Powered By Blogger

Thursday, October 20, 2016

மொசாட்'..! சொல்லி அடிக்கும் கில்லி!


சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய ராணுவத்தையும் இஸ்ரேல் ராணுவத்தையும் ஒப்பிட்டுப் பேசி இருந்தார். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் பெரும்பாலும் அதிரடியானவை. அதைப் போலவே அவர்களின் இன்னொரு பாதுகாப்பு அமைப்பான மொஸாட் எனப்படும் உளவுத்துறையும் உலகப் புகழ் பெற்றது.
   
இஸ்ரேல் எனும் அதிரடி மன்னன்
வ்வொரு நாட்டிலும் அதன் இறையாண்மையை பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் , அரசியல், பொருளாதார நிலைமைகளை சீராக வைத்துக் கொள்ளவும் அந்தந்த நாட்டின் உளவு அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் இஸ்ரேலிய உளவு அமைப்பான "மொஸாட்" மற்ற உளவு அமைப்புகளுக்கு எப்போதும் சிம்மசொப்பனம் தான். மொஸாட்டை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் இஸ்ரேலை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். பிரிட்டிஷ் அரசு ஆட்சி புரிந்து கொண்டிருந்த பாலஸ்தீனத்தில் அப்போது பெரும்பான்மையாக அரேபியர்களே வாழ்ந்து வந்தனர். யூதர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் சொற்பம்தான். அப்போதிலிருந்தே அரேபியர்களுக்கும் யூதர்களுக்குமான மறைமுகப்போர் தொடங்கி விட்டது. அரேபியர்கள் தங்கள் நாட்டில் யூதர்கள் பெருமளவில் வந்து குவிவதை விரும்பவில்லை. ஆனால் அப்போதைய பிரிட்டிஷ் அரசு அவர்களின் எண்ணிக்கையை வளர்த்தெடுக்க உதவியது. உலகெங்கும் வாழ்ந்துவந்த யூதர்கள் இஸ்ரேலை நோக்கி வர ஆரம்பித்தனர். அப்போது ஜெர்மனியில் ஹிட்லர் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்த சமயம் நாஜிப்படைகளின் மூலம்  யூதர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். ஹிட்லரிமிருந்து யூதர்களை காப்பாற்ற நினைத்த இஸ்ரேல் மக்கள் அதற்காக எவ்வளவு பெரிய முயற்சியையும் செய்ய தயாராக இருந்தனர். மிகப்பெரிய பொருட்செலவில் கப்பல்கள் வாங்கப்பட்டன. ஜெர்மனியிலிருந்து யூதர்களை காப்பாற்றி இஸ்ரேலுக்கு வருவதென்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஒரு பக்கம் நாஜிப்படைகள் யூதர்களை தேடித்தேடி கொன்று கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் பிரிட்டிஷ் அரசும் யூதர்கள் பெரும் அளவில் வந்து குடியேறுவதை அப்போது விரும்பவில்லை. இப்படி உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த யூத மக்களை கொண்டு வருவதற்காக ஒரு ரகசியக் குழு உருவாக்கப்பட்டது.அதன் பெயர் தான் "மொஸாட் லிஅலியா பெட்" இந்த அமைப்பே பின்னாளில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட்டாக வளர்ச்சியடைந்தது.
மே 15, 1948 ம் தேதி யூதர்களுக்கான தனித்தேசமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. ஒருபக்கம் பாலஸ்தீனர்கள். இன்னொரு பக்கம் சவுதி அரேபியா, ஈரான் ,ஈராக்,சிரியா, ஜோர்டான், துருக்கி, எகிப்து, லிபியா என எந்த பக்கம் திரும்பினாலும். இஸ்ரேலை சூறையாட எதிரிகள் தயாராக இருந்தனர். இவர்களையெல்லாம் சமாளிக்க இஸ்ரேலுக்கு ஒரு வலுவான உளவு அமைப்பு தேவைப்பட்டதில் ஆச்சரியமில்லை. இதையடுத்து அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் டேவிட் பென் குரியன் நாட்டின் பாதுகாப்புக்காக மூன்று இஸ்ரேலிய உளவு நிறுவனங்களை தொடங்க முடிவெடுத்தார். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த உளவு நிறுவனங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
   
