Powered By Blogger

Monday, July 6, 2015

மகேந்திர சிங் டோனி


மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர்
இளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் ! கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டதால் தோனியை கீப்பிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம்.
இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டு இருந்தார் .டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும். இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக குறிப்பார்.
அப்பா உடற்பயிற்சி வகுப்புகளுக்கு போக சொன்னால் கடுக்காய் கொடுத்து விட்டு நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவார் . இப்பொழுதும் ஒரு லிட்டர் பாலை மில்க் ஷேக் அல்லது சாக்லேட் சுவையில் குழந்தை போல விரும்பி சாப்பிடுவார்
இளம் வயதில் பீகார் அணியில் ஆடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது பல போட்டிகளில் ஒற்றை ஆளாக டோனி சதம் அடிக்க அணி தோற்றுக்கொண்டு இருந்தது.அதனால் பெரும்பாலும் தோனியால் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை.அந்த தருணத்தில் இந்திய அளவில் இளம் திறமைகளை கண்டறியும் வேலையை பி.சி.சி.ஐ செய்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு தோனி இந்தியா ஏ அணிக்காக ஆடி கென்யா ஜிம்பாப்வே அணிகளோடு சதம் அடித்தது அப்போதைய கேப்டன் கங்குலி கண்ணில் பட்டது திருப்புமுனை.வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார்.ரன் சேர்க்காமல் ரன் அவுட் ஆனார்.
எனினும் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகள் தந்தார் கங்குலி.பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் 148
அடித்து கவனம் பெற்றார்.இலங்கையுடன் ஆன போட்டியில் சேஸ் செய்கிற பொழுது 183 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்சம் என்கிற உலக சாதனையை செய்தார். அதற்கு பின் அயர்லாந்து தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆனார்.ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் தலைவர் ஆனார். அப்பொழுது அதிரடியான மற்றும் வித்தியாசமான முடிவுகளால் கோப்பையை பெற்றுத்தந்தார்.
வாழ்வின் உச்சபட்ச நிகழ்வு நடந்தது ஏப்ரல் இரண்டு 2011 அன்று. சச்சினின் இறுதி உலகக்கோப்பை என அனைவரும் சொன்ன இறுதிப்போட்டியில் அணி மூன்று விக்கெட் இழந்து திணறிக்கொண்டு இருந்த பொழுது அது வரை தொடரில் அரை சதம் கூட அடிக்காத டோனி களம் இறங்கி ஆடி தொண்ணுற்றி ஓரு ரன்கள் அடித்தார். அப்பொழுது சச்சின் நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் தலை சிறந்தவர் என புகழ்ந்தார்
உலகக்கோப்பை வென்றதும் தோனி சொன்ன ஒரு உண்மை சம்பவம். 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் பொழுது தோனி டிக்கெட் கலெக்டர் ஆக கரக்பூரில் வேலை பார்த்து வந்தார் ! அப்பொழுது அடிக்கடி ஸ்கோர் கேட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து 'ஆமா.. இவரு உலகக்கோப்பையை ஜெயிக்க போறாராம்" என நக்கலாக ஒரு பிரயாணி அடித்த கமென்ட் தான் மிக சாதாரணம் ஆன என்னை இவ்வளவு தூரம் உத்வேகப்படுதி உள்ளது என்பார் தோனி
லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும்;சச்சின் மற்றும் கில்க்றிஸ்ட் பிடித்த விளையாட்டு வீரர்கள். வீடியோ கேம் வெறியர். கவுன்ட்டர் ஸ்ட்ரைக் பிடித்த வீடியோ கேம். புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். ஹார்லி டேவிட்சன் பைக்குகள் எல்லாமும் அவரிடம் உண்டு .
ஆடுகளத்தில் கோபப்பட்டு தோனியை பார்க்க முடியாது. எவ்வளவு சிக்கலான நிலையிலும் தோனி அவ்வளவு அழகாக புன்னகைப்பார். இளம் வயதில் வீட்டில் வறுமையால் அம்மா உணவு தயாரிக்க நேரம் அதிகம் ஆகும்.அப்பொழுதில் இருந்து இந்த பொறுமை உடன் இருக்கிறது என சிம்பிளாக சொல்வார்
ஜார்கண்ட் அரசாங்கம் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க 'ஸ்கூல் செல்வோம் நாம்' என்கிற விளம்பரத்தில் தோனியை நடிக்கக் கூப்பிட்ட பொழுது ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்
தோனி உச்சபட்ச தன்னம்பிக்கைக்காரர். உலககோப்பையை வென்றதும் உங்கள் அடுத்த இலக்கு என்ன என கேட்டதும் ,”ஐ.பி.எல் சாம்பியன்ஸ் லீக் .,இரண்டு உலகக்கோப்பை ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை வெல்ல வேண்டும். முடியாதா என்ன ?”என்றார் .அது தான் தோனி.

No comments:

Post a Comment