Powered By Blogger

Friday, May 29, 2015

மரபணு (DNA)

மரபணு (Genomic DNA):

பெரும்பாலான உயிருள்ள செல்களினுள் (cells) இருக்கின்ற டீஆக்சி ரைபோநியூக்ளிக் அமிலங்களே (DNA) (சில வைரஸ்கள் ரைபோநியூக்ளிக் அமிலங்களையும் (RNA), Prion எனப்படும் நுண்ணுயிரிகள் இரட்டிப்பாகும் தன்மையுடைய புரதங்களையும் கூட மரபணுக்களாக வைத்துக்கொள்ளுகின்றன) மரபணுக்களாக (Genomic DNA) செயல்படுகின்றன. இந்த மரபணுக்களின் அமைப்பும் அவற்றின் தன்மையும் (எவ்வளவு பெரிய அல்லது சிறிய புரதங்களை, எத்தகைய வரிசையில்) ஒவ்வோர் உயிருக்கும் மிக மிகத் தனித்தன்மையுடைவை. இத்தனித்தன்மை மட்டுமே வைரஸ்களையும், வாத்துகளையும், மனிதனையும், மாங்காயையும் பிரிக்கின்றது.

மரபணுக்களின் அமைப்பு:

மீத்தேனை உருவாக்கும் திறனுடைய (methanogenic) ஒரு பாக்டீரியம் உதாரணமாக 99 மரபணுக்களை, 123456……99 என்று வரிசைக்கிரமம் மாறாமல் வைத்திருக்கும் எனக் கொண்டால், உதாரணத்துக்கு அதே மீத்தேனை ஆற்றலாக மாற்றி வளர்க்கும் திறனுடைய மற்றொரு பாக்டீரியத்தின் (metholotrophs) மரபணு 321456879…..99 என்று சிறு மாறுதலுடன் அமைந்திருக்கலாம். இந்த மரபணுக்கள் செல்களினுள் எந்த இடத்தில் அமைந்துள்ளன என்பதை பொருத்தும்கூட அந்த உயிரினம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள நிலை நிர்ணயிக்கப்படுகிறது.

Box நுழைவுச்சீட்டுடன் தனி பாக்ஸில் அமர்ந்து படம் பார்ப்பது ஏதோ ஒரு விதத்தில் வளர்ச்சி என்பது போல, பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள அமீபா, பூச்சிகள், தவளைகள், மனிதன், தாவரங்களில் –தாலோபைட்டா, டெரிடோபைட்டா, ஜிம்னோஸ்பெர்ம், பூக்கும் தாவரங்கள் இவை அனைத்திலும் மரபணுக்கள் க்ரோமோசோம்களில் வைக்கப்பெற்று அந்த க்ரோமோசோம்கள் செல்லின் மற்ற பகுதிகளிலிருந்து ஒரு சவ்வினால் (Nucleoli membrane) பிரிக்கப் பெற்றுள்ளன, அப்பகுதி நியுக்லியஸ் (Nucleus).

க்ரோமோசோம்:

M. jannaschill (1,700), E.coli (4,700), S.cerevisiae (13,500) A.thaliana (100,000), Trillium(100,000,000), D. melanogaster (165,000), H. sapiens (3,000,000) எண்களெல்லாம் அவை கொண்டுள்ள மரபணுக்களின் எண்ணிக்கையினை (KB – kilo base) குறிப்பவை. பணம் அதிகமானவுடன் பாதுகாப்பாக வைப்பது போன்று, எண்ணிக்கை (No of Nucleotides) அதிகமாக அதிகமாக, அவை தனியே இல்லாமல் குரோமோசோம்களினுல் (அவை நியுக்ளியசினுள்)வைக்கப்படுகின்றன. உயிர் இரட்டிப்பாகும்போது சில அமைப்புச் செயலாளர்களான(!) குறிப்பிடத்தகுந்த சில புரதங்களின் மூலம் (eg. DNA polymerase) மரபணுக்களின் அமைப்பு மாறாமல் பிரதியெடுத்தல் நடைபெறுகிறது. அதன் அமைப்பும் எண்ணிக்கையும் பரிணாமத்தால் வந்தது/வரும் என்பது விஞ்ஞானபூர்வமான விளக்கம்.

DNA-யும், அதன் தயாரிப்பான புரதங்களும், இத்தயாரிப்பை வழிநடத்தும் mRNA (messangerRNA) போன்ற அனைத்து macro molecule-களும் அமைவதற்கு எந்தக் காரணங்களும் வேண்டியதில்லை. அவற்றின் அடிப்படைக் கட்டுமானமான எலக்ட்ரான்களின் (electronic configuration of structure) பண்புதான் அவை அப்படி அமையக் காரணம். ஒரு மனிதனோ, பாக்டீரியமோ எல்லாமே ஒரு மாலிக்யூலார் கட்டமைப்புதான். நான் தண்ணியடிக்கிறதோ, டாவடிக்கிறதோ, பதிவரசியலோ, பாழும் கிணற்றில் விழுவதோ என்னுடைய எலக்ட்ரான்களைச் சார்ந்தது, அதற்கெல்லாம் எந்த purpose-ம் கிடையாது. மனிதன் தோன்றியதற்கே ஒரு பெரிய காரணம் (Purpose) இல்லை என்றுரைத்து இந்திய தத்துவ மரபுகளைக்கூட வம்பிழுக்கலாம்.

Plasmids (Plasmid DNA):

மரபணு திருத்தத்தினைச் சரியாக புரிந்துகொள்ள, முக்கியத்துவம் வாய்ந்த பாக்டீரியம்களின் மற்றொரு மரபணுவினைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். சில பாக்டீரியம்களில் (as usual some exceptions) மட்டும் கூடுதலாக செல்லினுள் இருக்கின்ற, அளவில் சிறிய மரபணுவான Plasmids என்பது. இந்த Plasmids உதவியால்தான் இன்றைக்குத் தூணிலும் துரும்பிலும் (Ubiquitous nature), இன்னும் சொன்னால் Nuclear Radio reactor மற்றும் இரண்டரை கிலோ மீட்டர் ஆழமுள்ள பூமி, அழுத்தம் அதிகமான ஆழ்கடல் என்று நீக்கமற (2&3) சில பாக்டீரியம்களால் வாழ முடிகிறது.

Plasmids மூன்று வகைப்படும்:

(1) Anitbiotic-க்கு எதிராக வாழ R-plasmids (Resistance-plasmid)
(2) இந்த எதிர் பண்பினை, அது இல்லாத இன்னொரு பாக்டீரியத்துக்குக் கொடுக்க F-plasmid (Fertility)
(3) கடைசியாக Col-plasmid (இது பற்றி இன்னொரு முறை).

இந்த பிளாஸ்மிட்கள்தான் சில நேரங்களில் அவற்றை பெட்ரோலில் வளர உதவுகின்றன. Steroids போன்ற விஷத்தன்மை உடையவற்றிலிருந்துகூட ஆற்றலை உருவாக்கி கொண்டு பேக்டீரியம் வளர உதவி செய்கின்றன. Plasmids DNA எவ்வாறு தோன்றியது, ஏன் இதன் பிரதியெடுப்பு, அடுத்த தலைமுறைக்கு கடத்தல் போன்ற பண்புகள் தனியாக நிர்வகிக்கப்படுகின்றன (independent from Genomic DNA) என்பதற்கு இதுவரையில் வரையறுக்கப்பெற்ற காரணங்கள் கண்டறியப்படவில்லை.

பாக்டீரீயங்களின் சூழ்நிலை, வளரும் சூழல் என்பது நிமிடத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டேயிருப்பது. அந்த மாற்றத்துக்கு ஏற்றாற்போல் தகவமைத்து பரிணாம வளர்ச்சி (adaptive evolution) அடைவதில் இந்த plasmid-கள் பெரும் பங்கு வகிக்கின்றன. (இந்த இடத்தில், கட்சிகளின் கூட்டணி மாற்றப் பரிணாம வளர்ச்சி கூட, அறிவியல்பூர்வமானதுதான் என்று யோசனை செய்கிற மக்கள் – தொடந்து படிப்பது உங்கள் மனநலனுக்குக் கேடானது).

Plasmid DNA-விலோ அல்லது மரபணு (genomic DNA)-விலோ ஏற்படுகின்ற திடீர் மாற்றம் (mutation)மூலம், சூழ்நிலையில் குளுக்கோஸ் இல்லையென்றால் சுக்ரோஸ் சர்க்கரை வைத்துகொண்டு வாழ்கின்றன. (ஒல்ட்மங்க் இல்லாமல், 5000 குடிக்கிறதுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை) இந்த plasmid தவிர்த்து Genomic islands, Transposons என்று மேலும் சில (Extra genetic elements) மரபணுக்கள் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில்.

தீடீர் (சிறு) மாற்றத்தின் மூலம் தகவமைப்பு எப்படிச் சாத்தியம்? 

கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியத்தின் அடிப்படை உடற்கூறு செயலியலானது (Basal metabolicrate), அதனுடைய உடலின் அளவு மற்றும் பருமன் சார்ந்து (Surface to volume ratio), ஒரு யானையின் BMR-ஐவிட அதிகம். நமது ஊரின் வெப்பநிலை தீடீரென்று 60°C தொடும் பட்சத்தில் யானைகளால் வாழமுடியாது. ஆனால் பாக்டீரியம்கள் ஒரு சிறிய மாற்றத்தினை அதன் மரபணுக்களில் ஏற்படுத்திக்கொண்டு வாழ ஆரம்பிக்கும். இவ்வாறு மரபணுவில் இயற்கையாகவே ஏற்படும் சிறு மாற்றம் (spontaneous mutation) ஆய்வகத்தில் பல வழிமுறைகளில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு அதன் விளைவுகள் ஆராயப்படும்.

குளுக்கோஸை கொண்டு உயிர் வாழ மரபணு அமைப்பு அதனுள் எப்படி இருக்க வேண்டும், சுக்ரோஸுடன் சுபிட்சமடைய எத்தகைய மாற்றம் தேவைப்படுகிறது, அதனால் எந்த புரத(ம்)ங்கள் மாற்றப்படுகிறது என்பதெல்லாம் அடிப்படை ஆராய்ச்சி. நாம் கவனம் கொள்ளவேண்டியது இத்தகைய மாற்றம் அவைதன் சூழ்நிலையிலேயே இயற்கையாகவே நடைபெறுகிறது என்பதுதான். ஆய்வகத்தில் நாம் சுக்ரோஸ் கொடுப்பது எவை எவை ஏற்கெனவே மாறியுள்ளன என்பதனைத் தேர்ந்தெடுப்பதற்காகத்தான் (Selection pressure). நாம் சுக்ரோஸ் கொடுப்பதால் மாறவில்லை. மற்றும் இந்த தகவமைப்புக்கு மொத்த மரபணுக்களும் மாற்றப்படவில்லை (changing genome), சில மரபணுக்கள் மட்டுமே திருத்தப்படுகின்றன. அத்திருத்தம் ஜீனோமிக் DNA-விலோ அல்லது பிளாஸ்மிட் DNA-விலோ நிகழ்த்தப்படலாம் (Genetic modification).

பாக்டீரியாவில் எந்த மரபணு திருத்தப்படுகிறது? Genomic DNA or plasmid DNA? தாவரங்களில் எது? விலங்குகளில் எது? இயற்கையாக மரபணு மாற்றம் நடைபெறுகிறதா? அல்லது BT-cotton-ல் மட்டும் நடைபெற்றதா? பார்க்கலாம்.

மரபணு திருத்தங்கள் – பாக்டீரீயாவில் (Genetic modification in bacteria)

Genetic modification என்றவுடன் பெரும்பாலும் Genomic DNA-வில் செய்யப்படும் மாற்றம்தான் 
எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. எல்லா நேரங்களிலும் அப்படியன்று. (except commercial vectors) 3 நாட்களில் வளர்ச்சியடைந்து, வைட்டமின் B12 தரும் ஒரு பாக்டீரியத்தின் (A) மரபணுக்களின் சிறு பகுதி (GAAATCAACTTAA – இது போல) மற்றொரு பாக்டீரியத்தின் (B) plasmid DNA-வுடன் ஒட்டப்பெற்று (now this plasmid DNA of B becomes recombinant DNA, and B known as genetically modified), இந்த B-யின் plasmid DNA, 8 மணி நேரத்தில் அதே அளவு B12 தரும் வல்லமையுடைய C – என்ற மற்றொரு பாக்டீரியத்தினுள் செலுத்தப்பட்டு அதன் மரபணு பகுதியாகவோ அல்லது plasmid DNA-வாகவோ திருத்தப்படுகிறது.

