மிடம்தான் உள்ளது. பங்குச்சந்தையில், பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல; பணத்தை இழக்காமலிருப்பதும் மிக முக்கியம். 
பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 
1. `பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை ஏற்ற-இறக்கத்தை 80 சதவிகிதம் டெக்னிக்கல் அனாலிசிஸும், 20 சதவிகிதம் ஃபண்டமென்டல் அனாலிசிஸும் வைத்து நிர்ணயிக்கலாம்' என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், இது எல்லா சூழ்நிலைகளிலும் உதவாது. கடும் பொருளாதார வீழ்ச்சி, அரசின் ஸ்திரத்தன்மை, தீவிரவாதிகள் தாக்குதல் என, பங்குச்சந்தையைப் பாதிக்கும் முக்கிய நிகழ்வுகள் சந்தைக்குப் பாதகமாகவே முடியும். இதுபோன்ற சூழ்நிலையில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அவ்வளவாக உதவாது. ஆனால், அதேசமயம் எந்த ஒரு பங்கையும் அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், எந்த ஒரு தாக்கம் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. உங்களுடைய முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொண்டுவாருங்கள். 
2. பங்குச்சந்தையில் உங்களுடைய பணத்தைப் போட்டு வணிகம் செய்வதற்கு முன், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முடிந்தவரை வீணாக்காமல் இருக்க `பேப்பர் டிரேடிங்' (Paper Trading or Mock Trading) எனச் சொல்லப்படும் காகித வர்த்தகம் செய்து பழகுங்கள். அதாவது, பணத்தை நேரடியாக பங்குச்சந்தையில் இறக்காமல், சந்தையை மட்டும் கவனித்து ஒரு பங்கை வாங்குவது, விற்பது என வெறுமனே பேப்பரில் செய்துபார்ப்பது. இதில் நிபுணத்துவம் கிடைத்த பிறகு வர்த்தகம் செய்வது நல்லது. நிஜத்தில் ஒன்றுமே இல்லாமல் குழந்தைகள் சோறு, குழம்பு, பொரியல் எனச் சமைப்பதுபோல நடிப்பார்களே, அதுபோல.
Share Market
3. பங்குச்சந்தையில் மட்டுமல்ல, இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் வணிகத்தை மையமாக வைத்தே தங்களுடைய நிறுவனத்தை நடத்திவருகின்றன. குறிப்பாக, பல நிறுவனங்கள் அதிக வருமானம் ஈட்டுவதற்காக அதிகம் பரிந்துரைப்பார்கள். ஆனால், கண்மூடித்தனமாக யாரோ ஒருவரின் பரிந்துரையை நம்பாதீர்கள். ஒருமுறைக்கு, பலமுறை அலசி ஆராய்ந்த பிறகு முதலீட்டு முடிவை நீங்களே தீர்மானியுங்கள். 
4. பங்குச்சந்தை வர்த்தகத்தில் மிகவும் அபாயகரமான மற்றும் ஆபத்தான விஷயம் எவை என்றால், `தினசரி வர்த்தகத்தில் ஷார்ட் அடிப்பது மற்றும் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன் வணிகத்தில் ஈடுபடுவது'. இந்த இரண்டிலும் எந்த அளவுக்கு வருமானம் வருகிறதோ, அதே அளவுக்கு நஷ்டம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எஃப் அண்ட் ஓ வணிகம் பற்றி உங்களுக்குப் புரியவில்லை அல்லது தெரியவில்லையெனில், தயவுசெய்து இதில் வர்த்தகம் மேற்கொள்ளாதீர். மாறாக, உங்களுக்குத் தெரிந்த நல்ல ஒருசில நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து அந்த நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் தொடர்ந்து முதலீடு மேற்கொள்ளுங்கள். வருமானத்தை உறுதியாக ஈட்டலாம். 
5. களமிறங்கிய பிறகு எந்த ஒரு நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொண்டாலும், தயங்காமல் பயப்படாமல் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து முதலீட்டை மேற்கொண்டு வாருங்கள். ஆனால், எதிர்காலத்தில் அந்த நிறுவனம்குறித்து வரும் முக்கியச் செய்திகளைத் தொடர்ந்து கவனியுங்கள். காலாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது உங்கள் முதலீட்டில் லாபம் அல்லது நஷ்டம் என எது வந்தாலும், கொஞ்சம் மதிப்பாய்வு செய்து அதன் பிறகு முதலீட்டைத் தொடருங்கள். 
6. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பல காரணிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான முக்கியச் செய்திகள், நிறுவனத்தின் செயல்திறன், விற்பனை, வருவாய், கடன், பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உலகச் செய்திகள், இந்தியப் பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம், பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசியல் காரணிகள், பொருளாதாரக் காரணிகள், பொருளாதாரக் கொள்கைகள், நிதி கொள்கை (Fiscal Policy), பணவியல் கொள்கை (Monetary Policy), சார்ட் பேட்டன்கள், பரபரப்பூட்டும் விஷயம், முதலீட்டாளர்களின் பயம் மற்றும் பேராசை என அடுக்கிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் ஓரளவுக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பங்குச்சந்தையில் பணத்தைச் சம்பாதிக்க முடியாது. ஆகையால், பங்குச்சந்தையில் பணத்தைப் போட்டவர்கள்,  என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு முதலீட்டை மேற்கொள்ளலாம்.


பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான அடிப்படை ஆலோசனைகள் சில உங்களுக்காக... 
1. `பங்குச் சந்தையைப் பொறுத்தவரை குறைந்த விலை கொண்ட (penny stocks) பங்குகளை வாங்குவது நல்லது; அதிக விலை கொண்ட பங்குகளை விற்று வாங்கலாம்' என்பது தவறான கண்ணோட்டம். பங்குச் சந்தையில் எந்த ஒரு பங்கிலும் அதன் வாழ்நாள் உயர்வு அல்லது அதன் வாழ்நாள் இறக்கத்தின்போது அந்த பங்கில் பெரும்பாலும் முதலீட்டை மேற்கொள்ளாமல் இருப்பதே நல்லது. 
2. பங்குச் சந்தையில் அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனப் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்வது என்பது உண்மையில் ஒரு நல்ல ஐடியா. ஆனால், இதை ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து எந்த ஒரு நிறுவன பங்கிலும் தொடர்ச்சியாக முதலீடு மேற்கொள்வது என்பது சரியாக இருக்காது என்கின்றனர். அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனத்துடன், கூடுதலாக அந்த நிறுவனத்தின் வளர்ச்சி, வருமானம், காலாண்டு முடிவு, கடன் உள்பட சில காரணிகளை இணைத்துக்கொண்டு அந்த பங்கில் தாராளமாக முதலீட்டை மேற்கொண்டு லாபம் ஈட்டலாம். 
3. ஒரு நிறுவன பங்கின் விலை திடீரென்று மிக குறைந்த விலையில் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்படாதீர்கள். ஒரு பங்கின் விலை மிகவும் குறைந்த விலையில் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, போனஸ், டிவிடெண்ட், நிறுவன பிரிப்பு நடவடிக்கை என சொல்லலாம். பங்குச் சந்தையில் நீங்கள் வாங்கும் பங்குகள் மற்றும் அதன் விவரங்கள் அனைத்தும் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். மாறாக, அந்த பங்கு விவரங்களை உங்களுடைய புரோக்கிங் நிறுவனம் அல்லது சப் புரோக்கர்களிடம் எந்த ஒரு ஆவணங்களையும் வழங்காதீர்கள். 
பங்குச்சந்தை
4. பங்குச் சந்தையில் யாருமே 100 சதவிகிதம் சிறந்த கில்லாடிகள் என்று சொல்லிவிட முடியாது. ஏன் நம் நாட்டில் எடுத்துக்கொண்டால்கூட சிறந்த நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்கள் கூட பல சமயங்களில் பல தவறுகளை செய்திருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் சிறப்பாக செயல்படாத பங்குகளை கூட வைத்திருக்கிறார்கள்.
பங்குச் சந்தையில் எப்போதுமே உங்களுடைய வருமானத்தை அல்லது நஷ்டத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். மற்றவர்களைவிட நீங்கள் குறைந்தளவே வருமானம் அல்லது நஷ்டத்தை ஈட்டி வரலாம். ஆனால், அவர்களுடைய கடந்தகால லாப, நஷ்டங்கள் உங்களுக்கு முழுவதுமாக தெரியாது. ஆகையால், பங்குச் சந்தையில் மற்றவர்களுடன் உங்கள் வர்த்தகத்தை ஒப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள், முதலீட்டைத் தொடருங்கள், லாபத்தை ஈட்டுங்கள்.
5. பங்குச் சந்தையில் ஒவ்வொரு முறையும் ஒரு பங்கினை வாங்கி விற்பதன் மூலம் நமக்கு லாபம் வருகிறோதோ, இல்லையோ புரோக்கிங் நிறுவனத்துக்கு கமிஷன் மூலமாக லாபம் கிடைத்து விடுகிறது. பெரும்பாலான பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் அதிக புரோக்கரேஜ் கட்டணங்களை வசூலிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன. ஒரு பங்கை ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கி விற்பதன் மூலம் ஒரு சிறிய தொகை கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த லாபத்தின் பெரும் பகுதி புரோக்கிங் கட்டணம், வரி என்றால் மீதி ஒரு லாபமும் இருக்காதே. ஆகையால் முடிந்தவரை நீங்கள் முதலீடு அல்லது வர்த்தகம் மேற்கொள்ளும் புரோக்கிங் நிறுவனங்களிடம், உங்கள் கமிஷன் கட்டணத்தை வெகுவாக குறைத்திட வற்புறுத்துங்கள். 
6. ஒரு பங்கின் விலை ஏற்ற, இறக்கத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருப்பதால் முதலீடு மேற்கொள்வதற்கு முன் அந்த பங்கினை தீர ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது. பங்குச் சந்தையில் ஒரே ஒரு பங்கு அல்லது பல பங்குகளில் உங்களுடைய மொத்த பணத்தையும் முதலீடு செய்யாதீர்கள். நீங்கள் எந்த பங்கில் முதலீட்டை மேற்கொண்டாலும் அந்த பங்கினை தொடர்ந்து கவனமாக பார்த்து வாங்குவது நல்லது. பங்குச் சந்தையில், எப்போதும் `ஒரு பங்கை குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்கலாம்' என்று நினைக்காதீர்கள். இது சாத்தியமில்லாத ஒன்று. நீங்கள் வாங்கிய ஒரு பங்கின் அடிப்படை சரியாக இருந்தால், அந்த பங்கின் விலை ஏறினாலும், இறங்கினாலும் எந்த பிரச்னையும் இல்லை. பங்குச் சந்தையில் பணத்தைச் சம்பாதிக்க சிறந்த வழிகளில் ஒன்று நீண்ட கால முதலீடு. இதை இப்பொழுதாவது உணர்ந்து நீண்ட கால நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள், பயனடையுங்கள்.


No comments:

Post a Comment