மார்ச் 2,1951 இல் "ஹ மொஸாட் லி டியும்" என்ற புதிய இஸ்ரேலிய உளவு அமைப்பு வெளிநாட்டு விவகாரங்களை கவனிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய உளவு அமைப்பான சி ஐ ஏ- வுடன் மொஸாட்டை இணைத்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. இதனால் சி ஐ ஏ - வின் அதிநவீன உளவு பயிற்சிகளும், உளவு பார்க்கும் கருவிகளை பற்றிய தெளிவும் மொஸாட் ஏஜென்டுகளுக்கு கிடைக்கத் தொடங்கியது. உலகின் எல்லா நாடுகளிலும் மொஸாட் ஏஜென்டுகள் வேலை பார்க்கத் தொடங்கினர். இஸ்ரேலுக்கும் , யூதர்களின் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்த நினைக்கும் எல்லாத் தகவல்களும் உடனுக்குடன் மொஸாட்டின் தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டன. சி ஐ ஏ - வால் பயிற்சி பெற்றிருந்த போதிலும் சமயங்களில் மொஸாட்டின் பணிகள்  அமெரிக்காவையே ஆச்சர்யத்தில் வீழ்த்த ஆரம்பித்தன.
ப்படியான அதிரடி நடவடிக்கைகளில் ஒன்று ஈராக்கை ஏமாற்றி ரஷ்யாவின் தயாரிப்பான மிக் 21 ரக அதிநவீன போர் விமானத்தை கடத்தியது. அமெரிக்காவே பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்த விஷயம். அவ்வளவு ஏன், மிக் 21-ஐக் கடத்தப் போவதாக மொஸாட் சொன்ன போது இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளே கூட அதை நம்பத் தயாராக இல்லை. ஆனால் மொஸாட் ஏஜென்டுகள் குழு எல்லாப்பக்கமும் தங்கள் முயற்சிகளை தொடர்ந்தனர். அனைத்து முயற்சிகளிலும் தோல்விகள் மட்டுமே எஞ்சின. இறுதியாக முனிர் ரெட்ஃபா என்ற விமானி மொஸாட்டின் மிக் 21 ஐ கடத்த உதவுவதாக ஒப்புக்கொண்டதையடுத்து பேரம் பேசப்பட்டது. விமானத்தை கடத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. தேதி குறிக்கப்பட்டது 1966, ஆகஸ்ட் 16. முனிர் ரெட்ஃபா ஈராக் விமானப்படையில் மூத்த அதிகாரி.கடத்தலுக்கான பணிகள் ஆரம்பிக்கும் போதே அவருடைய குடும்பத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக ஈராக்கிலிருந்து மொஸாட் ஏஜென்டுகளால் வெளியே கொண்டு வரப்பட்டு விட்டனர். மிக் 21ஐ பொறுத்தவரை அன்றைய தினத்தின் பயணத்துக்கான எரிபொருள் மட்டுமே நிரப்பப்படும். ஆனால் அந்த எரிபொருளை வைத்துக்கொண்டு இஸ்ரேலை அடைவதென்பது இயலாத காரியம். மிக் 21 விமானத்துக்கான எரிபொருள் நிரப்புவர்களை அழைத்து விமானத்துக்கு ஃபுல் டேங்க் ஃபில் பண்ணச்சொல்லி கட்டளையிட்டார். சீனியர் பைலட் என்பதால் அவர்களும் அவர் சொன்னதை செவ்வனே செய்து முடித்தனர். சிறிது நேரம் வழக்கமான பாதையில் விமானத்தை பறந்து கொண்டிருந்து விட்டு திட்டமிட்டபடி இஸ்ரேலை நோக்கி பறக்க ஆரம்பித்தது மிக் 21.
ஈராக் அதிகாரிகள் சுதாரித்து மடக்குவதற்குள் ரொம்ப தூரம் சென்றிருந்தது. விமானத்தை கடத்திய பிறகு மொஸாட்டின் இமேஜ் உளவுத்துறை வட்டாரத்தில் பன்மடங்காக எகிறியது. கடத்தியதே அதைப்பற்றித் தெரிந்து கொள்ளத்தானே. இஸ்ரேல் அதிகாரிகள் மிக் 21 யை அக்கு வேர் ஆணிவேராக ஆராய ஆரம்பித்தனர். இதை கேள்விப்பட்ட அமெரிக்கா மிக் 21 தனக்கும் வேண்டுமென கேட்க. அதற்கு பதிலாக ஃபான்டம் என்கிற நவீன ரக போர் விமானங்களை வாங்கிக்கொண்டார்கள். இப்படி மொஸாட்டின் அதிரடிகள் ஒவ்வொன்றும் ஜேம்ஸ் பாண்ட் படங்களையே மிஞ்சியவை என்றுதான் சொல்ல வேண்டும். உலகின் மிகப்பெரிய உளவு அமைப்புகளான CIA, MI6 க்கு அடுத்ததாக மொஸாட் மூன்றாவது பெரிய உளவு அமைப்பாக திகழ்கிறது.
மொஸாட்டின் தலைமை நேரடியாக அந்நாட்டு பிரதமரின் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் உலகின் எந்த உளவு அமைப்புக்கும் இல்லாத ஒரு அதிகாரத்தை இஸ்ரேல் அரசு மொஸாட்டுக்கு வழங்கி இருக்கிறது. அதுதான் மெட்சடா (Medsada) என்ற சிறப்பு நடவடிக்கை பிரிவு. இதன் வேலை இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என நினைப்பவர்களை திட்டம் தீட்டி கொலை செய்வது. இதில் அரசியல் கொலைகளும் அடக்கம். இதுபோன்ற வேலைகளால் உலகெங்கும் மொஸாட்டின் மீது பல்வேறு கண்டனக்குரல்கள் எழுந்தாலும் அதை சாதாரணமாக என கடந்து விட்டு அடுத்த வேலையை பார்க்கிறது இஸ்ரேல் அரசு..! அதனால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை நடுங்க வைக்கிற நாடாக இஸ்ரேல் இருக்கிறது! 

No comments:

Post a Comment