மற்றொரு உதாரணம். 30% ஆல்கஹால் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியத்தின் (அ) genomic DNA 12345,,,99 என்று அமைந்திருக்குமானால், அதன் plasmid DNA atctttgcgaaa என்று அமைந்திருக்கும். இந்த அமைப்பினை atatttgcgaaa என்று திருத்தி (modification) மீண்டும் அதனை அந்த (அ) செல்லினுள் செலுத்தும்போது அதன் ஆல்கஹால் தயாரிக்கும் பண்பானது 40%-ஆக அதிகரிக்கும் (ஏன் அதிகரிக்கிறது என்பதையும் சேர்த்து ஒரு PhD). இந்த முறையில்தான் 1980-லிருந்து ஆல்கஹால் தயாரிக்கப்படுகின்றது. இந்த recombinant strain தருகின்ற ஆல்கஹாலினால் எந்த பிரச்சனைகளும் இல்லை. ஆனால் அதனைக் குடித்துவிட்டு ‘கருத்துகளை கக்குவதும், எலக்கியம் படைப்பதும்’ பிரச்சனைக்குரியதாக அறியப்படுகிறது. சில பாக்டீரீயம்களில் (உதாரணம்: Antibiotic தருகின்ற Streptomycetes. Sp) Genomic DNA கூட அதிக உற்பத்திக்காக அங்காங்கே மாற்றப்பட்டுள்ளன.

மீண்டும் புரிந்து கொள்ளவேண்டியது, எந்த ஒரு பாக்டீரீயத்தின் முழு மரபணுக்களையும் (Genomic DNA) மாற்ற இயலாது. அவ்வாறு மாற்ற முயன்றாலும் ஒரு பாக்டீரியத்தின் எதிர்ப்புத்தன்மை காரணமாக (due to restriction endonucleases), செலுத்தப்படும் மரபணுக்கள் சென்று சேராது. ஆனால், சில மரபணுக்களை மட்டும் திருத்தமுடியும்.

இந்த மாற்றங்கள் ஏதோ திடீரென்று ஆய்வகத்தில் மட்டுமே உருவாக்கப்படுபவை அல்ல. இரு வெவ்வேறான பேரினத்தினை (Genus) சார்ந்த பாக்டீரியம்கள் (Pseudomonas. Sp &E.coli) அவற்றின் சூழ்நிலையில் வளரும்போது அவற்றுக்கிடையே மரபணுக்கள் பரிமாற்றம் (through transposable elements) நடந்து கொண்டேதான் உள்ளது (Horizontal gene transfer – transformation, conjugation & transduction). அ-விலிருந்து ஆ-க்கும், அங்கேயிருந்து உ-என்ற மற்றொரு பாக்டீரீயத்துக்கும், அங்கேயிருந்து மீண்டும் அ-வுக்கும் தொடர்ந்து நடைபெறும். ஆய்வகத்தில் அதற்கேற்றாற்போல் சூழல் (conditional existence) உருவாக்கப்பட்டு மரபணு திருத்தம் செய்யப்பட்ட பாக்டீரியம் அதன் மாற்றத்தினை இழந்துவிடாவண்ணம் கையாளப்படுகிறது, அவ்வளவுதான்.

எதற்காக இவ்வாறு மரபணுவை மாற்றவேண்டும்? (or) மாறுதலுக்குட்பட்ட மரபணுவை ஆராயவேண்டும்?

குறைபாடுகளோ, மாறுதலோதான் அந்தக் குறிப்பிட்ட மரபணு(களின்)வின் வேலை எதுவென்று அடையாளம் காட்ட உதவும். காது கேட்கவில்லை என்றால்தான் அதன் வேலை என்னவென்று தெரியவரும். காதலில் தோற்றவனுக்குத்தான் காதலி(யி)ன் அருமை புரிகிற மாதிரி. ஒரு மரபணு குறைபாடு/மாறுபாடுதான் அதன் வேலை அந்த பாக்டீரியத்தில் என்னவென்று காட்டும். அந்த வேலைதானா என்று சரிபார்ப்பதற்காக அதே மரபணு வேறு ஒரு பாக்டீரியத்துக்கு மாற்றப்பட்டு அதே வேலை அங்கும் நடைபெறுகிறதா எனப் பரிசோதிக்கப்படும். சென்று சேர்ந்தது சரியான மரபணுவின் பகுதிதான் என்று நிரூபிக்கப்படும்.

ஒரு புத்தகம் என்னிடம் இருக்கிறதென்று என்னால் நிரூபிக்கமுடியும். என்னிடம் அதே புத்தகம் இல்லை என்று மற்றொருவரால் எப்படி நிரூபிக்கமுடியும்? வேறு ஓர் இடத்தில் அது இருக்கிறதென்று நிரூபித்தால் போதும். அதுபோல வேறு ஓர் இடத்தில் இந்த மரபணுவின் இருப்பும் அதன் விளைவு(களும்)ம் நிருபிக்கப்படும்.

GM plants

இதுபோலவே சில பாக்டீரியங்களின் உதவியுடன், தாவரங்களிலும் அதன் மரபணுக்கள் திருத்தியமைக்கப்படுகின்றன. உதாரணம்: Fungus என்ற நுண்ணுயிரி ஒரு தாவரத்தின் இலையின் செல்லுலோஸினை உண்டு தாவரத்தினை அழிப்பதாகக் கொள்வோம். Fungus-ன் செல்சுவர் கைட்டின் என்ற மூலக்கூறால் ஆனது. இந்த கைட்டினைச் செறிக்கும் ஒரு நொதி (Enzyme) ஒரு பாக்டீரியத்தின் சிறு பகுதியான மரபணுவில் (மொத்த மரபணுக்கள் அல்ல) இருக்கும்பட்சத்தில், அத்தகைய சிறு பகுதி மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு மற்றொரு பாக்டீரியத்தின் உதவியோடு (Agrobacterium mediated transformation) அத்தாவரத்தின் மரபணுக்களோடு சேர்க்கப்படும். இப்போது அத்தாவரம் (Transgenic plant), Fungus-ஆல் தாக்கப்படும்போது, அதனைத் தாமே அழிக்கும் புதுச்சக்தியைப் பெறும்.

இங்கு முக்கியமானது, பரிணாம வளர்ச்சி அடைந்த தாவரங்களில் மரபணுக்களை தையல்கலைஞர் போன்று வெட்டி ஒட்டமுடியாது. மரபணு அமைந்துள்ள குரோமோசோம்களில் ஏதாவது ஒன்றில் இத்தகைய மாற்றம் நடைபெறும். அல்லது சில நேரங்களில் சில குரோமோசோம் மொத்தமும் திருத்தப்பட்டு செல்லினுள் அனுப்பப்படும் (Nuclear transplantation).

இது இயற்கைகு எதிரானதா?

இல்லை. இத்தகைய ஆய்வக மாற்றம், இங்கு நடைபெறாவிடினும், எல்லா நேரங்களிலும் இயற்கையாகவே நடைபெறும் (When a plant virus infects and injects its RNA into the plant genome). அத்தகைய நிகழ்தகவினை அதிகரிப்பதே ஆராய்ச்சியாளர்களின் வேலை. மரபணு திருத்தம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை (S. tuberosum) உண்பதால் திருத்தப்பட்ட தாவரத்தின் மரபணுவும், சாப்பிடும் மனிதனின் மரபணுவும் சேரப்போவதில்லை. அப்படியே கிழங்கை விட்டுவிட்டு அத்தாவரத்தின் இலையினைச் சாப்பிட்டாலும் (by chance கடித்தாலும்) மரபணுக்களின் சேர்க்கை என்பதேயில்லை. அது செரிக்கப்பெற்றுவிடும் (மனித மரபணுக்களால் உருவாக்கப்பட்ட புரதங்களால் – அது வேறு பேட்டை).

உருளைக்கிழங்கின் மரபணு உருளைகிழங்காக/ உருளைக்கிழங்குக்காகச் செயலாற்றுவதே குறிப்பிட்ட நிலைகளில்தான் (obligatory conditional existence). இது அந்நிலையிலிருக்க, உருளைக்கிழங்கு திடீரென நச்சாக மாற வாய்பேயில்லை. ஆனால் காலையில் உருளைக்கிழங்கு சாம்பார், இடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், மதியம் வறுவல், மாலை உருளைக்கிழங்கு சமோசா, டின்னர் ஆலு சப்பாத்தி என்று சாப்பிட்டு உட்கார்ந்தபடியே வேலை செய்பவரேயானால் அது வேறுமாதிரியான் நச்சுதான்.

GM in animals:

தாவரங்களைப் போன்றே, விலங்குகளிலும் நாம் மாற்ற விரும்பும் ஏதாவது சில மரபணுக்கள் உள்ள மொத்த குரோமோசோமும் நீக்கப்பெற்று (Knock out) அதன் விளைவுகள் அறியப்பெற்று, அத்தகைய மரபணுவின் செயல்பாடுகள் கண்டறியப்படுகின்றன. ஏன் மரபணுக்களை மாற்றி அவற்றைக் கொடுமைப்படுத்தவேண்டும் என்கிற, ‘புன்கணீர் பூசல் தரும்’ மேனகா காந்தி வகையறாக்கள், ஏதாவதொரு மரபணு குறைபாடு/மாறுபாடு தொடர்பான நோயால் அவதியுற்று இறக்கும் மனிதன், உணவு/வைட்டமின் பற்றாக்குறையால் அவதியுறும் குழந்தைகள்மேலும் கொஞ்சம் அன்பு கொள்ள ‘நோய்நாடி நோய்முதல் நாடி’, ’உற்றான் அளவும் பிணியளவும்’ போன்ற குறள்களையும் படிக்கலாம்.

Cardiac hypertrophy என்கிற மரபணு சார்ந்த ஓர் இதய நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்று அறிய, கண்டிப்பாக எலியின் சில மரபணுக்களை knock out செய்ய வேண்டியிருக்கும். அப்போதுதான் அந்த மரபணு ஏற்படுத்தும் புரதங்கள் யாவை, அவை எங்கு என்னென்ன வேலைகளைச் செய்கின்றன, அதே புரதங்களின் கூட்டமைப்பினை ஒரு பாக்டீரீயத்தின் மூலம் மட்டுமே தயாரிக்கமுடியுமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும்.

இவர்கள் யாரும், பாக்டீரிய வதையைத் தடுப்போம் என்று கிளம்பவில்லை என்பது பெரிய ஆறுதல்தான்.

இது செயற்கையா? இயற்கையா?

எந்தவொரு மரபணு திருத்தமும் செயற்கையன்று. பரிணாமத்தின் ஒரு விளைவாக, தானாகவே மரபணு பரிமாற்றம் இரு வேறுவேறான பாக்டீரியங்களிடையே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணம்: பாக்டீரியங்களில் அடையாளம் காணப்பெற்றுள்ள பெரும்பாலான புரதங்கள், அவற்றின் அமினோ அமிலக் கட்டமைப்புகள், தாவரங்களிலும் விலங்குகளிலும் ஒத்துள்ள நிலை. ஒரு வைரஸ் தாவரத்தினைத் தாக்கும்போதோ, அல்லது விலங்குகளைத் தாக்கும் வைரஸின் பரவலின்போதோ இத்தகைய மாற்றங்கள் ஏற்படும். ஆனால் ஒரு மனிதனின் இனப்பெருக்கத்தின்போது வெளிப்பட்டு கடத்தப்படும் நாட்கள் அதிகமாகையால், ஏதாவதொரு மனித செல்லின் (cell lines)மூலம் அதே மாதிரியான நிகழ்வு ஆய்வகத்தில் நிகழ்த்தப்பெற்று, அத்தகைய மரபணுவின் விளைவு ஆராயப்படுகின்றது.

மனிதன் போன்ற பரிணாம வளர்ச்சி அடைந்த (?) Primates-ம், அவற்றின் செல்களும் சில நேரங்களில் வைரஸ்களின் மரபணுக்களை ஏற்றுக்கொள்கின்றன. பட்டுப்புழு மற்றும் மலேரியா தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு, ரத்த அணுக்களில் சில வைரஸ் அல்லது Plasmodium. Sp-ன் மரபணுப் பகுதிகள் Transfection என்ற சோதனை மூலம் அனுப்பப்படுகின்றன. சில குறிப்பிட்ட மரபணுப் பகுதிகளை அதன் அமினோ அமில வேதியியல் சார்ந்து host விலங்குகளின் செல்கள் அனுமதிக்கின்றன, எவ்வளவு மரபணுக்களை அவ்வாறு அனுமதிக்கின்றன? அந்த அளவைத் தாண்டமுடியுமா? அளவுக்கு அதிகமான மரபணுக்களை அனுப்பி அவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்வது இயற்கைக்கு எதிரானதாகாதா?

மனிதனும் இப்பூலகத்தின் ஒரு பகுதிதான், மனிதனின் இச்செயல்பாடுகளால் மட்டும்தான் இத்தகைய பரிணாம வளர்ச்சி வேகமடையும் என்பதுகூட இயற்கையின் ஏற்பாடாக இருக்கலாம். எங்கேயோ இருந்து ஒருவன் (?) தூங்கும்போது காணும் கனவுதான் இவ்வுலக நிகழ்வுகள், அவன் விழித்துக்கொண்டால் கனவு சுபம் அல்லது அவன் ஒரு பெரிய மைக்ரோஸ்கோப் மூலமாக அனைத்தையும் பார்ப்பதாகக் கொண்டால் மனிதனின் மரபணு திருத்த ஆராய்ச்சிகள் ஒரு சின்ன விஷயம். அதுவும் ஒரு (சக!) நிகழ்வு, இயற்கையின் ஒரு சிறு பகுதி. இங்கு எதுவும் செயற்கையன்று, நீ எங்கிருந்து எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பெற்றது! (பா.ராகவன் மன்னிக்க).

யானையை பூனையாக்கலாமா? வேப்பமரம் சந்தன மரமாகுமா?

சாத்தியமே இல்லை. பத்ரியின் பதிவில் சொல்லியபடி ஒரு கருவின் (யானை) மொத்த நியுக்ளியஸும் நீக்கப்பெற்று, மற்றொரு விலங்கின் நியுக்ளியஸ் (பூனையின்) திணிக்கப்பெற்று, அது ஒரு பெண் யானையின் (Surrogate mother) கருப்பையில் வைக்கப்பெறுமானால் அது பூனைக்குட்டியையோ அல்லது யானைக்கும் பூனைக்கும் இடையில் (பூயா?) எதையுமோ ஈன்றெடுக்காது. யானை, யானையாகவே மரபணு செயல்படுவதே obligatory conditional existence (ஒரு 4 PhD-யாவது ஆகும், இந்த conditions-களைக் கண்டறிவதற்கு). பூனை ஜீனோம் (Genome) பூனையைத்தான் கொடுக்கும், அதுனால்தான் அது பூனை. யானைக்கும், பூனைக்குமான வித்தியாசங்களுக்கு காரணம், ஒரே மாதிரியான வேதியியலை அடிப்படையாக கொண்ட டீஆக்ஸிரைபோ நியுக்ளிக் அமிலங்களேயானாலும், காரணமானவன் எல்லாம் வல்லவனாயிருந்தால்?காரணமும் நீ, காரணியும் நீ! ஒரு பாக்டீரிய (E.coli) பேரினம் (Genus) அதன் மொத்த மரபணுக்களும் (DNA) வேறொரு பாக்டீரியத்தின் (Salmonella) DNA-க்களால் மாற்றியமைக்கப்படுமானால், கண்டிப்பாக அந்த மாற்றப்படும் மரபணுக்கள் அதன் குணங்களையும்(Properties) சேர்ந்தே இழந்துவிடும். அளவில் சிறிய பாக்டீரிய மரபணுக்களுக்கே இத்தகைய நிலை கடினம் என்னும்போது நியுக்ளியஸினுள் மரபணுக்களை கொண்டுள்ள வேப்பமரம், மாற்றம் மூலம் சந்தன மரமாக ஆகவே முடியாது. வேப்பமரம் சிறிய அளவில் சந்தனமரத்தின் மரபணுக்களை ஏற்றுக்கொள்வதை வைத்து மொத்த மரபணுக்களையும் மாற்ற முடியாது. மாற்றினாலும் அது சந்தனமரத்தின் தன்மையினை கொடுக்காது.

ஏன்?

இங்குதான் சூழலும் அதனை ஒத்து/சார்ந்து வெளிப்படும் மரபணுக்களின் குணாதிசயங்களும் இரண்டுக்கும் இடையேயான நெருக்கமான தொடர்புகளும் கடவுள்தானோ என்று எண்ணவைக்கின்றன. ஒரு மரபணுவின் (Eg. ATGCCTTTACCGGGGGG) குணாதிசய வெளிப்பாடு அந்த மரபணு அமைந்துள்ள Genome-ன் மற்றொரு பகுதியில் உள்ள இந்த மாதிரியான ஒரு GGGGSCTAAAA மரபணுக் கட்டமைப்புகள் உருவாக்கும் புரதங்களால் (Either activators or repressors) கட்டுப்படுத்தப்படும். இந்தப் புரதங்கள் உருவாவதையோ அல்லது உருவாகாமல் தடுப்பதையோ சில நேரங்களில் சூழ்நிலையும் சில நேரங்களில் மற்றொரு மரபணுவும் செய்கின்றன. ஒரு மரபணு குணாதிசயங்களின் வெளிப்பாடு அந்த மரபணுவாலேயே நெறிப்படுத்தப்படுகின்றது (Gene regulation).

எளிதான உதாரணம், நமது ஊரில் நாடளுமன்றம் சட்டத்தினையும், சட்டம் ஜனாதிபதியையும், ஜனாதிபதி நாடளுமன்றத்தினையும் கட்டுப்படுத்துவது போல். இன்னும் கொஞ்சம் எளிதாகச் சொன்னால் ‘ஒளிவேட்கை கண்ணாகியது’. சூழலால் கட்டுப்படுத்தப்படும் அல்லது நெறிமுறைப்படுத்தப்படும் மரபணுக்கள், சில பாக்டீரியத்தில் உள்ள அளவில் சிறிய ஜீனோம்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன, ‘ஒளிவேட்கை கண்ணாகியது’ என்பதனை விலங்குகளில் சோதனைகள் மூலம் நிரூபித்தால் நோபல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனாலும் ஹாலிவிட் படத்தில் காண்பதுபோல் ஏதாவது மிருகமோ அல்லது விஷங்களை பரப்பும் மரமோ மரபணு திருத்தத்தால் தோன்றுவதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளது?

எவ்வளவு வாய்ப்புகள்?

‘பூயா’ பிறப்பதற்கான வாய்ப்பு இந்திய நாடாளுமன்றம் (குரோமோசோம்) அதன் உறுப்பினர்களோடும், (அதனுள்ள மரபணு) சட்டப் புத்தங்களோடும் (Repressors) பெயர்த்தெடுக்கப்பட்டு லண்டனில் அமைக்கப்பெற்றவுடனே (host), அப்புத்தகங்கள் சொல்லும் சட்டங்களும், அவ்(நம்)வுறுப்பினர்களின் அவை நடத்தையும் (gene expressions) அந்நாட்டுக்குப் பொருந்துவதற்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ அவ்வளவுதான். அல்லது ஒரு கணிணியை எதிர்பாராமல் பார்க்கும் ஒரு குரங்கு, தட்டச்சும்போது அது கம்பராமாயணமாக மாறுவதற்கு எவ்வளவு நிகழ்தகவோ அவ்வளவு. ஒரு விநாயகர் (Transgenic God) மீண்டும் தோன்றுவதற்கான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. மரபணுக்களுக்கு அதன் தன்மையினைக் கொடுப்பது எது என்பதற்கான விடை (விநாயகர்!) ஸ்டெம்செல் ஆராய்ச்சிகளில் கிடைக்கும்.

மனமாற்றம் அவசியமா மரபணு மாற்றத்துக்கு?

ஆம், புரிதல் அதனைத் தரும். ஏதோ BT-பருத்தியும், Terminator ஜீன்களை கொண்டுள்ள விதைகளும், கோவேறு கழுதை, விதையில்லா மாதுளை இவற்றில் மட்டும்தான் மரபணு மாற்றப்பட்டுள்ளது, மற்றபடி வேறு எங்கும் மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் கிடையாது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூலக்கூறு அறிவியல் துறையிலிருந்தும, IISc, IIT-ல் இருக்கின்ற ஆய்வகம்வரை ஒவ்வொரு ஆய்வகத்திலிருந்தும் மரபணு மாற்றம் செய்யப்பெற்ற பாக்டீரீயங்கள் சுற்றுப்புறச் சூழலை நோக்கி தினமும் அனுப்பபடுகின்றன. ஆய்வக உபகரணங்களைச் சுத்தம் செய்யும் பொழுதுகளில் இது அவர்களுக்குத் தெரியாமலே நடைபெறும். ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவற்றில் இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பெற்ற பாக்டீரியாக்களின் எதிர்பாராத வெளியேற்றம் (inadvertent release) என்பது கடுமையான விதிமுறைகளால் குறைக்கப்படுகிறது. ஆனால் தடுக்கமுடியாது.

மரபணு மாற்றம் தாங்கிகொள்ள கூடியதுதானா?

மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் மனிதனால் தாங்கிகொள்ளக் கூடியவையாகத்தான் இருக்கும். உதாரணம்: பீர்க்கங்காய், கொத்தவரங்காய், பாகற்காய் (Tropical Vegetables) போன்ற நமது காய்கறிகளின்றி, முழுவதுமாக இங்லீஷ் காய்கறிகள் மட்டுமே நாம் எடுத்துகொள்ளும் சூழல் வந்த/வந்தாலும் நம் உடலின் உடற்கூறு செயலியலானது அதற்கேற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.

மனிதன் யார் இதை சொல்ல? மற்றும் செய்ய?

இப்புவியில் வாழும் Primates-களில், அனைத்தையும்விடக் கூடுதலாகச் சில பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மனித மிருகம் (6&7), இந்த மாதிரியான செயல்களை/ஆராய்ச்சிகளைத் தன்னிச்சையாகச் செய்கிறது. தவிர எங்களுக்கு அனுமதி கொடுங்கள் என்று யாரிடம் அனுமதி வாங்குவது? யாரிடம் கேட்பது? அது சில பெண்கள், யாரிடமோ ‘பெண் சுதந்திரம் கொடுங்க’ என்று கேட்பது மாதிரி ஆகிவிடும். யார் வந்து அனுமதி கொடுப்பார்கள்? (MCP என்று கொதித்தெழும் பெண் தெய்வங்கள் பொறுத்தருள்க) துரைமார்கள் எதிர்க்கிறார்கள், நானும் எதிர்க்கிறேன், ஆதரித்தால் பொதுக்குழுவில் கேட்டுவிட்டு அப்பால யோசிக்கலாம் என்பவர்களுக்கு அதிலுள்ள ஆபத்து புரியமாட்டேன் என்கிறது. காரண காரியங்களை அலசி ஆராய்ந்து, சில பின்நவீனத்துவ பித்து தலைக்கேறின விஞ்ஞானிகள் கடவுளையெல்லாம் கிழித்துத் தொங்கவிட்டு விளக்கும்போது துரைமார்கள் தீடிரென்று அருள் வந்தமாதிரி எல்லா அனுமதியையும் அள்ளி விட்டுவிடுவார்கள். கடந்த வாரம் மனித ஸ்டெம்செல் (stem cell) ஆராய்ச்சிகளுக்கு அனுமதி கொடுத்தமாதிரி. அதனால் அடிப்படையினைத் தெரிந்துகொள்வது, போத்தீஸ் இல்லை என்றால் சென்னை சில்க்ஸ் போகலாம் என்று மாறுவதுபோல மனம் மாறுவதற்கு உதவியாக இருக்கும்.

இதன் பிறகும் மரபணு திருத்தம்/மாற்றம் என்றவுடனே மீசை துடித்தால் உடனடியாக தமிழில் வலைப்பதிவு எழுத ஆரம்பிக்கலாம் அல்லது மீசையினை எடுத்துவிடலாம். அடுத்த 50 வருடங்களில் மரபணு மாற்றப்பெற்ற உணவுப் பொருட்களும், உயிர் காக்கும் மருந்துகளும் தவிர்க்க முடியாதவை(indispensable). அப்போது மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்ற சாக்கு போக்கிலிருந்து சிலரை காப்பாற்ற வேண்டி தரையினை மணலின்றி சுத்தமாக பேணுவதே இதன் நோக்கம், யாருடைய மீசையுமன்று.

காந்தியின் மறுபக்கம் (அதிர்ச்சி) மகாத்மா எனும் அடைமொழி ஏன்?

காந்தி – வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்
எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெறுவதையோகூட விரும்பாத தலைவராக இருந்திருக்கிறார் காந்தி.
தமிழ் சினிமாவில் வரும் “மாஸ்” திரைப்படங்கள் எப்படி இருக்கும்? ஹீரோ இளமையில் இருந்தே அதிபுத்திசாலியாக இருப்பார். அம்மா சென்டிமென்ட் இருக்கும். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருக்கும். தன்வழியில் சிவனே என்று போய்க்கொண்டிருக்கும் ஹீரோவை வலிய வந்து வம்புக்கு இழுப்பான் வில்லன். அதன்பிறகு முட்டியை மடக்கிக் கைகளை உயர்த்தும் ஹீரோவிடம், வரிசையில் வந்து அடிவாங்கிச் செல்வார்கள் வில்லனின் அடியாட்கள். கடைசியில் பிரதான வில்லனை அடித்தோ அறிவுரை சொல்லியோ திருத்துவார் கதாநாயகன்.
காந்தியின் கதையும் சற்றொப்ப இதேபாணியில் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். (காந்தி பக்தர்கள் கொஞ்சம் நிதானிக்கவும்…) அவர் பெற்றோருக்குக் கட்டுப்பட்ட பிள்ளை, நன்றாகப் படிப்பவர், லண்டனுக்குப் படிக்கப் போகையில் மதுவைத் தொடமாட்டேன், பெண்களைப் பார்க்கமாட்டேன் என்ற சத்தியங்களைச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் அவரது வக்கீல் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது வெள்ளையன் ஒருவனால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். பிறகு மக்களைத் திரட்டிப் போராடினார். கடைசியாக இந்தியாவுக்கு கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சுதந்திரம் வாங்கித்தந்தார்.
ஜாலியன் வாலாபாக்கில் பயன்படுத்தப்பட்டது துப்பாக்கிகள் என்பதால் மேற்சொன்ன வாக்கியம் பாதி உண்மை என்றே கொள்வோம். (எப்படியோ கத்தி இல்லை இல்லையா?!) 1915ல் இந்தியாவுக்கு வந்த காந்தியிடம் நூற்றைம்பது வருட விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்த ராயல்டியும் தரப்பட்டது எப்படி? போகட்டும், விடுதலை அவர் பேசி வாங்கித் தந்ததாகவே வைத்துக்கொள்வோம். அதற்காக அவரைத் தேசத்தந்தை என்றோ அல்லது தேச சித்தப்பா என்றோ அழைப்பது சரி. மகாத்மா எனும் அடைமொழி ஏன் காந்தி பெயரோடு எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கிறது?
எந்த கேள்வியும் இல்லாமல், தோராயமாக மூன்று தலைமுறை மக்கள் காந்தியை ஏற்றுக்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவரது வாழ்வின் சில நேர்மறையான அம்சங்கள் மட்டும் மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு அவரை மகாத்மாவாகவே வைத்திருக்கும் வேலை இன்றளவும் தொடர்கிறது
.
காந்தி கொண்டாடப்பட வேண்டியவராகவும் பின்பற்றப்பட வேண்டியவராகவும் நூறாண்டுகாலமாக பிரசாரம் செய்யப்படுகிறார். சமகால அரசியல்வாதிகளில் தொடங்கி அவ்வப்போது வந்துபோகும் அண்ணா ஹசாரே, அப்துல் கலாம் போன்ற காமெடி டிராக் நபர்களையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள காந்தியைத் தெரிந்துகொள்வது அவசியம். அவர் பயன்படுத்திய அல்லது அவருக்காகப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்தியாவில் ‘மாகாத்மா’ காந்தியின் காலம் 1915ல் தொடங்குகிறது. சத்யாகிரகம் எனும் தொழில்நுட்பத்துக்கான பேட்டன்ட்டுடன்தான் அவர் நம் நாட்டுக்கு வந்தார். சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து 1921ல் அவர் அகில இந்திய காங்கிரசுக்கு தலைவராகிறார். பெரிய அளவில் ஊடக வலுவில்லாத அந்தக் காலத்தில், வெறும் ஆறாண்டு காலத்தில், காந்தியால் முப்பதுகோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தின் தலைவராக முடிந்ததன் விளைவுதான், திடீரென ஒருநாள் இரவில் அண்ணா ஹசாரேவால் ஊழல் ஒழிப்புப் போராளியாக முடிகிறது.
சத்யாகிரகம் என்பது வெள்ளையன் உதைவாங்காமல் நாட்டை ஆள உருவாக்கப்பட்ட போராட்டமுறை மட்டுமல்ல. பிரிட்டிஷ் அரசுக்கெதிராக வீரத்துடன் போராட முன்வந்தவர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி, அவர்களைச் சொந்த மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் நோக்கமும் அதற்கு இருந்தது. காந்தியின் ஜால்ராக்களில் ஒன்றான அன்றைய ஆனந்தவிகடன் 1929 மே இதழில், பகத்சிங் பாராளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டு வீசியதைக் கண்டிக்கும் தலையங்கத்தைப் பாருங்கள்:
// “இரண்டு இளைஞர்கள் திடீரென எழுந்து இரண்டு அசல் வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு, கைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம். இந்த இளைஞர்கள் இருவருக்கும் முழுமூடச் சிகாமணிகள்’ என்றபட்டத்தை விகடன் அளிக்க விரும்புகின்றான். முதலாவதாக, மகாத்மாவின் சத்தியாக்கிரகப் பீரங்கியினால் தகர்க்க முடியாத அதிகார வர்க்கத்தை வெங்காய வெடியினாலும், ஓட்டைத் துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள் எண்ணியது மூடத்தனம்…//
காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் தெரிவு செய்யப்பட்டபோது, ‘பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி’ என பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார் காந்தி. காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்ய, சுபாஷ் வெறுத்துப் போய் பதவியை உதறினார். பகத்சிங் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனை குறித்து காந்தியின் ஆலோசனையைக் கேட்டு இர்வின் பிரபுவின் செயலாளர் கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தியின் விசுவாசி பட்டாபி சீதாராமையா எழுதிய பதில் இதுதான்:
//“Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after.”// (அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார்.)
இவ்விரு சம்பவங்களும் சொல்லும் கருத்து இதுதான். எந்த ஜனநாயக பண்புகளும் இல்லாத, தனக்கு நிகரான வேறு தலைவர்கள் உருவாவதையோ அல்லது தனக்கு இணையாக வேறொரு நபர் புகழ் பெறுவதையோகூட விரும்பாத தலைவராக இருந்திருக்கிறார் காந்தி. (அப்போது காந்தி அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் பகத்சிங் எனக் குறிப்பிடுகிறார் காங்கிரசின் அதிகாரபூர்வ வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா- The History of Indian National Congress நூலின் முதலாவது பாகம்.)
காந்தியின் சமத்துவ சிந்தனையும் பாசாங்குகள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. இறுதி நாள்வரை அவர் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களைப் பற்றிக் கொண்டவராகவே இருந்தார். அம்பேத்கரை தலித் மக்களின் தலைவராக அங்கீகரிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தவர் காந்தி. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரும் சட்டம் கொண்டுவருவதில் லண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரை வெல்ல முடியாத காந்தி, தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தரக்கூடாது என்பதற்காக, எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். தலித் மக்களின் விடுதலைக்கான அவரது முயற்சி, காந்தியைக் கொல்ல அவர் காட்டும் பிடிவாதமாக காங்கிரஸ்காரர்களால் திரிக்கப்பட்டது. காந்தி எனும் ஒற்றை நபருக்காக ஒட்டுமொத்த தலித் மக்களின் உரிமைகளையும் விட்டுத்தர வேண்டிய நிலைக்கு ஆளானார் அம்பேத்கர்.
தலித் மக்கள் ஏனைய உயர்சாதி மக்களை சார்ந்திருக்கும்படியாகவும் ஏழைகள் பணக்காரர்களை சார்ந்திருக்கும்படியாகவும் உள்ள சமூகத்தைத்தான் அவர் விரும்பினார். அவர் வலியுறுத்தியது சாதிகளுக்குள் இணக்கம் இருக்கவேண்டும் என்பதுதான், சாதி ஒழிப்பல்ல. (சாதி ஒழியவேண்டும் என காந்தி சொல்லவில்லை- ராஜாஜி.) அது வேலைக்காரனுக்கும் முதலாளிக்குமான இணக்கம். அது வேலைக்காரன் அடிமையாக இருக்கும் வரைதான் சாத்தியம். பணம் பணக்காரர்களிடம்தான் இருக்கவேண்டும், ஏழைகளுக்கு அவர்கள் புரவலர்களாக இருப்பார்கள் எனும் காந்தியின் சொற்றொடர் ஒன்றே போதும், அவர்களது செல்வந்தர்கள் மீதான பாசத்தைக் காட்ட.






தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே. மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி. இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது. அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது.
ஒருநாள் தூக்கத்தில் அவருக்கு விந்து வெளியேறியதால் அவரது பிரம்மச்சர்யத்தைப் பரிசோதிக்க எடுத்த முடிவு அநாகரிகமானது. பதினெட்டு வயதான அவரது பேத்தி மனுவுடன் ஓரிரவு ஆடையில்லாமல் படுக்கையில் இருப்பதன் வாயிலாக தனது பிரம்மச்சர்யத்தை அவர் பரிசோதித்தார். காந்தி தன்னுடன் ஆசிரமத்தில் இருந்த பெண்களை உடலுறவு இல்லாமல் வாழும்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தினார். ஆசிரமப் பெண்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருந்தது அவரது தொண்டர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மோகன்தாஸ் காந்திக்கு ஒருவித நரம்பு நோய் இருந்தது. மிகவும் அழுத்தம் அதிகமான கட்டங்களில் காந்தியின் உடல் தாங்கமுடியாமல் நடுங்க ஆரம்பிக்கும். அப்போது அவர் யாரையாவது அணைத்தவாறு படுத்திருப்பார். இவ்வாறு அவர் அணைத்துக்கொண்டு படுத்தது ஆஸ்ரமத்தில் இருந்த பெண்களில் ஒரு சிலரை. ஆனால் இது வெளிப்படையாக அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். கஸ்தூர்பாவும் அதே ஆஸ்ரமத்தில்தான் அப்போது இருந்தார். (“I am taking service from the girls” என்று காந்தி பலமுறை இதைப்பற்றிக் கடிதங்களில் குறிப்பிடுகிறார்.) - “மோகன்தாஸ்” புத்தகத்தில் ராஜ்மோகன் காந்தி.
மேற்கூறிய செய்திகள் வாயிலாக நான் காந்தியைப் பெண் பித்தர் எனச் சொல்ல வருவதாக எண்ண வேண்டாம். அவரது திருமணத்து வெளியேயான உறவுகள் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்பதில் எனக்கு விமர்சனம் இல்லை. ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக, தன்னைப் பின்பற்றிய, தன்னுடனிருந்த பெண்களை, ஒரு கருவிபோல மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிச்சயம் விமர்சனம் செய்யப்படவேண்டியதே. பிரம்மச்சர்யத்தை சோதித்துத் தன்னை நிரூபித்தார், சரி, அதில் பயன்படுத்தப்பட்ட மனுவின் கதி?
இத்தகைய முரண்பாடான அரசியல் மற்றும் சொந்த வாழ்வைக் கொண்டிருந்த காந்தி ஏன் இன்றளவும் அப்பழுக்கற்றவராகக் காட்டப்படுகிறார்? இந்தக் கேள்வியை எழுப்பவே மேலேயுள்ள தகவல்களைத் தர வேண்டிய அவசியம் உருவாகிறது. அவரது கதை ஏதோ ராமாயணம் அல்லது திருத்தொண்டர் புராணம் போலவோ, வெறும் பஜனையாகவோ பாடப்பட்டால் நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. மாறாக, அவர் தேசத்தின் முகமாகக் காட்டப்படுவது வேறு பல காரணங்களுக்காக.
விடுதலைக்கு முன்பாக சத்தியாகிரகம் எப்படி ஆங்கிலேயனுக்குத் தேவைப்பட்டதோ இப்போதும் அது நவீன அதிகார வர்க்கத்துக்கும் தேவைப்படுகிறது. காந்தியை ஆதர்ச தலைவனாகத் தொடர்ந்து முன்னிறுத்துவதன் மூலம்தான், அனேக மக்கள்திரள் போராட்டங்களைத் தீவிரவாதமாகச் சித்திரிக்க முடியும். சமீபத்தில் கூடங்குளம் போராட்டம் பற்றி சுப்பிரமணியம் சாமி சொன்ன ஒரு விமர்சனம்- “அது நக்சலைட்டுக்கள் நடத்தும் போராட்டம்.” (டைம்ஸ் நவ் டிவியில்.) ஆக ஒரு போராட்டம் நடத்தப்படும் காரணிதான் அதனை சாத்வீகப் போராட்டமா அல்லது தீவிரவாதமா என அதிகாரவர்கத்தை முடிவெடுக்க வைக்கிறது. காந்தி எனும் பிம்பத்தை உயிருடன் வைத்திருப்பது இந்த கபடத்தனத்தைச் சுலபமாக்குகிறது.
ராகுல் காந்தியின் ஒரு கோடி ரூபாய் ஏழைவீட்டுச் சப்பாத்திக்கான யோசனை எம்.கே.காந்தியிடமிருந்து பெறப்பட்டதுதான். அவர்தான் பிர்லா கட்டிக்கொடுத்த மாளிகைகளில் தங்கிக்கொண்டு இந்தியாவின் கடைக்கோடி ஏழைகளைப்போல உடுத்திக்கொண்டிருந்தவர். காரணமேதும் தெரியாமல் காந்தி மகாத்மா என அடைமொழியிட்டு அழைக்கப்பட்டதன் விளைவுதான் தளபதி, அஞ்சாநெஞ்சன், புரட்சித்தலைவி என அடைமொழிகள் பொருத்தமில்லாத நபர்களை அலங்கரிக்கின்றன.
மதத்தை அரசியலுடன் கலந்தது மற்றும் பஜனையைப் போராட்டமாக்கியது என அவர் இந்திய அரசியலுக்கு இரண்டு மோசமான முன்னுதாரணங்களைத் தந்திருக்கிறார். இந்து வைணவரான காந்தி தன் ராம பக்தியைத் தன்னுடன் மட்டும் வைத்துக்கொள்ளாமல் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தார். பாரதீய ஜனதா பிற்பாடு இந்த அடிப்படைவாதத்தில் ஏராளமான ரத்தத்தைக் கலந்து வளர்ச்சியடைந்தது.
காந்தி சாத்வீகத்தை மக்கள் போராட்டத்தில் மட்டும்தான் வலியுறுத்தினார். இயல்பில் அவர் ஒரு சர்வாதிகாரியாகவே இருந்திருக்கிறார். பம்பாய் கப்பற்படையினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்க தனது தொண்டர்களை அனுப்பியது காங்கிரஸ் கட்சி. அதன் தோல்விக்குப் பிறகு காந்தி சொன்னது:
அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின் கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழவிரும்பவில்லை. மாறாகத் தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்” ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946.)
அவர் நடத்த விரும்பிய அரசு வெள்ளையன் நடத்திய ஆட்சியை ஒத்ததாகவே இருந்திருக்க முடியும். இரண்டாம் உலகப் போரில் இந்தியர்கள் பங்கேற்பதை அவர் தயக்கமில்லாமல் விரும்பினார், வெள்ளையனைப் போலவே. பெஷாவரில் நடைபெற்ற எழுச்சிமிக்க மக்கள் போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு தன் படைகளை அனுப்பியது. சொந்த மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வீரர்கள் மறுத்தார்கள். அதனைக் கண்டித்து காந்தி சொன்ன வாசகங்கள்:
”இராணுவ சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச் சொன்னாலும் சுடவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அவன் கீழ்ப்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக் கொல்லச் சொன்ன பிறகும் அதைச் செய்ய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும்போது இதே அதிகாரிகளையும் சிப்பாய்களையும் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான் அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச் சொல்லும்போதும் இவர்கள் இதே போல கீழ்ப்படிய மறுக்க நேரிடும் என அஞ்சுகிறேன்.’’
பிடிவாதம், எதேச்சதிகாரம், மத அடிப்படைவாதம், ஜனநாயக விரோதம் என நம் சமகால அரசியல்வாதிகளில் எல்லா அடாவடிகளையும் அப்போதே கொண்டிருந்தவராக இருந்திருக்கிறார் காந்தி. எத்தனை உதைத்தாலும் வாங்கிக்கொள் என அவர் மக்களுக்கு மட்டும் அறிவுரை சொன்னதால்தான் இன்றுவரை அவரை அதிகாரவர்க்கம் கொண்டாடுகிறது.
எனக்கு வண்ணதாசனைப் பிடிக்கும் என்பது மாதிரியான நிலைப்பாட்டை நாம் காந்தியின் மீது வைக்க முடியாது. காந்தியை ஏற்றுக்கொள்ளும்போதே நீங்கள் பகத்சிங்கை நிராகரிக்கிறீர்கள், கட்டபொம்மனின் தியாகத்தைக் குறைத்து மதிப்பிடும் மனோநிலைக்கு ஆளாகிறீர்கள். பாஸ்கோவுக்கு ஆதரவாக, பழங்குடிகளுக்கு எதிராகத் தரகு வேலை பார்க்கும் மன்மோகன் கும்பலும்தான் காந்திய வழியிலான அரசை நடத்துவதாக கருதிக்கொள்ளலாம், அதற்காக அவர் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ள அவசியமிருக்காது.
நிறைவாக, காந்தியைக் கொண்டாடாதீர்கள் எனக் கேட்பதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை. கொண்டாடும் முன்பு அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்ளவே எழுதப்படுகிறது. காந்தியின் நோக்கங்கள் உயர்வானவை, நடைமுறைப்படுத்துவதில் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என நீங்கள் வாதிட்டால் அதற்கு காந்தியின் வார்த்தைகளிலேயே பதில் இருக்கிறது,
“முடிவைவிட முறையே முக்கியம்!” (சௌரி சௌரா சம்பவத்துக்காக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது காந்தி உதிர்த்த வாசகம்.)

Thursday, May 28, 2015

ஏன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும்?

ஏன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற கேட்டால் 5 காரணங்களை முன்வைக்க முடியும்.
சிக்கல்களை தீர்க்கும் திறன்:

பொறியியலின் அடிப்படை கணிதம். எந்த துறையாக இருந்தாலும் சரி மாணவர்கள் கொஞ்சம் அதிகமாக கணக்கோடு விளையாட வேண்டியிருக்கும். நான்கு ஆண்டு படிப்பில் பொறியியலுக்குத் தேவையான அடிப்படை கணிதத்திலிருந்து துறை சார்ந்த பாடங்கள் வரை கணக்கு போடுவதில் தேர்ந்த அறிவுடையவர்களாக முடியும். கணிதத்தை விட மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி இருக்கிறது. இந்த அறிவு தொழில் நுட்பம் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் அளவுக்கு மாணவர்களின் திறமையை வளர்க்கிறது. இதனை 'ப்ராப்ளம் சால்விங் நேச்சர்' ( Problem solving nature) என்று கூறுவார்கள்.

இண்டர்வியூவில் ஆப்டிட்ய்யூட் என்ற எழுத்துத் தேர்வு பகுதி இடம் பெறுவதன் முக்கிய காரணமே, மாணவர்களின் 'ப்ராப்ளம் சால்விங்' திறனை அறியத்தான். இது மாணவர்களின் திறனை அறிய முக்கிய கூராக கருதப்படுகிறது. பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை செய்யும் ஒருவருக்கு, இத்திறன் அதிகமாக இருக்கும். வேலையில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் வரும் சிக்கல்களை தீர்ப்பதிலும் இவர்களுக்கான திறன் சற்று அதிகமாக இருக்கும் என்றே கூறலாம்.

வேலைக்கு மட்டும் அல்ல வாழ்க்கைக்கும் பொறியியல்...
முடிவெடுத்தல்:

இன்ஜினியரிங் படிப்பதால் ஒரு மாணவனுக்கு வாழ்கையில் முக்கியமான தகுதியான டிசிஷன் மேக் திறன் அதிகரிக்கும். வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முக்கிய முடிவும் நம் வாழ்க்கையின் பாதையையே மாற்றக் கூடியதாக இருக்கும். இதேதான் இன்ஜினியரிங்குக்கும். பிரச்னை என்ன என்பதை கண்டரிய Problem solving nature தேவை என்றால், அதற்கான சரியான தீர்வை தேர்ந்தெடுப்பதில் உதவுவது டிசிஷன் மேக்கிங் திறன். உலகில் பலரால் எடுக்கப்பட்ட சில நல்ல முடிவுகளே, முன்னேற்றத்துக்கான பாதையாக இருப்பதை நாம் காணலாம்.

வேலையில் ஒருவர் எடுக்கும் முடிவு அந்த நிறுவனத்தை உச்சத்துக்கும் கொண்டு செல்லலாம் அல்லது பதாளத்திலும் தள்ளலாம். ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றால் நாலாபக்கமும் நம் மூளை செயல்பட வேண்டும். முடிவெடுப்பதையே வேலையாகக் கொண்ட ஒரு நல்ல இன்ஜினியர், முடிவெடுப்பதில் தேர்ந்தவராக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. வேலையில் முடிவெடுத்து பழகிய ஒருவர், வெளியுலகில்  எடுக்கும் முடிவும், நாலாபக்கமும் யோசித்து தீர்க்கமான முடிவாக இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம்.

இன்ஜினியரிங் - படிப்பு அல்ல பழக்கம்
க்ரியேட்டிவிட்டி:

ஒரு கணினி திரைக்குள் உலகைக் கொண்டு வருவது ஒரு இன்ஜினியரால் மட்டும்தான் முடியும். அன்றாடம் நம் வீடு முதல் ஸ்பேஸ் வரை பயன்படுத்தும் பல தொழில் நுட்பங்கள் எதார்த்தத்தை தாண்டிய சிந்தனைகளின் உருவாக்கமே. ஒரு தொழில் நுட்பத்தைப் பற்றி ஆழ்ந்த அறிவு கொண்ட ஒருவரால்தான் அதை முழுமையாக பயன்படுத்துவதற்கான வழிகளையும் வகுக்க முடியும். ஒரு இசை அமைப்பாளரால் டிஜிட்டல் சவுண்ட் சிஸ்ட்டத்தை இயக்க முடியுமே தவிர அதை உருவாக்க முடியாது. ஆனால், இசை பயிற்சி இல்லாத ஒரு இன்ஜினியரால் அதை உருவாக்க முடியும். நாளை செவ்வாய் கிரகத்துல இடம் வாங்கி வீடு கட்டனும்னாலும் நீங்க ஒரு இன்ஜினியராதான் பிடிக்கனும்.

இன்ஜினியருக்கு வாச்சதெல்லாம் ஆயுதம்.

சிறந்த தொழில் முனைவோர்:

இ-ஷாப்பிங் நிறுவனங்களில் சிறந்து விளங்கும் இந்திய நிறுவனங்கள் ஃப்லிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல். பல ஆயிரம் கோடிகளில் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனங்களை தொடங்கியவர்கள் பொறியியல் பட்டதாரிகள். இன்னும் உங்கள் ஊரில், தெருவில் ஒரே ஒரு கம்ப்யூட்டரை வைத்து சம்பாத்தித்து வரும் இன்ஜினியர்கள் ஏராளம். எம்.பி.ஏ. படித்தால் மட்டும்தான் தொழில் தொடங்க முடியும் என்பதில்லை. பொறியியல் படித்த ஒருவரால்தான், தன் தயாரிப்பு எப்படி பயன்படும், எங்கே யாரிடம் விற்பது என்று தெரியும். மத்திய அரசு கூறிவரும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் முக்கிய பங்கு இன்றைய இன்ஜினியர்களோடதாகத்தான் இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.

தன் கையே தனக்குதவி

வேலை வாய்ப்பு:

தம்பி என்னப்பா படிக்கப் போற? இன்ஜி... சொல்லி முடிக்குறதுக்குள்ள 'அது படிச்சா வேலை கிடைக்காதாம்ல' என்று யாராது சொன்னா, தயவு செஞ்சு அதை நம்பாதீங்க. உலக அளவுல 2020-ம் ஆண்டில் பணியாளர்களுக்கான தேவை 2 பில்லியனாக இருக்கும் என்கிறது 'நாஸ்காம்' . அப்போ ஏன் பொறியியல் மாணவர்கள் வேலை இல்லாம இருக்காங்கனு நீங்க கேள்வி கேக்கலாம். வேலை வாய்ப்பு இருக்கு. அதுக்கு ஏத்த திறமையான படித்த பட்டதாரிகள் இல்லை என்பதுதான் உண்மை. வருஷா வருஷம் வெளிநாட்டு நிறுவனங்களால், பல லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு இந்தியர்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கபடுவது எல்லோரும் அறிந்த விஷயம். வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொண்டால் எல்லா பொறியியல் பட்டதாரிக்கும் வேலை உறுதி.

சொல்லக் கூடாதது - வேலை இல்லை

சொல்ல வேண்டியது - இன்ஜினியரிங் நல்லது

Tuesday, May 26, 2015

மாவீரன் நெப்போலியன்

ஏழை வீட்டு பிள்ளையாக பிறந்து சக்கரவர்த்தி ஆன மாவீரன் நெப்போலியன்
தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும்.
எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தான் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தான். ஒரு முறை எண்ணற்ற மக்கள் கூடிப் போராடிக் கொண்டிருந்தார்கள். வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொஞ்சம் மிஞ்சினால் மக்கள் பொங்கி விடுவார்கள். கண்ணாடி பந்துகளை கச்சிதமாக பீரங்கிகளில் பொருத்தி போராட்டக்காரர்கள் மீது செலுத்தினான். உயிர் இழப்பு இல்லாமல் கூட்டம் கலைந்தது.
வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தான். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார்.
பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர்.
ஒரு முறை போர்க்களத்தில் வென்ற பிறகு வீரர்களை கொண்டாட அனுப்பிவிட்டு நெப்போலியன் தனியாக வேகமாக குதிரையை செலுத்திக்கொண்டு பயணப்பட ஆரம்பித்தான். உற்சாக மிகுதியில் இன்னமும் குதிரையின் வேகத்தை அதிகப்படுத்தும் பொருட்டு கடிவாளத்தை பிடித்து இழுத்தான்.

குதிரையின் வாயில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. சிட்டென பறக்க ஆரம்பித்தது. கிடுகிடு பள்ளம் ஒன்று திடீர் என குறுக்கிட்டது. அப்படியே குதித்து விடலாம்; குதிரையால் தாவக்கூடிய தூரத்தைவிட ஒரு ஐந்தடி அதிகமாகவே அகலமாக இருந்தது பள்ளம். பார்த்தான்; வீரனுக்கு அழகு இப்படி சாவதுதான் என எண்ணிக்கொண்டு முடுக்கினான். பள்ளத்தில் குதிரை தாவி வீழ்ந்தபொழுது, அந்த ஐந்தடியை மிதந்து கொண்டு இருக்கும்பொழுதே தாவி அடிகளோடு தப்பித்தான். தன்னை ‘விதியின் மனிதன்’ என அழைத்துக்கொண்டான்.
நெப்போலியன் பிரெஞ்சு புரட்சியால் நாட்டில் ஏற்பட்டு இருந்த கொதிநிலையை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்துக்கொண்டான். என்றாலும், முதலில் மூன்று பேர் கொண்ட அமைப்பை கொண்டு ஆள்வது போல பாவ்லா காட்டிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறினான். தானே மகுடத்தை எடுத்து சூட்டிக்கொண்டான். உலக வரலாற்றில் ஏழை ஒருவரின் மகன் ஒரு மாபெரும் நாட்டின் சக்ரவர்த்தி ஆகிற அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது.
ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவன். வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவன் எண்ணம். குள்ளமாக இருந்ததால் அவன் அரசவைக்கு நடந்து வருகிறபொழுது அவன் அணிந்திருக்கும் போர்வாள் உரசி இரத்தின கம்பளங்கள் கிழிந்து போகும். பின் இரும்பால் கம்பளம் வைத்தபொழுது உரசிக்கொண்டு தீப்பொறி பறக்க அரசவைக்கு வருவார்.
அவருக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான ஜோசபின் மீது முதல் பார்வையிலேயே காதல் பூத்தது. அவளை மணம் செய்து கொண்டார். அவருக்காக உலகம் முழுக்க இருந்து ரோஜா மலர் செடிகளை பரிசாக அனுப்பி வைப்பார். அதன் மூலம் உருவான தோட்டம் மிக பிரமாண்டமானது. ஜோசபைனுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் தனிக் காவியம். அவள் பிள்ளை பெற்றுத்தர முடியவில்லை என்று விவாகரத்து செய்த பின்னும் பெரிய மாளிகை கொடுத்து அவளுக்காக கண்ணீர் வடித்தான் நெப்போலியன்.
போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த நெப்போலியனின் சொந்த வாழ்க்கை வெகு சிக்கனமானது. ஓரிரு செட் ஆடைகள், தன் அறையில் தன் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய மேசை, நாற்காலி ஆகியவற்றில்தான் தன் வாழ்க்கையை ஒட்டிய எளிமை விரும்பி அவர். இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை குடிப்பார். வெகு சுறுசுறுப்பாக இருக்கும் அவனின் சின்னம் தேனீ.
பல நாடுகளை வென்ற அவன் செய்த தவறு ரஷ்யாவின் மீதான படையெடுப்பு. தான் கொண்டு வந்த இங்கிலாந்துடன் வியாபாரம் செய்யக்கூடாது என்கிற கண்ட முறையை ஏற்க மறுத்த ரஷ்யா மீது போர் தொடுத்தான். நாட்டையே துப்புரவாக துடைத்து வைத்திருந்தார்கள் மக்கள். ரஷ்ய குளிர் வாட்டி எடுத்தது. உயிரை அப்படியே உருவி எடுத்தது. பல வீரர்கள் சுருண்டு இறந்தார்கள். ஒன்றுமே இல்லாத மாஸ்கோவை கைப்பற்றினார்கள். பசிக்கு சாப்பிட எதுவுமில்லாமல் குதிரைகளையே வெட்டி உண்ணவேண்டிய நிலைமை. வெறிச்சோடி போன மாஸ்கோவின் தெருக்கள்தான் காத்துக்கொண்டு இருந்தன.

இருந்ததில் பாதி படையை காவு கொடுத்துவிட்டு நெப்போலியன் இன்றுதான் பின்வாங்கினார். அதற்கு பின் நடைபெற்ற போரில் தோற்று எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டார் அவர். “ரஷ்யக் குளிர் நெப்போலியனை தோற்கடித்தது!”என வரலாறு எள்ளி நகையாடுகிறது.
அப்பொழுது நடந்த ஒரு சம்பவம். ரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு தப்ப முயன்று ஒரு தையல்காரனிடம் சரண் புகுந்தார் நெப்போலியன். “என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் தருகிறேன்!”என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். ரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் ஜஸ் லைக் தட் என கத்திகளை சொருகி பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்ஸ் தப்பிவிட்டார். அதற்கு பின் பிரெஞ்சு படைகள் வந்தன. வரங்களை கேட்க சொன்னார் நெப்போலியன்.
“முதலில் கடையின் ஓட்டை சரி செய்ய வேண்டும்”. “முடிந்தது” என்றார் நெப்ஸ். “அடுத்து” என கம்பீரமாக கேட்க, “எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள் – ஒரே தொழில் போட்டி” எனவும் சிரித்துக்கொண்டே, “சரி! அடுத்து?”எனக் கேட்க நீங்கள் அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினப்ப எப்படி ஃபீல் பண்ணிங்கனு தெரிஞ்சாகணும்!” “ஹ்ம்ம்” என்ற நெப்போலியன்…
“கிளம்புங்கள்!” என படைகளிடம் சொல்லிவிட்டு – வெளியேறும் பொழுது சடக்கென்று திரும்பி, படை வீரனை பார்த்து தையல்காரனின் தலையில் படக்கென்று துப்பாக்கியை வைக்கச்சொல்லி ஒன்று இரண்டு மூன்று என்றதும் சுட்டுவிடு என்றதும், துப்பாக்கி ஓட்டை தையல்காரன் தலையில் பொய் ஒட்டிகொண்டது. “ஒன்…டூ…த்ரீ!” என்றதும் அதீத மௌனம், குண்டு வெடிக்கவில்லை வியர்த்துப்போன தையல்காரனை பார்த்து “இப்படிதான் இருந்தது எனக்கு!” என்றுவிட்டு கிளம்பினான் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவனிடம் இருந்தது.
எல்பாவில் இருந்து தப்பி வந்தபொழுது மக்கள் மீண்டும் அவன் பின் அணிவகுத்தார்கள். வாட்டர்லூவில் இறுதிப் போர். ஒய் வடிவத்தில் படைகளை நிலை நிறுத்தினான். போரில் வென்று விடுவோம் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதற்கு முந்தைய நாள் நல்ல மழை பெய்தது. இவனுக்கு காய்ச்சல் வேறு; சொன்ன உத்தரவுகள் தப்பு தப்பாக வீரர்களின் காதுகளில் விழ தோல்வியை தழுவினான் நெப்போலியன். இந்த முறை தப்பிக்க முடியாத ஹெலினா தீவில் கொண்டு போய் தனிமைச் சிறை வைத்தார்கள்.
நாற்பது போர்கள் கண்ட நெப்போலியன் கொண்டு வந்த கோட் ஆப் நெப்போலியன் இன்றைக்கும் பின்பற்றப்படும் அருமையான சட்டம். எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அற்புதம் அது. எளிமையான மொழியில் அவை எழுதப்பட்டு இருந்தன. நில உடைமை முறையை வேரறுத்து மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்தான். மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார். நெப்போலியன் காலத்தில் அறிவியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. வோல்டாவை பார்த்து நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அரசவைக்கு வந்தால்கூட போதும் என்கிற அளவுக்கு நெப்போலியன் தீராத வாசிப்பு ஆர்வம் கொண்டவன்.

எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான். அவன் மரணத்துக்கு பிறகு ஆங்கில அரசே அவனை மாவீரன் என்று ஏற்றுக்கொண்டது.
ஒரு சம்பவத்தோடு முடித்தால் நன்றாக இருக்கும். நெப்போலியனின் படைத் தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். “அரசே! எதிரி நாட்டுப் படைகள் எல்லாப் பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்கள். அவ்வளவு தான்!” என்றபொழுது நெப்போலியன், “அதனால் என்ன? எல்லா பக்கமும் சுடலாம் என சந்தோசப்படுங்கள்” என்றார்.
“முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை” என்ற குள்ளமான உருவம் கொண்ட வானுயர தன் உழைப்பால் எளிய குடும்பத்தில் இருந்து பேரரசனாக உயர்ந்து முடிசூட்டிக்கொண்ட மாவீரன் நெப்போலியன்!!!

Thursday, May 14, 2015

MR Facebook!

யார் இவர்? உலகின் இளம் பில்லியனர்களில் ஒருவரும், உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனருமான - மார்க் ஸுக்கர்பெர்க்.
‘மார்க் மை வேர்ட்ஸ்’ என ஔவை சொல்லி, மார்க்கின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ஐந்து நல்விதிகளை அவரது வெற்றிக் கதையுடன் சேர்த்தே பார்த்துவிடலாம்.
நியூயார்க் அருகில் உள்ள டாப்ஸ் ஃபெரி என்ற சிறு நகரத்தில் பல் மருத்துவராக இருந்தவர் எட்வர்டு. இவரது ஒரு வயது மகன் மார்க் ஸுக்கர்பெர்க் தத்தித் தத்தி நடக்கும் பருவத்தில் (1985), எட்வர்டு தனது கிளினிக்கில் புதிய கம்ப்யூட்டர்களை நிறுவினார். விவரம் அறியாத வயதிலேயே கம்ப்யூட்டர் ஸ்பரிசத்துடன் வளர்ந்தான் சிறுவன் மார்க். விளையும் பயிர் முளையிலேயே, தனி கம்ப்யூட்டர் கேட்டு  அடம்பிடித்தது. சமாளிக்க முடியாமல் பெற்றோரும் வாங்கிக் கொடுத்தனர். 10 வயது மார்க், அதில் படம் வரைந்தான்; படம் பார்த்தான். வேறு என்ன செய்ய? ‘கம்ப்யூட்டர் போரடிக்குதுப்பா!’ என அலுத்துக்கொள்ள, ‘சி++ ஃபார் டம்மீஸ்’ என்ற புரோகிராமிங் புத்தகத்தை தன் மகனிடம் விளையாட்டாகத் தூக்கிக் கொடுத்தார் எட்வர்டு. மார்க், அதில் லயித்தான். புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொண்டு, சிறு சிறு புரோகிராம்கள் எழுத ஆரம்பித்தான். அந்த ‘விளையாட்டு’ அவனுக்குப் பிடித்திருந்தது. மகனின் ஆர்வத்தைக் கண்டுகொண்ட எட்வர்டு, அருகில் நடந்த ‘புரோகிராமிங் வகுப்பு’க்கு அனுப்பினார். பொடியனின் ஆர்வமும் திறமையும், வகுப்பில் இருந்த சீனியர்களைத் திகைக்கச் செய்தன.
‘அப்பா, உங்க கம்ப்யூட்டரையும் கிளினிக் ரிசப்ஷன்ல இருக்கிற கம்ப்யூட்டரையும் ஒரே நெட்வொர்க்ல கொண்டுவாங்க’ என மார்க் கட்டளையிட, எட்வர்டும் அப்படியே செய்தார். டாக்டரும் ரிசப்ஷனிஸ்ட்டும் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்ளும்படி புதிய ‘சாட் புரோகிராம்’ எழுதி அசத்தினான் மார்க். இன்றைக்கு உலகையே ஃபேஸ்புக்கால் இணைத்துவைத்திருக்கும் மார்க் நிகழ்த்திய முதல் ‘சாட்’ அது.
வீடியோ கேம்ஸ்களில் மூழ்கிக்கிடக்கும் பதின் வயதில், மார்க் தன்னைப் போன்ற புரோகிராமிங் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து புதிய கேம்ஸ்களை உருவாக்கினான். அதற்காக ‘புரோகிராமிங்தான் வாழ்க்கை’ என அவன் அப்போதே முடிவெடுக்கவில்லை. அது என்னவோ, செம்புலப் பெயல்நீர்போல, ‘பிஹெச்பி’யும் ‘சி ப்ளஸ் ப்ளஸ்’ஸும் அவனுள் இயல்பாகக் கலந்தன.
பள்ளி இறுதி ஆண்டில் ஒரு புராஜெக்ட் செய்ய வேண்டும். மார்க்கும் அவரது நண்பர் ஆடமும் இணைந்து ‘ஸினாப்ஸ்’ என்ற ஒரு புதிய மியூசிக் பிளேயரை உருவாக்கினார்கள். கம்ப்யூட்டரை உபயோகிப்பவர் என்ன மாதிரியான பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்கிறார் என அவரது ரசனையை ஸினாப்ஸ் மோப்பம் பிடித்துக்கொள்ளும். ஏற்கெனவே இருக்கும் பாடல்கள், புதிதாகச் சேர்க்கும் பாடல்கள் எல்லாவற்றிலும் இருந்து அவருக்குப் பிடித்த மாதிரியான பாடல்களைத் தானே தேர்ந்தெடுத்து, ‘ப்ளே லிஸ்ட்’ ஒன்றை உருவாக்கி ஒலிக்கச் செய்யும். பள்ளி அளவில் ஸினாப்ஸ் புகழ்பெற, மார்க்கும் ஆடமும் அதை இணையத்தில் இலவசமாக உலவ விட்டார்கள். உபயோகித்தவர்கள், உச்சி முகர்ந்து பாராட்டினார்கள்.
‘பள்ளிச் சிறுவர்’களின் அபாரத் திறமை, எட்டுத் திக்கும் எட்டியது. மைக்ரோசாஃப்ட் முதல் மியூசிக் மேட்ச் வரை, சிறிய பெரிய நிறுவனங்களின் ‘ஆஃபர் லெட்டர்’ இருவரது இன்பாக்ஸையும் தட்டியது. மார்க், சற்றே மிரளத்தான் செய்தார். ‘அதுக்குள்ளயா... அய்யோ, நான் காலேஜ் படிக்கணும்’! என நழுவினார். ‘சரி, ஒரு மில்லியன் டாலர் தர்றோம். அந்த ஸினாப்ஸை எங்ககிட்ட வித்துருங்க’ எனவும் கேட்டுப் பார்த்தார்கள். மைக்ரோசாஃப்ட் இரண்டு மில்லியன் தருவதாகவும் அழைத்தது. ஆனால், அங்கே மூன்று வருடம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன். மைக்ரோசாஃப்ட்டில் வேலை என்பது ஆகச்சிறந்த வெகுமதிதான். ஆனால், என் கல்லூரிக் கனவுகள்? கடும் குழப்பத்தில் தவித்த மார்க், இறுதியில் ‘குழந்தைத் தொழிலாளி’யாக மாற விரும்பாமல், ‘ஹார்வர்டு’ பல்கலைக் கழகத்தில் படிக்க விண்ணப்பித்தார்.
அங்கே ஒவ்வொரு செமஸ்டரின் ஆரம்பத்திலும், மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு உரிய பாடங்களைத் தேர்ந் தெடுக்க வேண்டும். தங்கள் நண்பர்கள், காதலிக்கத் துரத்தும் பெண்கள்/ஆண்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என விவரம் தெரிந்தால், தாங்களும் அங்கே நங்கூரமிடலாம் அல்லவா? அதைத் தொகுத்துச் சொல்லும் ஹார்வர்டுக்கு உரிய பொது இணையதளம் எதுவும் இல்லை. மாணவர்கள் தவித்தார்கள். அதற்காகவே மார்க், 2003-ம் ஆண்டு மத்தியில் ‘கோர்ஸ் மேட்ச்’ என்ற இணையதளத்தை இன்ஸ்டன்ட்டாக உருவாக்கினார். செம  ஹிட். தளத்தை உருவாக்க எந்தவித டேட்டாபேஸும் மார்க்கிடம் கிடையாது. ஒவ்வொரு மாணவரும் தளத்தினுள் நுழைந்து, தங்கள் விவரங்களைத் தாங்களே பதிவுசெய்துகொண்டனர். புதிய டேட்டாபேஸ் உருவானது. கோர்ஸ்  மேட்ச்-ன் இந்த மாடல்தான் ஃபேஸ்புக்கின் அடித்தளமும்கூட.
மார்க், ஃபேஸ்புக்கை நிறுவுவதற்கு பல ஆண்டுகள் முன்பே ஹார்வர்டில் ஒரு ‘ஃபேஸ்புக்’ புழக்கத்தில் இருந்தது. ஹார்வர்டு மாணவர்களின் சுயவிவரங்களும் புகைப்படங்களும் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு. இணைய வசதி வந்தபின் அவை டிஜிட்டல் வடிவில் கிடைத்தன. ஆனால், அவற்றை அந்தந்தத் துறை சார்ந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும். மற்ற துறையினர் உள்ளே நுழைய முடியாது. செக்யூரிட்டி... பாஸ்வேர்டு... இத்யாதி.
‘மப்பும்’ மந்தாரமுமாக இருந்த ஒரு பொழுதில், மார்க்குக்கு ‘ஹார்வர்டிலேயே அழகான பெண் யார்... ஆண் யார்?’ என்பதைத் தேர்ந்தெடுக்கும் ஒரு புரோகிராம் எழுதும் கோக்குமாக்கு யோசனை தோன்றியது. நெட்வொர்க் வழியே ஹார்வர்டின் ஒவ்வொரு துறையில் இருந்தும் மாணவர்களின் விவரங்களைத் திருடினார். `ஃபேஷ்மேஷ்' என்றொரு புரோகிராம் உருவாக்கினார். இரண்டு பெண்களின் (அல்லது ஆண்களின்) புகைப்படத்தை ஒப்பிட்டு யார் அழகானவர் எனத் தேர்ந்தெடுத்தால், தேர்ந்தெடுக்கப்படாத படம் மறைந்து அடுத்த படம் தோன்றும். இப்படியே ஓட்டு அளித்துக்கொண்டே செல்லலாம். மார்க், ஃபேஷ்மேஷை உருவாக்கி இணையத்தில் ஏற்றிய சில மணி நேரத்திலேயே, மாணவர்கள் அதை மொய்க்க ஆரம்பித்தனர். ஓட்டுகள் குவியக் குவிய, ஹார்வர்டின் இணைய இணைப்பு டிராஃபிக்கால் செயல் இழந்தது. மார்க்கும் அத்துடன் ஃபேஷ்மேஷுக்குத் திரை போட்டார். தனக்குள் முடிவெடுத்தார். குற்றமான விளையாட்டைச் செய்யாதே.   .
சில நாட்களில் மார்க், பல்கலைக்கழகத்தின் விசாரணை வளையத்துக்குள் நிறுத்தப்பட்டார். புகைப்படங்களைத் திருடியது, இணைய இணைப்பைத் தவறாகப் பயன்படுத்தியது, அழகுக்கான ஓட்டு என்ற பெயரில் கறுப்பு இனத்தவரின் மனதைப் புண்படுத்தியது - இப்படிச் சில குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மார்க், ‘சாதாரண மாணவன் ஒருவன் தகவல்களை எளிதாகத் திருடும் அளவுக்குத்தான் பல்கலைக்கழகத்தின் இணையதளப் பாதுகாப்பு இருக்கிறது என்பதை உணர்த்தியிருக் கிறேன். அதற்காகப் பாராட்டுங்கள்’ என்றார் சாமர்த்தியமாக. தண்டனை இல்லாமல் தப்பித்தார்.
அடுத்ததாக மார்க், ஹார்வர்டு மாணவர் களுக்கான புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் ஒன்றை அமைக்கும் யோசனையில் இறங்கினார்.       அந்தச் செயலை முடிக்க என்னவெல்லாம் தேவை எனத் தீவிரமாகத் திட்டமிட்ட பின்பே முனைப்புடன் களத்தில் இறங்கினார். ‘கோர்ஸ் மேட்சை'விட அதிகப் பயனுள்ளதாக, குறிப்பாக சாட்டிங்கில் தொடங்கி டேட்டிங் வரை புதிய தளம் மாணவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் செயலாற்றினார். தளத்தினுள் நுழைய அடிப்படைத் தேவை ஹார்வர்டு இமெயில் கணக்கு. மாணவர்கள் சுய விவரங்களைத் தாங்களே இதில் பதிவுசெய்துகொள்ளலாம். அடுத்தவர்களின் தகவல்களை நோட்டம்விடலாம். ‘கொஞ்சம் படிக்கிறேன்’, ‘நீச்சல் அடிக்கிறேன்’, ‘காதலில் துடிக்கிறேன்’ என ஏதாவது ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் போடலாம்.
`thefacebook.com' என, அந்தத் தளத்துக்காக இணையதள முகவரியை 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதிவுசெய்தார் மார்க். இரவு, பகல், பசி, தூக்கம் எல்லாம் மறந்து அடுத்த செமஸ்டர் தொடங்குவதற்கு முன்பாகவே தளத்தை இயக்கிவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இயங்கினார். சமயங்களில் சாண் ஏறாமலேயே முழம் சறுக்கியது. அத்தனை ‘எரர்’. `இதெல்லாம் தேவையா... அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' என மார்க், தூக்கிப் போட்டுவிடவில்லை.    தன்னலம் இல்லாத உழைப்பைக் கொட்டி தளத்துக்கு உயிர்கொடுத்தார் மார்க்.
மார்க்கின் நண்பர் சாவ்ரின், தளத்தில் 1,000 டாலர் முதலீடு செய்ய, மாதத்துக்கு 85 டாலரில் தளத்துக்காக ஒரு சர்வரை வாடகைக்கு எடுத்தார்கள். அந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி மார்க், தனது ஹார்வர்டு இமெயில் மூலம்   தி ஃபேஸ்புக்கின் முதல் உறுப்பினராகப் பதிவுசெய்தார். தளம் இயங்க ஆரம்பித்தது. ஆரம்பமே ரணகள ஹிட். ஒருசில நாட்களிலேயே ஹார்வர்டு வளாகத்தில் ‘ஹலோ'வுக்குப் பதிலாக, ‘நீ ஃபேஸ்புக்ல இருக்கியா?’ என எல்லோரும் கேட்டனர்.
ஹார்வர்டு பேராசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் உள்ளே ஊர்வலம் வர ஆரம்பித்தனர். ‘எங்க காலேஜுக்கும் இதே மாதிரி ஒரு வெப்சைட் தேவை... செஞ்சு தாங்க ப்ளீஸ்!’ என கோரிக்கைகள் மார்க்கை மொய்த்தன. இரண்டே மாதங்களில் அமெரிக்காவின் முக்கியமான கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஃபேஸ்புக்கின் நீலக்கொடி. ஏற்கெனவே ஏதாவது ஒரு சமூக வலைதளம் கால் பதித்திருந்த கல்லூரிகளில்கூட ஃபேஸ்புக் நுழைந்து அரியணையைப் பிடித்தது. பணம் போட்ட சாவ்ரின், விளம்பரங்கள் வெளியிட்டு பணம் சம்பாதிக்கவும் நினைத்தார். அதற்கு மார்க் சம்மதிக்கவில்லை. ‘இது ஜாலியான தளம். இன்னும் பல லட்சம் பேரைச் சென்றடைய வேண்டும். விளம்பரங்கள்,  உறுப்பினர்களுக்கு எரிச்சல் தரும். அதனால் ஃபேஸ்புக்கின் இமேஜ் கெடும்’ என்றார் தீர்க்கமாக. பின்பு உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிக்கொண்டே சென்றதால், செலவினங் களைக் கட்டுப்படுத்த, சிறிய வகை விளம்பரங் களை, உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யாத விதத்தில் வெளியிட அனுமதித்தார்.
ஃபேஸ்புக்கை லபக்கிக்கொள்ள சிறிய, பெரிய நிறுவனங்களின் தூண்டில்கள் நீண்டன. மார்க் எதிலும் சிக்கிக்கொள்ளவில்லை. ‘இந்த புராஜெக்ட் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கே சலிப்புத்தட்டும் வரை இதை மென்மேலும் விரிவடையச் செய்வதில்தான் முழுக் கவனம் செலுத்தப்போகிறேன். இதை விற்பது குறித்தோ, பணம் சம்பாதிப்பது குறித்தோ கொஞ்சமும் யோசிக்கவில்லை’ என்றார்.
அந்த விடுமுறை காலத்தில், சீன் பார்க்கர் என்பவருடன் கைகோத்தார் மார்க். ஃபேஸ்புக்கின் அடுத்தகட்ட வளர்ச்சி அப்போது தொடங்கியது. பார்க்கர், இதே துறையில் சில தோல்விகளைக் கண்ட அனுபவஸ்தர்; ஆனால், திறமைசாலி. ‘இப்போது சிறிய அளவில் இருந்தாலும் ஃபேஸ்புக் ஒருநாள் உலகத்தையே தன் பிடிக்குள் கொண்டுவந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு நிறைய முதலீடு தேவை’ என வருங்காலத்தைச் சிந்தித்த பார்க்கர், புதிய முதலீட்டாளர்களை அழைத்துவந்தார். முதல் கட்டமாக ஆறு லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்தது. ஃபேஸ்புக்கின் புதிய தலைமைப் பொறுப்பாளராக பார்க்கர் பொறுப்பேற்றார். ஃபேஸ்புக்கில் வேறென்ன புதிய வசதிகள் சேர்த்து உலகத்தை வளைக்கலாம் என இரவு-பகலாக கோடிங் சிந்தினார் மார்க்.
விடுமுறை காலம் முடிந்தது. ஹார்வர்டுக்குத் திரும்பிச் சென்று படிப்பைத் தொடரலாமா...இல்லை ஃபேஸ்புக்கை நம்பி படிப்பை விட்டு விடலாமா? - குழப்பத்தில் தவித்தபோது, ஹார்வர்டின் பழைய மாணவரான பில்கேட்ஸ் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு, மார்க்கின் நினைவுக்கு வந்தது. ‘உங்கள் மனதில் ஏதாவது புது புராஜெக்ட் இருந்தால், அதில் முழுக் கவனம் செலுத்துங்கள். தேவைப்பட்டால், படிப்பைப் பிறகுகூட தொடரலாம். ஹார்வர்டில் அந்த வசதி உண்டு. ஒருவேளை வருங்காலத்தில் மைக்ரோசாஃப்ட் படுத்துவிட்டால், நான்கூட ஹார்வர்டுக்கு வந்து படிப்பைத் தொடர்வேன்’ என்றார் பில்கேட்ஸ். மார்க்கும் அதே முடிவெடுத்தார். தேவைப்படும் வரை ஃபேஸ்புக் குக்காக உழைப்பது, அதற்குப் பின் ஹார்வர்டுக்குத் திரும்பி வந்து படிப்பைத் தொடர்வது.
மார்க்கின் உடல், உயிர், நாடி, நரம்பு, ரத்தம், சதை, சிந்தனை, செயல் அனைத்திலும் ஃபேஸ்புக் நீக்கமற நிறைய... அதில் புதிய புதிய வசதிகள் பிறந்தன. அமெரிக்க இளைஞர் கூட்டம் ஃபேஸ்புக் போதையில் மணிக்கணக்கில் திளைத்தது. 2004-ம் ஆண்டு அக்டோபரில் அரை மில்லியன் உறுப்பினர்கள். அடுத்த ஆறே மாதங்களில் ஐந்து மில்லியன். எல்லோருக்கும் எல்லா விளம்பரங்களும் தோன்றி எரிச்சல்படுத்தாமல், ஏரியா வாரியாக குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் சென்று சேரும் லோக்கல் விளம்பரங்களை வெளியிட வழிவகுத்தார் மார்க். அது வருமான வாய்ப்புகளைக் கொட்டியது. thefacebook.com என்பது facebook.com ஆகப் பெயரில் சுருங்கி, புகழில் பரந்து விரிந்தது.
பெரிய நிறுவனங்கள், ஃபேஸ்புக்குக்கு 500 மில்லியன், 600 மில்லியன் என்ற விலையுடனும் வலையுடனும் சுற்றிச் சுற்றி வந்தன. மார்க் அசைந்துகொடுக்கவில்லை. ‘சம்பாதிப்பதோ, பணத்தைக் குவிப்பதோ, எல்லோராலும் இயலும் காரியமே. ஆனால், ஃபேஸ்புக் போன்றொரு ஹிட் சமூக வலைதளத்தை எல்லோராலும் உருவாக்க இயலாது. இதை நான் விற்க மாட்டேன்’ எனத் தீர்க்கமான முடிவுடன் இருந்தார் மார்க். ஃபேஸ்புக்கின் நிர்வாக அதிகாரம் தன் கையில் இருந்தால்தான் தான் நினைத்ததை முழுமையாகச் சாதிக்க முடியும் என்ற சிந்தனைத் தெளிவு மார்க்கிடம் இருந்தது. மார்க்கின் வலதுகை யாகச் செயல்பட்ட பார்க்கர், வெளி முதலீடுகளைக் கொண்டுவந்து கொட்டினார். அதே சமயம் மார்க்கின் அதிகாரத்துக்கு இடையூறு வராத வகையில் கவனித்துக்கொண்டார்.
2006-ம் ஆண்டு செப்டம்பரில், மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் பொதுமக்களுக்கான சேவையையும் ஆரம்பித்தது ஃபேஸ்புக். 2007-ம் ஆண்டு, நிறுவனங்களுக்கான பிசினஸ் பக்கங்கள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்து ஃபேஸ்புக் வால், நியூஸ் பீட், போட்டோ ஷேரிங், கேம்ஸ், குரூப்ஸ் எனப் புதிய வசதிகள் பளபளக்க, சமூகம் அள்ளி அணைத்து ‘லைக்’கிட்டு, அபாரம் என ‘கமென்ட்’ போட்டு, ‘ஃபேஸ்புக்குக்கு நீங்க வாங்க’ என தங்கள் கருத்துகளை எங்கெங்கும் ‘ஷேர்’ செய்ய ஆரம்பித்தது. ‘ஃபேஸ்புக்கை ஆரம்பிக்கும்போது அதற்குப் பின் இத்தனை  பெரிய வியாபார வாய்ப்பு இருப்பதாக நான் சத்தியமாக நினைக்கவில்லை’ என பிறகு சொன்னார் மார்க்.
இருந்தாலும் உறுப்பினர்களின் அந்தரங்கத் தகவல்கள் மற்றவர்களுக்குக் கசிந்துவிடுமோ என்ற சந்தேகம் வலுப்பெற்றது. மார்க் தெளிவாகப் பதிலளித்தார், ‘கசியாது... கசியவும்விட மாட்டோம்.’ அதற்கு ஏற்ப புதிய, பயனுள்ள பிரைவசி செட்டிங்களையும் கொண்டுவந்து நம்பிக்கையைப் பலப்படுத்தினார். கண்டம்விட்டுக் கண்டம், நாடுவிட்டு நாடு ஃபேஸ்புக்கின் கிளை பரவியது. 2009-ம் ஆண்டு மொபைல் போனில் ஃபேஸ்புக்கை உபயோகிப்போர் சதவிகிதம் உயர ஆரம்பித்தது. 2011-ம் ஆண்டு கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பயனாளர்களைக்கொண்ட தளமாக புன்னகை சூடியது ஃபேஸ்புக். 2008-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலுக்கு, பின் 2011-ம் ஆண்டு எகிப்தியப் புரட்சிக்கு ஃபேஸ்புக் தான் கொ.ப.செ! மாபெரும் சமூக மாற்றங்கள் இப்போது ஃபேஸ்புக்கில் இருந்தும் தொடங்குகின்றன. நம் சமூகத்திலும் திராவிடத் தலைவர் தொடங்கி தெருவோர வியாபாரி வரை அனைவருக்கும் முகநூல் தனி முகவரி.
ஃபேஸ்புக்கில் போலியான பெயர்களில் திரியும் விஷமிகள், ஃபேஸ்புக்கின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, மோசடிகளை அரங்கேற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள், அவை குறித்த வழக்குகள், பயனாளிகளின் தகவல்கள் திருட்டுப்போவது, அதற்காக ஃபேஸ்புக் வழக்குகளைச் சந்தித்து நஷ்டம் வழங்குவது, ஃபேஸ்புக் மூலம் அரசாங்கத் துக்குத் தகவல் கொடுக்கப்படுவது, இப்படி முகநூலின் குறும்புப் பக்கங்களுக்கும் குறைவு இல்லை. அதனால் மார்க் சந்திக்கும் தலைவலிகளும் ஏராளம். இதையெல்லாம் அமைதியாகச் சமாளித்துவிட்டு, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் மார்க் அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொள்ளும் வாசகம், ‘மிகப் பெரிய ரிஸ்க் எதுவென்றால், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பதே!’
2014, டிசம்பர் கணக்குப்படி 1,390 மில்லியன் பயனாளர்களுடன் அசுர பலத்துடன் வலம்வருகிறது ஃபேஸ்புக். உலகின் இளம் பில்லினியர்களில் ஒருவரான மார்க்கின், 2015-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரச் சொத்து மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைவிட அதிகம். இன்றைய தேதியில் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வெற்றியாளர். அதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தன் சாதனை குறித்து மார்க் சொல்லும் வார்த்தைகள் மிக எளிமையானவை.
‘பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் தொடர்பில் இருக்க உதவுவது என்பது ஆச்சர்யமான விஷயம். அதைச் சாத்தியப்படுத்தியதை என் வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்!’
`பீடு பெற நில்!'

சீன கனெக்‌ஷன்!
உலகின் நம்பர் 1 மக்கள்தொகைகொண்ட சீனாவுடன் ஃபேஸ்புக்கை கனெக்ட் செய்வது, மார்க்கின் லட்சியங்களுள் ஒன்று. அதிக கெடுபிடிகள் காட்டும் சீன அரசு, மார்க்கிடம் இதுவரை மசியவில்லை. 2012-ம் ஆண்டு தன்  11 வருடக் காதலி பிரிஸில்லா சானை மணம்புரிந்தார் மார்க். பிரிஸில்லா, சீன வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்த சீன கனெக்‌ஷனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!
சர்ச்சை... வழக்குகள்!
பணம் காய்க்கும் சோஷியல் சைட், கல்லடிபடத்தானே செய்யும். ஃபேஸ்புக்கை, மார்க்கைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள், வழக்குகள் உண்டு.
நரேந்திரா, கேமரூன், டெய்லர் மூவரும், மார்க் ஹார்வர்டில் படித்த காலத்தில் சீனியர்கள். ஹார்வர்டு கனெக்ட் என்ற பெயரில், ஹார்வர்டு மாணவர்கள் மட்டும் உபயோகிக்கும் வகையிலான ஒரு டேட்டிங் தளம் உருவாக்க நினைத்தார்கள். சில புரோகிராமர்கள் அரைகுறையாக வேலைசெய்துவிட்டுக் கழன்றுகொள்ள, மூவரும் மார்க்கின் உதவியை நாடியிருந்தனர். மார்க்கும் (எந்தவித முன்தொகையும் வாங்காமல், எழுத்துபூர்வமான ஒப்பந்தமும் இன்றி) புரோகிராமைச் சரிசெய்ய உதவுவதாக ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், இழுத்தடித்து எதையும் செய்யவில்லை. பின், மார்க் ஃபேஸ்புக்கை ஆரம்பிக்க, அது அதிரிபுதிரி ஹிட் ஆக, மூவரும் ‘மார்க் தங்கள் ஐடியாவைத் திருடிவிட்டதாக’ வழக்கு தொடர்ந்தனர். அதை முற்றிலும் மறுத்த மார்க், பிரச்னைகள் சுமுகமாக முடித்துக்கொள்ள தனிப்பட்ட முறையில் செட்டில் செய்துகொண்டார்.
ஃபேஸ்புக்கின் ஆரம்பகால முதலீட்டாளரான சாவ்ரினுக்கு ஆரம்பத்தில் 30 சதவிகிதப் பங்குகள் இருந்தன. வேறு பெரிய முதலீட்டாளர்கள் உள்ளே வந்தபோது, சாவ்ரினின் பங்குகள் குறைந்தன. ‘மார்க் என்னை ஏமாற்றுகிறார்!’ என சாவ்ரின் நீதிமன்றத்துக்குச் சென்றார். வழக்கை இழுத்தடிக்காமல், மார்க் தனிப்பட்ட முறையில் சாவ்ரினுடன் செட்டில் செய்துகொண்டார்!

பிளாக் மார்க்!

மார்க், பழைய மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிக்கவர். பிரெஞ்சு, லத்தீன், ஹீப்ரு, பழைய கிரேக்க மொழி எழுதவும் பேசவும் தெரியும். ஒரு ராஜாபோல பழைமையான மொழி பேசிக்கொண்டே, வாள் சண்டை போடுவதில் ஆர்வம் உண்டு. யூதப் பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் கடவுள் நம்பிக்கையற்றவர்.
உடை தேர்வில் பெரிய விருப்பம் கிடையாது. பெரும்பாலும் ஜீன்ஸ், டி ஷர்ட்டில் இருப்பார். பெரிய நிகழ்வுகளில்கூட அதே கோலத்தில் கலந்துகொள்வார்.
மார்க், 2011-ம் ஆண்டு முதல் சைவத்துக்கு மாறிவிட்டார். ‘இறைச்சி உண்பது என்னை நானே கொல்வதற்குச் சமம்’ என்பது மார்க்கின் கருத்து.
2010-ம் ஆண்டு, ‘Person of the Year’ கௌரவத்தை மார்க்குக்கு வழங்கியது டைம் இதழ்.
மார்க், ட்விட்டர் ஐ.டி-யும் வைத்துள்ளார். @finkd.
http://www.facebook.com/zuck - என்பது மார்க்கின் ஃபேஸ்புக் பக்கம். அதில் அவரை யாரும் Block செய்ய இயலாது!